வரலாற்று நிகழ்ச்சிகள் தனிமனிதர்கள் மேல் ஏவப்படும் அபத்தத்துக்கு சாதத் ஹசன் மண்டோ எழுதிய டோபா டேக் சிங் கதை சிறந்த உதாரணம். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிரிக்கப்பட்ட இந்திய , பாகிஸ்தான் அரசுகள் தங்கள் மனநலகாப்பகங்களிலுள்ள முஸ்லிம் , சீக்கிய , இந்து நோயாளிகளை பரிவர்த்தனை செய்துகொள்ள முடிவெடுக்கிறது. இந்தப் பரிமாற்றத்தின் பின்னணியில் பிஷன் சிங் என்ற மனநோயாளி , இந்தியாவுக்கு போலீஸ் காவலுடன் அனுப்பப்படுகிறார். தனது ஊரான டோபா டேக் சிங் , பாகிஸ்தானில் தான் உள்ளதாக அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவரை சகநோயாளிகள் அனைவரும் டோபா டேக் சிங் என்றே அழைக்கிறார்கள். அதனால் அவர் இந்தியாவுக்குப் போக மறுக்கிறார். இந்தியா , பாகிஸ்தானுக்கிடையே போடப்பட்ட இரண்டு முள்வேலிகளுக்கிடையே போய் அவர் படுத்துக்கொள்கிறார். இரண்டு தேசங்களுக்கும் சொந்தமில்லாத அந்த நிலத்தில் அந்த மனிதன் படுத்திருக்கும் இடத்தில் தான் டோபா டேக் சிங் இருக்கிறது என்று முடிக்கிறார் மண்டோ. வரலாறு தனிநபர்களின் துயரங்களையும் ஆசாபாசங்களையும் பொருட்படுத்துவதே இல்லை. பெரும் வரலாற்றுச் சுழிப்புகள் , உலகைப் பாதித்த நிகழ்வுகளின் பின்னணி...