Skip to main content

Posts

Showing posts from September, 2019

பிரான்சிஸ் கிருபாவின் நட்சத்திர வெள்ளாமை

கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் நாணை விரைப்பாக ஏற்றி குறிக்கோளைச் சரியாகவே நிறைவேற்றியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. மொழி என்னும் குதிரையை நவீனக் கவிதையில் சமத்காரத்தால் சொடுக்கி கவிதைக்கும் தமிழுக்கும் உத்வேகத்தை அளித்த பிரமிள், யூமா வாசுகியின் மரபில் வரும் பிரான்சிஸ் கிருபா சிதைந்த கற்பனை உருவங்கள், பின்னங்கள், நோய்மைகள் வாழும் ஒரு இரவுக் குடியரசின் வழியாக ஒரு புதிய வேகத்தை ஊட்டியுள்ளார். தொடர்ந்த விழிப்பின் கனத்த களைப்புணர்வையும், உடல்-மனத்தில் ஏற்படுத்தும் அதீதத்தின் கனவுநிலைக் கோலங்களையும் பிரான்சிஸ் கிருபாவின் ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ கவிதைத் தொகுப்பில் காண முடிகிறது. இனம், மொழி, விடுதலை, தேசம், காதல் என்ற பெரிய லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கற்பனாவாதப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வழியாக வாசகர்களிடம் தொற்றவைப்பது - அந்த லட்சியங்கள் காலாவதியான பின்னும் - உத்வேகமே என்று தோன்றுகிறது. அப்

இப்பாலில் அப்பால் இல்லையா யவனிகா

சமீபகாலமாக துருக்கிய சினிமா இயக்குனர்  நூரி பில்கே ஜெலான்- ன் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அகிரா குரசவா, பெர்க்மன், அந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி வரிசையில் சினிமாவை ஒரு மாபெரும் விசாரணை ஊடகமாக்கும் அரிய கலைஞர்களில் ஒருவர் அவர். தற்போது நான் பார்த்து முடித்த அவரது ‘விண்டர் ஸ்லீப்’ படத்தைப் பார்த்து முடித்தபோது,  நூரி பில்கே ஜெலான் , இயற்கைக்கு அருகில் பெண்களையும் ஏழைகளையும் வைக்கிறார் என்பது புரிந்தது. பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலின் ஒரு பகுதியையும் ஆண்டன் செகாவின் ஒரு சிறுகதையையும் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திலும் அவரது மற்ற திரைப்படங்களைப் போன்றே ஆண் மீது அழுத்தமான விமர்சனத்தை எழுதிச் செல்கிறார். ஆழம் மேலா, கீழா என்பதல்ல; ஆனால் ஆணிடம் ஆழத்தில் இருக்கும் அம்சம் இல்லை. ஆழத்தில் தாக்குப்பிடிப்பதற்கான தகவமைப்போ உறுப்புகளோ பரிணாமத்தில் அவனிடம் உருவாக இல்லை. எங்கோ அவன் தட்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு மேலோட்டமான இடத்தில் தான் அவன் தலை தட்டிக்கொண்டிருக்கிறது. அறிவு அவனைக் கைவிடும் இடம் அது.  கருத்தியல் ஆணினுடையது; வரலாறு அவனுடையது; அவன் தன் கலையால

பலூன் கோடாரி

பலூனில் நான் ஒரு கோடாரி செய்வேன் என் வன்மம் அவ்வளவையும் அதில் காற்றாய் நிரப்புவேன் முதுகில் தொங்கியபடி காற்றிலாடும் என் கோடாரியுடன் ஒருமுறை நான் நகர்வலம் புரிவேன் முற்றத்தில் இட்ட கோலத்தின் பறவைகள் மறையும் நண்பகலில் என் கோடாரியுடன் நான் காற்றில் பறப்பேன்.

நகரம் நீங்கியிருப்பேன்

உன் பொம்மைகள் நீ தவழ்ந்து கடக்கும் கதவுகள் புழங்கும் அறைகள் சுவர்கள் அம்மா அப்பா எல்லாரையும் எல்லாவற்றையும் உன் குட்டி நாவால் சப்பி அறியும் என் கிளிச்சிறுமி நீ. இரவு நீ உறங்கும்போது நான் வேட்டைக்குச் செல்வேன் நிலவுகள் ஒட்டகங்கள் கதைகள் கடவுளர்கள் காதல்கள் எல்லாவற்றையும் உன் சிறு கையளவு வடிவங்களாக மாற்றி உன் முன் பரிசுகளென விரிப்பேன் அவற்றை நீ உன் இருகை பற்றி உன் நாவால் அறியத் தொடங்கும் போது உன் தந்தை நான் நகரம் நீங்கியிருப்பேன்.