Skip to main content

Posts

Showing posts from October, 2020

முராகமியின் தவளை

‘சூப்பர் ப்ராக் சேவ்ஸ் டோக்கியோ' கதையின் முதல்வரியிலேயே ஆறடி உயரத்தில் இருக்கும் பிரமாண்ட தவளை, நாயகன் கடாகிரியைச் சந்தித்துவிடுகிறது.  அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கடாகிரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விட்டதைத் தவிர அந்தத் தவளைக்கு கடாகிரியைச் சங்கடப்படுத்தும் வேறெந்த நோக்கமும் இல்லை. முராகமியின் கதை விலங்குகளைப் போலவே தவளையும் மிக மனிதாபிமானமும் நாகரிகமும் கொண்டது. அத்துடன் அதுவந்ததன் காரணம், ஒரு பெரிய லட்சியத்துக்காக கடாகிரியின் உதவியைக் கேட்டு. டோக்கியோவை நிலநடுக்கத்துக்கு உள்ளாக்க இருக்கும் மண்புழு ஒன்றின் திட்டத்தை நொறுக்கி டோக்கியோவையும் ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதுதான் அதன் லட்சியம். திரு. தவளை என்று தன்னைக் கூப்பிட வேண்டியதில்லை, தவளை என்றே அழைக்கலாம் என்று அடிக்கடி நினைவூட்டும் அந்த ஆறடித் தவளை, நீட்சே, டால்ஸ்டாய் போன்ற தத்துவ அறிஞர்கள், படைப்பாளிகளின் மொழிகளையும் சந்தர்ப்பத்துக்கேற்ப கடாகிரியிடமும் நம்மிடமும் பகிர்ந்துகொள்கிறது. டோக்கியோவை அழிவுக்குள்ளாக்க இருக்கும் ராட்சச மண்புழுவை ஒழிப்பதால் கடாகிரிக்கோ, தவளைக்கோ எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை

கற்பகமே உன்னை அன்றி துணை யாரம்மா

கழிப்பறை ஜன்னல் கண்ணாடியில் ஆடும் எலுமிச்சை இலைகளின் நிழல்கள் தம் வெவ்வேறு சாயல்களை எனக்குக் காண்பித்து விடுகின்றன உறக்கமின்மை  என்னுள் செலுத்தும் நரகங்களை இறுதிச் சாமத்தின் முடிவில் சிறுநீராய்ப் பிரித்து எல்லா வலிகளோடும் சேர்த்துக் கொஞ்சம் இறக்குகிறேன் வெளியே ஆடும் இலைகள்தான் காற்றில் கலந்திருக்கும் மீயொலிகளை  என்னிடம் பெயர்க்கின்றன போல குழந்தையின்  அழுகுரல் நாகஸ்வரம் ஒருசேரக் கேட்கத் தொடங்குகின்றன கற்பகமே உனையன்றி துணை யாரம்மா  நீயே கதி எனப்போற்றும்  என்னைக் கண்பாரம்மா நினைவில் எழுந்த பாடலின் மடியில் உறங்கத் தொடங்குகிறேன் இன்னும் எந்த ஒலியும்  இறங்காத பூமியில் அம்மா  அம்மா அம்மா.   

தையல்காரன்

எனது காகம் இல்லை உங்கள் காகம் இல்லை காகம் ஒன்று தனது இறகுகளை விரித்து வானத்தில் தரையில் வாகனத்தில் போகும் என்னைக் கடந்தபோது அதன் கருத்த இறகுகள் கிழியத் தொடங்கியிருப்பதைப் பார்த்துக் குறித்துக் கொண்டேன் அந்தக் காகம் ஒரு நாள் சாலையில் கடந்துசெல்லும் போது துப்பாக்கிக்குக் கைகளைத் தூக்குவதைப் போல  சிறகை வேறுவிதமாய் விரித்து இருபரிமாணமுற்று காகிதம் போலக் கிடக்கும் நானும் அதைப்போலக் காலடியில் புழுதியாய் கடக்கப் படுவேன். அதற்கு நடுவில் தான் குனிந்து கீழே பார்த்தேன் இந்தக் காகத்தைப் பறக்கவும் என்னை இயங்கவும் செய்யும் விசை எது? இங்கே  அதன் இறக்கைகளை ரிப்பேர் செய்வதற்கும் ஒட்டித் தைப்பதற்கும் தையல்காரன் உண்டா.  

அம்மாவின் சிட்ரிசின் மேகங்கள்

அம்மாவின் பொறுமை சகிப்புத்தன்மை எதையும் கொடையாக நான் பெறவில்லை அவளது நுரையீரல் தொடங்கி பலவீனமானதெல்லாம் எதுவோ அதையே அவளின் பிள்ளையாக நான் பெற்றிருக்கிறேன் நினைவு பயின்ற நாள்முதலாய் மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள் என்றாலும் இந்த வயதிலும் உளநலத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள் தாதியாகப் பணியாற்றியதால் அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும் ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும் ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம் மழைக்காலங்களிலும் வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும் மூச்சுவிடத் திணறி என் நுரையீரல் அரற்றும்போதெல்லாம் டெரிபிளினையும் டெக்கட்ரானையும் கலந்து ஊசியாய் ஏற்றுவாள் அப்போது குளிர்மேகங்கள் மார்பில் இறுக்கத்தைத் தளர்த்தி வேர்வையைப் பூக்கவைத்து உறங்கவைக்கும் கூடவே பெயர் சொல்லி சிட்ரிசின் மாத்திரையையும் தருவாள் அம்மா . அவள் தந்த மாத்திரைகளையெல்லாம் விஞ்சி  விழுங்கும் மாத்திரைகளுக்கும் அவளுக்கே புரியாத நோய்க்குறிகளுக்கும் அனுபவம் கொண்டுவிட்டது தற்போதைய எனது உடம்பு . ஆனாலும் பொடியனின் உடலைக் கொண்ட அந்த சிட்ரிசின் மாத்த

தைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை

டாஸ்மானிய வேங்கை என்று பொதுவாக அழைக்கப்படும்  தைலசீன்   எலி பூனை நாய் புலி எனப் பல உருத்தோற்றங்களை நம்மிடம் எழுப்பும் முயக்க உடலைக் கொண்டிருப்பதாலும் அருகிப் போயிருக்கலாம் கங்காரு போலக் குட்டியை பையில் சுமக்கும் பாலூட்டி முதுகின் கீழ்பகுதியில் தொடங்கும் புலியின் வரிகளைக் கொண்ட இந்தப் புலி  புலியைக் கொண்டிருக்காமல் கழுதைப் புலியையே வடிவில் கொண்டிருக்கிறது  டாஸ்மானிய வேங்கை என்று அழைக்கப்படும்  தைலசீன் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டது அதனால் மனிதர்களோடு இணைந்து  வளர்ப்பு மிருகமாகவும் ஆகவில்லை தைலசீன் இரவாடி சில சமயங்களில் கங்காருக்களைப் போல இரண்டு கால்களில் தாவும்  வேகமாக ஓடவேண்டிய நேரங்களில் ஒத்துழைக்காத விறைப்பான உடல் என்பதாலேயே குடியேறிய மக்களுக்கு எளிதான வேட்டைக்குரிய மிருகமானது தைலசீன் குகை மனிதர்களும் சாப்பிட்ட தடையங்கள் பாறை ஓவியங்களில் தென்படுகின்றன பலவீனமான தாடைகளைக் கொண்டதாக இருந்ததால் குட்டிக் கங்காருகள் தீக்கோழிக் குஞ்சுகள் அணில் எலிகளே  இதற்கு இரவுகளில் இரையாகுமாம் ஆஸ்திரேலிய நிலப்பகுதிகளிலும் டாஸ்மானியாவிலும் ஆங்காங்கே தென்படுவதாகக் கூறப்பட்டாலும் தைலசீன்கள் அதிகம் உயிர்தரித்த

தந்தையிடமிருந்து நாவலைப் பறித்த மார்க்வெஸ்

காப்ரியேல் கார்சியா மார்கவெஸின் சுயசரிதையான 'லிவிங் டு டெல் தி டேல்' -ல் அவரது அப்பாவுக்கும் அம்மாவுக்குமான காதல் கதையைப் படிக்கத் தொடங்கும்போதே, 'லவ் இன் தி டைம் ஆப் காலரா' கதையின் நாயகனும் நாயகியும் எனக்குத் தெரியத் தொடங்கிவிட்டார்கள். மார்க்வெஸின் பாட்டி அவரது 14 வயதில், ஒரு பள்ளி ஆசிரியருடன் ஏற்பட்ட உறவின் விளைவாகப் பெற்ற குழந்தைதான் மார்க்வெசின் தந்தையார். மார்க்வெசின் அம்மாவைப் பெற்றவர்கள் இந்தக் காரணத்தாலேயே அவரது தந்தையுடனான காதலைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர். 'லவ் இன் தி டைம் ஆப் காலரா' நாவலின் கதாநாயகனும், தந்தை பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய நிலைமையில் இருப்பவன்தான். மார்க்வெஸ், தனது தந்தையைப் பெற்ற பாட்டி பற்றி மிகச் சுதந்திர மனம்படைத்த வெள்ளைப் பெண் என்று பெருமையுடன் கூறுகிறார். மூன்று ஆண்களுடன் குடும்பமாக வாழாமல் ஐந்து மகன்கள், இரண்டு மகள்களைப் பெற்றெடுத்தவர் என்றும் சொல்லிச் செல்கிறார். தந்தையின் காதல் களியாட்டங்களையும் மார்க்வெஸ் விட்டுவைக்கவில்லை. தந்தை வழிப் பாட்டியிடமிருந்தே மார்க்வெஸ் லஜ்ஜையற்ற நடையையும் கண்களையும் பெற்றிருக்க வேண்டும

சபரியின் பாசுபதாஸ்திரம்

தெருவில் அதிகம் தென்படும் அந்த நாய்க்கு வீடு உண்டு வளர்ப்பவர்களும் உண்டு சிகப்பு கழுத்துப்பட்டை போட்டிருக்கும் அந்த நாய்க்கு நான் ரௌடி நாய் என்று பெயரிட்டிருக்கிறேன். எனது பிரௌனி, ஒரு நாள் விளையாட்டாக திறந்திருந்த வீட்டுக் கேட்டைத் தாண்டி சுதந்திரம் தேடிப் போனபோது, தாக்கப்பட்டு பின்னங்கால் தொடையைக் கிழித்த போது எனக்கு இந்த நாய் அறிமுகமானது. எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் தெருநாய்களையும் வயதான வீட்டுப் பணியாளர் பெண்களையும் தொடர்ந்து காயப்படுத்துவதால் அந்தப் பெயருக்கு அது நியாயம் செய்கிறது என்றே நீதீபதிகளாகிய உங்களிடமும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எப்போதும் தந்திரத்தோடு அலையும் ஓநாயின் சூட்சுமக் கண்களோடு. அரிதாக உணவு கிடைத்து, நான்கு தெருநாய்கள் சேர்ந்துண்ணும் போது அதற்குப் பொறுக்காது. நடுவில் புகுந்து ஒரு நாயைத் தனியாகத் தள்ளி மூலையில் ஒதுக்கித் தாக்கிவிடும்.  நேற்று காலை ரௌடி நாயை நேருக்கு நேராக ஒரு கை பார்ப்பதென்று முடிவெடுத்தேன். எனது பிரௌனியின் காயம் ஆறி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அப்போதுதான் தெரிந்தது, எனக்குக் குறிபார்த்து கல்லெறியத் தெரியவில்லை.  கல்லுக்கு என் கைகளிலிருந்து கொ

தி சோஷியல் டைலமா

மனிதர்களின் வாழ்க்கையில் பிரம்மாண்டமாக நுழையும் எதுவும் கூடவே சாபத்தைக் கொண்டுவராமல் இருப்பதில்லை - ஒட்டுமொத்த மனித குலத்தின் மேலும் தாக்கம் செலுத்திவரும் இணையம், செல்பேசித்தொழில்நுட்பம், சமூக ஊடகங்களின் அபாயகரமான அம்சங்களைப் பேசும் ‘தி சோஷியல் டைலமா’ ஆவணப் படம் (நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது) ஒரு திகில் படத்தின் தொடக்கத்தைச் சுட்டுவதுபோல இந்த வரிகளோடுதான் தொடங்குகிறது. கிரேக்க நாடகவியலாளர் சோபாக்ளிசின் கூற்று இது. கூகுள், ஜிமெயில் தொடங்கி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூட்யூப், பின்ட்ரஸ்ட் வரையிலான சேவைகளில் ஒன்றையாவது பயன்படுத்தாத மனிதரை இன்று நாம் ஆதிவாசியாகவே கருதமுடியும். இந்தச் சேவைகள் அனைத்தும் பெரும்பாலும் இலவசமாகவே நமக்கு அளிக்கப்படுவதாகவே நாம் நம்புகிறோம். தகவல்தொடர்பு, பணப் பரிமாற்றம் தொடங்கி அந்தரங்க உறவுகள் வரை 24 மணிநேரமும் கூடவே இருக்கும் இந்தச் சேவைகள் ஏன் இலவசமாகக் கிடைக்கின்றன என்ற கேள்வியை நம்மில் பெரும்பாலானவர்கள் கேட்டிருக்கமாட்டோம். அதற்கும் தொடக்கத்திலேயே ‘தி சோஷியல் டைலமா’ விடை சொல்கிறது. சிலிக்கன் பள்ளத்தாக்கின் மனசாட்சி என்று சொல்லப்படு

அம்மாவுடன் வரும் கனவுகள்

அது ஒரு துறவியர் மடம். காலத்தின் அடையாளம் எதுவும் இல்லை. ஆனால் அது நவீனமாகவும் இல்லை. அம்மா என்னைக் கொஞ்ச தூரம் பயணித்துத்தான் அங்கே அழைத்துச் செல்கிறாள். எனது வயது, எனது உருவம் எதையும் எனக்கு நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. நாங்கள் துறவியின் முன்னால் அமர்ந்திருக்கிறோம். அவர் பாறை போன்ற ஒரு அமைப்பில் அமர்ந்திருக்கிறார். எனது அம்மாவைப் பார்த்து, இந்த நிலையில் இவனை இங்கே ஏன் அழைத்து வந்தாய்? என்று காலைத் தூக்கி தரையில் அறைந்து கோபமாகப் பேசுகிறார். நாங்கள் சங்கடத்துடன் அங்கேயே அமர்ந்திருக்கிறோம். அடுத்த காட்சி. ஆனால்,  தொடர்ச்சி இல்லை. அதே மடத்தில் நானும் என் அம்மாவும் உறங்குகிறோம். நான் என் அம்மாவை நோக்கி காலை மடக்கிக் குவித்து அவளது கன்னங்களைப் பிடித்தபடி உறங்குகிறேன். அம்மாவின் பல் இல்லாத மென்மையான பஞ்சுத்தன்மையை இப்போதும் என் கைகளில் உணர்கிறேன். அடுத்த காட்சி. இப்போது அதே துறவியின் முன்னர் நானும் அம்மாவும் அமர்ந்திருக்கிறோம். எங்களை முதலில் பார்க்கும்போது மிகவும் கொந்தளிப்பாகப் பேசிய துறவி இப்போது சாந்தமாக இருந்தார். கனவு அல்லது கனவு குறித்த ஞாபகம் இங்கே முடிந்துபோகிறது. 000 அம்மா நேற்