Skip to main content

Posts

Showing posts from June, 2020

அன்னை என்னும் நெடுந்தனிமை

சமீபத்தில் அகச்சேரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘அந்த விளக்கின் ஒளி’யில் ‘அம்மா விழுந்தாள்’ கவிதை, என்னை யோசிக்க வைத்தது. அம்மா ஒரு கருத்துருவமாக, படிமமாக மட்டும் இல்லாமல் தனி அம்சம் கொண்டவளாக, பொது அன்னையிலிருந்து வேறுபட்ட அன்னைகளின் சித்திரங்கள் தமிழ் புதுக்கவிதையிலும் நவீன கவிதையிலும் குறைவுதான் என்று தோன்றியது. அகச்சேரனின் ‘அம்மா விழுந்தாள்’ கவிதையில் அம்மா என்பவள் தொல்படிவத்தன்மையின் தொடர்ச்சியாகவும் அதேவேளையில் தனி அன்னையின் சாயல்களுடனும் தென்படுகிறாள். அம்மா விழுந்தாள் அம்மா விழுந்தாள் நன்றாகவே பின்கட்டிலிருந்து தேநீர்த் தட்டோடு நடந்து வந்தவள் வீட்டின் சகல ஜடங்களும் உயிர்களும் பார்க்க இடறி தூக்க எத்தனிக்காத என் கற்கைகளை நண்பனிடம் குறைபட்டேன் வீட்டில் மறைந்திருந்த பாழுங் கிணற்றை அறிந்த பீதியில் இன்றைய தேநீரோடு அம்மா நடந்து வருகிறாள் நான் என் கைகளை கைகளை... 000  வீட்டின் நடுவே ஜடங்களும் உயிர்களும் பார்க்க, உயிர்களும் ஜடங்களாய் பார்க்க எல்லார் கண்முன்னரும் விழுந்த அம்மாவை ஏன் மகனால் தூக்க எத்தனிக்க முடிவதில்லை? அவனது கைகள் கல்லாலான கைகளாக ஆனது ஏன்?

ஆத்மாநாம்

பெருமழையில் நிச்சலனமாய் நனையும் மரமென குளியலறையில் வழிந்து கொண்டிருக்கிறேன் மஞ்சள் ஒளியில் இலைகள் அதிர்கின்றன வழியும் நீர்த்துளிகள் இசையென அறையெங்கும் நிறைகிறது தந்திகளிலிருந்து விடுபட்ட பறவைகள் அறைக்குள் பறக்கின்றன வெளியில் பறந்து திரிந்து ஆத்மாநாம் காகமாய் என் குளியலறைக்குள் தாகம் தீர்க்க வருகிறான் ஆத்மாநாம் நீ அமிழ்ந்த கிணறு இப்போதெனக்குக் குளியலறையாகியிருக்கிறது. (மிதக்கும் இருக்கைகளின் நகரம், 2001) 

இறால்களுக்கு ஒரு பாடல்

தரையில் குப்பை போலக் குவிந்திருக்கும் இறால் கூடுகளை ஒருநாள் பார்த்து பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன்கள் வாங்கப் போன நண்பரிடம் இவையும் இறால்கள்தானே என்றேன். அருகில் அழைத்துப் போய் இறாலின் உள்ளடக்கம் என்று ஒரு புழு உடலத்தை எடுத்துக் காண்பித்தார். நாம் சாப்பிடும் உணவு இதுதான் என்றார். இறாலுக்குக் கடுகளவு இரண்டு கண்கள்; கடலிலிருந்து வலைக்கும் கரைக்கும் வந்தபிறகும் நமது உணவுக்குத் தன் உள்ளடக்கத்தைத் தந்தபிறகும் என்னை அவை உற்றுப்பார்க்கும் கூர்மை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைப் பிரதிபலிக்கும் இந்த அவதாரத்துக்கோ கம்பீர மீசைகள் உடலெங்கும்; முக்கோணக் கூர்முகமும். கடலில் சிங்கங்கள் புலிகளாக அவை ஆர்ப்பரித்திருக்கும். ஸ்டீவ் ஜாப்ஸின் கைநேர்த்தியொத்த ரயில் பெட்டிகளாக அடுக்கடுக்காக மடங்கும் கண்ணாடிப் பேழை, கோது என்று அழைக்கப்படும் அதன் கூடு. உள்ளடக்கம் என்று சொல்லப்படும் உள்ளேயுள்ள புழு உடல் எளிதாய் கழன்ற பிறகும் இறால், இறாலைப் போலவே காட்சி தருகிறது செக்கச் சிவப்பாய். தனது உள்ளடக்கத்தை அத்தனை இலகுவாக மேல்கோட்டைக் கழற்றுவது போல் விட்டுக்கொடுத்தும் விடுகிறது. அதன் உடம்பு

வர்கீஸின் கண்கள்

கார்த்திகை மாத தீபங்கள் ஏற்றப்பட்ட கமுகம்சேரியின் பகவதி அம்மன் கோயில் அது. அந்தி மறையும் இருட்டினூடாக, அந்த பகவதி அம்மன் கோயிலில் அமர்ந்திருக்கிறோம். பகவதி அம்மன் கோயிலுக்கு சற்று மேல் பக்கவாட்டில் அமைந்துள்ள மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் வர்கீஸை மேலதிகாரிகளின் உத்தரவுக்கும், மிரட்டலுக்கும் பணிந்து கொன்றது, நான் தான் என்று, ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளான ராமச்சந்திரன் நாயர் பல வருடங்களுக்குப் பிறகு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த இடம் இந்தக் கோயில்தான். குளச்சல் மு.யூசுப்பிடம் நான் தான் சொன்னேன். அந்த பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டுத்தான் போக வேண்டும் என்று. தம் வாழ்நாள் முழுவதும், தம்மை உறுத்திய உண்மையை வெளிப்படையாய் சொன்ன ஸ்தலத்தில் ஆவி வடிவிலாவது ராமச்சந்திரன் நாயர் இருப்பார் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். ஒருவரைத் தேடி வந்து, அவர் இந்த உலகத்திலேயே இல்லையென ஆகும் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத தத்தளிப்பாக இருக்கலாம். வயநாடு பகுதி வனப்பகுதியில் நிலஉடைமையாளர்களின் சுரண்டலுக்கு உட்பட்டு, அடிமைகளாய் ஒடுக்கப்பட

பிரவுனி அறிமுகப்படுத்திய விளையாட்டு

காலை நடைக்கு அடிக்கடி செல்லும் பெருங்குடி ரயில் நிலையத்துக்கு அருகில் தான் எனக்கு பிரவுனி, தனது சகோதரனுடன் சேர்ந்து அறிமுகமானது. பிறந்து முப்பது முதல் நாற்பது நாட்கள் இருக்கலாம். நடமாட்டமும் பராமரிப்பும் குறைந்த பூட்டப்பட்ட சிறிய பூங்காவின் வாயிலில் உடம்பு முழுவதும் துறுதுறுப்பு, விளையாட்டுடன் எனக்கு பிரவுனி அறிமுகமானது. சில நாட்களிலேயே அதன் சகோதரனுக்குக் காலில் விபத்து ஏற்பட்டு, காலில் யாரோ கட்டுப்போட்டிருக்க இறந்தும் போனது. தனது சகோதரன் இறந்துபோனது தெரியாமல், பிரவுனி அதைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. அதுவரை, நாய் வளர்ப்பு தொடர்பில் அசூயை கொண்டிருந்த எனக்கு, பிரவுனியை வீட்டுக்குக் கொண்டு போகவேண்டுமென்று தோன்றிவிட்டது. நான் பிரவுனியைத் தேர்ந்தெடுக்கவில்லை; அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. பிரவுனி பெண் நாய்க்குட்டி. ஆனால், எங்களுக்கு ஏற்கெனவே மகள் இருப்பதாலும், பிரவுனியின் துடுக்கு, விளையாட்டுத் தனத்தாலும் அதைக் கேலி செய்வதற்கு வாகாக இருப்பதாலும் நாங்கள் அதை ஆணாகவே  விளிக்கிறோம். என்னுடைய விளையாட்டு இயல்பின் முழு உருவகமாகப் பிரவுனியைக் காண்கிறேன்

அமேசானில் ஞாபக சீதா

புது எழுத்து பதிப்பக வெளியீடாக 2016-ம் ஆண்டு வெளிவந்த எனது 'ஞாபக சீதா' கவிதை நூல், தற்போது கிண்டில் பதிப்பாக அமேசானில் கிடைக்கிறது. இதன் இந்திய விலை 99 ரூபாய். நண்பரும் கவிஞருமான இசை அறிவுறுத்தியதன் பெயரிலும், நண்பர் செந்தில்குமாரின் உதவியாலும் இந்த மின்னூல் முயற்சி சாத்தியப்பட்டுள்ளது. அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி. எனது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பான 'ஆயிரம் சந்தோஷ இலைகள்' நூலுக்குப் பிறகு வெளிவந்த இந்தத் தொகுதியின் கவிதைகள் எனது கவிதை வழியில் சில சாத்தியங்களையும் திருப்பங்களையும் காட்டியவை. ஞாபக சீதா என்ற பெயரைப் போலவே, இந்தத் தொகுப்பின் கவிதைகள் பெண்ணின் தன்மை துலங்குபவை.  இலைகளின் நுனியில் குவியும்  பாம்பின் வாலில்  நூலென ஆடும் கூர்மை  அந்தரத்தில் வானில்  ஊசிக்கூர்மை  ஞாபக சீதா  உன் அழகு  உன் அகங்காரம் இத்தொகுதியை வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணைப்பின் வழியாக வாங்கலாம். மிக்க நன்றி. ஞாபக சீதா கிண்டில் பதிப்பை வாங்க

முராகமியின் கதை சொல்லும் குரங்கு

ஹாருகி முராகமி கதைகள் தமிழ் மொழிபெயர்ப்பின் வழியாக ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது. அப்போது, நான் இருந்த மனநிலையில் முராகமி என்னைக் கவரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நண்பர் முராகமியின்  Honey Pie  கதையைப் படிக்கச் சொல்லி நியுயார்க்கர் இணைப்பை அனுப்பிய போது ஹாருகி முராகமி எனக்கு அந்தரங்கமானார். உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் படிக்கும் வாசகன் இனம்காணும் நவீன வாழ்க்கை சார்ந்த, ஆண் - பெண் உறவு விசித்திரங்கள், அல்லல்களினூடாக ஒரு முடிவையும் ஒரு அமைதியையும் வாசகனுக்கும் உருவாக்கும் கதை அது. இரண்டு கரடிகள்  இயல்பான கதாபாத்திரங்களாக இடம்பெற்று ஒரு உருவகக் கதையாக ஆகியிருந்தது. அதன்வழியாக ஒரு நீதியும் சொல்லப்பட்டிருக்கும். அதிலிருந்து நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவந்த ஹாருகி முராகமியின் எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவரோடு மேலும் இணக்கம் கொள்வதற்கு அவரது தந்தை பற்றிய நீண்ட, அவரது அனைத்துப் புனைவு அம்சங்களும் தெரியும் ஒரு நினைவுக் கட்டுரையையும் மொழிபெயர்த்தேன். (படிக்க ;  என் தந்தையின் நினைவுகள் ) சமயம், சமூக நெறிகள் சார்ந்த வாழ்க்கை ஒழுங்கும் அதுசார