Skip to main content

Posts

Showing posts from October, 2021

eggu என்றால் முட்டை என்று சொல்லும் நடேஷ்

கறுப்புமைக் கோட்டுச்சித்திரங்களின் வழியாக இசைமையையும் புலன் ஈர்ப்பையும் ஏற்படுத்த வல்ல தமிழ் நவீன ஓவியர்கள் சிலர்தான். ஆதிமூலம், சந்ரு, மருது, மனோகரின் பட்டியலில் ஓவியரும் நிர்மாணக் கலை முன்னோடியுமான மு.நடேஷுக்கும் பிரதான இடம் உண்டு. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அம்மா, வீட்டுக்குக் கொண்டுவரும் துண்டுக் காகிதங்களில் சிறுவயதிலேயே கிறுக்கி வரையத் தொடங்கிய நடேஷுக்குக் கோட்டோவியம் என்பது உயிர்த்திருப்பதன் தவிர்க்க முடியாத அம்சமாகவே இருக்கிறது. இந்நிலையில்தான், ஓவியருக்கு அத்தியாவசியமான கண்கள் பழுதுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதை உணர்த்தும் அர்த்தத்திலேயே ‘பிஃபோர் பிகமிங் பிளைண்டு’ (Before Becoming Blind) என்ற அதிர்ச்சி தரக்கூடிய தலைப்புடன் தனது சித்திர நூலொன்றை வெளியிட்டுள்ளார் நடேஷ். தனது கோடுகளுக்கு விடுதலை அளித்த முதல் ஆசிரியர் என்று ஆர்.பி.பாஸ்கரனை சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவரான நடேஷ் குறிப்பிடுகிறார். இரண்டாம் ஆசிரியராக ஓவியர் சந்ருவை மதிப்பிடுகிறார். தென்னிந்தியக் கோயில்களுக்கு அவர் அழைத்துச்சென்ற சுற்றுலாவில் பார்த்த சிற்பங்கள் தனது கோட்டைத் தமிழ்க் கோடாக மாற்றின என்கி

பாழ்பட்ட தேசம் - சிவ் விஸ்வநாதன்

நரேந்திர மோடியின் இருபது ஆண்டுகள் பொதுவாழ்வைக் குறிக்கும் ஆர்ப்பாட்டக் கொண்டாட்டம் நேருக்கு நேராக எதிர்கொள்ளப்பட வேண்டியதாகும். ஊடகங்கள் சேர்ந்து ஒத்தூதும்  நிலையில், கருத்து வேறுபடுதல் எளிது அல்ல. விரக்தி உணர்வையே அடைகிறோம். இந்தக் காலகட்டத்தில் எனது பழைய தத்துவ ஆசிரியர்களின் கட்டளையையே நினைவுகூர்கிறேன். ராஜ்ஜியத்தின் மௌனங்களை வாசிப்பதுதான் அது. மோடியின் இருப்பை தன்னளவிலேயே சந்திப்பதிலிருந்து தொடங்க வேண்டும். சமூக உளவிலாளர் ஆசிஷ் நந்தி, ராமஜென்ம பூமி இயக்கத்தின் போது கூறியதைப் போல, நம்மை எதிர்கொள்ளும் மோடி 'பாசிஸ்ட்' அல்ல. இந்த மோடி ஒரு புதிய அவதாரம், ஒரு பகுதி புனைவாலான, பின் உண்மை யுகம் உருவாக்கிய ஒரு படைப்பு. இல்லாத திறன்கள் இருப்பதாக நம்பவைக்கப்பட்ட ஒரு உருப்போலி அவர். உண்மையல்லாத அவரது கற்பனை செயல்முறைகள் மூலம்  அ வர் ஆர்வெலிய நிலையையும் தாண்டிப் போகிறவர்.  ஸ்திரத்தன்மை சார்ந்த அறைகூவல்களை மீறி மோடியின் பெரும்பான்மைவாதத்தை வாசிப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் தட்டைத்தன்மையையும் இரண்டும் கெட்டான் தன்மையையும் சேர்ந்து உருவாக்கிய மென் பெரும்பான்மைவாதம் அத

நிழல் ஆடும் முன்றில்

46 வயது யுவதி அவள் தெரு மூலையில் இருக்கும் வீட்டின் முற்றத்தைத் தெளித்துவிட்டு காலியான பிளாஸ்டிக் வாளியை முறத்தைப் போல உயர்த்திப் பிடித்து தனது செல்லத்துடன் காலையிலேயே விளையாடிக் கொண்டிருந்தாள் அதன் பெயர் என்னவென்று கேட்டேன் ' நிழல் ' என்றாள் நிழலுக்கோ உலகை முழுக்கப் பிரதிபலிக்கும் கண்கள் கோலிக்குண்டின் தீர்க்கம் நிழலுக்கோ உடல் முழுதும் துள்ளும் பரபரப்பு அந்தத் தெரு முழுவதையும் உயிர்க்கச் செய்யும் வாலின் துடிப்பு அது நிழல் நீ நிழல் ஆடும் முன்றிலா என்று கேட்க வேண்டும்.

அவளையும் அவளையும் ஈன்ற அந்தச் சிறுமரம்

மரத்தினடியில் தோன்றினார்கள் அவர்கள் அவன் முகம் தொட்டு அவள் ஆகியபடியிருந்தாள் அவள் விரல்களில் மோதி மோதி அவன் ஆகிக்கொண்டிருந்தான் வளையல்கள் தொங்கட்டான்கள் அலைபேசிகள் எல்லாம் அந்த மரத்தடியில் வரிக்குதிரைகளின் வரிகள்   மேய்ந்து  கொண்டிருந்தன அடுத்த சுற்று நடையில் அவள் அந்த இடத்தை விட்டு முதுகுகாட்டி நீங்கிப் போனதைப் பார்த்தேன் குனிந்து அலைபேசியை வெறித்துக்  கொண்டிருக்கும் அவனை பார்த்துக் கொண்டிருக்கிறது அவளையும் அவளையும் ஈன்ற அந்தச் சிறுமரம்

பல் பொம்மை போதும் ஐயா

சந்தையில் ஒரு சேவையையோ, ஒரு பொருளின் விற்பனை இங்கு நடக்கிறது என்பதையோ குறிப்பிடுவதற்கு, அந்தப் பொருளின்  உருவத்தையோ சித்திரத்தையோ கேலியாக்கியோ எல்லார் கண்ணில் படவும் விளம்பரமாக வைப்பது எந்தக் காலத்திலிருந்து தொடங்கியிருக்கும். எழுத்தும் படிப்பும் பரவலாகாத சமூகங்களில் மக்களை ஈர்ப்பதற்கு இந்த உருவங்கள் உதவியிருக்க வேண்டும். மருத்துவர்கள் இப்படியாக தங்கள் விளம்பரத்தை, பல்லிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். திருநெல்வேலி கிழக்கு ரதவீதியில், பல் மருத்துவமனையை நிறுவியிருந்த மருத்துவர் சென்னின் க்ளீனிக்கின் முன்னால், பெரிய பல்லின் உருவம் ஒன்று விளக்கொளியில், சங்கிலி பூதத்தார் சிலையைத் தாண்டினாலே தெரியத் தொடங்கிவிடும். பல்லின் உருவங்களைப் பெரிதாக மருத்துவர்கள் வைப்பது, உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்திருக்க வேண்டும். குவெண்டின் டொரண்டினோ இயக்கிய ஜாங்கோ அன் செயின்ட் படத்தில், கருப்பின அடிமைகளுக்கு விடுதலை அளிப்பவராகவும், அரசாங்கம் தேடும் குற்றவாளிகளைப் பரிசுப் பணத்துக்காகக் கொல்லும் பவுண்டி ஹண்டராகவும் வரும் கிறிஸ்டோபர் வால்ட்ஸ், தனது குதிரை வண்டியின் அடையாளமாக ஸ்பிரிங்கில் ஆ

இனிமையே உன்னை எங்கே வைப்பேன்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சாயங்காலம் என் மீது வெளியே படர்கிறது மூடிய பூங்காவின் பெஞ்சுகள் வீடுகளின் ஜன்னல்கள் சுவர்கள் கூரைகளில் அது அது அவர் அவர் நிறங்களை விரியத் திறந்து தன் நிறமின்றிப் பொழிகிறது சூரியனின் கடைசிப் பிரகாசம் . தெருவில் வசிக்கும் சினேகித நாயை ஒரு குட்டிப்பையன் கழுத்தை இழுத்து வளைத்துக்  கட்டிக்கொள்கிறான் அந்த அன்பை அவனுக்கு யாரும் இந்தப் பூமியில் போதிக்கவில்லை அது ஏற்கெனவே இங்கு இருந்ததும் இல்லை ஒவ்வொரு அடிவைக்கும் போதும் ப்பீ ப்பீ ப்பீ எனக் குலவையிடும் புதிய காலணிகளைக் கேட்டபடியே மிகக் குட்டியான சிறுமி அம்மாவுடன் சின்ன அண்ணனுடன் தெருவின் ஓர் ஓரத்தை எடுத்துக்கொண்டு எதையுமே ஆக்கிரமிக்காமல் எட்டு வைத்து நடக்கிறாள் அவளை நடுவே விட்டு அவர்கள் நடக்கிறார்கள் இந்தச் சூரியனை இந்த வேளையை எங்கே இறக்கிவைப்பேன் இனிமையே உன்னை தெருவிலும் விட முடியாது வீட்டுக்கும் எடுத்துச் செல்ல இயலாது .

அந்தக் குருவி யார் ஸ்ரீநேசன்

  கவிஞர் ஸ்ரீநேசன் நேற்று தன் வீட்டு ஜன்னலுக்கு வந்த குருவி ஒன்றின் வீடியோவை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். ஜன்னலில் அடிக்கப்பட்டிருந்த வலை அந்த வீடியோவை விசேஷமாக்கியது. அந்தக் குருவி முதல் பார்வைக்கு மைனா போல எனக்குத் தென்பட்டது. மிகச் சிறிய உடலைக் கொண்ட குருவி என்றாலும் ஸ்ரீநேசனின் கவிதைகளை விட உரத்துச் சத்தமெழுப்பும் குருவி அது. எதையோ ஸ்ரீ நேசனுக்குச் சொல்வதற்கு வந்த மாதிரி இருந்தது. எழுது, தொடர்ந்து எழுது, நகுலன் கட்டுரை ஞாபகம் இருக்கிறதா, எழுந்து எழுது என்று திருப்பள்ளியெழுச்சியைப் போல உடல் முழுவதும் திரட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. குருவிக்குப் பின்னால் தூரத்தில் வயல், அதையொட்டிய பாதையில் ஒரு சிறுவன் கன்றுக்குட்டி ஒன்றைத் துரத்திக் கொண்டு போகிறான். கரும்பழுப்புக் கன்றுக்குட்டி ஓடி மறைந்தது.  குருவி எதையோ சொல்ல வந்தது போல, சொல்லிவிட்டு செல்ல வேண்டுமென்று காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்ட பரபரப்பில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தது. கண்டராதித்தனின் அடையாளமாக எனக்கு, அவர் வீட்டில் வளர்த்த தேன்சிட்டு இருக்கும். ஸ்ரீ நேசனின் அடையாங்களில் ஒன்றாக இந்தக் குருவி சேர்ந்திருக்கிறது. ஸ்ரீந

குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உலகம்

எம். கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்த்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆன்டன் செகாவ் கதைகள் தொகுப்பில் உள்ள 'சம்பவம்' கதையைப் படிக்கும்போது, குழந்தைகள் உலகத்துக்கும் பெரியவர்கள் உலகத்துக்கும் நடுவிலிருக்கும் சுவரை எனக்குத் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. குழந்தைகள் தங்கள் உலகத்தில் இருந்து சுலபம் என்று கருதும் எதுவும் பெரியவர்கள் உலகத்தில் சுலபம் அல்ல. பெரியவர்களிடம் உள்ள அளவுக்கு தரவுகள் குழந்தைகளிடம் இல்லை. எப்போதும் குறைவான தரவுகளிலிருந்தே குழந்தைகள் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி முடிவெடுத்துச் செய்யும் காரியம் முடிவில் அபத்தமாகும்போது பெரியவர்கள் முன்னால் அவர்கள் அவமானப்பட்டும் நிற்க வேண்டியிருக்கிறது. அந்தக் குழந்தைகள் மிகுந்த நல்லெண்ணத்தில்தான் புதிதாகப் பிறந்த அந்தப் பூனைக்குட்டிகளுக்கு தாங்கள் சாப்பிடும் உணவிலிருந்து மீதத்தை எடுத்துக்கொண்டு போய் வைக்கின்றனர். ஆனால், தாய் பூனையின் தாய்ப்பாலைத் தவிர அந்தக் குட்டிகளுக்கு அப்போது வேறு எந்த உணவும் தேவையாக இருக்கவில்லை. தனித்தனி அட்டைப்பெட்டிகளில் இரண்டு வீடுகளைச் செய்து அதில் குட்டிகளை வைக்கிறார்கள். தாய்ப்பூனை வந்து அந்தக்

மாய சைத்ரீகன் மாய இசைஞன் ஆன்டன் செகாவ்

டால்ஸ்டாயுடன் ஆன்டன் செகாவ் மனித சுபாவங்களின் மீது மட்டுமல்லாமல் பொழுதுகள், வஸ்துகள், தாவரங்கள், இருப்பிடங்கள் மீதும் சாயலையும் குணங்களையும் ஓவியனாக, இசைஞனாக மொழியின் வழி ஏற்றிவிடும் மகத்தான கதைக் கலைஞன் ஆன்டன் செகாவ். கவிஞரும் நாவலாசிரியருமான எம்.கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் புதிதாக வெளியாகியிருக்கும் ‘ஆன்டன் செகாவ் கதைகள்’ நூல், அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. செகாவின் கதைகளைப் படிக்கும்போது, அவரது சம காலத்து ரஷ்ய எழுத்தாளர்களும் தமிழில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுமான டால்ஸ்டாயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் ஒப்பிடாமல் படிப்பது சுலபம் அல்ல. மனிதர்களுக்குக் கடவுளையும் கடவுளுக்கு மனிதர்களையும் பொறுப்பாக்கி, அந்தப் பொறுப்பை ஒரு சுமைபோல நினைவுகூர்ந்துகொண்டே இருந்தவர்கள் அவர்கள். செகாவ் கதைகளிலும் கிறிஸ்துவும் கிறிஸ்துவப் பண்பாடும் ஆளுமை செலுத்தும், தேவாலயத்தின் நிழலுள்ள ஊர்களும் வீடுகளும் மனிதர்களும் வருகிறார்கள்தான். ஆனால், அவர்கள் கடவுளிடம் தங்களுக்கான பொறுப்பை விட்டுக்கொடுத்தவர்களோ, கடவுளைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களோ அல்ல. துன்மார்க்கம், துவேஷம், அன்பு, செம்மை

எஞ்சிய நஞ்சை ருத்திரனுக்கு அளிக்கிறார் இளங்கோ. அதுதானே நியாயமும்

  பாம்பு, பூனை, மரணம் இந்த மூன்றும் கவிதைக்குள் தென்பட்டாலே போதும், கவிதை துடியோ, வசீகரமோ கொண்டுவிடும். இந்த மூன்றையும் தொட்டும் செய்யுள்களாகிப் போகும் வசவச கவிதைகளையும் துரதிர்ஷ்டமாகப் பார்க்க நேர்கிறது. மரணத்தை அவ்வளவு எளிதாக, கலையாக இருந்தாலும் புனைவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே எனது தரப்பு. மரணம் சார்ந்த அச்சமோ, பொது சமூகத்தில் உள்ள விலக்கம், அமங்கல உணர்விலிருந்து இதைச் சொல்லவில்லை. சகலத்தையும் விட மரணத்தை மிகவும் பொறுப்பாக அணுகவேண்டியிருக்கிறது; சிவதனுஷை எடுப்பதைப் போல; சிறுவர்கள் எடுத்தால் தலையில் கூட விழுந்துவிடலாம். இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் உள்ள துடி மற்றும் சரள அம்சத்தில் விலக்க இயலாமல் மரணத்தின் போக்குவரத்து உள்ளது. மரணபோதத்தின் போதை ஏறிய இந்தக் கவிதைகளோ பிறப்பின் உக்கிர ஆற்றலைக் கொண்டிருப்பதுதான் இதன் விசேஷ அம்சம்.   கலாப்ரியா வழியாக, ‘இன்னும் கிளிகள்' கவிதையில் உணரமுடியும் 'சாவின் நெடி' வாயிலாக வன்முறையும் துடியும் தமிழ் புதுக்கவிதைக்குக் கிடைக்கிறது. இன்னும் கிளிகள் பாகவதர் கிராப்ப

பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டை

காக்காய் முள் சீனிக்கற்கள் நறநறக்கும் பாறைக்காட்டில் வீற்றுள்ளது மோனத்தின் கோட்டை அயர்ந்தது எத்தனை நூற்றாண்டென்று தெரியாமல் சிலைகளென பின்கால்களில் பிருஷ்டம் தொட்டு முன்னங்கால்களைத் தண்டமாய் தரையில் பதித்து கோட்டையின் ஆறுதிசைகளில் அமர்ந்து காவல் காக்கும்  பூனைகள் இரவில் முக்கோண முகம் கொண்ட ஆந்தைகளாகி விடுவதாய் கேள்வி மோனத்தின் கோட்டை இருக்கும் கதைகள் கேட்டு குரோதத்தின் குதிரைகளில் வீரர்கள் வருகிறார்கள் பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டைக்கு அதிகாமத்தின் ரத்தக்காட்டேரியொன்று முகமூடியால் கோரைப்பல்லை மறைத்துக் கொண்டு முதல் வகுப்பு பயணச்சீட்டெடுத்து ரயில் ஏறியுள்ளதாம் பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டைக்கு நீள் அங்கிகள் அணிந்து இடையில் வாளோடு பயணிக்கும் துன்மார்க்கத்தைத் தவிர வேறொன்றறியாத சூனியக்காரக் குரங்குகளின் படை பெயரிடப்படுவதற்கு முன்னாலிருந்த இருட்டும் கல்லும் சேர்ந்து மரணக்குளிரைப் பொதித்து வைத்திருக்கும் வனத்தின் ஆற்றைக் கடந்துவிட்டதாம் பூனைகள் காவல் காக்கும் மோனத்தின் கோட்டைக்கு ஆதி வன்மத்தின் மழைத்துளி பட்டு எரிமலைக் குழ

இந்தியாவை இணைக்கும் மெய்யான சாலை

இந்தியாவை இணைக்கும் வெவ்வேறு சாலைகள் அகத்திலும் புறத்திலும் இங்கே இன்னமும் உள்ளன. வளர்ச்சி, அபிவிருத்தி என்ற பெயரில் பக்கவாட்டு இருட்டைக் காணாமல், விழுங்கிய கிராமங்களை, சிதைத்த குடியானவர்களின் உடல்களைக் காணாமல், நீளும் சாலைகள் இந்தியாவை இணைக்கின்றன. சுயத்தின் அச்சம் சுயத்தின் வெறுப்பு சுயத்தின் ஆற்றமுடியாத புண்ணை அதிலிருந்து வரும் வலியை புண்பட்ட பண்பாடாக மாற்றி, இறந்தகால மகத்துவத்துக்கும் இறந்தகாலத்தில் நடந்த இழப்புகளுக்கும் இன்று பழிதீர்க்க புறப்பட்டவர்களின் சாலையும் உண்டு. அரசியல், வரலாறு என்ற பெயரில் அந்தச் சாலை வளர்ச்சி, அபிவிருத்தி என்ற பெயரில் நீளும் தேசிய நெடுஞ்சாலையோடு தலைநகரத்தில் இணைகின்றன. கலை, இலக்கியம், பண்பாட்டு வெளிகளிலும், அந்த அரதப்பழசான ஆறாத சனாதன ரணத்தின் குரல்கள், தமிழ் சூழலிலும் ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில் ‘மதம் அரசியலின் குறுவாள் கலையோ மதத்தின் குறுவாள்’ என்று கவிதை வழியாக ஒலிக்கும் இளங்கோவின் குரல் அத்தியாவசியமானது. தரம்பால் போன்ற பெரும் அறிஞரையே இந்தப் புண்பட்ட பண்பாட்டின் வலி, பாபர் மசூதி இடிப்பு நியாயமானதென்றும், காயப்பட்ட பண்பாடு கொடுக்கும் வலியை அனுபவிக்கும்

நான் பிறந்த க-வி-தை - கலாப்ரியா - அமங்கலம் அருசி அப்பட்டம் அதிர்ச்சி

(பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம்.அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் உத்தேசித்து ‘அம்ருதா’ மாத இதழில் தொடங்கிய தொடர் இது. பெருந்தொற்று காரணமாக, நான்கு பகுதிகளுடன் இதழ் நிறுத்தப்பட்டு தொடர முடியாமல் போன நிலையில், மீண்டு ‘அம்ருதா’ இதழ் வர ஆரம்பித்திருக்கிறது. லக்ஷ்மி மணிவண்ணன், கலாப்ரியா எனத் தொடர்கிறேன்.) மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும்போது மு. மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து வழியாக கவிதை வடிவம் அறிமுகமானது. கல்லூரி முதல் ஆண்டில் சேர்ந்தபோது அறிமுகமான லக்ஷ்மி மணிவண்ணன், அவர் வழியாக எனக்கும் தளவாய்க்கும் கிடைத்த சுந்தர ராமசாமி வழியாக எழுத்து மரபைச் சேர்ந்த கவிஞர்களையும் கவிதைகளையும் ஒரு பாடத்திட்டம் போல படிக்கத் தொடங்கினோம். ந. பிச்சமூர்த்தி, நகுலன், பசுவய்யா, ஞானக்கூத்தன் ஆகியோரின் கணிசமான கவிதைகளை சுந்தர ராமசாமியின் வீட்டு நூலகத்திலிருந்து

இளங்கோ கிருஷ்ணன் கடக்கும் எல்லை

தமிழ் நவீன கவிதையின் இயல்பில், அதை விசேஷம் என்ற அர்த்தத்திலேயே சொல்கிறேன், சிறந்த கவிகள் தமிழ்த் தன்மையுடன், உலகளாவிய உணர்வுநிலையைத் தொடுபவர்களாகப் பெரும்பாலும் இருக்கிறார்கள். நகுலன், பிரமிள், அபி, தேவதச்சன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா  என வேறு வேறு தளங்கள், உள்ளடக்கங்களைச் சேர்ந்தவர்களும் பிரத்யேகமாக தமிழ்த்தன்மையைக் கொண்டிருப்பவர்கள்தான். சுந்தர ராமசாமி, ஒருமுறை பிரமிளைப் பற்றி தனிப்பட்ட பேச்சில், தமிழ் மனம் என்ற ஒன்றை அவரிடத்தில் பார்க்கமுடிகிறது என்று சொன்னார். அவர் சொன்ன குணத்தை எனக்குத் தாமதமாக இப்போது அடையாளம் காணமுடிகிறது. இந்தப் பின்னணியில் மராத்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கவிஞரான அருண் கொலாட்கரின் கவிதைகளைப் படித்து, சில கவிதைகளை மொழிபெயர்க்கவும் முயற்சித்தபோதும், சுகுமாரன் மொழிபெயர்ப்பில் மலையாளக் கவிஞர் பி. ரவிக்குமாரின் நசிகேதன் நீள்கவிதையைப் படித்தபோதும் அவர்களிடம் அவர்கள் புழங்கும் மொழி, பிராந்தியப் பண்பு தாண்டியும் ஓர் இந்தியத் தன்மை இருப்பதாக கருதினேன்; கருதுகிறேன். அருண் கொலாட்கர் மும்பை என்ற பெருநகரத்தைப் பற்றிப் பேசும்போதும் நாசிக்கின் அருகில் உள்ள குக்கிராமத்த

இளங்கோ கிருஷ்ணனும் ஆனந்தும் சந்திக்கும் அகாலம்

 'பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்' தொகுதியை ஒப்பிடும்போது, எண்ணிக்கை அடிப்படையிலேயே வெளிப்படையாக வளமையையும், வெளிப்பாட்டில் சிருஷ்டிகரத்தை சிந்திவிட்டுப் போய்விடாத சரளத்தையும் கொண்டிருக்கும் புதிய தொகுதியான இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' -ஐப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். அகம் - புறம், அந்தரங்கம் - பொது, தனியியல்- அரசியல், உடல் - மனம் என்று எதிரெதிரான திசையில் புதுக்கவிதையில் சென்று கொண்டிருந்த குதிரைகள், நவீன கவிதையில் நேர்த்தியாகப் பூட்டப்பட்டு, கவிதையின் முழுமையான செல்நெறியில் இயல்பாகப் பயணிப்பதைப் பார்க்கமுடிகிறது. இதற்குத்தான் எத்தனை ரத்தமும் பலிகளும் இங்கே தேவைப்பட்டிருக்கின்றன. இளங்கோவில் கலாப்ரியாவும் யவனிகா ஸ்ரீராமும் ஒரு மரபாக, ஒரு சாயலாகத் தெரிகிறார்கள். வீடு, வெளியைப் பிரிக்கும் சுவர்களை, நிலைகளை உடைத்துப் போட்டு அமர்ந்திருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன். கரோனா ஊரடங்கின் பெயரால் மக்கள் மீது, குறிப்பாக வறிய மக்கள் மீது ஏவப்பட்ட அரச கொடுங்கோன்மைக்கான வன்மையான எதிர்வினை இந்த தொகுப்பில் 'பசியின் கதை' கவிதைத் தொடர் ஆகியுள்ளன. 'பசியின் கதை&

அமர்த்தியா சென்னின் ‘ஹோம் இன் தி வேர்ல்ட்’

பிரிக்கப்படாத வங்கத்தில் பிறந்த ஒரு சுயம், உலகளாவிய சுயமாக மாறுவதைப் பற்றிய கதைதான் அமர்த்தியா சென் ஆங்கிலத்தில் சுயசரிதையாக எழுதியுள்ள ‘ஹோம் இன் தி வேர்ல்ட்’. நூலின் தொடக்கத்திலேயே சொந்த ஊர், பிடித்த உணவு என்று பிரத்தியேகமான, ஒற்றையான ஒரு விருப்பம் தமக்கு இல்லை என்று சொல்லிவிடுகிறார். தான் பிறந்த சாந்திநிகேதன், வளர்ந்த டாக்கா நகரம், சிறு வயதில் கழித்த பர்மா, படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் என தான் வீடாக உணரும் இடங்கள் பரந்தவை என்று குறிப்பிடுகிறார். குறுகிய தேசியவாதப் பார்வையை முற்றிலும் விரும்பாத அமர்த்தியா சென்னின் தாத்தா அவர்கள் வீட்டுக்கு வைத்த பெயர் ‘ஜகத் குடிர்’. ஒரு சுயம் உலகத்தின் ஒளி அனைத்தையும் உள்ளே அனுமதிக்கும் குடிலாக மாற முடியும் என்பதை அமர்த்தியா சென்னின் இந்த சுயசரிதை நிரூபிக்கிறது. ஒரு சுயசரிதையில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட தகவல்கள் இந்த நூலில் குறைவு. ஆனால், பெற்றோர், நண்பர்கள், பேராசிரியர்கள், கருத்து மோதல்கள் பற்றிப் பேசும்போது விலகிப் பார்க்கும் பார்வையும் நகைச்சுவையும் அமர்த்தியா சென்னை நமக்கு மனிதராக நெருங்க வைக்கின்றன

அபியின் 'சொல்லாதிருத்தலும் எளிது'

தெரியாமல் ஒன்றைச் சொல்வது மட்டுமல்ல; தெரியும் ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லை; சொல்வதற்குத் தேவையுமில்லை என்பது மிகவும் தாமதமாகப் புரிய ஆரம்பித்திருக்கும் தருணத்தில் அபியின் 'சொல்லாதிருத்தலும் எளிது' கவிதை அந்தப் புரிதலை வலுப்படுத்துகிறது.  முதலில் கமழ்வது எல்லாவற்றுக்கும் முடிவில் ஒரு விதி இருக்கிறது. பழக்கத்தின் ஊழலில், பிரமிள் சொல்வது போல இருண்ட மனத்தின் அனுஷ்டானத்தில் சொல் உருவாக்கும் கமழ்ச்சி நிறைந்த எதார்த்தம், திருமணம் முடிந்த மண்டபத்தில், அடுத்த நாள் விருந்துக்கூடத்திலிருந்து வரும் காடியேறிப் புளித்த உணவு நெடியைப் போல ஆகிவிடுவதுதான் அந்த நியதி. சொல் உருவாக்கும் எதார்த்தம் தானே மெய்மை என்ற தோற்றத்தை, மயக்கத்தைக் கொண்டிருக்கிறது. சொல் உருவாக்கும் எதார்த்தத்தைத் திரும்பப் பெறவும் முடியாது. இப்படித்தான் சொல், நிச்சயத்தினாலான மலட்டுத்தன்மையைத் தவிர்க்க முடியாமல் இந்த உலகத்தில் உருவாக்கிவிடுகிறது, அழிக்கவே இயலாத வேதனைகளின் அணுக்கழிவுகளைப் போல. சொல்லப்படும் போது, சொல்லப்படாதது எல்லாம் தமது உருவங்கள், உடைகளை இழந்து நிழல்களாகின்றன. சொல்லப்படும் போது அங்கே முட்டுச்சந்தையும், அடுத்த

புராதனக் குன்று புராதன மரம்

நெசவாளி அந்த மலையின் உச்சியில் உள்ள, அந்த மலையைப் போலவே முதிர்ந்த மரத்தின் கீழே அமர்ந்து நெசவு செய்துகொண்டிருந்தான். நெசவுப் படைப்பில் அவன் தொடர்ந்து ஈடுபட்டிருந்தான். நெசவின் வழியாக, படைப்புக்கு சாராம்சத்தையும் தரத்தையும் செயலையும் நேசத்தையும் உறவையும் அந்தஸ்தையும் நடத்தைகளையும் இடத்தையும் காலத்தையும் வழங்கிக் கொண்டிருந்தான். நடப்பது எல்லாவற்றையும் அந்த நெசவாளியால் பார்ப்பதற்கு முடிந்தது. எல்லா காலங்களின் சத்தங்களையும் குரல்களையும் அவனால் கேட்க முடிந்தது. அவன் தனது உதடுகளை அசைக்காமலேயே கிசுகிசுத்தான்.  எந்த வார்த்தையை அவன் கிசுகிசுத்தான்? எந்த வார்த்தை ஊமையைப் பேச வைக்கிறது? எந்த வார்த்தை காது கேளாதவனைக் கேட்க வைக்கிறது. எந்த வார்த்தை பார்க்க இயலாதவரைப் பார்க்க வைக்கிறது? உலகில் வாழ்க்கையைத் துவக்கி வைக்கும் வார்த்தையை நெசவாளி கிசுகிசுக்கிறான். அந்த வார்த்தை உங்கள் விதியை நிர்ணயிக்கிறது. அந்த வார்த்தை உங்களை நேசத்தில் வீழ்த்துகிறது. ஆதியில் பேசப்பட்ட அந்த வார்த்தைதான் காலத்தின் அந்தத்திலும் உச்சரிக்கப்படும்.