கனலி இணைய இதழில் படித்த சுகுமாரனின் வாராணசி கவிதைகளையும் வே நி சூர்யாவின் கவிதைகளையும் அசைபோட்டபடி கழிகிறது இன்று. வாராணசியில் காலம் ஒன்றாக அது இறந்தகாலமே மட்டுமாக நீண்டு வளைந்து மீண்டும் இறந்தகாலத்துக்குள் போய் திரும்பத் திரும்பச் சுழன்று கொண்டிருக்கும் சித்திரத்தை சுகுமாரனின் இசைமை கூடிய மொழி நம்மில் உருவாக்குகிறது. படைத்தவன் குறித்த கேள்வி தேவையில்லை. படைத்தல் என்ற நிகழ்வும் பொருட்டில்லை. இங்கே வாராணசி படைப்பாக, ஒரு பெரும் நினைவுச் சித்திரமாக அனந்தகோடி காலமாக இருந்துகொண்டிருக்கிறது. வாராணசி என்ற நிலத்தில் வாழ்ந்து அதன் அடையாளமாகத் திகழ்ந்து 14 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து போன ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகானின் வீட்டுக்கு அடுத்த கவிதை நகர்கிறது. கவிதை சொல்லி, பிஸ்மில்லா கான் உயிருடன் இருக்கும்போது அவரது வீட்டில் சந்தித்த அனுபவத்திலிருந்து, அவர் இறந்தபிறகு போய்ப் பார்க்கும் பிஸ்மில்லா கானது வீட்டில், அந்தக் கலைஞனை ஒவ்வொரு மூலையிலும் நிகழ்த்துவது போல் தெரிகிறது. இங்கேயும் படைப்பு வழியாக படைத்தவன் கற்பனை செய்யப்படுகிறான். படைப்பு மட்டுமே எப்போதும் இருக்கிறது. இந்த ஊரடங்கு க...