'அரோரா' என்றால் வைகறை என்று அர்த்தம் சொல்கிறது. சூரியனின் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உயர் வளிமண்டலத்திலிருக்கும் அணுக்களோடு மோதுவதால் வட, தென் துருவப்பகுதிகளில் சிவப்பாகவும் பச்சையாகவும் வானில் ஏற்படுத்தும் கதிர்வீச்சு அரோரா என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும், அதன் நெறியும் தன்னிடமுள்ள புதிரை அதிசயத்தை, சில வேளைகளில் மாற்று விடைகளை, மனிதன் வழியாக வெளியிடுகிறது. அப்படி வெளியிடும் சிறந்த கலை ஊடகங்களில் ஒன்றாகக் கவிதை இருக்கலாமென்று சாகிப்கிரான் கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதன் மாறுதல்களை, தனிச்சுயத்தின் கண்கள் வழி, விளக்கங்கள் வழிப் பகுக்காமல் இயற்கை, வெளி, காலத்தின் நீண்ட வெளியில் வைத்துக் காணும் பார்வை, விளையாட்டு அல்லது ஞானம் இவரது கவிதைகளில் நிகழ்கிறது. அப்படி நிகழும்போது தெரியும் விடியல் அல்லது துருவமுனை சோதியைத் தான் சாகிப்கிரான் அரோரா என்கிறாரோ? சாகிப்கிரான் கவிதையில் நிகழ்ச்சியும் அனுபவமும் தொடர்வதில்லை; கதையாவதற்கு முன்னரே துண்டிக்கப்படுகிறது. கவிதை என்பது சொல் ஆல் ஆனது; கவிதை என்பது வார்த்தை ஆல் ஆனது என்பதை சாகிப்கிரான் ம...