இரண்டாம் உலகப்போர் வெடித்து 60 ஆண்டுகளாகிவிட்டது இப்போது. நான் ஒரு கவிஞன். எனக்கு 77, 78 வயதாகிறது. ஒருநாள் கவிஞன் ஆவேன் என்ற அற்புதத்தில், பயணத்தைத் தொடங்கியபோது எனக்கு நம்பிக்கை கொள்ள முடிந்ததேயில்லை. துர்க்கனவுகள் மற்றும் ஆவிகளால் எழுப்பப்பட்டு இரவுகளில் எப்போதாவது விழிக்கும்போது “நான் கவிஞன் ஆகலாம்” என்ற எண்ணத்தால் பீடிக்கப்பட்டேன்…நான் ஆவிகளை இருட்டை மரணத்தை விரட்டுவேன்…நான் கவிதையின் வெளிச்சத்துக்குள் புகுவேன், கவிதையின் இசைக்கு, கவிதையின் நிசப்தத்துக்கு. நான் இந்த வார்த்தைகளை எழுதும்போது, அம்மாவின் அமைதியான மனம்நிறைந்த கண்கள் என்மீதுள்ளன. மறுமையிலிருந்து அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், நான் நம்பாத மறுபக்கத்திலிலிருந்து. இவ்வுலகிலோ இன்னொரு போர் மூண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கப்புறம் இன்றுவரை தொடர்ந்து மூண்ட நூற்றுக்கணக்கான போர்களில் ஒன்று அது. அரை நூற்றாண்டாக நான் கட்டியெழுப்ப முயன்ற உலகம் வீடுகள் மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்களின் கட்டிடக் குவியலுக்கிடையே நொறுங்கிவிழுந்துகொண்டிருக்கிறது…மனிதனும் கடவுளும் செத்துகொண்டிருக்கிறார்கள், மனி...