இலக்கியம், பண்பாடு, தத்துவம் மற்றும் கோட்பாடுகளை உரையாடலின் அந்தரங்கத்தோடும் படைப்பூக்கம் வெளிப்படும் தீவிரத்தோடும் எழுதக்கூடிய அரிதான விமர்சகர், நாட்டுப்புறவியல், பண்பாட்டு அறிஞர் எம் டி முத்துக்குமாரசாமி. 1980-களின் இறுதியில் தமிழில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்து நடைபெற்ற கோட்பாட்டு அறிமுகங்கள், விவாதங்களில் தாக்கம் செலுத்தியவை இவரது எழுத்துகள். தமிழ் சிறுகதை எழுத்தில் நிகழ்ந்த சோதனைகளில் எம் டி முத்துக்குமாரசாமியின் சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தவை. தமிழ் எதார்த்தவாத சிறுகதைகளைப் படித்துச் சலித்து, நூதனம் தேடுவோருக்கு, இவரது ‘மைத்ரேயி மற்றும் பிற கதைகள்’ ரசமான அனுபவத்தைத் தரும். இவரது முதல் கவிதைத் தொகுதியான நீர் அளைதல்-க்குப் பிறகு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ தமிழ் நவீன கவிதை சார்ந்து காத்திரமான இடையீடாகும். நாம் இனி வெறுமனே கதையை நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. எண்ணற்ற கதைகளும், கதைச் சட்டகங்களும் நிலைத்து வாழ்ந்து பின்னர் உளுத்துப் புதைந்து அழிந்துவிட்ட ஒரு கலாசார நினைவில், கதை மேல் கதைபோன்ற ஒன்றை, கவிதைமீது கவி...