Skip to main content

Posts

Showing posts from December, 2020

ஒருவர் சாவதும் ஒருவர் இருப்பதும்

ஜன்னல்கள் உட்பட முழுக்க அடைக்கப்பட்டு உள்ளே தாழிடப்பட்ட விடுதி அறையில், சில்லிடும் மழைபோல இறங்கும் டெல்லி குளிர் எனக்குப் புதியது. மாலை ஆகிவிட்டால் குளிரில் அசைவுகள் குறைந்துவிடுவதோடு தலையும் உறைந்துவிடுகிறது. குளிர், குளிராக மட்டும் இல்லை; குளிருடன் இனம்புரியாத பயமும் சேர்ந்து இந்த அறையில் இருக்கிறது. இந்தக் குளிரில் தாகம் தீராமல், தண்ணீரைத் தித்திப்புடன் அருந்துகிறேன்.  கட்டிலின் கீழே இறங்கினால் காலுக்கு எட்டும்படி செருப்பைப் போட்டிருக்கிறேன். அடிக்கடி சிறுநீர் கழித்துவிட்டு, கனத்த கம்பளியைக் கல் சுவர் போல மூடிப் படுத்திருக்கிறேன். வழக்கமாக விளக்கை அணைத்துவிட்டு இருளிலேயே தூங்கமுடியும் எனக்கு விளக்கை அணைக்க முடியாதிருந்தது. அறையில் இருக்கும் பயம் என்னைக் கவ்வாமல் இருக்க இந்த வெளிச்சத்தைத் துணைக்கு வைத்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன். அப்படியும் பாதி உறக்கம் தான் அதிகாலை வரை. என் அறை ஜன்னலுக்கு வெளியே கைநீட்டும் தூரத்தில் புழுதி படிந்து பகலிலும் இருண்டு தெரியும் சந்தின் மூலையில் இருக்கும் மின்கம்பத்தில் புறாவொன்று தலையை கழுத்துக்குள் செருகிக் கொண்டு உறங்க முயல்கிறது. ஜன்னலிலிரு

அறியப்படாத ஒரு வாழ்க்கையின் கதை

  ஆனந்தின் ‘நான் காணாமல் போகும் கதை’- யை மீண்டும் மீண்டும்  படிக்கும்போதும் அனுபவம், புரிதலை வேறு வேறு பக்கங்களிலிருந்து திறக்கும் படைப்பாகும். இந்தக் கதையில் வரும் சொல்லிக்கு பிரதேச ரீதியான மொழி ரீதியான பண்பாட்டு ரீதியான பால் ரீதியான சில அடையாளங்களைச் சொல்ல முடியும். என்றாலும், இதுவரை நான் படித்த புனைவுகளில் பார்த்த பாத்திரங்கள் கொள்ளும் ரூபத்தை ஆளுமையை ஒப்பிடும்போது இந்தக் கதையில் வரும் சொல்லிக்கு நபர்த்தன்மைகள் மிகவும் குறைவு. புலப்படும் அந்தச் சொல்லியின் உடல், ஆளுமை அம்சங்களைக் கொஞ்சமாகக் குறைத்தால் போதும்; அந்த நபர் நானாகவும் நீங்களாகவும் பிரதிபலித்துவிடுவார். பகலும் இரவும் சதா; ஒளியும் இருளும் சதா; கனவும் நனவும் சதாவென பேதமில்லாத வாழ்வு அவனுடையது. நனவிலிருந்து கனவுக்கு; மெய்யிலிருந்து மெய்சாராத இடத்துக்கு; வெளித்தெரிவதிலிருந்து தெரியாத இடத்துக்குஅறியப்பட்ட சம்பவங்களிலிருந்து அறியப்படாததின் சம்பவமின்மையை நோக்கி அவனது போக்கும் வரத்தும் நிகழ்கிறது.  கிடைமட்ட, தரைத்தளப் புழக்கத்திலிருந்து செங்குத்து அனுபவங்களைத் தரும் மலைகளுக்குத் தொடர்ந்து பயணித்தபடி அவன் இருக்கிறான். அன்றாடம் என்னு

க. நா. சு வரைந்த உயிர்க்கோடுகள்

 ‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று நகுலன் தனது ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்கமுடியக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில், க. நா.சுப்ரமண்யம் எழுதியிருக்கும் இந்த நூலில் 41 எழுத்தாளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகளின் முக்கியத்துவம் புலப்படுகிறது. க. நா.சுவால் அப்படி இருக்க முடிந்திருந்க்கிறது. அத்துடன் அவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் முடிந்திருக்கிறது. தமிழில் கடந்த நூற்றாண்டில் நுண்கலை, இலக்கியத் துறைகளில் இயங்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள போதிய கட்டுரைகளோ, வாழ்க்கை சரிதங்களோ போதுமானவை எழுதப்படயில்லை. தொ. மு. சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறும், பாலசரஸ்வதி குறித்து அவரது மருமகன் டக்ளஸ் நைட் எழுதி, தமிழில் பின்னர் மொழிபெயர்க்கப்பட்ட பாலசரஸ்வதி பற்றிய நூலும்தான் முழுமையானதாக உடனடியாக ஞாபகத்துக்கு வருவது. கு. அழகிரிசாமி முதல் பிரமிள் வரை சுந்தர ராமசாமி எழுதிய நனவோடை நூல்களும், சி . மோகன் எழுதிய நடைவழிக் குறிப்புகளும், நடைவழி நினைவுகளும் முக்கியமானவை. சின்னச் சி

ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு கதை இருக்கிறது

அறிவியல் எழுத்து, சுவாரசியமான எழுத்து என்பவை எதிரெதிர் முனைகளிலேயே இன்றும் தொடரும் நிலையில் வன உயிர்களைப் பற்றிய அறிவியல்ரீதியான விவரங்களுடன் கூரிய நகைச்சுவை உணர்வைத் தக்கவைத்துக்கொண்ட எழுத்து ஜானகி லெனினுடையது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய ‘மை ஹஸ்பெண்ட் அண்ட் அதர் அனிமல்ஸ்’ கட்டுரை நூல், ‘எனது கணவனும் ஏனைய விலங்குகளும்’ பாரதி புத்தகாலயம் வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் கணவரும் ஊர்வன உயிரியிலாளருமான ரோமுலஸ் விடேகருடன் வாழ்ந்துவருகிறார். பாம்பு, கீரி, மரநாய், முள்ளம்பன்றி, தவளை, தேரை என பல்லுயிர்கள் நடமாடும் மனமும் இடமும் இவர்களுடையது. ஜானகி லெனினுடன் உரையாடியதிலிருந்து... காட்சி ஊடகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய பிறகு, எழுத்துலகத்துக்குள் முழுமையாக ஈடுபட்டு வெற்றியையும் காண்கிறீர்கள். சினிமாவிலிருந்து எழுத்துக்குத் திரும்பியதற்கான காரணங்கள் என்ன? தொடக்கத்தில் ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்தேன். படத்தொகுப்பாளராக இருந்தையும் சேர்த்து சினிமாவில் 12 ஆண்டுகள் ஈடுப

எல்லாம் அழுகையிலிருந்தே தொடங்குகின்றன கிம் கி டுக்

பார்வையாளனின் உள்ளுறுப்புகளுக்குள்ளும் உணர முடியும் வன்முறை மூலமும் தியானமும் இருளும் கவித்துவமும் கொண்ட பாலுறவுக் காட்சிகள் மூலமும் எதைத் திரும்பத் திரும்ப கிம் கி டுக் வலியுறுத்தினார்? தென் கொரியாவின் சமூக எதார்த்தம், பொருளாதார எதார்த்தம், ஆண்பெண் உறவுகளின் எதார்த்தம்தான் கிம் கி டுக்கின் களம். ஆனால், ஓர் உருவகக் கதை போல எதிரெதிர் குணங்கள் கதாபாத்திரங்களாக முரண்படுவது வழியாக, ஓர் அற்புத எதார்த்தத்தையும் உலகளாவிய குணாம்சத்தையும் உருவாக்கிவிடுபவர். கடந்த இருபது ஆண்டுகளில் தென் கொரியாவுக்கு வெளியே உலக சினிமாப் பார்வையாளர்களை வியக்கவைத்த சில சினிமா மேதைகளில் ஒருவர் கிம் கி டுக். கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உலக சினிமாப் பார்வையாளர்களின் மத்தியில் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாகக் கொண்டாடப்பட்ட படைப்பாளியும் கூட. சமகால நகர்ப்புற வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும், அதன் காரணமாக உருவாகும் வன்முறையையும் குரூரங்களையும் எந்த ஜோடனையும் இல்லாமல் வெளிப்படுத்திய படங்கள் இவருடையவை. சினிமாவைப் பொறுத்தவரை 59 வயது என்பது விடைபெறுகிறவயதில்லை.  மார்ட்டின் ஸ்கார்ஸஸி, டெரன்ஸ் மாலிக் தொடங்கி வெர்னர்

கடலைச் சிறுபடம் எடுக்கும் பாம்பு

நீயும் நானும் கோர்த்துக்கொண்ட போது கடல் என் முன்னர் முதல் முறையாகப் பூத்தது என்பதால் உன்னைப் பார்த்தபிறகு கடலைப் பார்க்கும்போது எனக்கு கடல் மட்டும் போதுவதில்லை கண்ணே கடலுக்கு அருகிலேயே  தாவரங்கள் சிலிர்த்து ஆடும் மலை வேண்டும் மலையும் கடலும் சேர்ந்து எனக்குச் சித்தித்துவிட்டால் அதுமட்டும் போதாது கண்ணே கடல்மட்டத்துக்கு மேலே எங்கோ சுனையில் சுரந்த நன்னீர்  வழிந்திறங்கி விரிந்திருக்கும் நீர் நீலத்தில் கரையும்போது  நனைத்துச் செல்ல  உன் பாதங்கள் என் உடன் வேண்டும் டினோசாரைத்  துடைத்தழித்த எரிமலைக் குழம்பில் உருவான மலையாம் நிலம் அதுவாம் பவளப் பாறைகளாம் அப்போது உஷ்ணத்தில் இருந்தவை இப்போது உன்னுடன் தொட்டுப் பார்க்கும்போது அவை நீர் போல நீர் போல மௌனமாய்ச் சில்லிடுமாம் நீலம் ஏதோ ஒரு கதியில் பச்சையோடு முயங்கி பொன்னென ஒளிர்ந்து மின்னும் கடல் போதாது கண்ணே உன் வயிறு போல அதில் குழைந்தேறும் அலைவாய் புசிக்கும் மலை போதாது கண்ணே பந்தத்தின் ரத்தவீச்சமே அற்ற எலும்புகளெனத் தோன்றும் பவளப்பாறைகளின் வசீகர எச்சங்கள்  மட்டும் நாம் பொறுக்க அங்கே போதாது பெண்ணே நீயும் நானும் அனைத்தையும் கோர்க்கும்போது மலையிலிருந்து நழு

பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?

ஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர்? உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா? இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும்.  அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர்? நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய

மீரான் மைதீனின் 'ஒரு காதல் கதை'

இந்தப் பூமியில், பொருளியல் சூத்திரங்களால் மட்டுமே செயல்படுவது போலத் தோன்றும் இந்த இடத்தில் தரிக்கும் மனிதர்களை ஈர்த்து இன்னொரு கோளத்தில் வைத்திருக்கும் மகத்தான ஆற்றல்களில் ஒன்று காதல். ஆனால், காதலின் ஈர்ப்பும் அதனால் காதலர்களுக்குக் கிடைக்கும் பறத்தலும் தற்காலிகமானதே; இந்த ஈர்ப்பு செயல்படும் உலகிலிருந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பார்த்த தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர் மௌனியின் கதாபாத்திரங்களோ தங்கள் காதல் நிறைவேறாத நிலையில் அதற்கு ஒரு அமரத்துவத்தை ஏற்படுத்துபவர்கள். காதலின் ஈர்ப்பால் பூமிக்கு மேல் தோன்றும் அந்த உலகத்தைத் தான் ஆகர்ஷணக் கோளம் என்று சுந்தர ராமசாமி, மௌனியின் பிரபஞ்சத்தை அழைக்கிறார். மீரான் மைதீன் எழுதியுள்ள ‘ஒரு காதல் கதை’ குறுநாவலின் நாயகியான ஷீலா, தன் காதல் வாழ்க்கையில் வெற்றிகண்டவள். காதல் இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் திருமண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. பணிவாழ்க்கையிலிருந்தும் கல்லூரி முதல்வராக ஓய்வுபெற்று 60 வயதிலும் வசீகரத்துடன் இருப்பவள். நாகர்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் பேரக்குழந்தைகளைப் பார்க்கச் செல்லும் போது, தனது வெற்றிக்கதையின் விடுபடல