Skip to main content

Posts

Showing posts from May, 2021

ஒரு ஆக்டோபசைப் போல

கசையிழைகளை நீட்டியும் கொம்புகளைக்கூட மென்மையாய் உள்ளிழுத்துக் கொண்டும் ஒரு கற்றாழைச் செடியென எளிமையாய்  ஒரு ஆக்டோபசைப் போல ஆர்ப்பாட்டமின்றி முளைத்த என் உறுப்புகள் அத்தனையையும் வெளியே நீட்டியபடி நினைக்கும் பொழுதில் உள்ளிழுக்க முடியாமல் புறத்தில் நீட்டிக்கொண்டு ஒரு ஆக்டோபஸைப் போல என்னால் இருக்க முடியவில்லை. 

என் அகம்

  ஒரு கருப்பையில் புழு போலச் சுருண்டிருந்த எனக்கு முட்டைக்குள் இருக்கும் ஆக்டோபஸுக்கு கால்களைக் குவித்து என் அகத்தில் இருட்டில் சுருண்டிருக்கும் இந்த ப்ரௌனிக்கு .

எல்லாமே ஆசிர்வாதம் தான்

ஊரடங்கு நாட்களில் சிகை திருத்தும் கலைஞர் ரவியை வரவழைத்தார் நகர மேயர். முடிவெட்டி, தாடியையும் சீர்செய்துமுடித்தார் ரவி. தானும் இதயத்திலிருந்து பேசலாம் என்று நினைத்துக்கொண்டு, சார் உங்களது முடியில் நரை ஏறிவருகிறதென்று வேடிக்கையாக கூறினார் ரவி. எவ்வளவு தெனாவெட்டு என்று கருதிய மேயர், ரவியை ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது வீட்டுக்கு வந்த உதவியாளனிடம் எனது தலையில் நரை இருக்கிறதா என்று கேட்டார்.  அப்படி ஒன்றும் அதிகம் இல்லை என்று நாசுக்காகப் பதிலளித்தார் உதவியாளர். உதவியாளர் மீதும் எரிச்சல் வர, அவரையும் இரண்டு மாதங்களுக்குச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  இரண்டு மாதங்கள் கழித்து, வேலைக்கு வந்த உதவியாளனிடம் அதே கேள்வியைக் கேட்டார் மேயர். உதவியாளர் சுதாரித்துக் கொண்டு, தலை முழுக்க கருப்பாக இருக்கிறது அய்யா என்றார். என்ன பொய்? என்று கண்டித்த மேயர் பின்புறத்தில் பத்து சவுக்கடிகள் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தார் முல்லா நஸ்ரூதின். “முல்லா, எனது தலைமுடியின் நிறம் என்ன சொல்?” என்று கேட்டார்.  முல்லா நஸ்ரூதினோ நமது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை

நீல. பத்மநாபனின் நினைவுவழி நகுலன்

தமிழின் தனிப்பெரும் இலக்கிய ஆளுமையான நகுலனை, தனது கல்லூரி ஆசிரியராகச் சந்தித்துக் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் இலக்கியவாதியாகவும் நண்பனாகவும் உடன் பயணித்தவர் எழுத்தாளர் நீல.பத்மநாபன். அவர் நீள்கவிதை வடிவத்தில் எழுதியிருக்கும் ‘நகுலம்’, நகுலனின் தனிப்பட்ட ஆளுமை, குணநலன்கள், சுகதுக்கங்கள், பேணிய நட்புகள், முக்கியமான திருப்பங்கள் என அறுபது ஆண்டுகால வாழ்க்கையை சிறுதுளிகளாகத் தொடரும் ஆவணம் இது. நீல.பத்மநாபன், கவிதை என்ற வடிவத்தில் இதைக் கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதத் தேர்ந்துகொண்ட நகுலன் என்ற இலக்கிய ஆளுமைதான் இந்தப் படைப்பை சுவாரஸ்யமாக்குகிறது. மற்றபடி நீல.பத்மநாபன் இதை ஒரு கட்டுரையாகவே நீட்டி எழுதியிருக்கலாம்; பாதகம் ஒன்றும் இல்லை. பொதுவான சமூக அர்த்தத்தில் மரணம் என்பதற்கு அர்த்தம் முடிவான ஒன்றுதான். ஆனால், இருப்பு அளவுக்கு இன்மையின் அனுபவமும் அவசியமானது, ருசியானது என்பதைத் தனது பிரத்யேக மொழி வழியாக நிகழ்த்தி, வாழ்வு அளவுக்கு சாவும் சாவின் பரிமாணங்களும் பலவிதம் என்பதைக் காட்டியவர் நகுலன். அப்படியான நகுலன் மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போது நீல.பத

இன்னொரு குவளை காபி - பாப் டிலன்

உனது மூச்சு தித்திப்பாக உள்ளது வானத்தில் இருக்கும் இரண்டு ஆபரணங்களைப் போல உனது கண்கள் உனது முதுகு நிமிர்ந்தது, உனது கேசம் மிருதுவானது நீ சாய்ந்திருக்கும் தலையணையில் நான் பிரியத்தை உணரவில்லை நன்றியையோ காதலையோ கூட உனது விசுவாசம் என் மீது அல்ல  மேலேயுள்ள நட்சத்திரங்களிடம் செல்ல இருக்கும் பயணத்துக்காக இன்னொரு குவளை காபி அருந்துவோம் கீழே இருக்கும் பள்ளத்தாக்குக்குச் செல்வதற்கு முன்பாக  இன்னொரு குவளை காபி அருந்துவோம் உனது தந்தை, அவரோ விலக்கப்பட்டவர் தொழில் அடிப்படையில் அவரோ அலைந்து திரிபவர் பொறுக்கியெடுத்து தேர்ந்தெடுப்பதை  அவர் உனக்குக் கற்றுத்தருவார் எப்படி கத்தியை எறியவேண்டுமென்பதையும் எந்த அந்நியனும் நுழையாமல் தனது ராஜாங்கத்தை அவர் மேலாண்மை செய்கிறார் இன்னொரு தட்டு உணவுக்காக அவர் இரையும்போது அவர் குரல் நடுங்குகிறது செல்ல இருக்கும் பயணத்துக்காக இன்னொரு குவளை காபி அருந்துவோம் கீழே இருக்கும் பள்ளத்தாக்குக்குச் செல்வதற்கு முன்பாக  இன்னொரு குவளை காபி அருந்துவோம் உனது சகோதரி நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்கிறாள் உனது அம்மாவையும் உன்னையும் போல அவள் வாசிக்கவோ எழுதவோ கற்றுக்கொள்ளவேயில்லை அவளது அலமா

ஆத்மநிர்பார்

இந்திய வரைபடத்தின் இடுப்புக்குக் கீழே வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களைப் போலவே எனக்கும் ‘ஆத்மநிர்பார்’ என்ற வார்த்தை அறிமுகமானபோது சரியாகவே உச்சரிக்கத் தெரியவில்லை. ஒரு வார்த்தையைச் சரியாக உச்சரிக்கத் தெரியும்போது அதன் அர்த்தமும் புரியத் தொடங்கிவிடும்போலும். நரேந்திர மோடி அதை அறிமுகம் செய்யும் போது அதன் அர்த்தத்தை உணர்ந்த ஆழத்திலிருந்து சரியாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு அந்த வார்த்தை டப் டப்பென்று வெறும் காற்று போலவே ஒலித்தது. நண்பர்களிடம் அந்த வார்த்தையைச் சொல்ல முயன்றேன். ஆத்ம என்று சொல்லும்போதே குழம்பிவிடும். எங்கே இறங்கி எங்கே ஏறவேண்டும் அந்த வார்த்தையில் என்று எனக்குத் தெரியாமலேயே இருந்தது. சுயச்சார்பு, தன்னிறைவு என்பது அந்த வார்த்தையின் அர்த்தமென்று தெரிந்தது. நரேந்திர மோடி அந்த வார்த்தையை அறிமுகப்படுத்திய போது, ஒவ்வொரு இந்தியனிடமும் அது இல்லை என்றும் அது தொலைதூரம் பயணித்து, சாதனை செய்து, மிக அபூர்வமாகக் கிடைக்கும் வஸ்து அல்லது பண்பு என்ற தோற்றத்தையே ‘ஆத்மநிர்பார்’ எனக்குக் கொடுத்தது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் சில மணிநேரங்கள் இடைவெளியில் அறிவிக்கப்பட்ட தேசிய அ

ஏகாந்தம் என்று மொழிபெயர்க்கிறேன்

ஆம் தனது விருந்தை தனது இணையை தனது மணத்தை வாயைத் திறந்து காற்றில் முகம்தூக்கி சுகிக்கிறது ப்ரௌனி எனக்கு அங்கிருக்கும் அதன் உருவம் புலப்படவில்லை ஏகாந்தம் என்று அதை நான் தயங்கித் தயங்கி என் உலகின் அர்த்தத்தில் மொழிபெயர்க்கிறேன் மாடு தொழுவத்தில் சிரிப்பதை எழுதுகிறார் ந. முத்துசாமி நாய் சிரிக்கும் என்கிறார் அ. மார்க்ஸ்.

இந்தச் சரக்கொன்றை மலர்களுக்கு முன்னால்

  இந்தக் கோடையில் மட்டும் அல்ல; எந்தக் கோடைக்கும் மாபெரும் அணிகலனாகவும் வீண் ஆடம்பரமாகவும் என்னை உறுத்துவது இந்தச் சரக்கொன்றை மரங்கள் தான். உலர்ந்து மக்கும் வேம்பிலைகள், பன்னீர் பூக்களின் வாசனை வழியாக எனது புலன்கள்தான், முதலில் தெரிந்துகொண்டு சென்னைக்குள் கோடையை வரவேற்கிறது என்பது எனது எண்ணம். கடந்த பத்தாண்டுகளாகத் தான் சென்னை வெயிலை மஞ்சள் பொன்னாக்கித் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் சரக்கொன்றைப் பூக்களின் மலர்வையும் உதிர்வையும் கவனத்தோடு பார்க்கிறேன். புகைப்படக் கலைஞரும் ஒளிப்பதிவாளருமான அல்போன்ஸ் ராயை ஒரு நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவர் வீடு இருக்கும் தெருவுக்கே லேபர்னம் அவன்யு என்று பெயர் வைத்திருப்பதைக் குறிப்பிட்டார். சென்னையின் கோடைக் காலம் அதற்கேயுரிய வசீகரங்கள், மகிழ்ச்சிகள், உஷ்ணம் சார்ந்த அல்லல்கள், நினைவுகளைக் கொண்டதாக இருப்பினும் அவற்றுக்கு மத்தியில் வருடம்தோறும் என் காட்சிக்குள் அடர்ந்துவரும் இந்த சரக்கொன்றை பூக்கள் கொண்டிருக்கும், மொழியால் விண்டு விவரித்துவிட முடியாத அழகு என்னைக் கோபம் கொள்ளவே செய்கிறது; பெயருக்கு ஏற்ப சரம் சரமாய், மரமே மலர்களான நாங்கள் தான் என்று கூவ

என் முகம் அவள் முகம் ப்ரௌனியின் சூட்சும முகம்

  பரபரவென்று மூக்கு நீட்டி மூசுமூசென்று என்னைப் போல் உருவமற்ற காற்றுக்குள் எதையோ ப்ரௌனி தேடுகிறதென்று முதலில் நினைத்தேன் நாங்கள் நின்றுகொண்டிருக்கும் கம்பிச் சுவருக்கு அப்பால் பூங்காவுக்குள் ப்ரௌனிக்கு முதுகுகாட்டி தியானிக்கும் பூனையை நோக்கித் தான்  ப்ரௌனி  ரோமமெல்லாம் சிலிர்த்துக் கொள்ள  காற்றில் விரைந்து கொண்டிருக்கிறது. பூனையுடன்  அதற்கு ஆதியிலிருந்து  தொந்தமா பந்தமா? மீண்டும் இந்த ஊரடங்கு நாட்களில் நான், ப்ரௌனி இன்னும் சில நாய்கள் சில பூனைகள் எப்போதாவது சில மனிதர்கள் மனுஷிகள் மட்டுமே  தெருவில் உலவுகிறோம் எல்லா வழிகளும் முடிந்து விளிம்புக்கு வந்து நிற்பதைப் போலத்தான் இந்த நாட்களில்  இப்படி வந்து நிற்கிறோம் பூனையிடமிருந்து தற்சமயம் விடுபட்டுவிட்டது ப்ரௌனி கோடையில் உதிர்ந்து கிடக்கும் கிளைகள், இலைகள், மலர்களை மாறாத புதுமையுடன் முகர்கிறது என் முகம் அவள் முகத்துக்குப் பிறகு எல்லாக் கோணங்களிலும் எப்போதும் எனக்குச் சலிக்காமல் புதிதாக இருப்பது ப்ரௌனியின் முகம்தான் நான் அதைப் பார்க்கும்போது அதில் தெரிவது  முதலில்  என் அன்பின் முகம் அதற்கு அந்த அன்பின் முகத்தைச் சுற்றிக் கோடுகள் உண்டு அந்த அ

பாரதிதாசனின் ‘நீரற்ற ஆற்றுப்பாதை’, கலாப்ரியாவின் நீர் வரப்போகும் குளம்

அழகின் சிரிப்பில் ‘கடல்’ பற்றிய பகுதியில் கடல் மணல், நண்டுகள் என ஓரத்தில் நடைபயிலத் தொடங்கி கடலின் ஆழத்து அமைதிக்குச் செல்கிறார். ஓரக்கரையில் கலகங்கள் விளைவிக்கும் அலைகள், தூரத்தில் ஆழக்கடலில் இல்லை என்று குறிப்பிடும் அவர் அதை ‘புரட்சிக்கப்பால் அமைதி’ என்ற தலைப்பில் குறிப்பிடுகிறார். ‘அருகுள்ள அலைகட் கப்பால்/ கடலிடை அமைதி அன்றோ’ என்று உரைக்கும்போது ‘அமைதி’, அமைதி தோன்றிவிடுகிறது. கடலிடை அமைதி என்ற வெளிப்பாடு படித்ததிலிருந்து மோதிக்கொண்டிருக்கிறது; எண்ணங்களுக்கிடையில் உள்ள இடைவெளி போல.  கடலைத் தாண்டி, தென்றலைத் தாண்டி, காட்டைத் தாண்டி குன்றமும் தாண்டி ஆற்றுக்கு வருகிறார் பாரதிதாசன். ஆறு முதலிலேயே நீர் தளும்பி ஓடும் ஆறல்ல. முதல் கவிதை ‘நீரற்ற ஆறு’. செல்லும் வழி இருட்டு என்று புதுமைப்பித்தன் வழி வந்த இந்த நவீன கவிஞனுக்கு, ஆற்றில் நீர் இல்லாத போதிருக்கும் வெறுமைதான் உடனே அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கிறது. அடுத்து வரும் வழிப்போக்கும் எனக்கு நெருக்கமானது.  நீரற்ற ஆற்றுப்பாதை இருபக்கம் மண்மே டிட்டும், இடைஆழ்ந்தும், நீள மான ஒருபாதை கண்டேன், அந்தப் பாதையின் உள்இ டத்தில் உரித்தநற் றாழம் பூவி

பாரதிதாசனுடைய ‘குரங்கின் அச்சம்’

பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’-ஐ தற்செயலாக நேற்றிரவு வாசிக்கத் தொடங்கியபோது, கவிஞனின் சிரிப்பை ஆங்காங்கே பார்த்து அனுபவித்தேன். யாப்பிலக்கணத்தின் தளை, மரபான மனத்திலிருந்து விடுபடாத சுமை, கொண்ட கருத்தை ஊடகத்துக்குள் செலுத்தும் மிகுகவனம் எல்லாம் பாரதிதாசனிடம் இருக்கிறது. ஆனால், தானும் சேர்ந்த இயற்கையில் ஈடுபடும்போது தனது அனுபவத்தைப் புதிதாகப் பார்க்கும் வியப்பும் விந்தையும் சேர அதை மொழிக்காட்சியாக ஆக்கத் துடிக்கும் வெள்ளந்தித் தன்மை கொண்ட கவிஞன் கணிசமாக ‘அழகின் சிரிப்பு’-ல் தென்படுகிறான்.  ‘இறகினில் உயிரை வைத்தாய்/ எழுந்தன புட்கள்!’ என்று கூறும்போது பறவைகள் ஒரு பசிய வயலிலிருந்து, நிலப்பரப்பிலிருந்து எழும் காட்சி உதயமாகிவிடுகிறது. இயற்கையை தாய்மையின் கருணையாக, இயற்கையை நெறிப்படுத்தப்பட வேண்டிய குழப்படியாக, இயற்கையின் ஒரு பகுதியை விஷமமாக, இயற்கையைத் தீங்காகப் பார்த்த நவீனப் பார்வை பாரதிதாசனிடம் இல்லை. ஆனால் பாலியல் ஒழுக்கம்  சார்ந்து பாரதிதாசனிடம் பழைய அதே தமிழ் ஆள்தான் இருக்கிறான். புறாவைப் பற்றி எழுதும்போது பெண் புறா, ஒரு ஆண் இணையையே பராமரிக்கும் என்று சிறப்பித்துக் கூறுகிறார். காட்டில்

தி டிசைப்பிள்

‘கோர்ட்’ என்ற ஒற்றைத் திரைப்படத்தின் வாயிலாக உலக சினிமா பார்வையாளர்களின் கவனம் ஈர்த்த மராத்திய திரைப்பட இயக்குனர் சைதன்ய தம்ஹானே. அவருடைய அடுத்த திரைப்படமான ‘தி டிசைப்பிள்’ இன்னும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தபோது இந்துஸ்தானி இசை பாணிகளில் ஒன்றான ‘த்ருபத்’ குறித்து மணிகவுல் எடுத்த ஆவணப்படம் நினைவுக்கு வந்தது. இந்துக் கோயில்களில் கடவுள் முன்பாக மட்டுமே பாடப்பட வேண்டியதாக ‘த்ருபத்’ இருந்திருக்கிறது. அதற்குப் புரவலர்களாக மொகலாய மன்னர்களும் ராஜபுத்திர அரசர்களும் இருந்துள்ளனர். புரவலர்கள் இல்லாமல் போனதால் சென்ற நூற்றாண்டில் மகத்துவமும் ஆதரவும் குறைந்துபோன ‘த்ருபத்’தின் நிலையை விவரணையே இல்லாமல் துல்லியமாக மணிகவுல் காட்சிப்படுத்தியிருப்பார். ‘த்ருபத்’துக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் புகழ்பெற்று இன்று அருகிவரும் வழிபாட்டு இசை வடிவமான ‘கயால்’ பாணி இசையைச் சொல்லித்தரும் குருவுக்கும் அவரது மாணவனுக்கும் இடையிலான உறவுதான் ‘தி டிசைப்பிள்’ படத்தின் அடிப்படை. இசை, எழுத்து, நிகழ்த்துக்கலை, நுண்கலைகளைப் பொறுத்தவரை ஒரு கலைஞரின் திறனை, மேதைமையை மதிப்பிட புறவயமான கருவிகள

குலத்தந்தை ப்ளாக்கி

நாங்கள் வசிக்கும் வேளச்சேரி ரவி தெருவில் வாகனங்களின் சந்தடி குறைவு.  ஆசுவாசமாக இருக்கலாம் என்பதால் எப்போதும் ஐந்தாறு நாய்கள் எங்கள் தெருவை எங்களைப் போன்றே தங்கள் இடமாகவும் முகவரியாகவும் வைத்திருக்கின்றன. அவற்றில் எங்கள் பாப்பா பெயர் வைத்திருக்கும் ப்ளாக்கி என்ற ஆண் நாய்தான் மூத்தது. இரண்டு பெண் நாய்கள், மூன்று ஆண் நாய்கள் கொண்ட அந்தக் கூட்டத்தின் குலத்தந்தை என்று ப்ளாக்கியைச் சொல்வேன். வயது எனக்குத் தெரிந்து ஒன்பது வயதுக்கு மேல் இருக்கும். நான் கவனித்துவரும் இந்த நான்கு ஆண்டுகளில் தலையில், வாலில், உடலில் படுகாயங்கள் படாத இடமே இல்லை ப்ளாக்கிக்கு. இந்தக் காயத்தில் இறந்துவிடும் என்று நினைப்பேன். சில நாட்கள் தெருவிலேயே காணப்படாமல் போய், அந்த நினைப்பை ப்ளாக்கி உறுதிப்படுத்தவும் செய்யும். சில நாட்களில் புதிய காயங்களோடு வரும். ஒரு தடவை தலையில் கபாலம் தெரிய, பட்ட காயத்தைப் பார்த்து நானும் பாப்பாவும் ப்ளூ கிராசுக்கு தொலைபேசி செய்தோம். ப்ளூ கிராஸ் வேனில் சிகிச்சைக்காகக் கூட்டிச் செல்ல வந்தவர்கள், ப்ளாக்கி எங்கே என்று கேட்டு என்னை அழைத்தார்கள். நான் அது வழக்கமாக இருக்கும் இடத்துக்குக் கூட்டிச் செ

விமர்சனத்தைக் கதைகளாக்கும் உலகுதழுவிய கதைசொல்லி

உருது எழுத்தாளனான சாதத் ஹசன் மண்டோ உலகளாவிய பண்பைத் தனது படைப்புகள் வழியாக அடைவதற்கு தேசப் பிரிவினையின் சுமையும் அதைத் தொடர்ந்த குருதியும் பைத்தியமும் தோய்ந்த பெரும் மானுடத் துயரும் அந்தக் கலைஞன் மீது இறங்கவேண்டியிருந்தது. தமிழ்ச் சிறுகதை கனவு கண்ட உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு மொழி சாமர்த்தியமும் தொழில்நுட்பமும் வடிவ சாகசங்களும் மட்டும் போதாது என்பதன் நிரூபணம் ஷோபா சக்தி. உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு, தமிழ் அடையாளத்தைக் கொண்ட இனமானது அரச பயங்கரவாதத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் யுத்தத்தையும் இனப்படுகொலையையும் கடக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் சமூகமும் தனி மனிதர்களும் பாதுகாப்பு, பலம் என்று கருதி சாதி, மொழி, இனம், மதம் தொடர்பில் வைத்திருக்கும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் உடைமைகளைக் கீழேபோட்டு ஓடிச்செல்வதைப் போல துறக்க வேண்டியிருக்கிறது. ஊர், மொழி, உறவினர்கள், நண்பர்கள், சுற்றம், வீடு திரும்பும் உத்தரவாதம் அனைத்தையும் இழந்து உலக வரைபடத்தில்கூட உடனடியாகப் பார்த்துவிட முடியாத குட்டித் தேசங்களின் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. வெறும் உயிரைத் தக்கவைக்கவும் நீடிக

சுடுகாட்டை நிர்வகிப்பவருக்கு சடலம்தான் உத்சவம்

  பீகாரில் உள்ள சாஸா கிராமத்தில் கங்கை நதி ஓடும் மகாதேவ் படித்துறைக்கருகில் சடலங்கள் மிதக்கும் காட்சி ஒளிப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இணையத்தை நிறைக்கத் துவங்கியுள்ளன. உத்திரப் பிரதேசத்திலுள்ள கிராமத்திலிருந்து, இறுதிச்சடங்கு செய்வதற்கான வசதியின்றி, கரோனா பெருந்தொற்றால் இறந்துபோனவர்களை வேறுவழியின்றி உறவினர்கள், கங்கையில் மிதக்க விட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மனிதர்களின் உயிர்களுக்கு அடிப்படை மரியாதை கூட சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் கிடைக்காத ஒரு மாநிலத்திலிருந்து, இப்படிக் கேட்க நாதியற்ற சடலங்கள் ஆற்றில் மிதந்து வரும் காட்சி முதலில் கொடூரமானதாக இருந்தாலும், பின்னர் அதுவும் நமது அன்றாட எதார்த்தமாகிவிடும் நாட்களில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  நரேந்திர மோடி, முதல் முறை பிரதமரானபோது, குறியீடாகவே, இந்துக்களின் ஆதார நினைவுகளில் ஒன்றாகவும் தொல்மனப்படிமமாகவும் இன்றும் திகழும் வாராணசி தொகுதியைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். அத்துடன் காசியில் உள்ள தஸ்அஸ்வமேத் படித்துறையில் ஆரத்தி தீபத்தைக் காட்டி நெடுங்காலமாய் விலக்கப்பட்டு, அறைந்து பூட்டப்பட்டிருந்த

ஜேனுக்கு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

புல்லுக்குக் கீழே 225 நாட்கள் என்னைவிடவும் உனக்குக் கூடுதலாகத் தெரியும் உனது ரத்தத்தை எடுக்கப் போதுமான அளவு. நீ ஒரு உபயோகமும் இல்லாதவள் இப்படித்தான் இது நடக்கவேண்டுமா? இந்த அறையில் பல மணிநேரங்கள் நேசக்கூடலில்  நிழல்கள் உருவாகின்றன இன்னும். நீ நீங்கியபோது கிட்டத்தட்ட எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டாய்.  இரவுகளில் நான் புலிகளின் முன்னர் மண்டியிடுகிறேன் அவை என்னை இப்படி இருக்கவிடப் போவதில்லை. நீ எப்படி இருந்தாயோ அது திரும்பவும் நிகழப் போவதேயில்லை. அந்தப் புலிகள் என்னைக் கண்டுபிடித்துவிட்டன அதைப் பற்றி நான் கவலையே கொள்ளப் போவதில்லை.

நாட்காட்டி - தென் கொரியக் கவிஞர் கிம் ஹைசூன்

  ஒரு வெள்ளை முயல் மரணமடைகிறது பின்னர் சிகப்பு முயலாக ஆகிவிடுகிறது. மரணமடைந்த பிறகும் அதற்கு உதிரம் வழிந்துகொண்டிருக்கிறது. சீக்கிரமே அந்த சிகப்பு முயல் கருப்பு முயல் ஆகிவிடுகிறது. அது இறந்தபின்னரும் அழுகிக் கொண்டிருக்கிறது. அது இறந்துவிட்டதால் பெரியதாகவோ சின்னதாகவோ அதன் விருப்பத்துக்கேற்ப ஆகமுடியும். அது பெரியதாக இருக்கும்போது, மேகத்தைப் போன்றிருக்கும் அது சிறியதாக இருக்கும்போது ஓர் எறும்பை ஒத்திருக்கும் உங்கள் செவியில் எறும்புமுயலைச் செலுத்தித்தள்ள முயல்கிறீர்கள் எறும்புமுயல் பார்வையில் இருக்கும் ஒவ்வொன்றையும் சாப்பிடுகிறது உங்கள் காதுக்குள் இருக்கும் பரந்த புல் வெளியைச் சாப்பிட்டு ஒரு புயல் மேகத்தை விடப் பெரிதாக இரண்டு முயல்குட்டிகளை பெற்றெடுக்கிறது உங்கள் காதுகள் இரைகின்றன. ஒவ்வொரு சத்தமும் இரைகின்றன உங்களது காது இறந்துபோகிறது. ஒரு முயல் செத்துக் கொண்டிருக்கிறது சில சமயங்களில் இறந்த முயல், உதிரம்படிந்த மாதவிடாய்காலப் பட்டையாக மறுபிறப்பெடுக்கிறது அவ்வப்போது செத்த முயலை உங்கள் உள்ளாடையிலிருந்து இழுத்து உருவுகிறீர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு இறந்த முயலை வெளியில் உருவிச் சுவரில்  தொங்கவிடு

அந்தச் சிட்டுக்குருவியைப் போல - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

உயிரைக் கொடுப்பதற்கு உயிரை எடுக்க வேண்டும் நூறு கோடி அனுபவங்களைக் கொண்ட கடலின் மீது நமது துயரம் தட்டையாகவும் உள்ளீடற்றதாகவும் விழும்போது வெள்ளைக் கால்கள், வெள்ளை வயிற்றைக்கொண்ட உயிரினங்கள் அழுகி  விளிம்பிட்ட கடலிடைத் திட்டுகளைக் கடக்கிறேன் சூழ்ந்திருக்கும் காட்சிகளுக்கு எதிராக கலவரத்தை நிகழ்த்தியபடி அவை நெடியதாக இறந்துகிடக்கின்றன. எனதருமைக் குழந்தையே அந்தக் குருவி உனக்கு என்ன செய்ததோ அதைத்தான் உனக்கு நான் செய்தேன் இளமையாய் இருப்பது மோஸ்தராக இருக்கும்வேளையில் நான் முதுமையில் இருக்கிறேன். சிரிப்பது மோஸ்தராக இருக்கும்வேளையில் நான் அழுகிறேன். நேசிப்பதற்கு குறைந்த தைரியமே தேவையாக இருக்கும்நிலையில் நான் உன்னை வெறுத்தேன். 

அந்தத் தாதியர்கள்- சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நான் போகும் அந்த மருத்துவமனையில் தாதியர்கள் கூடுதல் எடையுள்ளவர்களாக எனக்குத் தோன்றுகின்றனர். அவர்கள் தங்கள் வெள்ளை உடைகளில் தடிமனாக இருக்கிறார்கள் இடுப்புக்கும மேல் கீழேயும் பிருஷ்டங்களிலிருந்து கால்கள் வரையும். அவர்கள் எல்லாரும் 47 வயதினராய் தெரிகின்றனர் கால்களை அகற்றி நடக்கின்றனர். அவர்கள் தங்கள் தொழிலிலிருந்து தொலைவில் உள்ளவர்களாகத் தெரிகின்றனர். அவர்கள் தங்கள் கடமைகளுக்குச் செவிகொடுக்கின்றனர் ஆனால் தொடர்பின்றி. அவர்களை நான் நடைபாதைகளிலும் நீளத் தாழ்வாரங்களிலும் அவர்களைக் கடக்கிறேன். அவர்கள் ஒருபோதும் எனது கண்களைப் பார்ப்பதில்லை. அவர்களது கனத்த ஷூ நடையை மன்னிக்கிறேன் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களுக்கும் இடையில் அது ஒரு இடைவெளியை உருவாக்குகிறது. இந்தப் பெண்கள் கூடுதலாக இரை உண்டவர்கள் அவர்கள் கூடுதலாக மரணத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

நிசப்த ஆழத்துக்குள் அபி கத்தும் சத்தம்

அபியின் மாலை வரிசைக் கவிதைகளில், மிக அபூர்வமாக பால்யத்தின் குறிப்புகளைக் கொண்ட சில கவிதைகள் உள்ளன. தனிப்பட்ட பால்யம் ஒன்றின் படமும் நம் எல்லாருடைய பால்யத்தின் பொதுச்சிறு பிரதிபலிப்புகளும் இந்தக் கவிதைகளில் இருக்கிறது. ‘மாலை - என் வடிவு’ கவிதையில் குடும்பத்தினர் அனைவரும் மரக்கட்டிலில் வானம் தெரியும் நடுமுற்றத்தில் நெருக்கி அமர்ந்து அம்மா சொல்லும் கதையைக் கேட்கும் ஓவியம் முதலில் தோன்றுகிறது. பெருந்தொற்று காலம் நெருக்கம் என்பதன் மதிப்பை, அர்த்தத்தை நம் எல்லாருக்கும் உணர்த்தியிருக்கும் காலத்தில், தீண்டாமை என்பது அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் சேர்ந்து நெருக்கி அமர்ந்து இருப்பதன் அருமை தெரிகிறது.  எத்துணை எளிமையாக கிடைத்தவை, எத்துணை பக்கத்தில் இருந்தவை எல்லாம் தூரத்துக்குப் போய்விட்டதைப் போன்ற காலத்துக்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.  நெருங்கக் கிடைக்கும்போது நெருங்கிவிடுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.  அம்மா சொன்ன கதை, திரைச்சீலைகளுக்குப் பின்னால் அந்தக் குட்டிப்பையனுக்கு நிழல்களாக நிகழ்த்திக் காண்பிக்கப்படுகிறது. அவனும் நிழலாக, கதை கொடுத்த மனவிரிவில் திரவமாகத் ததும்பி இருக்கிறா

அந்தம் வரை போ - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நீ முயற்சிக்கப் போகிறாய் என்றால் அந்தம் வரை செல். இல்லையெனில், முயற்சியைத் தொடங்கக்கூட வேண்டாம். தோழியரை மனைவியரை உறவினர்களை உனது மனத்தைக் கூட இழந்துபோக நேரிடலாம்.  மூன்று அல்லது நான்கு நாட்கள் பட்டினியிருக்கலாம் பூங்காவின் பெஞ்சில் உறையும் குளிரில் கிடக்க வேண்டியிருக்கலாம். சிறையாக இருக்கலாம். கண்டனத்துக்கு இலக்காக ஆகலாம். நகைப்புக்குரிய- தனிமைப்படுத்தலாக ஆகலாம். தனிமைப்படுத்தல் என்பது பரிசு. உன் முயற்சியில் எவ்வளவு திடத்தோடு இருக்கிறாயென்று சோதிக்க வருபவைதான் அவை எல்லாமும் புறக்கணிப்பையும் மோசமான சங்கடங்களையும் தாண்டி நீ முயற்சியைத் தொடர்ந்தால் உன்னால் கற்பனை செய்ய முடிவதைத் தாண்டியும் அதுவே  மற்ற எல்லாவற்றையும் விடச் சிறந்தது. நீ முயற்சி செய்யப் போகிறாய் என்றால், அந்தம் வரை செல். அதுபோன்ற உணர்வு வேறொன்று இல்லை.  நீ கடவுளர்களுடன் தனியாக இருப்பாய், இரவுகள் நெருப்பில்  சுடர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் ஏறி பூரண எக்களிப்பை நோக்கிச் சவாரி செல்வாய் வலுத்த போராட்டத்தால் மட்டுமே அடையக்கூடிய இடம் அது. 

சிரிக்கும் இருதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

உனது வாழ்க்கை உன்னுடையது சவசவப்பான ஒப்புக்கொடுத்தலோடு அதைப் பிணைத்துவிடவேண்டாம் விழிப்புடன் இரு.  தப்பி வெளியேறுவதற்கான பாதைகள் இருக்கவே செய்கின்றன. எங்கோ வெளிச்சம் இருக்கிறது. அது அதிகமில்லாமல் இருக்கலாம் ஆனால் இருட்டை விரட்டும் வெளிச்சம் அது. விழிப்புடன் இரு. கடவுளர்கள் உனக்கு வாய்ப்புகளை அளிப்பார்கள். அவற்றைத் தெரிந்துகொள். அவற்றை எடுத்துக்கொள். உன்னால் மரணத்தை வெல்ல முடியாது ஆனால் வாழ்வில் இருக்கும் சவத்தன்மையை சில சமயங்களில் வெல்லமுடியும். அதை எவ்வளவு சீக்கிரம் கற்கிறாயோ அத்தனை கூடுதல் வெளிச்சம் அங்கே இருக்கும்.  உனது வாழ்க்கை உன்னுடையது.  அது இருக்கும்போதே அதைத் தெரிந்துகொள். நீ அற்புதமானவன் கடவுளர்கள் உனக்குள் குஷி ஏற்படுத்துவதற்காகக் காத்திருக்கிறார்கள். 

எனது தோல்வி - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நரகத்திலிருக்கும் சாத்தான்கள் குறித்து எண்ணிப்பார்க்கிறேன் கோபத்துடன் விளக்கின் குமிழை அழுத்தி  அணைத்தபடியும் எரிவித்தபடியும் இருப்பதைப் பார்த்துக் கொண்டே பூக்கள் நிறைந்த அழகிய மலர்குடுவையை வெறித்துப் பார்க்கிறேன். எங்களுக்குள் வார்த்தைகள் முற்றிப்போயிருந்தன. நான் இங்கே உட்கார்ந்து  இந்தியாவிலிருந்து வந்த சிகரெட்களைப் புகைத்துக் கொண்டிருக்கிறேன் வானொலியில் ஒலிக்கும் ஓபரா பாடகியின் பிரார்த்தனைகள் என்னுடைய மொழியில் இல்லை. வெளியே, எனக்கு இடப்புறம் உள்ள ஜன்னல் நகரத்தின் இரவு விளக்குகளைக் காண்பிக்கிறது இந்த எளியதொரு பயங்கரத்தைத் தகர்த்து விஷயங்களை மீண்டும் சீராக்கும் தைரியத்தை நான் வேண்டுகிறேன் ஆனால் எனது அல்பக் கோபம் என்னைத் தடுக்கிறது. இந்த சிகரெட்களைப் புகைத்தபடியே நரகம் என்பது நாம் உருவாக்குவது என்பதை நான் உணர்கிறேன். இங்கே ஊகங்களைச் செய்துகொண்டு நான் காத்திருக்கும் வேளையில் அவள் உட்கார்ந்தபடி விளக்கின் குமிழை அழுத்தி எரிவிப்பதும் அணைப்பதுமாக இருக்கிறாள் எரிவது மற்றும் அணைவது. 

ப்ரவுனி கல் கண்

காலை எழுந்து ப்ரவுனியை நடைக்குக் கூட்டிச் செல்லும்போதே அந்த நாளின் பண்புகள் படிப்படியாக உருப்பெற்றுத் தன்னைக் காட்டத் தொடங்கிவிடும். ஒரு நாளை வேகமாக பழைய நாளாக்குவதில் காலையில் விழித்தவுடன் தலைக்குள் சத்தமாகக் கேட்கத் தொடங்கும் குரல்களுக்குப் பங்குண்டு. அந்தக் குரல்கள் கொடுக்கும் அசதியில் அயர்ந்து போய் வெளியே விழிப்புணர்வு குன்றி நான் நடப்பேன். தொடர்ந்து ஒரே இடத்தில் நடை பழகினாலும் முகர்ந்து முகர்ந்து தெருவையும் நாளையும் புதிதாக்கியபடி ப்ரவுனி எனக்கு முன்னால் செல்லும். உள்ளே சத்தம்போடும் குரல்களைப் பொருட்படுத்தாமல் வெளியே கவனத்தைச் சில நாட்களில் குவித்துவிடுவதும் அமையும். அப்போது குனிந்து ஒரு சிறுகல்லை அதை நினைவில் கொள்வதற்காக எடுத்துக் கொள்வேன். அந்தக் கல்தான் என் உடலின் அப்போதைய கண். அந்தச் சிறு கல்லை நான் கைக்குள் உணரும்போது எனது கண்கள் குவிந்து பார்க்கவும் எல்லாவற்றையும் கேட்கவும் தொடங்கும். அப்போது ஆங்காங்கே படுத்திருக்கும் தெருநாய்களின் சின்னச் சின்ன அசைவுகளும் என்னுள் பிரதிபலிக்க அவற்றையும் தொந்தரவு செய்யாமல் எனது பிராணியும் ஊறுபடாமல் நடைப்பயிற்சி செய்யும் மனிதர்களையும் என் பிரா

பார்ஃப்ளை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நாங்கள் சேர்ந்து குடித்துக் கழித்த நாட்களை திரைக்கதையாக எழுதுவேனென்றும் அது திரைப்படமாகத் தயாரிக்கப்படுமென்றும் அவளது பாத்திரம்  அழகிய சினிமா நட்சத்திரத்தால் நடிக்கப்பட்டிருக்குமென்றும் 31 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன ஜேன் கற்பனைகூட செய்திருக்கமாட்டாள் “அழகிய சினிமா நட்சத்திரமா? அப்படியா, நாசமாய் போச்சு" என்று ஜேன் சொல்வது இப்போது கேட்கிறது. அது கேளிக்கைத் தொழில் ஜேன் அதனால் இனியவளே நீ போய் உறங்கு ஏனெனில் எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் உன்னைப் போல அச்சு அசலான ஒருவளை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அத்துடன் என்னையும். (பார்ஃப்ளை - சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 1987-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படத்தின் பெயர்)

இணையற்ற அந்தச் சீமாட்டிக்கு இரங்கற்பா - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இரவில் உறங்கும் சில நாய்கள் நிச்சயம் எலும்புகளைக் கனவு காணவே செய்யும் நான் உனது எலும்புகளை சதையோடு அந்தக் கரும்பச்சை உடையோடு உயர் குதிகாலைக் கொண்ட பளபளக்கும் அந்தக் கருப்பு ஷூக்களோடு நினைவுகூர்கிறேன் நீ குடித்த போதெல்லாம் வசைமாரி பொழிவாய் எது உன்னை நெரித்துப் பிடித்திருக்கிறதோ அதிலிருந்து வெடித்து வெளிவரவிரும்பியதைப் போல உன் கேசம் கலைந்து விழும். அழுகிய இறந்தகாலத்தின் அழுகிய நினைவுகள் அழுகிய நிகழ்காலத்தில் என்னை விட்டு மரணம் வழியாக நீ ஒருவழியாக வெளியேறினாய்; நீ இறந்துபோய் 28 ஆண்டுகள் ஆகிவிட்டன மற்ற எல்லாவற்றையும் விட மேலதிகமாக உன்னைத்தான் நினைவுகூர்கிறேன் வாழ்க்கை கொண்டிருக்கும்  இந்த ஏற்பாட்டின் வியர்த்தத்தை புரிந்துவைத்திருந்தவள் நீ ஒருத்தி தான்; மற்ற அனைவரும் பொருட்படுத்தவே தகாத  சிறு கூறுகள்பற்றி அதிருப்தியைக் கொண்டிருந்தனர் அபத்தம் பற்றி அபத்தமான புகார்களைச் சொல்லியபடி; மிகக் கூடுதலாக தெரிவதுதான் உன்னைக் கொன்றது ஜேன். இந்த நாய் கனவுகாணும் உனது எலும்புகளுக்கு இதோ இந்த மது. 

தலித் அனுபவங்களை யார் கோட்பாடு செய்வது?

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் போர்ஹெஸ் எழுதிய ‘இனவரைவியலாளர்’ கதையில் அமெரிக்க ஆய்வாளன் ப்ரெட் முர்டாக், சிவப்பிந்தியர்களின் பூர்வீக மருத்துவமுறைகளை ஆராய்வதற்காக அவர்களுடனேயே சேர்ந்து வாழத் தொடங்குகிறான். அவர்களுடனேயே தங்கி அவர்களது மொழியிலேயே கனவுகண்டு, அவர்களின் ரகசிய சித்தாந்தத்தையும் முர்டாக் அறிகிறான். பின்னர், தனது இருப்பிடத்துக்கு வரும் அவன் நேரடியாகத் தனது ஆய்வு வழிகாட்டியான பேராசிரியரைச் சந்திக்கிறான். அவர் அவனது கண்டுபிடிப்பு பற்றிக் கேட்கிறார். அவனோ சொல்ல மறுக்கிறான். தான் அவர்களுக்கு எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்று கூறும் அவன், அந்த ரகசியத்தை ஆங்கிலத்திலும் சொல்ல முடியும் என்றாலும் வெளியிட மறுக்கிறான். அந்த ரகசியத்தைவிட அதற்கான பாதைகள்தான் முக்கியமானவை என்று கூறும் அவன், தான் அறிந்த அந்த வாழ்க்கையிலிருந்து பார்க்கும்போது நமது அறிவியல் தீவிரமற்றதாக, முக்கியத்துவமற்றதாகத் தெரிகிறது என்கிறான்.  புதுமைப்பித்தனின் ‘உபதேசம்’ கதையும் இந்தப் பின்னணியில் ஞாபகத்துக்கு வர வேண்டியது. கண்ணாடி விழுங்கி குடலில் ஒருபகுதி அழுகிய நிலையில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்படும் ஹடயோகி ஒருவர் ம