Skip to main content

Posts

Showing posts from June, 2023

ஆமாம், விழிப்பும் விமர்சனமும் வேறு வேறு அல்ல…

  விஷால் ராஜாவின் ‘ தீக்கொன்றை ’ சிறுகதையில் , “ சில விஷயங்களுக்கு யாரையும காரணம் சொல்ல முடியாது என்பதை அங்கே இருக்கும்போதுதான் கண்டுபிடித்தான் ” என்று ஒரு வாக்கியம் வருகிறது . விஷால் ராஜாவின் கண்கள் மையம் கொண்டிருக்கும் இடங்களில் ஒன்று அது . நோய்க்கூறு , வலி , நிச்சயமின்மை ஆகியவையே ‘ திருவருட்செல்வி ’ கதைகளின் மையம் . யாரையும் காரணம் சொல்ல முடியாதவாறு , இக்கதைகளில் கலவரம் தற்செயலாக , தன்னிச்சையாக தொடங்கிப் படிப்படியாக அதிகரித்தபடியே இருக்கிறது . நம்மைச் சூழ்ந்துள்ள ஓயாத கலவரங்கள் மீதான விழிப்பு மற்றும் விமர்சனம் என்று விஷால் ராஜாவின் புனைவுலகத்தை மேலும் விவரிக்கலாம் . தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு அது . படைப்பு வெறும் மொழித் தோரணமாகவும் , புதுமோகமாகவும் , அதிகாரத்தையும் புகழையும் வெற்றியையும் அடைவதற்கான உபாயமாகவும் மாறியிருக்கும் ஒரு காலகட்டத்தில் , படைப்புக்கே சம்பந்தமற்ற லட்சியங்களைக் கொண்டதாக படைப்புச் செயல் மாறியிருக்கும் ஒரு காலகட்டத்தில் , நமது நிகழ்காலம் மீதான , நாம் ஒட்டுமொத்தமாக வந்து

இந்த பிருஷ்டம், இந்த பூமியில் இருப்பது ரொம்ப ரொம்ப இனிமையாக இருக்கிறது!

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கும், மூன்றாம் அலைக்குமிடையே, வேளச்சேரியில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களுக்கும் புதிய குடியிருப்புகளுக்குமிடையில் இரண்டு நாட்கள் மூன்று அமர்வுகளாக உரையாடியதன் தொகுப்பு இந்த ‘டாக்கிங் பொயட்ரி’. 'ஆசியா வில்'(ASIAVILLE) இணையத்தளத்துக்காக, 2021-ம் ஆண்டு கௌதம் எடுத்த வீடியோ இது. நண்பர் கௌதமின் பிரியத்தாலும் விடாப்பிடியாலும் இது சாத்தியமானது.

உலகின் முதல் ருசி

திருநெல்வேலியில் நான் அதுவரை போயும் குளித்துமிராத சிந்துபூந்துறை படித்துறைக்கு அருகே என் அம்மாவின் சாம்பலை தாமிரபரணியில் கரைத்து முங்கி எழுந்தபோதுதான் உணர்ந்தேன்; எனக்குத் தெரிந்த வடிவத்தில் இருந்த அம்மா, இந்த உலகத்தில் இனி இல்லை என்பது. மழிக்கப்பட்ட தலையில் கக்கத்தில் தண்ணீர் நனைத்து உணர்ந்த குளிர் அதைச் சொல்லியது. என் தங்கை தெய்வானையிடம் இப்படித்தான் சொன்னேன். ஆறுதலுக்காக அவளுக்கோ எனக்கோ சொல்லிக் கொள்ளவில்லை. இந்த உலகத்துக்குள் வந்தவர்கள் யாரும் முற்றிலுமாக இல்லாமல் ஆகிவிடமுடியாதென்று. ஆமாம் என் அம்மாவின் உடன்பிறந்த அக்காளும் பெரியம்மாவும் இறந்தபிறகு, அவியலை எப்போதெல்லாம் சமைக்கிறேனோ உண்கிறேனோ அப்போதெல்லாம் அந்த அவியலில் அவள் இருக்கிறாள் என்பதை உணர்வேன். எங்கள் வீட்டிலேயே நாகர்கோயில் அவியலை அதன் முழுமையான ருசியில் சமைப்பவள் அவள்தான். அந்த அவியல் தொடர்பான நினைவு என்னில் இல்லாமல் ஆகும்வரை என் பெரியம்மா உண்மையில் இருக்கிறாள். என் அம்மாவும் அப்படித்தான்; அவள் எனக்குச் சிறுவயதிலிருந்து அறிமுகப்படுத்திய உணவுகள், அழைத்துச் சென்ற சினிமாக்கள், இடங்கள் இருக்கும்வரை அவள் வேறு வடிவங்களில் இருந்த

இந்த உலகத்தின் விள்ளல் உனக்கு

    காலையிலேயே துவங்கும் உலகின் கலவர ஓசைகளுக்கு மேலே மறுபடியும் குயிலின் குரல் எனக்கு உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது   இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மனங்கள் என்று சொல்லப்பட்ட மனிதர்களின் விதைப்பைகள் அனைத்தும் சலிக்கப்பட்டுவிட்டன மகத்துவங்கள் ஓட்டைத்துணிகளாகத் தொங்கவிடப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றாண்டு இதில் மீண்டும் குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது   வறுமைக்கும் வெப்பத் தாக்குதல் மரணங்களுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் பால்யவயது திருமணங்களுக்கும் ஒரு இட்லியை விட மலிவாக இணையத்தரவு கிடைப்பதற்கும் அதிகரிக்கும் மதக்கலவரங்களுக்கும் உள்ள தொடர்பை புரிந்து மொழிபெயர்த்து விளக்குவதற்கு என் கவிதை சிரமப்படும்போது குயிலின் குரல் உரக்கக் கேட்கத் துவங்கியுள்ளது   பழைய செங்கோல் ஒன்றுடன் மடாதிபதிகள் எமது நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது வரலாற்றுப் பழிகளின் பேரால் தாய்மார்களின் வயிறு கிழிக்கப்படுவதற்கு தன் பெயரும் உடந்தையானதை பார்த்தும் பாராமல் ராமன் தனது டெஸ்லாவில் ஏறியப

சி.மோகன்- நற்செய்கை தீச்செய்கை துறந்தவன்

                                                                                                            சமீப நாட்களாக மகாகவி பாரதியின் கீதை விளக்கத்தில் வரும் தொடக்க வாக்கியங்களை மனம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறது.  பாரதியின்  அந்த வரிகள் இருட்டைப் பிளக்கும் ஒளியின் தன்மையைக் கொண்டது. “புத்தியில் சார்பு எய்தியவன் இங்கே, நற்செய்கை, தீச்செய்கை இரண்டையும் துறந்துவிடுகிறான்.” சி.மோகனின் ஆளுமையை ஓரளவு வரையறுப்பதற்கு ‘புத்தியில் சார்பெய்த முயல்பவர்’, புத்தியில் சார்பு எய்துவதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் ஆசிரியர் என்றும் சொல்லலாம். புத்தியில் சார்புடைய நிலையும், தன்னை முழுக்க இயற்கையிடமோ கடவுளிடமோ சரணாகதி செய்யும் நிலை இரண்டும் ஒன்றுதான். ஒருவன் முழுமையான பொறுப்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறான். தனது நன்மைக்கும் தனது களங்கங்களுக்கும் எவரொருவரையும் புத்தியில் சார்புடையவன் பொறுப்பாக்குவதில்லை.  மற்றவனோ தன்னை முழுமையாகப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டவன்; தனது சந்தோஷ துக்கங்கள் உட்பட அனைத்தும் ஈஸ்வர லீலை என்றே நினைத்து தன்னை ஓடும் புனலின் திசையில் பயணிக்கும் ஒரு படகாய், அங்