Skip to main content

Posts

Showing posts from July, 2020

நகுலனிடமிருந்து பிரிந்த இறகு

நவீன கவிதையில் நகுலனுக்குத் தொடர்ச்சி இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலாக, நகுலனின் குணமுள்ள கவிதைகளுடன் வே. நி. சூர்யா ‘கரப்பானியம்’ தொகுப்பிலேயே தென்பட்டார். அந்த முதல் தொகுப்புக்குப் பிறகு எழுதிவரும் கவிதைகளில் நகுலனின் பழைய தத்துவப் பாலத்தை அ- தத்துவம், புனைவு, அதிலிருந்து பிறக்கும் தனி விசாரத்தால் கடந்து சுலபமாகப் போவதைப் பார்க்க முடிகிறது. தாயுமானவரும், பாரதியும் தப்பமுடியாத வேதாந்தச் சுமை கொண்ட மனிதனை, நவீனன் சந்திக்கும் இடம் தான் நகுலன். அதனால்தான், நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமாகத் தெரியும் மகனை அம்மா ஸ்பரிசித்துத் தடவும் தருணத்தை விவரிக்கும்போதும், ‘மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது, நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று. அது அரதப்பழசான அறிவொன்று, திண்ணையிருட்டில் அமர்ந்து கேட்கும் கேள்வி. அந்தக் கேள்விக்கு முன்னால் உள்ளதுதான் கவிதை. அந்தக் கேள்வியைச் சந்தித்து, அதை தனது படைப்புகளில் உலவ விட்டு, பழையதையும் புதியதையும் விசாரித்து புதுக்கவிஞனுக்கே உரிய சுயமான புனைவுப் பிரதேசத்தை நகுலன் தனது படைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்.

செவ்வியல் பிரதி

நித்தியத்தை உணர்த்திய வாக்கியங்களுக்கு திரும்பச்செல்லும் பாதை குழம்பிவிட்டது உடன் வந்தவர்கள் இறந்து போனார்கள் எத்தனை காதல் எவ்வளவு முரண்கள் எனது சொற்கள் உனது சொற்கள் அனைத்தின் நினைவுகளும் கதைகளாய்ப் பிறழ்ந்தன நான் கொலை செய்தேன் எந்தப் புத்தகத்தில் அத்தனை புழுதியிலும் பொன்போல மின்னுகிறது குருட்டு வன்மம் நான் படிகளாகிறேன் வானம் நோக்கும் தனிமையின் தூண்களாகிறேன் ஒரு செவ்வியல் பிரதியாய் மெதுவாய் உருமாறிக்கொண்டிருக்கிறேன்.

அமேசான் கிண்டிலில் சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க   எனது திருமணத்துக்குப் பிறகு 2005-ம் ஆண்டு வெளியான தொகுதி இது. எனது மகள் வினுபவித்ரா பிறந்த வருடம். குடும்ப வாழ்க்கை கோரும் ஒழுங்கு, ஏற்பாடுகளுக்குள் என்னால் இயல்பாகப் பொருந்த முடியாமல் ஒரு நோய்த்தன்மையை உணர்ந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. குணமூட்டி என்ற சொல்லை இதன் அடிப்படையில் தான் உருவாக்கி கவிதைகளில் புழங்க விடுகிறேன். உடல் என் மீது சுமையாக, சிறையாக பிரக்ஞையோடு இறங்கிய நாட்கள் அவை. ‘சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை’ முன்னுரையை, சமீபகாலமாக நான் ஒரு குணமூட்டியைத் தேடி வருகிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறேன். முதல் கவிதையும் நோய், நோய்மை தொடர்பான கவிதைதான். இப்படியான சூழலில்தான், நடனக் கலைஞர் சந்திரலேகாவை அவரது வீட்டுக்குப் போய்ப் பார்க்கத் தொடங்கினேன். அவர் வீட்டில் நடந்த களறி பயிற்சியில் சேர்ந்து சில நாட்களில் விடவும் செய்தேன். உடம்பு தொடர்பான கவனம், உடம்பின் ஆற்றல், ஆரோக்கியத்துக்கும் மனத்தின் ஆரோக்கியம், ஆற்றலுக்கும் உள்ள உறவு அப்போதுதான் எனக்குத் தெரியத் தொடங்கியது. உடம்பு தான் வெளியாக இயற்கையாக ப

சுகுமாரனின் வாராணசி கவிதைகள்

கனலி இணைய இதழில் படித்த சுகுமாரனின் வாராணசி கவிதைகளையும் வே நி சூர்யாவின் கவிதைகளையும் அசைபோட்டபடி கழிகிறது இன்று.  வாராணசியில் காலம் ஒன்றாக அது இறந்தகாலமே மட்டுமாக நீண்டு வளைந்து மீண்டும் இறந்தகாலத்துக்குள் போய் திரும்பத் திரும்பச் சுழன்று கொண்டிருக்கும் சித்திரத்தை சுகுமாரனின் இசைமை கூடிய மொழி நம்மில் உருவாக்குகிறது. படைத்தவன் குறித்த கேள்வி தேவையில்லை. படைத்தல் என்ற நிகழ்வும் பொருட்டில்லை. இங்கே வாராணசி படைப்பாக, ஒரு பெரும் நினைவுச் சித்திரமாக அனந்தகோடி காலமாக இருந்துகொண்டிருக்கிறது. வாராணசி என்ற நிலத்தில் வாழ்ந்து அதன் அடையாளமாகத் திகழ்ந்து 14 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து போன ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகானின் வீட்டுக்கு அடுத்த கவிதை நகர்கிறது. கவிதை சொல்லி, பிஸ்மில்லா கான் உயிருடன் இருக்கும்போது அவரது வீட்டில் சந்தித்த அனுபவத்திலிருந்து, அவர் இறந்தபிறகு போய்ப் பார்க்கும் பிஸ்மில்லா கானது வீட்டில், அந்தக் கலைஞனை ஒவ்வொரு மூலையிலும் நிகழ்த்துவது போல் தெரிகிறது. இங்கேயும் படைப்பு வழியாக படைத்தவன் கற்பனை செய்யப்படுகிறான். படைப்பு மட்டுமே எப்போதும் இருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்

இன்மையில் இருப்பின் நடனம்

ஞானி ஜலாலுதீன் ரூமிக்கும் அவரது ஆன்மிக ஆசிரியனும் நண்பருமாக இருந்த சம்ஸ் இ தப்ரீசிக்கும் இடையிலான உறவையும் விவரிக்கும் துருக்கிய நாவலாசிரியை எலிஃப் சஃபக்கின் நேசத்தின் நாற்பது விதிகள் (‘தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆப் லவ்’) படைப்பைச் சமீபத்தில் படித்தேன். ஜலாலுதின் ரூமியைவிட, சம்ஸ் இ தப்ரீஸ் என்ற ரௌடி ஞானி அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் பருவுருவமாக அறிமுகமாகிறார். அவர் வாழ்ந்தபோதிருந்த சமூக நெறிகள், மத நெறிகள் இரண்டையுமே கேள்விக்குள்ளாக்குபவர். ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிகப்பு' நாவலில் வரும் நிலப்பரப்பு, கலாசாரத்தை ஞாபகப்படுத்தும் நாவல் இது. கொன்யா நகரத்தில் மத அறிஞராகவும் பிரமுகராகவும் குடும்பம் குழந்தைகளோடு சௌகரியமாக வாழ்ந்து வரும் ரூமிக்கு அகத்தில் நிரப்ப முடியாத வெறுமை உள்ளது. அதை நிரப்ப வருபவர் தான் சம்ஸ் இ தப்ரீஸ். தளைகளற்ற சுதந்திரத்தோடு கூடிய மெய்ஞானப் பயணத்துக்கு ரூமியைத் தயார் செய்யும் சம்ஸ், ரூமிக்கு நகர மக்களிடமிருந்த நற்பெயரையும் பல்வேறு செயல்கள் வழியாக இல்லாமல் ஆக்குகிறார். சமூகம் கருதும் 'நல்லது'களிலிருந்தும் ஒருவன் உண்மையான  விடுதலை அடையவேண்டியிருக்கிற

அமேசான் கிண்டிலில் காகங்கள் வந்த வெயில்

காகங்கள் வந்த வெயில் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க எனது முதல் கவிதை தொகுதியான ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ 2001-ல் வெளிவந்தது.  இத்தொகுதி 2003-ல் வெளியானது. மற்ற எனது கவிதைத் தொகுதிகளை ஒப்பிடும்போது சற்றே மெலிந்த, குறைவான எண்ணிக்கையிலான கவிதைகளைக் கொண்ட தொகுதி இது. அமேசான் கிண்டில் வெளியிடுவதற்காகத் திரும்பப் படித்தபோது, முற்றிலும் சிறந்த ஒரு கவிதைப் பருவத்தை இத்தொகுதியின் வழியாகத்தான் கடந்திருக்கிறேன் என்று தோன்றியது. எனது ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ தொகுதியில் பல்வேறு உள்ளடக்கங்கள், வெளிப்பாடுகள், கட்டற்ற ஆற்றல் எல்லாம் இருந்தாலும் எனக்கென்று பிரத்யேக உலகம் ஒன்று உருவாகவேயில்லை. பெரும்பாலான கவிதைகள் அப்போதைய நவீன சிறுபத்திரிகை உரைநடை, கவிதை மொழியின் தாக்கத்தைக் கொண்டவை. ‘காகங்கள் வந்த வெயில்’ தொகுதியின் கவிதைகளில் தான் எனது பிரத்யேக உலகம் உருவாகிறது. அந்தப் பிரத்யேக உலகத்தின் குணங்கள், உயிர்கள் தான் எனது இன்றைய கவிதைகள் வரை பரந்து பரவியிருக்கிறது. நண்பர்கள் சேர்ந்து பகிர்ந்த ஒரு காலகட்டத்தின், அதன் களங்கமின்மையின் ஒளி இந்தக் கவிதைகள் மேல் உள்ளது. இந்தக் குணம்

மனம் பிறப்பிக்கும் நரகங்கள்

என்னுடன் திருக்கழுகுன்றம் பாலிடெக்னிக்கில் படித்த, இன்னமும் தொடர்பில் இருக்கும் ஒரே சகாவான யோகானந்தின் வீட்டுக்கு சமீபத்தில் போயிருந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, அப்போதுதான் ஞாபகம் வந்தது போலச் சொன்னான், காவிரி வளநாடன் இறந்துவிட்டான்  என்று. எனக்கு உடனே அதிர்ச்சியாக இருந்தது. என்னைவிட இரண்டு வயதாவது இளையவன். நான் ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் ஓராண்டு படித்து பாலிடெக்னிக்குக்கு வந்தவன். அவனோ பத்தாம் வகுப்பு முடித்து வந்தவன். குள்ளமாக, கம்பீரமாக மீசை, தாடி வளர்ந்து அதன் பெருமிதமோ தன் பெயரின் பெருமிதமோ துலங்க, கைகளைப் பின்னால் கட்டியபடி லுங்கியுடன் விடுதியில் நடமாடும் அவனது தோற்றம் ஞாபகத்துக்கு வந்தது. திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஒரு நாள் நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்கு கொண்டுபோவதற்குள் இறந்துவிட்டான் என்று யோகானந்த் சொன்னான். என்னைவிட இரண்டு வயது குறைவான அவன் இறந்துபோய்விட்டான், நான் இருக்கிறேன். மரண அஞ்சலி சுவரொட்டிகளைப் பார்க்கும் போதும், அதில் போட்டிருக்கும் வருடத்தைக் கணக்கு செய்து இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் சிறிது துணுக்குறுகிறேன். இது ஒரு அபத்தம் என்று தோன்

அம்மாவைத் தனியே விட்டுவிட்டு விளையாடப் போய்விடாதீர்கள்

எப்போதும் போல் தனியே நடந்து சென்று கொண்டிருந்த சாப்ளினுக்கு கடவுள் அதிசயம் ஒன்றை நிகழ்த்தினார். சாப்ளின் நடக்க நடக்க  வரிசையாய் வீடுகளை அடுக்கினார் சாப்ளினுக்குப் பிடித்த வீடுகள் விசாலமான வீடுகள். வீடுகளைப் பார்த்தபொழுது, தன் அம்மாவுக்கு முதல் முறை பைத்தியம் பிடித்த நாள் ஞாபகம் வந்தது. சிறுவன் சாப்ளின் அப்போதுதான் சிறிதுநேரம் வெளியே போயிருந்தான். பைத்தியம் முற்றிய அவன் அம்மா, பக்கத்துவீட்டுச் சிறுவர், சிறுமியருக்கு அடுப்புக்கரிகளை பரிசளிக்கத் தொடங்கினாள் இதோ பரிசுகள். எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக்கொள்ளுங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அள்ளி, அள்ளித்தந்து கொண்டிருந்தாள் சாப்ளினின் அம்மா இப்போது கோட் பாக்கெட்டில் உள்ள பென்னிகளை கரிகளாய் உருட்டியபடி அம்மாவின் நினைவில் நடந்துகொண்டிருந்தான் சாப்ளின். அம்மாவுக்குப் பைத்தியம் படரும்போது சிறுவர்கள் விளையாட கிளம்பிவிடக் கூடாதென்றான். அம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருங்கள். நீங்கள் அருகில் இருக்கும்போது உங்கள் அம்மாவுக்குப் பைத்தியம் பிடிக்காது. நடந்தபடியே சொல்லிப்போனான் சாப்ளின். நீங்கள் விளையாடப் போய்விட்டால், திரும்ப வரும்போது,

வைரமுத்துவின் தமிழ் உலா

ஊரடங்கு நாட்களில் புரிந்த நற்செயல்களில் ஒன்றாக குருதத்தின் ‘ப்யாசா’ திரைப்படத்தைப் பார்த்ததைச் சொல்வேன். ‘ப்யாசா’ படத்தின் நாயகன் அன்றைய கல்கத்தாவில் வாழும் உருதுக் கவிஞன். அவன் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு, தங்கியிருக்கும் பூங்காவிலும் முன்னாள் காதலியின் வீட்டில் நடக்கும் விருந்திலும் அவன் தன் கவிதைகளைப் பாடும் கவிஞன். கவிதையின் ஆழ்ந்த அனுபவம், த்வனியைக் கொண்ட பாடல்களாக அவை திகழ்கின்றன. உருதுக் கவிதைகளை மது விருந்துகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பாடும் மரபிலிருந்து கவிஞன் விஜய் என்னும் அந்தக் கதாபாத்திரத்தை இயல்பாகப் பார்வையாளர்களால் ஏற்க முடிகிறது. தமிழ் சினிமாவில் கவிஞன் பிரதானக் கதாபாத்திரத்தின் உருவத்தை எடுக்கும்போதெல்லாம் தோற்றுப்போவதற்கு அவனுக்கு ஏற்கப்பட்ட பொது அடையாளம் ஒன்று நம் சமூகத்தில் இல்லாததுதான் காரணம் என்று தோன்றுகிறது. தமிழில் புதுக்கவிதையானது ‘எழுத்து’, ‘வானம்பாடி’ என்று இரண்டு குணங்கள், இரண்டு உள்ளடக்கங்கள், இரண்டு நவீன வெளிப்பாடுகளாகத் தோற்றம் கொண்டு நிலைபெற்ற காலத்தில், ‘வானம்பாடி’ இயக்கத்தின் முத்திரைகளைக் கொண்டவர் கவிஞர் வைரமுத்து. இவர் பாடலாசிரியராக

சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்

ஒரு வேலைக்கும் பொருத்தமற்றவர் என உங்கள் மேல் புகார்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் அன்றாட நிலைமைகளைக் கருத்தில்கொண்டு உங்களுக்கு ஒரு எளிய பணி வழங்கப்படுகிறது ஊரின் புறவழிச் சாலையில் உள்ள மிருகக்காட்சி சாலையின் சிங்கத்துக்கு பல்துலக்கும் வேலை அது காவல் காப்பவனும் நீங்களும் கூண்டில் அலையும் பட்சிகளும் மிருகங்களும் உங்கள் மனஉலகில் ஒரு கவித்துவத்தை எழுப்புகின்றன அதிகாலையில் பிரத்யேக பேஸ்டை பிரஷில் பிதுக்கி உங்களது பணி இடத்திற்கு ஆர்வத்தோடு கிளம்புகிறீர்கள். அதிகாலை மான்கள் உலவும் புல்வெளி உங்கள் கவித்துவத்தை மீண்டும் சீண்டுகிறது முதலில் கடமை பின்பே மற்றதெல்லாம் எனச்சொல்லிக் கொள்கிறீர்கள் கூண்டை மெதுவாய் திறந்து மூலையில் விட்டேத்தியாய் படுத்திருக்கும் சிங்கத்திடம் உங்களுக்குப் பணி செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளேன் நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று விவரத்தைக் கூறி பிரஷை காட்டுகிறீர்கள் ஒரு கொட்டாவியை அலட்சியமாக விட்டு வாயை இறுக்க மூடிக்கொள்கிறது சிங்கம் ஸ்பரிசம் தேவைப்படலாம் என ஊகித்து தாடையின் மேல்புறம் கையைக் கொண்டு போகிறீர்கள் சிங்கம் உருமத் தொடங்கியது கையில்

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல் தொகுப்பிலிருக்கும் கட்டற்ற ஆற்றல், உள்ளடக்க ரீதியான சாத்தியங்கள், பேதைத்தன்மை கொண்ட கவிதைகள் இவை. 1990களின் பின்பகுதியில் எஸ். ராமகிருஷ்ணனுடன் ஏற்பட்ட நேரடிப் பரிச்சயமும் அவரது மொழியின் பாதிப்பும் இந்தக் கவிதைகளில் தொழில்பட்டிருப்பதை உணர்கிறேன். கோணங்கி, பிரம்மராஜனின் எழுத்துகளின் தாக்கமும் இந்தக் கவிதைகளில் அப்போது இருந்திருக்கின்றன. சென்னைக்குப் படிக்க வந்தபோது அண்ணன் வீட்டில் பார்த்த, ஒரு தலைமுறையையே ஈர்த்திருந்த எம்டிவி பாடல்களின் சர்ரியல் காட்சிகளையும் அதன் உள்ளடக்கத்தையும் அப்படியே கவிதைகளில் மொழிபெயர்க்கவும் முயன்றிருக்கிறேன் இத்தொகுப்பில். ஒரு இளைஞனின் விடலைத்தனங்கள், ஒரு பெண்ணுடனான உறவு சார்ந்த பகல் கனவுகள், கற்பனைகள் ரொமாண்டிக்கான தன்மையில் இந்தத் தொகுப்பில் பதிவாகி இத்தொகுப்போடு விடைபெற்றும் விட்டன. பிரெஞ்சிலிருந்து அந்தக் காலகட்டத்தில் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்து வெளியான ழாக் ப்ரெவரின் தாக்கம் இந்தத் தொகுதியின் நல்ல கவிதைகளில் செல்வ

உன் பெயர் அகாலம்

நானும் நீயும் கைகோர்த்துச் சுற்றாத வேளை அகாலம் என்று கண்டேன் நானும் நீயும் சேர்ந்து பார்த்த கடலை பின்னர் பார்க்காத போது அதை வெளிச்சமாக்கும் மின்னல் அகாலம் என்று கண்டேன் நானும் நீயும் கூடிச் செலவழிக்காத பகலும் இரவும் இல்லாப் பொழுது அகாலம் என்று கண்டேன் நானும் நீயும் பிரிந்த அகாதம் கிளைபரப்பி நீட்டியிருக்கும் நெடும்வீதி அகாலம் என்று கண்டேன். பரிசா சாபமா சொர்க்கமா நரகமா பரிசின் முனையில் சாபத்தின் நுனியில் தொங்கும் சொர்க்கநரகம் அகாலம் என்று கண்டேன். நினைவின் மரணமுடிச்சா மறதியின் வலிமிகுந்த பிரசவத் தருணமா நானும் நீயும் கால்பதித்திருந்த நிலத்தில் கடையப்படாத அமுதமா அக்கடலைக் கடைந்ததில் பாம்புக்கு ஏற்பட்ட வலியில் உபரியாய் துளிர்த்த விடமா அமுதும் விடமும் பிரிக்க முடியாத உன் விபரீதமா அகாலம் என்று கண்டேன். நீயில்லாத போது அங்கு நிகழ்வதெல்லாம் வேறு உன் பெயர் கொண்ட அப்பால் நிலத்தில் உன் முகச்சாயலில் அதுகொள்ளும் மோகத்தின் பொன் மெழுகு மிருதுவில் வெளிச்சம் பூசும் வெள்ளிகளோ வேறு ..