Skip to main content

Posts

Showing posts from April, 2020

அன்பு என்றே

அன்பு என்றே நாம் மொழிபெயர்த்திருக்கிறோம் எனது வளர்ப்புப் பிராணியின் செய்கையை சிறுநீர் கழிப்பதற்கு கழுத்துச் சங்கிலியை விடுவிக்கும்போது தலையைக் கோதிக் கொடுக்கும்போது எட்டி எனது விரலை நக்கிக் கடிக்கிறது சில சமயங்களில் எனது கை முழுவதையும் கடித்து விழுங்குவதற்கு முயல்கிறது மொழி தெரிந்தால் அது என்னைக் கேட்டுவிடும் அதன் அன்புக்குத் தந்தும்விடலாம் ஆனால் எனது கை எனது உடலோடும் தலையில் வலியோடும் பிணைக்கப்பட்டிருப்பது அதற்குத் தெரியாது ஒருநாள் அவளும் நானும் அவரவர் போதத்தை உடைகளோடு உதிர்த்து சற்றே பறக்க முயன்றோம் தன் முலைகளைக் கடித்துப் பருக அளித்து எனது முகம் பார்த்திருந்தாள் அவள் இந்தச் செல்லங்களைத் தந்துவிடு தந்துவிடு என்று பைத்தியம் போல வாய்குளறிக் கேட்டேன் அவளும் தலையை தலையை அசைத்தாள் அந்த அசைவு சன்னமாய் நினைவில் சிறுத்துக் கொண்டிருக்கிறது. (கவிஞர் சாகிப்கிரானுக்கு)

முல்லா விழும் குழி

ஒரு பெரிய தெருவின் நடுவே ஆள் விழும் அளவுக்குக் குழி ஒன்று இருந்தது. அந்தக் குழியைத் தவிர்த்து எல்லாரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்தத் தெருவில் ஒரு நாள் முல்லா பரபரப்பாகத் தென்பட்டார். எல்லாரும் பார்த்து கவனமாகக் கடந்து செல்லும் குழியில் விழுந்துவிட்டார் முல்லா. அவரைத் தூக்கிவிட்ட மனிதர், பார்த்துக் கவனமாகச் செல்வதுதானே முல்லா என்று கேட்டார். இத்தனை பெரிய தெருவில் இந்தக் குழியைத் தவிர்த்துப் போக வழி இருக்கிறதே என்ற 'நியாய'மான கேள்வியைக் கேட்டார். இத்தனை பெரிய தெருவின் நடுவில் இந்தக் குழியில் ஏன் என்னைத் தவிர வேறு யாருமே விழவில்லை என்று கோபமாகக் கேட்டார் முல்லா. இந்தக் குழியில் தான் குழந்தைகள் தொடங்கி புலம்பெயர் தொழிலாளர்கள் வரைக்கும் விழுந்துவிடுகின்றனர். காரணமும் விளைவும் தலைகீழாகும் இடத்தில் முல்லா பிறந்துவிடுகிறார். பொதுவாக அனைவரும் பார்க்காத ஒரு அம்சத்தை ஆனால் அருகிலேயே வாழும் உண்மையைப் பார்க்கும்போதும் நமக்குக் காண்பிக்கும்போதும் முல்லா பிறந்துவிடுகிறார். காரணங்களையும் விளைவுகளையும் ஒருவிதமாக வகுத்துத் தொகுத்து அவற்றைப் படிப்பினையாகக் கொண்டுதான் முன்ன

பயம் என்னும் முல்லாவின் குதிரை

ஆசை, பயம் இரண்டையும் கவனித்துப் பார்த்தால் அது தெருவில் அடிக்கடித் தென்படும் ஒற்றைச் செருப்பைப் போல. அதற்கு ஜோடி எதுவும் தேவையல்ல; யார் காலை விட்டுப் பார்க்கிறானோ அவன் தான் அதன் ஜோடி. எளிதாக காலை நுழைக்க முடியுமென்பதாலேயே, ஒற்றைச் செருப்பிலிருந்து விடுபடுவது போன்று அத்தனை எளிதல்ல. ஒற்றைச் செருப்பு காலோடு தரிப்பதில்லை, தலை வரை ஏறிவிடும். அடுத்தவர்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதம் எடுத்தவனையும் திரும்பிக் குத்தும் ஆயுதம் பயம்; அறிவு தன் கொடுக்கை தம்மை நோக்கி நீட்டுவதைப் போலவே.  முல்லா டீச்சராக வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு அழகிய நடுத்தர வயதுப் பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு வந்தாள். தன் மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று அவள் முல்லாவை வேண்டினாள். முல்லா, பையனை பயமுறுத்தி அவனது அம்மாவின் மனத்தையும் கவர நினைத்தார். “டேய், இங்கே பாரு.” என்று முல்லா அந்தப் பையனைக் கூப்பிட்டு தனது முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முயன்றார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமாக முகசதைகளைத் துடிக்கச் செய்தார். அந்தப் பையன் அவரை கோமாளியைப் போலப் பார்த்தான். இது போத

செத்து செத்து விளையாடும் முல்லா

உடல் குளிர்ந்து சில்லிட்டுப் போய்விட்டால் ஒருவனுக்கு மரணம் வந்துவிட்டதென்று அர்த்தம் என்று மனைவி சொன்னதைச் சோதித்துப் பார்த்தார் அல்லவா முல்லா? அதே கதையை ஓஷோ சற்று நீட்டிச் சொல்ல முயன்றிருக்கிறார்.  நீ இல்லாமல் போகும்போது, நீ தெய்வீகமாகி விடுவாய் என்பதை விளக்க, ஓஷோ அந்தக் கதையை நீட்டியுள்ளார். சாவென்றால் தொடை நடுங்குபவராக இந்தக் கதையில் முல்லா நஸ்ருதீன் தோன்றுகிறார்; நம்மைப் போலவே. இத்ரிஷ் ஷாவின் கதையில் வருவது போலவே, ஒரு நாள் ஊருக்கு வெளியே உள்ள தனது பண்ணையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த முல்லா, தன் உடலைக் குளிர்ச்சியாக உணர்கிறார். உடனேயே இறந்து போனதாக முடிவு செய்து தரையில் கால்நீட்டிப் படுத்து பிணம் போல ஆகிவிட்டார். அந்தப் பண்ணையைக் கடந்த வழிப்போக்கர்கள் சடலம் போலக் கிடக்கும் முல்லாவைப் பார்க்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் இறந்து போன இந்த சடலத்தை என்ன செய்வது என்று பேசிக் கொண்டனர். முல்லாவுக்கு அவர்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. ஆனால், அவர் தான் இறந்துவிட்டதாக நினைத்ததால் பேசாமல் கிடந்தார். முல்லாவின் வீட்டு முகவரி தெரிந்தால் அங்கே கொண்டுபோய் சடலத்தைச் சேர்த்துவிடலாம் என்று வ

எளிதாக இறந்து போகும் முல்லா

உளவியல் ஆலோசகரும் நண்பரும் சினிமா விமர்சகருமான சஃபி மொழிபெயர்ப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட முல்லா  கதைகள் தான் முல்லாவுடனான எனது இரண்டாம் பருவத்து உறவுக்கு வழிவகுத்தது. பள்ளிப்பருவத்திலிருந்து மேலோட்டமாக அறிமுகமான முல்லா கதைகள், நடுவயதுப் பருவத்தில் கூடுதல் உதவியாய் இருப்பதை உணரமுடிந்தது. முல்லா கதைகளைப் படிப்பது மட்டுமல்ல இன்னொருவருக்குச் சொல்லும்போது கூடுதலான குணம் தெரியத் தொடங்கியது; நிறைய கதைகளை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அச்சமும் ஆசையும் அகந்தையும் கனத்துப் பெருத்த நம் சுயத்தைத் தரையில் வீழ்த்தி சிரிக்கச் சிரிக்கப் புரட்டுபவர் முல்லா என்பது கதைகளை இன்னொருவரிடம் சொல்லிச் சிரிக்கும்போது கூடுதலாகப் புரிந்தது. நாம் மறைத்து வைத்திருக்கும் பொறாமை, பேராசை, அல்பத்தனம், சிறுமையை வெளியே போட்டு உலர்த்தி காயப்போட்டு விடுகிறார். அப்போது நம் சுயம் அத்தனை லேசாக மாறிவிடுகிறது. முல்லா என்ற ஒரு கதாபாத்திரம் துருக்கி நாட்டில் பிறந்ததாகச் சொல்லப்பட்டாலும் அந்தக் கதாபாத்திரத்தின் ஆளுமையும் அவரது பல்வேறு குணங்களும் அவர் ஒருவர் அல்ல என்றே தோன்றவைக்கிறது. உடல் முழுக்க விஷமமும், அக்குறும்பும், ந

இந்த அந்தி

முதிய கருவேப்பிலைச்செடியின் கீழே ஒரு அந்தி கவிழ்கிறது மூலைக் கழிப்பறைக்கும் ஈரப்புழக்கடைக்கும் இடையே நின்று இச்செடி உள்ளங்களையளவு சோகத்தை இருட்டோடு சேர்த்து அனைவருக்கும் பகிர்கிறது காபிப்பொடி நீரில் அவியும் மணம் துண்டிக்க தன் பிராய கால வீட்டின் நினைவைத் தொடரும் பெண்ணின் கண்ணீர்த்துளி உலர்ந்த அவள் முகத்தில் சில்லிடும். குழந்தைகள் விடைபெற்றுச் செல்லும் ஒவ்வொரு பொழுதும் நடுங்கும் முதுமையின் கரங்களில் விசனத்துடன் இந்த அந்தி கனக்கும் ஒரு கருப்பு வண்ணத்துப்பூச்சி அந்தியின் இடைவெளிகள் மேல் பறக்கிறது. கடைசித்துளி சிறுநீர் பிரியும் க்ஷணத்தில் அந்தி நம்மிடம் விடைபெறுவதும் கருவேப்பிலைச் செடி தன் இலைகளோடு இருள்மசங்கில் மறைத்துக் கரைவதும் பறவைகளின் உருமறைந்த இரைச்சலும் ஒரு சின்னஞ்சிறிய வழி அனுப்புதலின் பொருட்டா. (அழகு தெய்வானைக்கு)

கொரோனா காலத்தில் கிறிஸ்து

ஜேம்ஸ் மார்டின் கடந்த சில வாரங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு, தீர்ப்பு நாளை நெருங்குகிறோமென்ற அச்சம் எழுந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று தான் அதற்குக் காரணம். வேகமாக நகரும் இத்தொற்றின் இன்னொரு பயங்கர அம்சமாக கிட்டத்தட்ட உடல் திடுக்கிடலைத் தரும் அதன் திடீர் அவதாரமும் உள்ளது. ஒரு பாதிரியாராக, பீடிப்பு, அச்சம், கோபம், துயரம், குழப்பம் மற்றும் விரக்தி கலந்த உணர்வுகளைத் தொடர்ந்து செவியுற்று வருகிறேன். நாட்கள் போகப் போக ஒரு திகில் படத்துக்குள் வாழும் உணர்வு ஏற்படுகிறது. உள்ளுணர்வு ரீதியாகவே என்னை குலைத்துப் போடும் தன்மையில் என் மனத்தை அதீதமாகத் தொந்தரவு செய்யும் நிலை இது. சமயப்பற்று அதிகம் கொண்ட மக்கள் கூட என்னிடம் கேட்கின்றனர்: ஏன் இப்படி நடக்கிறது? இவை எல்லாவற்றிலும் கடவுள் எங்கே இருக்கிறார்? கோவிட் -19 வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை ஏன் கொல்கிறது? இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏன் மனிதகுலத்தைச் சீரழிக்கின்றன? இத்தனை துயரம் மனிதர்களுக்கு ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேர்மையான ஒரு பதில் இருக்குமானால், அது நமக்குத் தெரியவில்லை என்பதுதான். என்னைப் பொறுத்தவரை, அதிகபட்சமான நேர்மையும் துல்ல

பக்கீர் சிறுவன் ராணிதிலக்

கரோனோ ஊரடங்கு நாட்களில் எல்லாரும் சமூக விலக்கம் செய்து கொண்டு வீட்டில் தனியே இருக்கும் அனுபவம், எனக்குப் புதியது அல்ல. இன்று தொலைபேசியில் அழைத்த கவிஞர் ஜயபாஸ்கரனிடம், நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், இது நமக்குப் புதியதா என்ன என்று கேட்டபோது பதிலுக்குச் சிரித்தார். சுனாமி காலத்திலும் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் சென்னைக் கடலைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றிப் போய்ப் பார்த்ததுண்டு. அப்படித்தான் சென்ற வாரமும் மெரினாவை அலுவலகத்திலிருந்து வரும்போது கடந்தேன். ஔவை சிலைக்குச் சற்று முன்னர் பைக்கை நிறுத்தி மனிதப்படலம் முற்றிலும் அகன்று கடல் நீலமும் மணலின் பொன்னும் மின்னும் இயற்கையைப் பார்த்தேன். வேம்பும் பூச்செடிகளும் நடப்பட்ட நீண்ட புல்வெளியில் நிற்கும் சாம்பல் நாரையைப் பார்த்தேன். தடுப்புக் கம்பிக்கு அருகில் இன்னொரு சாம்பல் நாரையும் மேய்ந்து கொண்டிருந்ததால் மட்டுமே அந்த நாரை நிஜம் என்று தெரிந்தது. இல்லையென்றால் அசலான அளவில் வடிவமைக்கப்பட்ட சிலை போல புல்வெளியில் நின்று கொண்டிருந்தது. ஒரு நிமிடத்துக்குப் பிறகுதான் கழுத்தில் சலனம் கொண்டு தலையைத் திருப்பியது; அதற்குப் பின்னரும்

மனித அகந்தைக்கு மேலே இயற்கை

பிரபஞ்சத்தின் இயக்கத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை தனது சினிமாக்கள் மூலம் விசாரிக்கும் அபூர்வமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் டெரன்ஸ் மாலிக். அவரது சமீபத்திய படைப்பான 'எ ஹிட்டன் லைப்' எழுத்தாளர் ஜார்ஜ் எலியட்டின் வார்த்தைகளுடன் முடிகிறது. ‘உலகம் வாழ்வதற்கான இடமாக ஆவதற்கு வரலாற்று ரீதியாகப் பதிவாகாத செயல்பாடுகளும் ஒருபங்கு காரணமாக உள்ளன. உலகம் அத்தனை மோசமாக உங்களுக்கும் எனக்கும் இல்லாமல் இருக்கிறதென்றால் அதன் பாதிப் பொறுப்பு, விசுவாசத்துடன் கூடிய ஒரு வாழ்க்கையை யாருடைய கண்களுக்கும் படாமல் வாழ்ந்த தனிநபர்களையே சாரும். அதிக எண்ணிக்கையில் போய் காணப்படாத சமாதிகளில் அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்.’ கொடுங்கோலன் ஹிட்லருக்கு ஆதரவான உறுதிமொழியை எடுப்பது கிறிஸ்துவுக்கு எதிரான செயல் என்று கருதி, மரண தண்டனையை அடைந்த குடியானவன் பிரான்ஸ் ஜெகர்ஸ்டாட்டர் என்ற சாதாரணனின் கதை இது. மரணம் அவன் மீது விதிக்கப்பட்டதா? இல்லை. தான் நம்பும் சத்தியத்துக்காக அவன் மேற்கொண்ட தேர்வு அது. இயற்கையோடு சேர்ந்து வாழும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த செயின்ட் ரேட்கண்ட் கிராமத்தின் நடுத்தர விவசாயி

வான்கோவை நேசிப்பது

கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வான்கோவின் ஓவியங்களும் அவரது வாழ்க்கை தொடர்பில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும் அவர் பற்றிய எழுத்துகளும் என்னைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. என் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் தினசரி, அவரது ஒரு ஓவியத்தைப் பற்றியாவது படிப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்த்துவிடுகிறது. லவ்விங் வின்சென்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஸ்டாரி ஸ்டாரி நைட்' பாடல் எனக்கு எல்லா வேளைகளிலும் கேட்டால் அமைதியையும் வான்கோவின் மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தையும் தொடர்ந்து தருகிறது. ஸ்டாரி நைட் பற்றி அறிஞரும் துறவியுமான நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை அருமையான அவதானங்களைக் கொண்டது. அழகின் மீதான தியானம் என்று அந்தக் கட்டுரையைச் சொல்வேன். (அதைப் படிக்க :  http://aranya.me/uploads/3/4/8/6/34868315/starry_starry_night.pdf) ) அட் தி எடர்னிடிஸ் கேட்' திரைப்படத்தில் வின்சென்டின் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த நடிகர் வில்லியம் டீஃபோ, வான்கோவிடமிருந்த கிறிஸ்துவின் அம்சத்தை எனக்குத் தெரியப்படுத்தியதன் மூலம் வான்கோவும் அவரது ஓவியங்களும் எனக்கு இன்னொரு விதமாக நெருக்க

பேருருவம் கொள்ளும் பிரகிருதி சுமித்ரா

மலையாளத்தின் தலைசிறந்த கவிஞரும் தமிழிலும் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு காரணமாக நவீன கவிதை வாசகர்களிடமும் நன்கு அறிமுகமான கல்பட்டா நாராயணனின் நாவல் 'சுமித்ரா'. கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்திருக்கும் இப்புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பில் ஜெயமோகன் சொல்லியிருப்பது துல்லியமான வழிக்குறிப்பு; இது ஒரு கவிஞன் எழுதிய நாவல் என்பதுதான் இதன் தனித்துவம்; கவிஞனின் நாவல் எப்படி இருக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகளைக் கொண்ட நாவல் இது. அரிய தகவல்கள், வரலாற்று விவரங்களிலிருந்து பக்கம் பக்கமாக நாவலாசிரியர்கள் விரித்து எழுதுவதற்கு சபலப்படும் முனைகளில் பொருள் சார் பண்பாடு, அரசியல் சார்ந்த குறிப்புகளையும் அத்தனை சுருக்கமாக நுட்பமாகத் தெரிவிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் கடக்கிறார் கல்பட்டா நாராயணன். நாவலின் மையம் சுமித்ரா என்ற பெண். நமக்கு தமிழ் நாவல்கள் வழியாக அறிமுகமான யமுனா, அலங்காரம், அம்மணி, இந்து, அபிதா போன்று ஏக்கமாகவும் ப்ரேமையாகவும் அடைய முடியாத லட்சியமாகவும் ஆறாத நினைவாகவும் வாசகனுக்கு ஆகிவிடும் பிரகிருதி. கேரளத்தில் உள்ள பெரிய வீடுகளின் புழக்கடை இருட்டு நிழலுக்குள்ளேயே வரும் ஊருணி நீரின்