கரோனோ ஊரடங்கு நாட்களில் எல்லாரும் சமூக விலக்கம் செய்து கொண்டு வீட்டில் தனியே இருக்கும் அனுபவம், எனக்குப் புதியது அல்ல. இன்று தொலைபேசியில் அழைத்த கவிஞர் ஜயபாஸ்கரனிடம், நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், இது நமக்குப் புதியதா என்ன என்று கேட்டபோது பதிலுக்குச் சிரித்தார். சுனாமி காலத்திலும் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் சென்னைக் கடலைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றிப் போய்ப் பார்த்ததுண்டு. அப்படித்தான் சென்ற வாரமும் மெரினாவை அலுவலகத்திலிருந்து வரும்போது கடந்தேன். ஔவை சிலைக்குச் சற்று முன்னர் பைக்கை நிறுத்தி மனிதப்படலம் முற்றிலும் அகன்று கடல் நீலமும் மணலின் பொன்னும் மின்னும் இயற்கையைப் பார்த்தேன். வேம்பும் பூச்செடிகளும் நடப்பட்ட நீண்ட புல்வெளியில் நிற்கும் சாம்பல் நாரையைப் பார்த்தேன். தடுப்புக் கம்பிக்கு அருகில் இன்னொரு சாம்பல் நாரையும் மேய்ந்து கொண்டிருந்ததால் மட்டுமே அந்த நாரை நிஜம் என்று தெரிந்தது. இல்லையென்றால் அசலான அளவில் வடிவமைக்கப்பட்ட சிலை போல புல்வெளியில் நின்று கொண்டிருந்தது. ஒரு நிமிடத்துக்குப் பிறகுதான் கழுத்தில் சலனம் கொண்டு தலையைத் திருப்பியது; அதற்குப் பின்னரும்...