டி. கண்ணன் இறந்தபின்னால் சமீபத்தில் ஒரு கனவு. ‘திருநெல்வேலியில் பழைய வீடுகளை இன்னும் கொண்டிருக்கும் தெருக்களில் ஒன்றான தெற்கு புதுத் தெருவில், நானும் கண்ணனும் போய்க்கொண்டிருக்கிறோம். அவரது மரணத்துக்குப் பிறகு முகநூலிலும் வாட்ஸப்பிலும் நண்பர்கள் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் அணிந்திருந்த அழகிய ஜிப்பாவை அணிந்திருக்கிறார். கந்தர்வன் போல எழில்குறையாமல் நடந்துவருகிறார். ஒரு பழைய பாணி கட்டடத்துக்குள் நுழைகிறோம். பகல்வேளையிலும், நித்தியமான ஒரு சாயங்காலத்தை உருவாக்கும் மஞ்சள் கண்ணாடிக்கூண்டு விளக்குகளோடு, அந்த கட்டடத்தின் பிரதான அறை இருந்தது. அதன் ஒருபக்கத்தில் பெண்கள் பெரிய பெரிய கண்ணாடி குடுவைகளுக்குப் பின்னால் பலகாரங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். “இது அருமையான பட்சணக் கடைப்பா” என்று சொல்லி, புராதனமானதாகவும் மனதுக்கு இதமாகவும் தோன்றும் மர மேஜை நாற்காலிகளில் ஒன்றில் உட்கார வைத்தார். அந்த அறையில் தைலம் போல வழிந்துகொண்டிருந்த பொன்னொளியில் கண்ணனைப் பார்த்தபடி இருக்கிறேன்.’ இந்தக் கனவின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய பண்பு உள்ளவர் டி.கண்ணன். நிலையான வேலையோ இருப்பிடமோ அமையாத சூழலில், குடி, உணவு...