“மனிதாபிமானமில்லாத எந்தச் செயலும் பழக்கத்துக்குள்ளாகும்போது அது மனித இயல்பை அடைந்துவிடுகின்றன.” 1961 ஆம் ஆண்டு ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவபட்டா எழுதிய “உறங்கும் அழகிகளின் இல்லம்” நாவலில் வரும் வாக்கியம்தான் அந்தப் படைப்பின் இன்றைய பொருத்தப்பாட்டை கவனிப்பதற்கான ஒரு குறிப்பு. 67 வயதில் முதுமையின் நலிவுக்குள் எட்டுவைக்கும் எகுச்சியின் நண்பர் கிகாவின் ஆலோசனையைக் கேட்டு, உறங்கும் அழகிகளின் இல்லத்தை நாடி வருவதில் இந்த சிறிய நாவல் ஆரம்பிக்கிறது. நிர்வாணமாய் ஆழ்ந்த உறக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகியுடன் உறங்கமுடிவதற்கான இடம் அது. அந்த இல்லத்தைப் பராமரிக்கும் 40 வயதுப் பெண், உடன் உறங்கும் அழகியிடம் மோசமாக நடந்துகொள்ளக் கூடாது என்பதே அந்த இல்லத்தின் விதியென எச்சரிக்கிறாள். ஐந்து வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு வயதுகளைச் சேர்ந்த அழகிகளுடன் எகுச்சி அடையும் அனுபவமுமே இந்த நாவல். தளர்ச்சியையும் முதுமையையும் அருகாமையில் மரணத்தையும் மட்டுமே வாழ்வின் ஒரே சாத்தியமாகக் கொண்ட கிழவர் என்று தன்னை உணர்கிறார். வயோதிகத்தின் சுமையை மறந்து, உடைகளை நீக்கி அம்மணமாக்கிக் கொண்டு, இறகுபோல எகுச்சி போன்றவ...