Skip to main content

Posts

Showing posts from July, 2021

யதிக்குத் துணையாக நடராஜ குரு விட்டுச்சென்ற குரங்குகள்

எனது இலக்கிய ஆசிரியர்களோடு ஆசிரியராக நித்ய சைதன்ய யதி தொடர்ந்து என்னுடன் வந்துகொண்டிருக்கிறார். மனுஷ்ய புத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், கண்ணன் சேர்ந்து நடத்திய காலச்சுவடு பத்திரிகையில் ஜெயமோகன் எடுத்த நேர்காணல் வழியாக நுழைந்தவர் நித்ய சைதன்ய யதி. நல்ல அவியல் வைக்கத் தெரியாதவன் துறவியாக முடியாது என்ற கூற்று ஞாபகத்தில் இன்னமும் இருப்பது; நண்பர்களிடம் அதைத் தொடர்ந்து பகிர்கிறேன். அத்துடன் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நல்ல அவியலைச் சமைப்பதில் படிப்படியாக முன்னேறியும் வருகிறேன். நித்ய சைதன்ய யதியை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தும், ஓரிரண்டு முறை செய்த பலவீனமான முயற்சிகளுக்கப்பால், அதற்கான சூழல்கள் அமையவில்லை. பிரமிளும் யதியும் இப்படித்தான் தவறியது.   நித்ய சைதன்ய யதி இறந்தபிறகு வேறேதோ சந்தர்ப்பத்தில் எனது திருமணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சுயசரிதை நூலான Love and Blessings எனக்கு வந்து சேர்ந்தது.  அந்த நூலில் அவர் தீட்டியிருந்த குழந்தைப் பருவத்தைப் பற்றிய காட்சிகள் தான் யதி என்னுடைய உலகத்தைச் சேர்ந்தவர் என்ற நெருக்கத்தை எனக்கு அளித்தது. குழந்தைப் பருவத்தை விவரிக்கும் வேளைகளில

அபி கண்ட ‘வந்து வந்து போவது’

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை - போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு சுருண்டிருக்கிறது; விட்டத்தை அதிகப்படுத்தாமல் சுருசுருவென்று தன்னுள் சுருளும் பாம்பின் இயக்கம். அபியின் மாலை, பாம்பாக அவரைக் கொட்டியது போல, இந்தக் கவிதைகளை வாசிக்கும்போது நம்மையும் கொட்டித்தான் விடுகிறது. அப்போது சாயும் காலத்தில், முதுமையில் ரத்தம் இருள்வது தெரிகிறது.  நதி அல்ல, கடல் அல்ல, வாய்க்காலும் இரண்டு கரைகளைக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டிய கரை மேட்டுப்பகுதியாக இருக்கிறது. அங்கேயிருந்து வந்துகொண்டிருக்கிறது அழைப்புக்குரல் மெல்லியதாக. நேரத்தைச் சுருட்டிக் கொண்டிருக்கிறது நேரம் வயிற்றில் புரண்டு பதுங்குகிறது பாம்பு இந்தக் கவிதையின் நடுவில் இப்படித்தான் சாயங்காலமாகச் சுருண்டிருக்கிறது. பறவைகளின் ஒலிகளைத் தன் மேல் பூசிக்கொண்டு தன் சருமத்தை மென்மையாக்குகிறது மாலை. எத்தனையோ மதிப்புகொண்ட பொழுதையும், நிறைகொண்ட உறவுகளையும், ஆலிங்கனத்தில் பற்றிய இதழ்களையும் எங்கோ ஒரு

பரிவின் வழி ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் - சஃபி நேர்காணல்

நேசம், மகிழ்ச்சி, தைரியம், சமரசமின்மை, பரிவு ஆகிய பண்புகளை வாசிப்பவர்களிடம் கிளர்த்தும் காப்பியங்களில் ஒன்று ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’. வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கும் அது தரும் ஆசிர்வாதங்களை அனுபவிப்பதற்கும் இஸ்லாமியக் கலாச்சாரம் வழங்கிய ஞானப்பொக்கிஷம் என்று மதிக்கப்படுகிறது. மேற்கு, கிழக்கு என்ற பாகுபாடின்றிப் பலதுறை அறிஞர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை புதுமை மாறாமல் வாசித்தும் புழங்கியும் கொண்டிருக்கிற அந்தக் கதைகளுக்கான நவீன மொழிபெயர்ப்பை சஃபி தமிழில் இரண்டு பாகங்களாக ‘உயிர்மை’ பதிப்பகம் வழியாகக் கொண்டுவந்துள்ளார். மூன்றாவது பாகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தேனி மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாகப் பணிபுரிந்துவரும் சஃபியுடன், ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுக’ளை முன்வைத்து நடத்திய உரையாடலிலிருந்து…  ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ நூலை உலகம் அறிந்த கதையைச் சொல்லுங்கள்…  ‘1001 அரேபிய இரவுகள்’ நூலாக வந்த வரலாறே சுவாரஸ்யமானதுதான். முதன்முதலாக, பிரெஞ்சுக்காரர் அந்த்வான் கெலோன்(Antoine Galland) வழியாகத்தான் 1704-ல், 12 பாகங்கள் கொண்ட பெருந்தொகுப்பாக பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது. அரப

அழியும் செய்திகளுக்கு நடுவே

இயற்கைப் பேரிடர்கள், யுத்தங்கள், பஞ்சங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள், உலகை உலுக்கும் பெரிய மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைச்  செய்தியாக அனைத்து மக்களிடமும் தெரிவிப்பதற்கு இந்த நூற்றாண்டிலும் புகைப்படங்களே சக்திவாய்ந்த ஊடகங்களாகத் திகழ்கின்றன. உணர்ச்சிகரமான மொழியில், நூற்றுக்கணக்கான வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாததை புகைப்படம் வெளிப்படுத்தி விடும். வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக ஒவ்வொரு மனிதரும் ஊடகமாகி உண்மையும் பொய்யுமாக கொத்துக்கொத்தாகச் செய்திகளே செய்திகளை அழித்துக் கொண்டிருக்கும் post truth சூழலில் நாம் வாழ்கிறோம். இந்தப் பின்னணியில், ஒரு நிகழ்வையோ ஒரு தருணத்தையோ அருகில் போய் பார்த்துச் சித்தரிக்கும் புகைப்படம் உண்மைக்குச் சற்று பக்கத்தில் போய் நெருங்கும் சாத்தியமுள்ளதாகத் தெரிகிறது. அதி ஊடகச் சூழல் என்று சொல்லப்படும் காலத்தில் அன்றாடம் அழிந்து மறதிக்குள் புதைந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கிடையே சில நிகழ்வுகளையும் சில தருணங்களையும் ஆவணமாகவும் வரலாறாகவும் ஆக்கும் திறனுள்ளவை புகைப்படங்கள். ஆப்கானிஸ்தான் படையினருக்கும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் நடைபெற்ற யுத்

கயிறுகள் - மேரி ஆலிவர்

பழைய நாட்களில் நாய்கள் சுதந்திரமாக எங்கள் டவுனில் திரிந்துகொண்டிருந்தன. ஆனால் பழைய வழிமுறைகள் மாறிவிட்டன. ஒரு காலையில் கழுத்துப்பட்டியில் நீளமாகத் தொங்கும் கயிறுடன் எங்கள் வீட்டுமுற்றத்தில் ஒரு நாய்க்குட்டி வந்துநின்றது. எங்கள் வீட்டிலுள்ள நாய்களுடன் அவன் விளையாடத் தொடங்கினான்; அதற்குப் பிறகு தொலைந்துவிட்டான் அடுத்த நாள் காலை இன்னொரு கயிறு கழுத்தில் தொங்க எங்கள் வீட்டில் தென்பட்டான். இப்படியாக நிறைய நாட்கள் நிகழ்ந்தன – அவன் துருதுருப்பாகவும் நேசத்துடனும் இருந்தான். அத்துடன் கடித்து சவைத்துத் துண்டாக்கிய ஒரு கயிறு அவனுடன் எப்போதும் இருந்தது.  ஒருசமயம் நாங்கள் இன்னொரு வீட்டுக்கு நகர்ந்தோம். ஒரே சாயங்காலத்தில் அத்தனையையும் நகர்த்திவிட்டோம். ஒரு நாளோ அதற்கும் கழித்தோ, ஒரு குறுகுறுப்பின் காரணமாக, பழைய வீட்டுக்கு வண்டியை விட்டேன். எங்கள் வீட்டின் வாசலில் புல்தரையில் அவன் படுத்திருந்ததைப் பார்த்தேன். நான் அவனை காரில் ஏற்றி எங்கள் புதிய வீடு எங்கிருக்கிறதென்று காட்டினேன். உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று சொன்னேன். கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு பின்னர் போய்விட்டான். ஆனால், அடுத்த நாள் காலை எங்

ரிலையன்ஸின் புதிய விலங்குக் காட்சி சாலை - இது புனைகதையல்ல நிஜம்

கேலிச்சித்திரம் : சதீஸ் ஆச்சார்யா முகேஷ் அம்பானியின் செல்ல மகன் ஆனந்த் அம்பானி, என்னைப் போல கவிஞன் அல்ல. அதனால் அப்பாவிடம் சொல்லி தனது பிரமாண்டமான கனவுத்திட்டமாக, பூர்விக மாநிலமான குஜராத்திலேயே பிரமாண்டமான விலங்குக் காட்சி சாலை ஒன்றை உருவாக்கப் போகிறார். பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனவைகள், நிலத்திலும் நீரிலும் வசிப்பவை என்று ஆயிரக்கணக்கான வகைமைகளில் உலகமெங்குமுள்ள விலங்குகளின் பண்ணையாக இது ஆகப்போகிறது.  மெக்சிகோவிலிருந்து புலிகள் வர உள்ளதாம். ஏற்கெனவே அசாமிலிருந்து இரண்டு கருஞ்சிறுத்தைகளை பரிமாற்றிக் கொண்டு பதிலாக இஸ்ரேலிலிருந்து நான்கு வரிக்குதிரைகள் கொடுக்கப்பட்டு விட்டன. அரசு விலங்குக் காட்சி சாலைகளுக்குள் தான் விலங்குகள் இப்படி பரிமாற்றம் செய்யப்படவேண்டுமென்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இன்று இந்தியாவே அவர்களது பண்ணையம்தானே.  என் கவிதையில் இதுவரை வராத அத்தனை விலங்குகளையும் ஆனந்த் அம்பானி தனது ஜூவுக்குக் கொண்டுவரப் போவதை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. லைப் ஆப் பை திரைப்படம் ஞாபகத்துக்கு வருகிறது. சிறுவன் பை-யின்

என்னைத் தூக்கிச் செல்லாத காற்று

தலைமுடியைச் சிலுப்புவது போல பாசனக் குளத்தின் மேற்பரப்பை நடுங்கச் செய்து வெங்காயத் தாமரை இலைகளை ஆடவைத்து நீலத்தாழைக் கோழிகளின் சிறகுகளைச் சிலிர்ப்பித்து நிறுத்தி சரித்த வில்வண்டிக்குள் நுழைந்து ஊளையிட்டு  கண்ணுக்கே தெரியாமல் என் வேட்டி சட்டை வழியாக எலும்புகளாலான என் மண்டபத்துக்குள் நுழைந்து கடக்கிறது காற்று  உயிரைத் தூக்கிச்சென்ற செய்திகளை நான் படித்ததேயில்லை ஆனாலும்   என் கால்களிடம் போய் எப்போதும்போல ரகசியமாக எதுவோ பயமுறுத்த மயிர்களிலிருந்து மூட்டுகள் வரை நடுங்குகின்றன அரசமரத்தின் ஒவ்வொரு இலையையும்  இடைவிடாமல்  சுழன்றாடச் செய்கிறது குளத்தின் ஈரத்தோடு சேர்ந்து ஆடும் மரத்தை இலைகளை வயலில் கதிர்களை என் உடலின் ஒவ்வொரு துளியும் தொட்டு மீண்டு அநிச்சயத்தின் குறுகுறுப்பில்  காற்றில் பறந்துவிடுவோமா பறந்துவிடுவோமாவென்று குழந்தைகளைப் போலக் கேட்டுக் கதைக்கிறது தரையில் பதித்திருக்கும் உன் கால்களின் வேர்களை நறுக்கி சுலபத்தில் தூக்கிப் போவேன் என்று அரை டிரவுசர் அணிந்த சிறுவனாக இருக்கும்போது என் காதில் மிரட்டியிருக்க வேண்டும் ஆனியிலேயே வந்துவிடும் இந்தக் காற்று உண்மையில் தரையிலேயே இருந்து நிலைக்க விரும

மறதி என்னும் உயிர் - வலி

  சமீபத்தில் யுவன் சந்திரசேகரின் கதைகளைத் தொடர்ந்து படிக்கும்போது ஆச்சரியப்பட்ட அம்சம், அந்தக் கதைகளின் ஒவ்வொரு பக்கமும் அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும் முடிவேயில்லாத தகவல்கள், நினைவுகள்.  பிரிவு, நஷ்டம், துரோகம் ஆகியவற்றுக்கு இணையான, ஆனால் தற்காலிகமான வலியாய் மறதி இருப்பதை இந்த வயதில் உணர்கிறேன். ஏனெனில் நாம் எல்லோரும் பாதியளவு நினைவின் வாழ்க்கையை வாழ்பவர்களாக உள்ளோம்.  ஒரு மேகம் போலத் தோன்றி மறைவது, நிறையற்றது நினைவு எனத் தெரிந்திருந்தாலும் ஒரு நினைவென்பது- அத்தியாவசியமானது, மகிழ்ச்சியளிப்பது, உறுத்துவது, ஆறுதலானது, குரூரமாக எரியச் செய்வது, அவமானத்துக்குத் தள்ளுவது- அது எப்படியான குணத்துடன் இருந்தாலும் மனத்தின் நாவுக்கு அசைபோடுவதற்கு, உண்ட புல்லாகவும், உயிர்ப்பாகவும் திகழ்வதை உணர்கிறேன்.  ஒரு நினைவின் துணுக்கு சல்லிசாய், அனாவசியமானதாய் இருந்தாலும் அது மறதிக்குள் விழுந்துவிட்டால், அது மாபெரும் அத்தியாவசியம் என்ற  தோற்றத்தை மனம் ஏற்படுத்தி, மறதியுடன் போரிடத் தொடங்குகிறது. பல்லில் சிக்கிய உணவுத்துணுக்கைப் போல அந்த வேளைக்கு, அதுதான் இந்த உலகிலேயே அகற்றப்பட வேண்டிய பிரச்சினையாக, அந்த நினைவ

எல்லாம் கதைகள்தானா யுவன்

கவித்துவமான மொழியும், அறிவார்த்தத்தின் சொடுக்குதலும், வாசிப்பு சுவாரஸ்யமும் அபூர்வமாக இணைந்த கதைசொல்லி யுவன் சந்திரசேகர். கடந்த இருபதாண்டுகளில் கணிசமான எண்ணிக்கையிலும் சிறுகதைகள், நாவல்களை எழுதிவருகிறார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து, கீழ்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஸ்டோர் வீடுகள் சார்ந்து ‘விகடன்’, ‘கல்கி’ போன்ற பத்திரிகைகளில் எழுதப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கையும் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு செழுமையான பகுதியும் அதன் சத்தங்களோடும் வாசனைகளோடும் நமக்குக் ‘கடலில் எறிந்தவை’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத் திடமாக நினைவுகூரப்படுகின்றன. முடிவற்ற அறிவுகளின் பின்னணியில், இன்னும் முடிவற்றதாக இருக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களை ஆராயும் போர்ஹேவை, கல்கியும் தேவனும் தி.ஜா.வும் லா.ச.ரா.வும் தற்செயலாக யுவன் சந்திரசேகரின் உலகத்தில் சந்திக்கிறார்கள்; வெற்றிலைச் செல்லத்தைப் பகிர்ந்துகொண்டு சுவாரஸ்யத்தோடு அவர்கள் உரையாடுகிறார்கள். உச்சிவெயில் அடிக்கும் மத்தியான மயக்கத்தில் ஒருவன் காணும் பகற்கனவுபோல்தான் யுவனின் கதைகள் தொடங்குகின்றன. அந்தக் கனவு பெரும்பாலும் மதுரையில் தொடங்கி வரலாறு, அர

ஸ்டான் சுவாமியின் கைது மரணம் காஃப்காவின் சகுனங்கள்

நவீன அரசமைப்பு, நீதி அமைப்பு சார்ந்த விமர்சனங்களையும், பகுத்துப் பார்க்க முடியாமல் அது வைத்திருக்கும் பயங்கரங்களின் அடர்த்தியையும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சகுனங்களைப் போல எச்சரித்துவிட்டுப் போன இலக்கிய ஆசிரியன் காஃப்கா, இந்த நூற்றாண்டிலும் பொருள் பொதிந்தவராக இருக்கிறார் என்பதை, ஆதிவாசி மக்கள் உரிமைகள் செயல்பாட்டாளரும், மனித உரிமைப் போராளியுமான பாதிரியார் ஸ்டான் சுவாமியின் அநியாயமான கைதும் மரணமும் நிரூபிக்கிறது.  ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவர் இறக்கும்வரை அவரைக் கைதுசெய்வதற்காகச் சொலப்பட்ட குற்றங்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. மாவோயிஸ்டுகள் தொடர்பில் அவரது கணிப்பொறியில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானவை அல்ல என்று ஸ்டான் சுவாமி தொடர்ந்து கூறிவந்திருக்கிறார்.  காஃப்காவின் 'விசாரணை' நாவலின் நாயகன் யோசப் க.வும் இப்படித்தான் அவன் செய்த குற்றம் என்னவென்று தெரிவிக்கப்படாமலேயே கைது செய்யப்படுகிறான்; கடைசியில் மரண தண்டனைக்கும் உள்ளாகிறான். கோவிட் என்னும் பெருந்தொற்றுச் சூழல் சர்வாதிகாரத்துக்கும் அரசு பயங்கரவாதத்துக்கும் அநீதிக்கும் தீண்டாமை

ஆக்டோபஸ் என்னும் ஆசிரியன்

மனிதர்களால் மேற்கொள்ளப்படும் அழிவுகளுக்கும் கொடுங்கோன்மைகளுக்கும் மத்தியிலும் மற்ற உயிர்களுடன் தொடர்புகொள்ளும் அசாத்தியத் திறனானது மனித உயிருக்கு மட்டுமே அரிய பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதை மறுபடியும் நமக்கு நினைவூட்டும் ஆவணப்படம், சமீபத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’. எஸ். ராமகிருஷ்ணன் தனது இணையத்தளத்தில் அறிமுகம் செய்திருந்தார்.  நத்தைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆக்டோபஸ். லட்சக்கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் தன்னைப் பாதுகாக்கும் ஓட்டை இழந்து, அதிசயிக்கத்தக்க திறனுள்ள அறிவை இழப்பீடாகப் பெற்றது. அப்படிப்பட்ட ஆக்டோபஸ் ஒன்றுடன் ஆவணப்படக் கலைஞர் க்ரெய்க் பாஸ்டர் கொள்ளும் நேசம் மிகுந்த நட்புதான் இந்த ஆவணப்படம். ஆப்பிரிக்கக் காடுகளில் கானுயிர்த் திரைப்படங்களை, ஓய்வெடுக்க அவகாசமின்றி எடுத்துத் தள்ளிய க்ரெய்க் பாஸ்டர், தன் வாழ்க்கையின் ஒருகட்டத்தில் கேமராவும் எடிட்டிங் அறைப் பணியும் வேண்டவே வேண்டாம் என்று களைப்புற்று, தன் சிறுவயதுக் காதலான ஆழ்கடலில் அடைக்கலம் தேடுகிறார். தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனுக்கு அருகில் உள்ள கடற்பூண்டுக் காடு அடர்ந்த ஆழ்கடல் பகுதிக்குத் தனது வீட்

பூங்காவின் சுவர்களுக்கப்பால் ப்ரவுனி

  பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை ப்ரவுனி  கம்பிச் சுவருக்கப்பால் வேடிக்கை பார்க்கிறது ப்ரவுனியை பூங்காவுக்குள்  விளையாட அழைக்கிறார்கள் குழந்தைகள் பூங்காவின் கண்காணிப்பாளர் ப்ரவுனியை அனுமதிக்க முடியாதென்று மறுக்கிறார் பூங்காவின் கதவருகே இருதரப்பும் சந்திக்க தற்காலிக ஏற்பாடொன்று நடக்கிறது குழந்தைகள் எல்லாரையும்  தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்கிறது ப்ரவுனி பயப்படுவது போலத் தயங்கித் தயங்கி பயப்படுவதை விரும்பி விரும்பி தொட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் சறுக்கு விளையாட்டுக்குத் திரும்புகிறார்கள் குழந்தைகள் கம்பிகளினூடாக தனது ஈரமூக்கை நுழைத்து விளையாடப் போன குழந்தைகளை மறுபடியும்  ஏக்கமாய்  வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறது ப்ரவுனி குழந்தைகளும் ப்ரவுனியும் ஒன்றல்ல என்றெனக்குத் தெரிகிறது குழந்தைகளும் ப்ரவுனியும் வேறுமல்ல என்றும் தெரிகிறது குழந்தைகளும் ப்ரவுனியும் எங்கோ ஒரு இடத்தில் சந்தித்து நேசிக்கிறார்கள் எங்கோ ஒரு புள்ளியில் விலகியும் சென்று விடுகிறார்கள் ஆனால்  ப்ரவுனியும்  குழந்தைகளும் என்னைவிட உங்களைவிட பரஸ்பரம்  தம்மை ஆழமாக  பார்த்துக் கொள்கிறார்கள் எங்கோ.

ஒவ்வொரு நாயின் கதையும் - மேரி ஆலிவர்

எனக்கு மட்டுமே சொந்தமான படுக்கை ஒன்று உள்ளது அது என்னுடைய அளவே இருக்கும் சிலவேளை கண்களுக்குள் கனவுகளோடு தனியாக உறங்க விரும்புகிறேன் ஆனால் அவ்வப்போது கனவுகள் இருண்மையாகவும் மூர்க்கமாகவும் சஞ்சலம் உண்டாக்குவதாகவும் இருக்கும் ஏனென்று காரணம் தெரியாவிட்டாலும் நான் பயந்தெழுந்து விடுவேன் அப்புறம் எனக்குத் தூக்கம் இருக்காது மிக மந்தமாக மணிகள் கழியும் அப்போது நிலவின் ஒளி சுடரும் உன் முகம் இருக்கும் படுக்கையில் நான் ஏறுகிறேன் சீக்கிரம் விடியல் வந்துவிடும்  எனக்குத் தெரியும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது.