Skip to main content

Posts

Showing posts from May, 2022

பூனையைக் கொல்ல முடியாது

என் வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக என் ப்ரவுனியையும் என்னையும் கொல்வதற்கு நுழைந்த பைத்தியத்தின் பூனையை நான் கொல்லவே முடியாதென்று இன்று தெரிந்துகொண்டேன். முதலில் ப்ரவுனி தான் வீணாகப் பயப்படுகிறதென்று நினைத்தேன். ஆனால் பூனைக்குத் திடமான ஒரு குறி இருக்கிறது. என் வீடிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிழல்மறைவுகளில் அது நடமாடி, நான் இல்லாத வேளைகளில் என் வீட்டின் ஜன்னல் வழியாகத் தோன்றி என் ப்ரவுனியை அச்சுறுத்துகிறது. உருவம் தெரியாத அரவம் போல, என் பைத்தியத்தின் பூனை, ப்ரவுனிக்குத் தன் நகர்வை உரைத்துக் கொண்டே இருக்கிறது அந்த அரவம் கேட்டதும் ப்ரவுனி காற்றில் மூக்கைத் தூக்கி மூச்சிரைத்தபடி வீடெங்கும் சிதறி அலைகிறது. தனியாக இருக்கும்போது, உருவத்தைக் காண்பிக்காத எத்தனையோ வஸ்துக்கள் இப்போது, வீட்டுக்குள் சரசரக்கத் தொடங்குகின்றன. மாத்திரைகள் பூச்சிகளாகிவிடுகின்றன. விழும் பொருட்களை, நாணயங்களை தரை விழுங்கிவிடுகிறது.   இரவு பத்து மணி தொடங்கி நான்கு மணிவரை பைத்தியப் பூனையின் அரவம் வீட்டைச் சுற்றி தீவிரகதி கொள்கிறது. ஆலிஸின் செஷயரைப் போல ஜன்னலில் ப்ரவுனிக்கு மட்டும் தோற்றம் காட்டி மறையும் பூனையை

ஸ்ரீ நேசன் ஆட்டும் ஊஞ்சல்

ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க வைத்திருக்கும் ஸ்ரீநேசனின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் சேர்த்து வாசிக்கும்போது என்ன மரபில் அவர் கிளைத்திருக்கிறார் என்று மெல்லிசாகத் தெரிய வருகிறது. நகுலன், ஆனந்த், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி ஆகியோர் உருவாக்கிய சாரமான ஒரு கவிதை மரபின் தொடர்ச்சி என்று சொல்ல முடிகிறது. நகுலனில், ஆனந்தில் காலம் ஒரு அரூபப் பொருளாக, தொட முடியாத ஒன்றாகத் தோற்றம் கொள்கிறது. வாசகனால் அதைக் கைக்குள் வைத்திருக்க முடியாது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கிய கவிஞர்களில் ஒருவராக எழுதத் தொடங்கிய ஸ்ரீநேசன், காலத்தை இயற்கையாக, காலத்தை மலையாக, காலத்தை ஏரியாகத் தொட்டுக் கவிதைகளாக்கும் போது இங்குள்ள பிராந்தியம் மற்றும் ஊர்களின் சுவைகளை, மூலிகை மணங்களைக் கொண்டதாக மாறுகிறது. சென்னைப

நிலவொளியில் ஆடும் நரி ரஸ்கின் பாண்ட் – 88

  குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் அசோகமித்திரன் என்று வரையறுக்க இயலக்கூடிய இந்திய ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு இன்று 88 வது பிறந்த நாள். ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் ஆகியோரோடு சேர்ந்து எனக்கு அறிமுகமான பெயர் ரஸ்கின் பாண்ட். கசப்போ, பிறழ்வோ, இருட்டோ, அதிதுயரமோ இல்லாத படைப்புகள் அவருடையது. அவர் வாழ்ந்து வரும், அவர் படைப்புகளில் இடம்பெறும் இமாலய மலைப் பிரதேசத்தின் மடியில் வீசும் இளம்வெயிலின் குணம் கொண்டவை அவரது சிறுகதைகள். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடம் உள்ள களங்கமின்மை, மென்சோகம், காதல், வன்புல்லாக ஆகாத காமம், நட்பு மற்றும் நல்லுணர்வின் மேல் மலைப்பிரதேசத்தின் இயற்கையும், சத்தும் படர்ந்திருக்கும் படைப்புகள் அவை. தீவிர இலக்கியத்துக்குள் அறிமுகமாக நினைக்கும் இளம் வயதினருக்கும் ஆங்கில வாசிப்பை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும் ரஸ்கின் பாண்டை நான் பரிந்துரைப்பேன். இப்போதும் அவரது கதைகளை அவ்வப்போது எடுத்து வாசிக்கிறேன். என் மகள் வினு பவித்ரா, பள்ளிக்குச் சென்று கதைகளை வாசிக்கத் தொடங்கிய பருவத்தில் அவளுக்கு நான் கொடுத்த புத்தகங்களில் அவள் முழுமையாகப் படித்து முடித்

லிங்கம் லிங்கம் லிங்கமடி

   அண்ட லிங்கம்  அலாதி லிங்கம் பிண்ட லிங்கம்  ஆகாச லிங்கம் அனுஷ்டான லிங்கம் ஆச்சார லிங்கம் அமர லிங்கம் அபாரலிங்கம் அளகபார லிங்கம் அடிலிங்கம் முடிலிங்கம் அம்மண லிங்கம் ஆர்ப்பாட்ட லிங்கம்  கூத்தலிங்கம்  குடுமி லிங்கம்  கோலாகல  லிங்கம்  அனாச்சர லிங்கம்  எழுச்சி லிங்கம்  வீழ்ச்சி லிங்கம்        சுயம்பு லிங்கம்  சுத்த லிங்கம்  நய லிங்கம்  பய லிங்கம்  பண்டலிங்கம்  பக்கோடா லிங்கம்  பளிங்கு லிங்கம் வரம்பு லிங்கம் வக்கிர லிங்கம் தேவி லிங்கம் பாவி லிங்கம் காண லிங்கம் நித்ய லிங்கம் சகஸ்ர லிங்கம் ஆரிட லிங்கம் ராட்சத லிங்கம் தெய்வீக லிங்கம் அர்ஷ லிங்கம் அசுர லிங்கம் அராத்து லிங்கம் சாசுவத லிங்கம் மனுஷ்ய லிங்கம் மாணி மாய லிங்கம் தாமரமய லிங்கம் முக்தி லிங்கம் முத்த லிங்கம் முக்கிய லிங்கம் ஹேம லிங்கம் ப்ரேம லிங்கம் க்ஷணிக லிங்கம் வர்த்தமானக லிங்கம் ஆத்ய லிங்கம் பகு லிங்கம் பகா லிங்கம் மகாலிங்கம் ஆதி லிங்கம் ஜோதி லிங்கம் அப்பு லிங்கம் தேயு லிங்கம் ஜம்பு லிங்கம் ஆகாச லிங்கம் ஊர்த்துவ லிங்கம் புகாலிங்கம் தகாலிங்கம் வாயு லிங்கம்

இருட்டுக்கடை அல்வா ஹரிசிங்

  நன்றி - விகடன் திருநெல்வேலியின் கதையை நெல்லையப்பர் கோயில் எதிரே அல்வா விற்ற இருட்டுக்கடை அதிபரின் தற்கொலையிலிருந்து ஏன் விசாரிக்கக் கூடாது. கடந்த சில தசாப்தங்களில் திருநெல்வேலியின் அடையாளமாக தனது அல்வாக் கடையை மாற்றிய ஹரிசிங், ஏன் பெருந்தொற்றுக்குப் பயந்து மருத்துவமனையில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். நெல்லையப்பர் – காந்திமதி சமேதர் இந்த மரணத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டார்களா? மணி புரோட்டா கடை இருந்த இடத்துக்கு மேல் போஸ் மார்க்கெட்டுக்குக் காவலன் போல வீற்றிருக்கும் சங்கிலிப் பூதத்தானுக்குத் தெரிந்திருக்கிறதா? சதுரமாக வெட்டப்பட்ட பச்சை வாழை இலையில் சுடச்சுட அல்வாவை எடுத்து, வாயில் போடும் தருணத்தில் அனைத்து வயதினரும் துக்கத்தை மறந்து சுவைக்க வைத்த அந்த ஹரிசிங்குக்கு தற்கொலை செய்யும் அளவுக்கு இந்தக் கரோனா கொடுத்த பயம் என்ன? கோயில் நிழல், தேர்நிழல், கோயிலுக்குப் பாத்தியப்பட்ட கட்டிடத்தின் நிழல் எல்லாம் மௌனியின் சிறுகதைகளில் வரும் அந்தியைப் போல ஒரு கனவாக ஹரிசிங்குக்கு மறைந்து மாயமாகிவிட்டதா. என் ஞாபகத்தில் ஹரிசிங் தகர டப்பாக்களுக்கு இடையே அப்படியே வெள்ளை சட்டையுடன் அமர்ந்திருக்கிற

கிடார் - பெடிரிகோ கார்சியா லோர்க்கா

  கிடாரின் தேம்பல் தொடங்கிவிட்டது. விடியலின் கோப்பைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. கிடாரின் தேம்பல் தொடங்கிவிட்டது. அமைதிப்படுத்துவதில் பிரயோஜனம் இல்லை. அமைதிப்படுத்துவது அசாத்தியம். தண்ணீர் கரைந்தழுவதைப் போல காற்று பனிப்பொழிவில் இரைந்தழுவதைப் போல கிடார் தேம்பியழுகிறது அமைதிப்படுத்துவது அசாத்தியம். அது தொலைவில் உள்ள பொருள்களுக்காக அழுகிறது. உஷ்ணமான தென்மணல் பரப்புகள் வெள்ளை காமேலியா பூக்களுக்காக ஏங்குகின்றன. இலக்கில்லாத அம்பு அழுகிறது காலை இல்லாத மாலை அழுகிறது அத்துடன் கிளை மேல் இறந்த முதல் பறவையும் அழுகிறது. ஓ, கிடாரே! இதயம் ஐந்து வாள்களால் சாக்காயம் பட்டிருக்கிறது.

உத்தம உண்மை

இந்தக் காலையில் உணரும் சத்தங்களுக்குப் பின்னால் நிசப்தம் கனம் கொள்கிறது நிசப்தத்தை ஒரு இடமாக நிசப்தத்தை ஒரு நிலையாக நிசப்தத்தை சிறுபுள்ளிகளாக நானும் ப்ரவுனியும் கடக்கும்போது தலையில் மட்டுமே உயிர் இருக்கும் நோயுற்ற காகத்தை இன்னும் அமைதி கலையாத அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் புல்தரையில் பார்த்தேன் பறக்கவோ நடக்கவோ முடியாத அந்தக் காகத்தில் எல்லாம் அடங்கிக் கொண்டிருக்கிறது ஒரு பூனை வந்தால் போதும் அது இறுதியைத் தொட்டுவிடும். இப்படித்தான் என் அம்மா வாயைக் குவித்துக் கண்களை இங்கே இருந்து விலக்கி வெறித்துக் காத்திருந்தாள் காகம் தன் கூர் அலகைத் தூக்கி ஒரு கருப்புப் பொட்டலத்தைப் போல் வானத்தைப் பார்த்துக் காத்திருக்கிறது மரணம் ஒரு இடமா மரணம் ஒரு நிலையா மரணம் ஒரு புள்ளியா தெரியவில்லை அம்மா சந்தித்ததை இந்தக் காகம் சந்திக்கப் போகிறது அம்மா அன்றைக்குக் கிளம்பிச் சென்றாள் காகமே நீ புறப்படுவதற்காக ஆள்புழக்கம் இல்லாத புல்தரையில் வந்து வீற்றிருக்கிறாய் அம்மா சென்றதற்கு நீ செல்வதற்கு அடுத்து நானும் வருவேன் காகமே.