Skip to main content

Posts

Showing posts from April, 2021

வஸ்துகளும் குணங்களும் உரையாடும் கவிதை

ஒரு கவிஞனின் முதல் தொகுப்பை அவகாசம் எடுத்துப் படிக்கத் தொடங்குவதற்கும், படபடப்பு இன்றி அவன் புழங்கும் பிரபஞ்சத்தை அவதானிப்பதற்கும், பொதுமைப்படுத்தி விடமுடியாத என்வகையிலான ஒரு முறைமையே எனக்குக் கைகொடுக்கிறது.  அதை நான் இன்னொருவருக்குப் பரிந்துரைக்க மாட்டேன். எனினும், வே. நி. சூர்யாவைப் பற்றிப் பேசும்போது அந்த முறைமை குறித்து முதல்முறையாகப் பேசிப் பார்க்கலாம் என்ற தைரியத்தை அடைகிறேன்.  குழந்தைகளிடமும் விலங்குகளிடமும் என்னைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளும் முறைக்கு ஒப்பானது அது. எனக்குத் தெரிந்த, அனுபவமான உலகத்தின், முகங்களின் சாயல் கொஞ்சம்போல இருக்கும் குழந்தைகளின் முகங்களிடம் சீக்கிரம் ஈர்க்கப்படுகிறேன். என் முகத்தின் சாயலையும் அதில் பிரதிபலித்துப் பார்க்கிறேன் என்பதைக் கூடுதலாக உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. அந்தப் பிரதிபலிப்பின் வழியாக முதல் ஈடுபாடும் முதல் உறவும் எனக்கு அந்தக் கவிஞனிடத்தில், அவனது கவிதைகளினிடத்தில் ஏற்படுகிறது.  அந்தப் பிரதிபலிப்பின் கைப்பிடித்து எனக்குப் பரிச்சயமில்லாத அனுபவம், சாயல்கள், உயிர்கள் உலவும் அவனுடைய பிரபஞ்சம் அறிமுகமாவதற்கு நடுக்கத்தோடு, ஆனால் என்னை அனுமதி

மனிதனின் மூளை கொஞ்சம் வேகமாகத் தனது நலனுக்காக வளர்ந்திருக்கிறது - ரோமுலஸ் விட்டேகர்

சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியவர். மனிதர்கள் ஆதிகாலம் தொட்டு அச்சத்துடனேயே பார்க்கும் பாம்புகளுடனான நட்பு உங்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்கான பின்னணி என்ன? அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்த அம்மா டோரிஸ் நோர்டன் சட்டோபாத்யாய, எனது ஆர்வத்தை ஊக்குவித்தார். பெரும்பாலான அம்மாக்கள் அப்படிக் கிடையாது. நியூயார்க்கில் நாங்கள் வசித்தபோது, விஷமில்லா அமெரிக்க கார்டன் வகை பாம்பை வீட்டுக்குக் கொண்டுவந்தேன். ‘வாவ், எவ்வளவு அழகு’

பாடல் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஜூலியோ தனது கிடாருடன் வந்து தனது புதிய பாடலைப் பாடினான். ஜூலியோ பிரபலமாய் இருந்தான் அவன் பாடல்களை எழுதினான் குட்டிச் சித்திரங்களுடன் கவிதைகளையும் சேர்த்து புத்தகங்களையும் வெளியிட்டான் அவை அருமையானவை. ஜூலியோ தனது சமீபத்திய காதல் உறவைப் பாடினான் ஆரம்பிக்கும்போது சிறப்பாக இருந்ததையும் அதன்பிறகு கசப்பாக ஆகிவிட்டதையும் பற்றிப் பாடினான். அவன் உபயோகித்த வார்த்தைகள் வேறென்றாலும் அவற்றின் அர்த்தம் இதுதான். ஜூலியோ பாடி முடித்தான். “நான் இன்னமும் அவளை நேசிக்கிறேன் அவளை என் மனத்திலிருந்து துடைக்க முடியவில்லை.” என்று சொன்னான். “என்ன செய்வது?”ஜூலியோ கேட்டான். “குடி" என்றான் மதுவை ஊற்றியபடி ஹென்றி. ஜூலியோ தனது கிளாசைப் பார்த்தபடி: “அவள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்?” “அனேகமாக வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம்" என்றான் ஹென்றி. ஜூலியோ கிடாரை பெட்டியில் பூட்டி கதவை நோக்கி நடந்தான். ஹென்றி ஜூலியோவின் கார்வரை கூட நடந்து சென்று விட்டான். நிலா சுடர்ந்த பிரமாதமான இரவு அது ஜூலியோ காரை உசுப்பி திருப்பிச் செல்லும்போது ஹென்றி அவனுக்கு கையசைத்து விடையளித்தான். பின்னர் உள்ளே சென்று அம

யுவதிகளும் பறவைகளும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அவர்கள் இளம் யுவதிகள் அவர்கள் தெருக்களில் நின்று ஆட்களை அழைப்பார்கள் ஆனால் பெரும்பாலான நாட்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத நிலையில் எனது விடுதி அறைக்கு வந்து சேர்வார்கள் அவர்களில் மூன்று நான்கு பேர்கள் வைனை உறிஞ்சியபடி முகத்தின் மேல் கூந்தல் படிய காலுறைகளுடன் ஓடியபடி வசைகளோடு கதைகள் சொல்வார்கள் எப்படியோ அவை  அமைதி நிறைந்த இரவுகளாய் இருந்தன அவர்களோ வெகுகாலத்துக்கு முன்னால் நான் சிறுவனாய் இருந்தபோது எனது பாட்டி வளர்த்த கானரி குருவிகளை எனக்கு நினைவூட்டினார்கள் அவை தீனி விதைகளில் எச்சம் போடும் அத்துடன் தங்களது குடிநீரிலும் அந்தக் குருவிகளோ அழகானவையாகவும் இருந்தன அவை சலசலத்தன ஆனால் அந்தக் குருவிகள் பாடியதேயில்லை. 

உனது உயிரை திருடனைப் போலப் பறித்துச் செல்வதற்காக ஜன்னல் திரையினூடாக ஊர்ந்து வரும் வைகறைக்கு நீ காத்திருக்கும் போது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

பாம்பு வளைக்குள் மறைந்திருந்தது அப்போது உன்னைப் பற்றிச் சொல் என்றாள் அவள். வேறொரு உலகின் குறுகிய முடுக்கில் வெகு காலத்துக்கு முன்னர் நையப் புடைத்தெடுக்கப்பட்டவன் என்றேன் நான். அவளும் சொன்னாள். ஏதோவொரு சந்துக்கு அடித்துத் துரத்தப்பட்ட பன்றிகள் நாம் எல்லாம், நமது புல் மூளைகள் வெட்டுக்கத்தியை நோக்கிப் பாடுகின்றன. அதிசயம், நீ வித்தியாசமானவளாக இருப்பது நான் சொன்னேன். நாங்கள் அங்கே அமர்ந்து சிகரெட்களைப் புகைத்துக் கொண்டிருந்தோம் காலை ஐந்து மணிக்கு.

சுயம் விதித்துக் கொண்ட காயங்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஸ்டீன்பெக், தாமஸ் உல்ப் பற்றிப் பேசினான் அதோடு அவர்கள் கூடிப் பெற்றது போலத் தோன்றும் எழுத்தை எழுதினான் அப்போது பிகுரோவா தெருவில்  மதுவிடுதிகளுக்கு அருகிலுள்ள விடுதியில் தங்கியிருந்தேன் அவனோ தூரத்தில் குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தான் நாங்கள் இருவருமே எழுத்தாளர்களாக விரும்பினோம் நாங்கள் பொது நூலகத்தில் சந்திப்போம் கல் பெஞ்சுகளில் அமர்ந்து எழுத்தாளர் ஆவது பற்றி பேசிக்கொண்டிருப்போம். அவன் தனது சிறுகதைகளைக் காண்பித்தான் நன்றாக எழுதினான் நான் எழுதியதை விட நன்றாக எழுதினான் அவனது படைப்பில் அமைதியும் வலுவும் இருந்தது என் படைப்பில் இல்லாதது என் கதைகள் கரடுமுரடாகவும் கடுமையாகவும் சுயம் விதித்துக்கொண்ட காயங்களோடும் இருந்தன எனது படைப்பனைத்தையும் அவனிடம் காண்பித்தேன் ஆனால் அவன் என் படைப்பைவிடவும் எனது குடியின் வல்லமை மற்றும் எனது உலகியல் அணுகுமுறையால் கவரப்பட்டான் ஒரு சிறு உரையாடலுக்குப் பிறகு கிளிஃப்டன் கேஃபிடேரியாவுக்கு   நாளின் ஒரே சாப்பாட்டை உண்பதற்காகப் போவோம் (1941-ல் ஒரு டாலருக்கும் குறைவு) இருப்பினும் நாங்கள் பிரமாதமான ஆரோக்கியத்துடன் இருந்தோம். நாங்கள் வேலைகளை இழந்

வான்கோவின் காது

  கண்ணின் வழியாகப் பார்த்து அனைத்துப் புலன்களையும் தூண்டி பரவசப்படுத்தும் கலை ஓவியம். இதை இதயத்துக்கு உணர்த்தும் படைப்புகள் வான்கோவினுடையவை. நவீன ஓவியங்களைப் பார்க்கத் தொடங்கியதோடு வான்கோ ஓவியங்களும் பரிச்சயமாகிய காலகட்டத்திலிருந்து அந்த ஓவியங்களின் பின்னணி, வான்கோவின்  வான்கோவின் வாழ்க்கை குறித்த படங்களைப் பார்ப்பதுமாக, அவர் படைப்புகளை ஆழமாகக் காண்பதற்கு, கண்களை அகலக் கீறிக் காட்டுவது போன்ற சான்றுகள், வான்கோ தொடர்பில் எனக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நவீன ஓவியத்தின் பிதாமகனாக இன்று கொண்டாடப்படும் வான்கோ, வாழும் காலத்தில் சக ஓவியர்களாலும் சமூகத்தாலும் ஓவியனாகவோ, சக மனித உயிராகவோ கூட குறைந்தபட்சமாகக்கூட மதிக்கப்படவில்லை.  இயற்கை, மனிதர்கள், வஸ்துகள் மீது அவன் கொண்ட தீவிரமான ஈடுபாடு, நேசம் மற்றும் உறவை அவனது ஓவியங்கள் போல வெளிப்படுத்திய படைப்புகள் அரிது. ஆனால், அவனது நேசத்துக்குப் பதிலீடாக  தம்பி தியோவின் அன்பையும் ஆதரவையும் தவிர வேறு யாரிடமிருந்தும் நிலைத்த நிலையில் அவன் பெறவேயில்லை. பார்ப்பவர்களின் புலன்கள் அத்தனையையும் துடித்து விரியச் செய்யும் அவனது படைப்புகளுக்குப் பி

எலும்புகள் வாழ்கின்றன

இந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு புதிய உயிரும் ஏற்கெனவே பழகிய அமைப்புக்குள்தான் வந்துவிழுகிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சட்டங்களுக்குள், இலக்கணங்களுக்குள் இருப்பதும், இருப்பதற்கு ஒப்புக்கொடுப்பதுமான ஒரு அமைப்பைத்தான் அரசு என்கிறோம். ‘அழகு’என்று ஒன்றைக் கருதும்போது, சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவத்தைத்தான், உருவத்தைத்தான், அமைப்பைத்தான் அழகென்று சொல்கிறோம். அழகுக்குள், வடிவத்துக்குள், அமைப்புக்குள் வராதவையும் இந்த உலகத்தில் உண்டு. புறக்கணிக்கப்பட்ட உயிர்களாக, மனிதர்களாக, மக்கள் குழுக்களாக அவர்கள் இருக்கின்றனர். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி எப்போதும் அவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். மொழி, படைப்பு, சிந்தனை இவற்றுக்கும் இது பொருந்தும். புதிய சிந்தனைகள், புதிய எழுத்துகள், புதிய புரட்சிகள் எல்லாமே ஏற்கெனவே உள்ள அமைப்பிலிருந்துதான் முரண் பட்டும் அனுசரித்தும் எழுகின்றன. மொழிதான் நமக்கு ஒரு உலகத்தைக் கொடுக்கவும் செய்கிறது. அதேவேளையில், மொழி தான் இந்த உலகத்தைத் துரதிர்ஷ்டமாக வரையறுத்தும் விடுகிறது. கவிதைகளை வார்த்தைக் கூட்டம் என்று சொன்ன கவிஞன் ஆத்மாநாம்.

போக வேண்டும் அபியின் பாழ்பட்ட அந்தச் சிற்றூருக்கு

முழுக்க விபரீதங்களின் காட்சிகளைக் கொண்ட அபியின் இன்னொரு கவிதை இது. ஆனால், மொத்தக் கவிதை கொடுக்கும் அனுபவமோ நேரெதிரானது. நூறு வயது விஷப்பூச்சிகள், வெயிலைக் கிழிக்கும் முள்செடிகள், விறைத்துக் கிடக்கும் எரிந்த குழந்தைகளின் சடலங்கள், வீதிகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் நரபலி தேவதைகளின் பழைய நடன மண்டபம், நீச்சல் குளம், எலும்புகளின் மாபெரும் நூலகம் ஆகியவை இருக்கும் அந்தப் பாழடைந்த சிற்றூருக்குப் போகவேண்டுமென்பது போல உள்ளது.  ஆத்மாநாமின் 'என்றொரு அமைப்பு' கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.  அபியின் 'எலும்புகளின் நூலகம்' கவிதை, என்னை அர்த்தப்படுத்த வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது. அதில் இருக்கும் விபரீதச் சித்திரங்களோ, அதில் இருக்கும் விஷப்பூச்சிகளோ நமக்குப் பரிச்சயமான சமூகத்தில் உள்ள விபரீதமோ, விஷமோ அல்ல என்பது மட்டும் உறுதி. ‘மொழிகளை மறந்துவிட்ட மனசுக்குள் தூரதூர தேசங்களின் ரத்தம் வந்து பாய்ந்து கொண்டிருக்கிறது' என்று சொல்லும்போது 'தூரதூர தேசங்களின் ரத்தம்' என்பது என்ன என்ற கேள்வியை மட்டும் எழுப்பிக் கொள்கிறேன்.  பதில் உடனடியாக வேண்டாம் என்பதுபோலத் தான் உள்ளது. த

அம்பேத்கரின் கருத்துலகத்துக்கு வழிகாட்டி

  இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்; சாதியை ஒழிக்க இன்றும் இந்தியாவில் போராடிவரும் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கான அடையாள ஆளுமை; தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தளித்தவர்; இருபதாம் நூற்றாண்டு இந்தியா கண்ட பேரறிஞர் என்ற பல அடையாளங்களைக் கொண்ட அம்பேத்கர் எழுதிய நூல்களின் முன்னுரைகள்தான் வாசுகி பாஸ்கர் தொகுத்திருக்கும் இந்த நூல். அம்பேத்கரின் கருத்துலகம், அவர் அக்கறையும் புலமையும் கொண்டிருந்த துறைகள், பார்வைகள், விமர்சனங்கள் ஆகியற்றை உயிர்களாகக் கொண்ட பிரபஞ்சத்தைக் காண்பிக்கும் சிறு உலகங்களாக இந்தப் பத்து முன்னுரைகள் உள்ளன. ‘சூத்திரர்கள் யார்’ நூலின் முன்னுரையிலேயே இந்தியா என்னும் நவீன தேசத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் தனக்கு உருவகித்த விமர்சனபூர்வமான பாத்திரத்தைக் குறிப்பிட்டுவிடுகிறார். கற்றறிந்தவருக்கும் ஆய்வறிஞருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பதை அவர் சொல்கிறார். ‘கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தையவரோ கட்டறுந்தவர்; வர்

நீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நீல மீன், நீல இரவு, ஒரு நீலக் கத்தி எல்லாம் நீலமாக இருக்கிறது என்னுடைய பூனைகளும் நீலநிறத்தில் நீல ரோமம் நீல நகங்கள் நீல மீசைகள் நீலக் கண்கள். எனது படுக்கை விளக்கு  நீலமாய் ஒளிர்கிறது. உள்ளே, எனது நீல இதயம் நீல ரத்தத்தை இறைக்கிறது எனது விரல் நகங்கள், கால் நகங்கள் நீலம் அத்துடன் எனது படுக்கையைச் சுற்றி நீல ஆவி மிதக்கிறது எனது வாய்க்குள் இருக்கும் ருசியும் நீலம் அத்துடன் நான் தனியாக இறந்துகொண்டிருக்கிறேன் அத்துடன் நீலமாக.  

ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது -சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அவர்கள் நல்லவர்களாகவோ மோசமானவர்களாகவோ இருக்கலாம் அவர்களை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரபலமானவர்கள் இறக்கும்போது ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது அவர்கள் பழைய கட்டிடங்கள் பழைய தெருக்களைப் போல நமக்குப் பழக்கமான வஸ்துக்கள் மற்றும் இடங்களைப் போல அவை அங்கே இருப்பதால் நாம் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதைப் போல. ஒரு தந்தையின் மரணம் அல்லது ஒரு வளர்ப்புப் பூனை அல்லது வளர்ப்பு நாயின் மரணத்தைப் போல ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது பிரபலமானவர்கள் இறக்கும்போது பிரபலமாக இருப்பதின் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் உடனடியாக இடம்பெயர்க்கப்பட வேண்டும் அத்துடன் அவர்களை அத்தனை எளிமையாக இடம்பெயர்த்துவிடவும் முடியாதென்பதாலேயே நமக்கு அது தனித்துவமான சோகத்தைத் தருகிறது. பிரபலமானவர்கள் இறந்துபோகும்போது ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது சாலையோரத்து நடைபாதைகள் வித்தியாசமாகத் தெரிகின்றன அத்துடன் குழந்தைகள் வித்தியாசமாகத் தெரிகிறார்கள் படுக்கைத் துணைகளும் நமது திரைச்சீலைகளும் நமது வாகனங்களும் வித்தியாசமாய் தோன்றுகின்றன. பிரபலமானவர்கள் இறக்கும்போது ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது: நாம் தொந்தரவுக்குள்ளாகிறோம். 

சிதைந்து போதல் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  தாமதமாகவே இந்த எண்ணத்துக்கு வந்தடைந்தேன் இந்த நாடு நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு பின்னர் சென்றுவிட்டது அத்துடன் அனைத்து சமூக முன்னேற்றமும் நபருக்கும் நபருக்குமான நல்லுணர்வும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது அதோடு அங்கே பழைய சகிப்பின்மைகள் இடம்பெயர்ந்துவிட்டன. எப்போதும் இல்லாத அளவில் அதிகாரத்துக்கான சுயநல வேட்கைகள் நம்மிடம் உள்ளன பலவீனர்கள் வறியவர்கள் நாதியற்றவர்கள் முதியவர்கள் மீது மதிப்பின்மையையும் கொண்டுள்ளோம் அன்பை போராலும் விடுதலையை அடிமைத்தனத்தாலும் இடம்பெயர்த்துவருகிறோம். நாம் அடைந்த பலன்களை வீணடித்திருக்கிறோம் தொடர்ந்து  நாம் சிறுத்து வருகிறோம். நமது வெடிகுண்டு நம்மிடம் உள்ளது அதுதான் நமது அச்சம் நமது சாபம் மற்றும்  நமது அவமானம். நம்மையெல்லாம் பிடித்திருந்த மூச்சு நீங்கிக்கொண்டிருப்பதுதான் தற்போதைய பெரும் சோகம் அத்துடன் நம்மால் அழக்கூட இயலாது. 

சிங்கள அன்றாடங்களைக் கலையாக்கிய சிறுகதைகள்

மேற்கிலிருந்து சென்ற நூற்றாண்டில் அறிமுகமானாலும் சிறுகதை வடிவத்தில் மிகச் சீக்கிரத்திலேயே மேதைமை வாய்ந்த படைப்புகளும் படைப்பாளிகளும் வெளிப்பட்ட மொழி தமிழாகும். உரைநடை இலக்கியத்தின் தீராத யுவப்பருவத்தைத் தக்கவைத்திருக்கும் வடிவம் சிறுகதை என்று சொல்லலாம். இன்னமும் மிச்சமிருக்கும் களங்கமின்மை, வியப்பு, அனுபவங்களைக் கூர்மையாகப் பார்க்கும் பார்வை, விதவிதமான களங்களையும், வெளிப்பாட்டு முறைகளையும் சாகசத்தோடு முயன்றுபார்க்கக்கூடிய களம் சிறுகதையே. தமிழ் சிறுகதைப் பரப்பில் வெளிப்பட்ட சாதனைகளின் பின்னணியில் பார்க்கும்போது, தற்காலத்தில் எழுதப்படும் சிறுகதைகளில் புதுமையும் சாகசமும் கூர்மையும் குன்றித் தேங்கியிருக்கும் நிலையை உணர முடிகிறது. எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்திருக்கும் இரண்டு இளம் சிங்களச் சிறுகதைப் படைப்பாளிகளான தக்ஷிலா ஸ்வர்ணமாலி, இஸுரு சரமர சோமவீர இருவரின் சிறுகதைத் தொகுப்புகளையும் ஒருசேரப் படிப்பது இன்றைய சிறுகதை வடிவம் குறித்துப் பிரதிபலிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது. வேற்றுக் கலாச்சாரம், வேற்று மொழிப் பின்னணியிலிந்து மொழிபெயர்க்கப்படும் கதைகளைப் படிப்பதற்கான வாசகத் தேவை என்னவென்ப

வியட்நாமின் யானைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

யானைகளைச் சுடுவது, வெடிவைப்பது அப்போது அவர்களுக்கு பழகியிருந்தது, அவர் சொன்னார் எல்லா சத்தங்களுக்கும் மேலாக அவற்றின் சத்தங்களையும் கேட்க முடியும் ஆனால் மக்கள் மீது குண்டுபோடும்போது உயரத்தில் பறப்பீர்கள் நீங்கள் பார்க்கவே மாட்டீர்கள் ஒரு சின்ன வெளிச்ச மின்னல் உயரத்திலிருந்து தெரியும் அவ்வளவே ஆனால் யானைகளிடத்தில் நிகழ்வதைப் பார்க்க முடிவதோடு அவற்றின் கதறலையும் கேட்பீர்கள் நான் எனது சகாக்களிடம்  கேளுங்க தம்பிகளா நிறுத்துங்கள் என்று சொல்வேன் ஆனால் அவர்கள் வெறுமனே சிரிப்பார்கள் யானைகள் சிதறடிக்கப்படும்போது வாயை அகலப்பிளந்து விரைவாக இயங்கமுடியாத தமது தடிக்கால்களை உதறிக்கொண்டு வயிறுகளில் பொத்தலிடப்பட்ட பெரும் துளைகளிலிருந்து ரத்தம் வழிய தும்பிக்கைகளைத் தூக்கி அலறும் (அவை தகர்க்கப்பட்டிருக்காவிட்டால்)   அதற்குப்பிறகு எங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றிவிட்டுத் திரும்பிவருவோம் கவச வண்டிகள், குப்பைத் தொட்டிகள், பாலங்கள், மக்கள், யானைகள் மற்றும் மிச்சமிருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டோம்.   அவர் சற்றுக் கழித்துச் சொன்னார், யானைகள் குறித்து சங்கடமாக உணர்ந்தேன் என்று.

நீலம் இதழில் வ. கீதாவின் நேர்காணல்

இலக்கியம், எழுத்து, ஆய்வு, அரசியல் செயல்பாடு அனைத்தும் சுயதொழில்முனைவாக மாறிவரும் காலகட்டம் இது. அறிவு என்பது தன்னையும் தனது பின்னணியையும் தனக்குக் கிடைக்கும் அனுகூலங்களையும் சேர்த்தே பரிசீலிப்பதற்கானது, அறிவு என்பது நீதிக்காகப் பயன்பட வேண்டியது என்பதை நினைவூட்டுவதாக வ. கீதாவின் நேர்காணல் இருந்தது. ‘நீலம்’ ஏப்ரல் மாத இதழில் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இந்த நேர்காணலைச் செய்துள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு பெரியாரியம், பெண்ணியம், தலித் அரசியல் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் செயல்பட்டுவரும் சமூக வரலாற்றாசிரியர் வ. கீதாவைப் பற்றி முழுமையாகத் தமிழில் தெரிந்துகொள்ள உதவும் முதல் நேர்காணல் இதுதான். சோவியத் யூனியனின் உடைவு, மண்டல் கமிஷன், அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி எழுந்த தலித் இலக்கிய, அரசியல் எழுச்சி, புதிய கோட்பாட்டு விவாதங்கள் உருவான சூழல் ஆகியவையும் வ. கீதாவின் நேர்காணல் வழியாகத் திரும்ப ஞாபகப்படுத்தப்படுகிறது. வ. கீதா தனது பெற்றோர், சாதியப் பின்னணி, குடும்பம் செலுத்திய தாக்கம், குழந்தைப் பருவம், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது அங்கே அனுபவித்த அரசியல், எஸ். வி. ராஜதுரையுடன் இணைந

பின்அந்தியில் சோர்வு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நூற்றாண்டுகளுக்கு முந்தைய குழலிசை எனது கருப்பு ரேடியோ வழியாக இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது  வாடகைக்கு வாங்கிய வீடியோப் படத்தை கீழ்தளத்தில் எனது மனைவி விசிஆரில் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே சுவரில் அறையப்பட்டு இறந்துபோன கொசுவை குறித்துக்கொள்வது. நித்திய யுத்தம் ஒருகணம் கைவிடப்படும் வெளிகளுக்கு இடையிலான வெளி இது பொருட்டே இல்லாத வருடங்களைப் பொருட்படுத்தும் இடம் இது: சண்டை தேய்ந்து வருகிறது ஆனால், நூற்றாண்டுகளின் ஓசை என் உடல்வழியாக புகுந்தோடும் இந்த அந்தியில் அமைதியாக ஓய்வெடுப்பதைப் போல அவ்வப்போது சுவாரசியமாகவும் உள்ளது... இந்த கிழ நாய் நிழலிடத்தில் அமைதியாகப் படுத்திருக்கிறது ஆனால்  தயார் நிலையில்.

மூடும் நேரம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அதிகாலை இரண்டுமணிக்கு எனது சிறிய அறையில் கவிதை எந்திரத்தை தற்போதைக்கு நிறுத்திய பின்னர் சிகரெட்டுகளை வரிசையாகப் பற்றவைத்து வானொலியில் பீத்தோவனைக் கேட்கிறேன். இன்னமும் ஒன்றோ இரண்டோ கவிதைகள் எழுதுவதற்கு இருப்பது தெரிந்தும் வினோதமும் சோம்பேறித்தனமும் கொண்ட நிறைவுடன் பீத்தோவனைக் கேட்கிறேன் இறந்து நூறாண்டுகளுக்கு மேலும் ஆற்றலும் விளையாட்டும் குன்றாமல் இருக்கும் அந்த சாகித்யகர்த்தாவின் இசையை மீண்டுமொரு முறை கேட்டு ரசித்தபடி இந்த நாளின் இறுதியில் என்னை அட்டகாசமாய் உணர்கிறேன் அவன் உங்களைவிட என்னைவிட இளமையாகவும் மூர்க்கமாகவும் இருக்கிறான். நம்மை பொதுவாகச் சூழ்ந்திருக்கும் அசாதாரண தீங்குகளிலிருந்து களைய நமக்கு உதவுவதாக அரியதொரு அற்புதத்தோடும் தெய்வீக உயிரினங்களுடன் நூற்றாண்டுகள் தூவப்படுகின்றன எனது இறந்தகாலத்தின் எல்லா அதிகாலை இரண்டு மணிகளையும் நினைவுகூர்ந்தபடி அடுத்ததும் கடைசியுமான சிகரெட்டைப் பற்ற வைக்கிறேன் மூடும் நேரத்தில் மதுவிடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு தெருக்களில் விடப்பட்டு ஒவ்வொருவரும் வீட்டுக்குத் தனியாக நடந்து செல்வது. இது எவ்வளவோ மேல்: நான் தற்போது வசிக்கும் இடத்தில் இருந்துகொண்

அம்பேத்கர் எழுத்துகள் பதிப்பு கண்ட கதை

சவிதா அம்பேத்கருடன், அம்பேத்கரின் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம்(1950). உடன் இருப்பது அவர்களின் வளர்ப்பு நாய் மோகினி  பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு ‘தி கேரவன்’ ஆங்கில இதழ், அம்பேத்கர் தனது வாழ்நாளின் இறுதி வரை எழுதிய எழுத்துகள் நூல்களாக பிரசுரமானதன் வரலாற்றையும் இன்னும் பிரசுரமாக வேண்டியவை பற்றியும் நீண்ட சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள ஆதிரா கோனிக்காரா, அம்பேத்கர் எழுத்துகளை அவர் காலத்திலிருந்து தொடர்ந்து வெளியிடுவதற்கு உதவியவர்கள், பதிப்பித்த ஆய்வாளர்கள் ஆகியோர் குறித்த விவரங்களையும் இந்தக் கட்டுரையின் வழியாக அறியத் தருகிறார்.  அம்பேத்கர் இறப்பதற்கு முந்தைய டிசம்பர் ஐந்தாம் தேதி இரவில் உறங்கச் செல்லும்போது தனது உதவியாளராக இருந்த நானக் சந்த் ரத்துவிடம், அடுத்த நாள் காலை தனது ‘புத்தரும் தம்மமும்’ முன்னுரையை அச்சுக்காக கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தான் உறங்கச் செல்கிறார். அவர் இறந்த பின்னரே புத்தரும் தம்மமும் நூல் வெளிவருகிறது. இந்தக் கட்டுரையின் வழியாக அம்பேத்கரின் இரண்டாவது மனைவி சவிதா அம்பேத்கரைப் பற்றியும் என

குப்பை கொண்டுசெல்லும் மனிதர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

சாம்பல் நிற டிரக்கில் ரேடியோவை ஒலிக்கவிட்டு இந்த இளைஞர்கள் இங்கே வருகின்றனர் அவர்கள் அவசரத்தில் இருக்கின்றனர் கிளர்ச்சியாக இருக்கிறது: சட்டை திறந்து தொப்பைகள் வெளியே குலுங்க குப்பைத் தொட்டிகளைக் காலி செய்கின்றனர் உருட்டி எடுத்து கவை தூக்கியில் பொருத்துகின்றனர் தொட்டியைத் தூக்கிக் கவிழ்த்து குப்பையை  அதீத இரைச்சலுடன் அரைக்கிறது டிரக் இந்த வேலைகளுக்காக  அவர்கள் விண்ணப்பப் படிவங்களை நிரப்பியிருந்திருக்க வேண்டும் அவர்கள் வீடுகளுக்கு வாடகை கொடுக்கிறார்கள் பழைய மாடல் கார்களை ஓட்டுகிறார்கள் சனிக்கிழமை இரவு குடிக்கிறார்கள் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸின் வெயிலில் தங்கள் குப்பைத் தொட்டிகளுடன் அங்குமிங்கும் அலைகிறார்கள் இந்தக் குப்பை அனைத்தும் எங்கேயோ போகின்றன அத்துடன் அவர்கள் ஒருவருக்கொருவரை சத்தமாக அழைத்துக் கொள்கின்றனர் பின்னர் டிரக்கில் சேர்ந்தேறி கடலை நோக்கி மேற்கு திசையில் பயணிக்கின்றனர் நான் உயிருடன் இருக்கிறேன் என்று அவர்களில் ஒருவருக்கும் தெரியாது ரெக்ஸ் டிஸ்போஸல் அன் கோ. 

சாலையில் பெண் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

மெழுகுவர்த்திகளைப் போல் என் அறையைச் சுடர வைக்க அவள் அணியும் ஷூக்கள் போதும். கண்ணாடியில் மினுங்கும்  எல்லா வஸ்துக்களையும் போல் அவள் நடைபோடுகிறாள். அவள் நடந்து சென்றுவிட்டாள். 

போட்டி தொடர்பில் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எவ்வளவு உயரம் ஏறுகிறீர்களோ அவ்வளவு பெரியது அழுத்தம் மேலுக்கும் கீழுக்கும் இடையில் உள்ள தொலைவு ஆபாசமான மகத்துவம் என்பதை அந்த அழுத்தத்தைத் தாக்குப்பிடித்தவர்கள் அறிகிறார்கள். வென்ற அவர்களுக்கு இந்த ரகசியம் தெரியும்: அப்படி ஒன்று இல்லை. 

திருவோடுகளையும் காவியையும் காணவில்லை

எனக்கு ஞாபகம் தொடங்கியதிலிருந்து திருநெல்வேலியின் பகல் நேரங்களில் தினசரி ஐந்தாறு யாசகர்களாவது வீடுகள் தோறும் பிச்சை கேட்க வருவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் நிறைய பேர் அப்போது காவி உடை அணிந்திருந்தனர். காவி உடை அணிந்திருந்தவர்கள், பிச்சை கேட்டு வருபவர்களை அப்போது பெரும்பாலும் சட்டை அணிந்து பார்த்ததில்லை. அப்போது சட்டை அணியாமல் கோயிலுக்கும் மார்க்கெட்டுக்கும் போகும் பெரியவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். காவி அணிந்தவர்கள் கழுத்தில் உத்திராட்சத்துடன் திருநீறை நெற்றியிலும் உடம்பிலும் சுற்றி மணக்க அணிந்து, வெள்ளை, கருப்பு திருவோடுகளுடன் வருவார்கள். மிக அரிதாக உலோகத் திருவோட்டையும் பார்த்திருக்கிறேன். சமைத்த உணவை வாங்க மாட்டார்கள். திருவோட்டில் அரிசியும் சில நாணயங்களும் கிடக்கும்.  அவர்கள் வைத்திருந்த திருவோடு மிகவும் சுத்தமாகவும் வசீகரமாகவும் எனது சிறுவயதுக் கண்களுக்குத் தெரிந்தது. அவர்கள் வயோதிகர்கள். இதைத்தவிர அவர்கள் எங்கேயிருந்து வருகிறார்கள், அவர்களது குடும்பம், பின்னணி எதுவும் என்னவென்று யோசித்ததில்லை. அவர்கள் பகலில் தோன்றி பகலிலேயே மறைந்தார்கள் திருநெல்வேலி ஊரில்.  இப்போது திருநெல

ஜனநாயகம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

பிரச்சினை, நிச்சயமாக, ஜனநாயக அமைப்பில் அல்ல ஜனநாயக அமைப்பை உருவாக்கும் உயிர் அங்கங்களுடையது. தெருவில் நீங்கள் கடக்கும் நபர் அவன் அல்லது அவளை மூன்றாக அல்லது நான்காக அல்லது 30 ஆக அல்லது 40 மில்லியனாக பெருக்குங்கள் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு எதுவும் விளங்காமல் இருப்பதற்கான காரணம் எதுவென்று உடனடியாகத் தெரிந்துவிடும். நாம் மனிதகுலம் என்றழைக்கும் சதுரங்கக் காய்களை குணமடையச் செய்ய ஆசைப்படுகிறேன் எத்தனைவிதமான அரசியல் சிகிச்சைகளுக்கு நாம் உள்ளாகியிருக்கிறோம் இன்னமும்  தற்போதிருக்கும் வழியொன்றே நம்மை குணமூட்டும்  என்று நம்பும் அளவுக்கு முட்டாளாகவும் நாம் எல்லோரும் இருக்கிறோம். சக குடிமக்களே பிரச்சினை எப்போதும் ஜனநாயக அமைப்புடையதில் அல்ல பிரச்சினை  நீதான். 

மின் படிக்கட்டில் யுவதி - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

மின் படிக்கட்டில் ஏறி நின்றபோது ஒரு யுவனும் அழகிய யுவதியும் எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தனர். தோலை இறுக்கும் அவளது கால்சட்டை, ரவிக்கை  நாங்கள் மேலேறிக் கொண்டிருக்கும்போது அவள் ஒரு காலை  அவள் நிற்கும் படிக்கு மேல்படியில் வைத்திருந்தாள் அவளது பின்புறம் வசீகரமான வடிவத்தை கற்பித்தது அந்த யுவன் சுற்றிச்சுற்றிப் பார்த்தான் அவன் கவலையுடன் தோன்றினான். என்னைப் பார்த்தான். நான் வேறுபக்கம் தலையைத் திருப்பிக்கொண்டேன். இல்லை யுவனே நான் பார்க்கவில்லை உனதவளின் பின்புறத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை கவலை வேண்டாம், நான் அவளை மதிக்கிறேன் அத்துடன் உன்னையும். அதுபோக நான் எல்லாவற்றையும் மதிக்கிறேன் வளரும் மலர்களை, இளம் பெண்களை குழந்தைகள் விலங்குகளை நமது அருமையான சிக்கலான பிரபஞ்சத்தை ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும். தற்போது அந்த யுவன் நல்லபடியாக உணர்கிறான் அத்துடன் அவன் குறித்து எனக்கும் மகிழ்ச்சியே. அவனது பிரச்சினையை நான் அறிவேன் அந்த யுவதிக்கு ஒரு தாய், தந்தை, சகோதரியோ சகோதரனோ இருப்பார்கள் அத்துடன் சினேகமற்ற ஒரு கொத்து உறவினர்களும் இருப்பார்கள் அத்துடன் அவள் நடனமாட விரும்புகிறாள் சரசப்பேச்சிலும் அவளு

அபி மறுவரையறை செய்யும் பரட்டை

  அபியின் ‘மாலை’ வரிசைக் கவிதைகளில் பரட்டை என்ற தலைப்பும் பரட்டை என்பதற்கு சேர்க்கும் உருவமும் அர்த்தங்களும் என்னை மிகவும் ஈர்த்தது. புழுதி பறக்க அடிக்கும் ஆடிமாதக் காலம் நெறுநெறுவென்று வெளிப்படுகிறது அபியிடம்.  வெளி வீடு ஆகி கூரை வீட்டின் அரண் ஆக ஆன அர்த்தத்தை மீண்டும் ஆடிமாதக் காற்று கலைக்கிறது; இங்கே அது விபரீதமாக, வாழ்வின் பறிபோதலாக அல்ல. கூரைகளும் சுவர்களும் எங்கோ சரித்திரத்தின் சுழிப்பில் சிறையாகி விட்டது போலும். கூரைகளின் கீழ் நெரிந்து கிடந்தவை அதுவரை பேச முடியாததை பேசியிராததைப் பேசிப் பறக்கிறது. எது நாம் காணும் காட்சியை, நம் மனத்தில் நிலையென்று நினைத்த காட்சியை மாற்றுகிறதோ தலைகீழாக ஆக்குகிறதோ அங்கே நாமும் தலைகீழாகிறோம் சுழல்கிறோம்.  ஒட்டுமொத்த இடத்தை நினைவை அதைச் சுற்றி நாம் எழுப்பிய வரலாற்றை, தேசத்தை புழுதித் துகள்களாக மாற்றும் ஆக்கும் காற்று அபியின் காற்று. தன் நிலத்தை இழந்த துகளுக்கு இருட்டைத் தவிர விரிக்க ஒன்றுமில்லை.  எல்லாம் பரத்திப் போடப்படும்போது, அங்கே பரட்டை தோன்றுகிறது. பரட்டை என்பது சமூக அர்த்தத்தில் வெளியிலிருப்பவன், விலக்கத்துக்குள்ளாகும் இயல்புகளைக் கொண்டவன், மைய