Skip to main content

Posts

Showing posts from August, 2017

ஜயபாஸ்கரனின் கடவுளை எங்கே வைப்பதாம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் பழைய பொருட்களுக்கு  வேகமாக விடைகொடுக்கும் காலம் இது. அன்றாட வாழ்க்கையில் பழைய பொருட்கள், புழக்கத்திலிருந்து தொடர்ந்து காணாமல் போகும் நிலையில், அதே பொருட்கள் அருங்காட்சிகளாக மாறி மீண்டும் வருகை புரிகின்றன. அப்போது அவை உபரி மதிப்பாக மாறி, படிப்படியாக மனிதக் கைகளின் தீண்டல் இல்லாமல் போய் கண்ணாடி பேழைகளுக்குள் தூசிபடர்ந்து அபூர்வத்தின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றன. இந்த அபூர்வ அந்தஸ்தை அடைவதற்குப் பொருட்கள் தொடர்ந்து பழமையின் அடையாளம் ஆகி, அவை நம் அன்றாட வாழ்விலிருந்தும்   விரைவாக காணாமல் போகவேண்டியுள்ளது. இப்படித்தான்  பண்பாடுகள் மற்றும் மரபுகளையும், அபூர்வ அருங்காட்சியகப் பொருளாக நாம் மாற்றிவிட்டோம். என் தாய் மொழியிலேயே, ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசித்து அர்த்தம் காண்பதற்குக் கூட பயிற்சி தேவையாக உள்ளது. இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக பல்லாயிரம் மனிதர்கள் கூட்டாக சேர்ந்து புழங்கிய மொழி, வாழ்க்கை,கொண்டாட்டம், கதை, சமயம்,பொருள் ஆகியவை சார்ந்த அறிவு மற்றும் பண்பாட்டு  மரபுகளுக்கு அவசரமாக விடைகொடுத்து விட்டோம். இப்படித்தான் பண்பாடும், மரபும்

முல்லாவின் தொடர்ச்சி பஷீர்

ஷங்கர்ராமசுப்ரமணியன் இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் ,  கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர் ,  முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன்   1208- ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து   1284 ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில் ,  ஜூலை   5   முதல்   10   வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர் பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம்பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான சூழ்நிலையில் முல்லா கதைகளைச் சொல்லும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது. முல்லாவி

அந்தக் காகத்தின் பெயர் ஷங்கர்

இன்னொரு முனை கட்டப்பட்டிருப்பது தெரியாது அறுந்த கொடிக்கம்பியைக் கவ்விச் செல்ல முடியாது தன் அலகாலே சிறைப்பட்டு பதைத்துத் திணறி ஊஞ்சலாடி பின்னர் விட்டு விடுதலையாகி பறந்து சென்ற  காகத்தை நேற்று பார்த்தேன் அந்த க்ஷணத்திற்கு அந்தக் காகத்திற்கு அந்தச் சம்பவத்துக்கு ஷங்கர் என்று பெயரிடுகிறேன்.

அம்மா அறியாதது

குழந்தைகளை நீர் அழைக்கிறது காலம் காலமாக அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமல் அம்மா வகுத்த எல்லைகளை மீறிப்போகும் முதல் சாகசம் முதல் ஏகாந்தம் சொல்லிப்போக எல்லாக் குழந்தைகளும் அந்தணகுமாரன் சித்தார்த்தனும் அல்ல குழந்தைகளை நீர்துறைகள் கிளர்த்துகின்றன வயிற்றில் பயம் நொதிக்கிறது விரையும் கால்கள் பின்னுகின்றன சில்லிட்ட கரங்களுடன் தொலைவிலிருந்தே தண்ணீர் வருடுகிறது எத்தனை பேர் திளைத்தாலும் அத்தனை பேரும் தனியாகத்தான். அது அவர்களுடன் என்றும் தொடரப்போகிறது உச்சந்தலை கொதிக்க கண்கள் சிவக்க அவர்கள் நீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து வெளியே வருகின்றனர் பார்க்காத கருப்பு ஒன்றையும் பார்க்கின்றனர் பகல் மங்க அகாலம் நிழல்களை வரையும். உடனடியாக அம்மாவின் நினைவு வா என்று கூப்பிட பெரும்பாலான குழந்தைகள் குற்றத்தின் ஈரத்தைப் பிழிந்து அவளின் அரூபச் சொல்லுக்குப் பணிந்து வீடு திரும்பி விடுகின்றன.  

மூன்று மியாவ்களின் அர்த்தம்

எங்கள் வீட்டுப் பால்கனியில் ஓய்வெடுக்க வரும் வெள்ளைநிறத்துக் குண்டுப்பூனை வெளியிடும் மூன்று   மியாவ்களின்   அர்த்தம் இப்போதெனக்குத்   தெரியும் . பால்   திடவுணவு   கொஞ்சுவதற்கான   கோரிக்கை என்று என்   மகள் மூன்று   மியாவ்களை எனக்குத்   திறந்து   காண்பித்தாள் மூன்று   மியாவ்களுக்குள்   சாத்தியமாகிவிடக்   கூடிய அதன் வாழ்வின்   மீது   எனக்குப்   பொறாமையும்   வந்திருந்தது .  இன்று   மாலையில் மழைக்கு   ஒதுங்கி காம்பவுண்ட்   சுவரில்   உட்கார்ந்திருந்த கருப்பு   வெள்ளை   வரிப்பூனை என்னைப்   பார்த்து மியாவ்   என்றது. அது மெலிந்த   பூனைதான் அது   தொடர்ந்த   மியாவ்களின்   புதிர் என்னை   அறுப்பதைப்   பார்த்தபடி திடுக்கிட்டு   நின்றேன் . அதற்கு   அர்த்தம்   சொல்வதற்கு   யாரும்   இல்லை . எனக்கு   அது   இனி   தெரியவும்   போவதில்லை அந்த   மியாவின்   கோரிக்கை மிக எளியதாகவும்   கூட   இருக்கலாம் .

மகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே

ஷங்கர்ராமசுப்ரமணியன் இரண்டாயிரத்துக்குப் பிறகு தமிழ் நவீன கவிதை பெற்றிருக்கும் அலாதியான வகைமைகள், மொழிபுகள் மற்றும் பல்லுயிர்த் தன்மையைப் பார்க்கும் போது அவற்றைக் கற்பனை உயிரியான நவகுஞ்சரம் பறவையுடன் ஒப்பிட முடியும். தமிழின் தற்காலக் கவிதைகளை ஓருருவமாக வரைந்துப் பார்க்க நாம் முயன்றால், சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடுப்பு, பாம்பின் வால், யானை,மான் மற்றும் புலியின் கால் என அது வடிவு கொள்ளலாம். இப்பின்னணியில் தனியானத் த்வனி மற்றும் பருவங்களோடு இடிபாடுகளின் வசீகரத்தைக் கொண்ட தனிமொழி கண்டராதித்தனுடையது. உறவுகளின் இடிபாடுகள், ஆளுமைகளின் இடிபாடுகள், பால்நிலைகளின் இடிபாடுகள், காதல் மற்றும் காமத்தின் இடிபாடுகளைச் சிதைந்த மரபின் கோபுரத்திலிருந்து எழுதும் பிரக்ஞை கொண்டக் கவிதைகள் அவை. நவீனத்துக்கும் சமகாலத்துக்கும் முதுகுகாட்டுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன இவரது கவிதைகள். கண்டராதித்தன் என்ற பெயரையும் அவரது கவிதைகளையும் அனிச்சையாகப் பிரித்துபோட்டு வழக்கம்போலக் கடந்துவிட முடியாது- நகுலன் என்ற பெயரை வெறும் பெயர்தான் என்று கடக்க முடியாததைப் போல. பெயர் க

காஃப்கா திறக்கும் ஜன்னல்கள்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் வழியாக மிக நுட்பமாக பரிசீலனை செய்தவர். மாறிவரும் மனித உறவுகள், அவனின் தனிமை, தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்கள், அமைப்புகள் முன் மனிதன் சின்னஞ்சிறிய பரிதபாகரமான உயிராக மாறிநிற்பது ஆகியவற்றை காஃப்கா துல்லியமாக  விசாரணை  செய்துள்ளார். மனிதனை ‘ஆரோக்கியமாகவும் ’  ‘ அகிம்சை ’   முறையிலும் சிறைப்படுத்திய, அவர்களை வளர்ப்பு மிருகங்களாகச் சுருக்கிய அலுவலகம் என்னும் தீங்கைப் பற்றி தனது உருவக கதைகள் வழியாக பல்வேறு சித்திரங்களை காஃப்கா உருவாக்கியுள்ளார்.   விசாரணை   நாவலில்  கண்ணுக்குப் புலப்படாத அமைப்பின் கீழ்நிலை ஊழியர்களால் யோசப் க. ஒரு நாள் காலை, எந்தக் காரணமும் இல்லாமல் அவன் அறையில் படுக்கையிலிருந்து எழும்முன்பாகவே கைது செய்யப்படுகிறான். அதைத் தொடர்ந்து  தன்னை எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுகிறான். நீதி அமைப்பின் குளறுபடிகளை தன் மீதான தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக சரிசெய்யவும், எதிர்த்