Skip to main content

Posts

Showing posts from October, 2019

இம்சை அகிம்சை

ஓங்கியடர்ந்த ஒரு காடு அதில் உயர்ந்த ஒரு மரம் சிங்கத்தைப் பார்த்தவுடனேயே அண்டசராசரமும் குலுங்கின . சிங்கம் பெரிய மான் ஒன்றைக் கவ்வியபடி சரசரவென்று ஏறி கிளைகளுக்குள் மறைந்தது அதைப் பார்த்த திரைக்கு வெளியேயும் வேட்டையின் தினவு படர்ந்தது . ஒரு நள்ளிரவில் அப்பா இப்படித்தான் அம்மாவை மரத்துக்கு மேலே இழுத்துச் சென்றார் அன்றிலிருந்து கடவுள் நிர்வகிக்காத காடாகத் தான் வீடுகள் இருக்கின்றன அவர்மீது தொடங்கிய கொலைவன்மம் தான் இத்தனை ஆண்டுகளில் வேறு வேறு உடல்களுக்கு வேறு வேறு நபர்களுக்கு மாறியிருக்கிறது அவனுக்கு அன்று உறக்கம் வரவில்லை மானின் தலையும் உடலும் ஆடி நடுங்கியபடி ஒரு நள்ளிரவுக்குள் எரியும் பகலில் சிங்கமும் மானும் நிகழ்த்தியது இம்சைதான் மானின் தலையும் உடலும் ஆட ஒரு நள்ளிரவுக்குள் எரியும் பட்டப்பகலில் சிங்கமும் மானும் நிகழ்த்தியது அகிம்சையும்தான் என்றும் உலகம் சொல்லித் தருகிறது .

கஜேந்திர மோட்சம்

நாங்கள் குடியிருந்த வளவில் எல்லாருக்கும் முதியவளாகவே அறிமுகமான அருணாசலத்தாச்சியின் வீட்டு நடு அறைச் சுவரில் கஜேந்திர மோட்சம் காலண்டர் ஓவியத்தைப் பார்த்தேன் அந்தப் பழுப்புச் சித்திரத்தின் மேல் வைத்த கண்ணை இன்னமும் எடுக்கவே இல்லை அந்தப் படத்தைப் பார்த்தபோது நான் முதலையாக இல்லை கஜேந்திரனை சக்கராயுதம் கொண்டு மேலேயிருந்து காப்பாற்றிய ஆதிநாராயணனை நான் சரியாகப் பார்க்கவில்லை யானையின் தீனக்குரல் கேட்கிறது இன்னமும் அது மீளும் நிம்மதியும் அந்தச் சித்திரத்தில் இருக்கிறது சிறுவனின் கதை முதலையில் தொடங்கி யானை வழியாக ஆதிமூலத்தில் முடிகிறது பச்சையாய் நீரோடை முதலை பற்றியிருக்கும் யானையின் காலும் தெரியும் ஸ்படிகத் தன்மை காலில் ரத்தம் கண்ணில் கண்ணீர் கசிய தும்பிக்கையை உயர்த்தியபடி அபயக்குரலிடும் யானை சாட்சியாகச் சுற்றிலும் காடு மலைகள் தாமரைகள் .

ஜோக்கரின் சிரிப்பில் எரியும் நகரம்

‘ ஜோக்கர் ’ க்ளைமாக்சில் நாயகன் ஆர்தர் ப்ளெக்கின் தாக்கம் பெற்று , நகரமே ஜோக்கர்களால் தாக்கப்படத் தொடங்க , காவல்துறையினரால் கைது செய்யப்படும் ஜோக்கரை , கோமாளி முகமூடி அணிந்த மக்கள் விடுவிக்கிறார்கள் . எரியும் நகரத் தெருவின் பின்னணியில் ஜோக்கரை   காரின் பானெட்டை மேடையாக்கி நடனமாடச் சொல்கின்றனர் .     ஜோக்கர் , கைகளை விரித்து நடனத்தைப் பாவிக்கத் தொடங்கும்போது அங்கே கிறிஸ்து உருப்பெறுகிறார் . இங்கே ஒரேயொரு கேள்விதான் எழுகிறது . தனது இருப்பையே பொருட்டாக பிறர் ஒருவரும் நினைக்காத   நிலையில் , துப்பாக்கியைத் தூக்கிய ஜோக்கரின் துயரமும் அவனது ரசிகர்களின் துயரமும் ஒன்றா ?   ஒருவருடைய எதார்த்தமும் இருப்பும்   இன்னொருவருக்கு புரியாமல் போவது மட்டுமல்ல ,  தெரியாமலும் போகும் நிலையில் அவர் தோன்றாமல் ஆகிவிடுகிறார் . ஒருவரின் எதார்த்தம் இன்னொருவருக்குத் தெரியாமல் போகும் நிலையில் , ஒருவரின் பொழுதுபோக்கு இன்னொருவருக்கு பொழுதுபோக்காக இல்லாமல் ஆகிவிடும் குரூரமும் சேர்ந்து நிகழ்ந்துவிடுகிறது . அப்படிப் பரிவற்றுப் போன ஒரு