Skip to main content

Posts

Showing posts from 2016

ஷ்ரோடிங்கரின் பூனை நகுலனைத் திறக்கிறது!

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு பொருள் என்ன நிலையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியாத நிலையில், குவாண்டம் கோட்பாடு அதை 'இருநிலை இருப்பு' என்று அழைக்கிறது. அது என்னவாக இருக்கிறது என்று பார்க்காத வரை அதற்கு எல்லா நிலைகளும் சாத்தியம். ஆணாக, பெண்ணாக, இருபாலுயிரியாக, யாரும் பார்க்காத வரை எல்லா நிலைகளும் சாத்தியம். புகழ்பெற்ற விஞ்ஞானியான எர்வின் ஷ்ரோடிங்கர், ஒரு சோதனையைக் கற்பிதம் செய்தார். அதன்படி, ஒரு இரும்புப் பெட்டிக்குள் பூனையையும் ஹைட்ரோசயனிக் அமிலக் குப்பி ஒன்றையும் வைக்க வேண்டும். அத்துடன் கதிரியக்கத்தன்மை கொண்ட பொருளையும் வைக்க வேண்டும். பரிசோதனையின்போது, அந்தக் கதிரியக்கப் பொருளின் ஒரு அணு சீர்கெட்டாலும், அது அந்த இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சுத்தியலை அசைத்து, அமிலக் குப்பியை உடைக்கும். அமிலக் குப்பி கசிந்தால் பூனை இறந்துவிடும். ஆனால், அந்த இரும்புப் பெட்டி மூடியிருக்கும் நிலையில் பூனை உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவே தெரியாது. குவாண்டம் விதியின்படி, பூனை உயிருடனும் இருக்கலாம்; இறந்தும் இருக்கலாம் என்ற 'இருநிலை இருப்பு நிலை'யில் உள்ளது.

பரிசு - செஸ்லா மிலோஷ்

 தமிழில்: சபரிநாதன் வெகு சந்தோஷமான நாள் மூடுபனி விலகியது முன்னமே. நான் தோட்டத்தில் வேலை செய்தேன். ஹனிச்சக்கில் மலர்கள் மேல் நின்று சென்றன ஹம்மிங் சிட்டுகள். எனதாக்க விரும்பும் பொருள் என்று எதுவுமில்லை பூமியில் பொறாமை கொள்ளத் தகுதியான எவரையும் அறியவில்லை எனைப் படுத்திய தீமைகள், அதை எல்லாம் மறந்துவிட்டேன் முன்பொரு காலம் நான் இதே மனிதனாக இருந்ததை எண்ணுவது                                      அவமானமுறச் செய்யவில்லை வலியேதும் உணரவில்லை உடலில் நிமிர்கையில் கண்டேன் நீலக்கடலையும் கப்பற்பாய்களையும் ( ‘தக்கை’ இதழில் வெளியானது.)

நள்ளென் றன்றே யாமம்

  ஷங்கர்ராமசுப்ரமணியன்   நள்ளென் றன்றே யாமம்  சொல்லவிந்து சடலங்களாய்  பேருந்தில்  உடல்சுருட்டியடங்கினர் மக்கள்  இருட்டில் முனகும் சல்லாபப் பாடல்கள்  உதிர்ந்து வரும் திருவள்ளுவர் சித்திரம்  பொன்மொழிகள்  அதிகாலையில் இறங்கவிருக்கும் நகரம் குறித்த நினைவு  எதுவுமல்ல  ஆம்  உண்மைதான் பதுமனார் அவர்களே   பற்றித் தள்ளும் விருப்பும் வெறுப்பும்  அலைக்கழிப்புகளும் அல்ல  உறக்கமும் பனியும் தான்  அவர்களைத் தாயென கதகதப்பாக  தற்காலிகமாகப் போர்த்தியிருக்கிறது.     

புனிதச் சிப்பி

ஷங்கர்ராமசுப்ரமணியன் கடலடியிலிருந்து மீன்களோடு கரைக்கு வந்து வலையோடு வெளியே எறியப்பட்ட சிப்பி நீ தனக்கென்று தனிவிருப்பமில்லாத உன் உடலில் கடலின் நிணம் கறையாகச் சிவந்திருக்கிறது கடலின் காதல் சுவடுகளும் உனது முதுகில் அழகிய  சமச்சீர் வரிகளாக பறவை மூக்கென இறங்கிக் குழிந்துள்ளன. கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி இப்போது உலகின் விருப்பத்துக்கு வீசப்பட்டு இந்த வெயிலில் உன்னை ஒப்புக்கொடுத்து யாருக்கோ எதற்கோ காத்திருக்கிறாய். அதனால்   நீ புனிதச்சிப்பி. 000

ஆனந்தா 2.0

ஷங்கர்ராமசுப்ரமணியன் பிரமாண்டமான  ஒரு பச்சை முட்டையைக் கொத்தி வெளியே வருவதைப் போல கழுத்தைச் சிலுப்பி மரத்திற்குள்ளிருந்து கிளைகள் நடுங்க வந்து நிற்கிறது வெள்ளைக் கொக்கு அது இருட்டில்தான் ஜனித்தது தெரியாத தெய்வத்தின் கரங்களை நம்பி     அது காத்திருந்தது அதுதான் தற்போது தன் ஒளிப்பூக்கொண்டையைச் சிலுப்பி கண்கள் பறிக்க உயிர்கோஷம் இடுகிறது ஆனந்தா.

ஆனந்தா

                 ஷங்கர்ராமசுப்ரமணியன்    ஆனந்தா என்றேன்  பிறந்தவையும் ஆம் என்றன  இன்னும் பிறக்காதவையும்  ஆம் ஆம்  என்கின்றன.  000

தமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்

நீங்கள் என்னைத் தூள்தூளாக்குங்கள் நீர் ஊற்றிச் சேர்த்து உருட்டிப் பிசைந்து உங்கள் மூர்க்க பலத்தால் அடித்துத் துவைத்தெடுங்கள் பாலியஸ்டர் துணிபோல் என்னை நெகிழ்வாக்கி நீட்டி விசிறியடித்து காற்றுத் தங்கும் பலூன் பந்துகளாக மேஜையில் அடுக்குங்கள். அப்போது கடவுள் போல் நான் ஒளிர்வேன். பின்னர் மீண்டும் தட்டி மடித்து வட்ட சதுர முக்கோணங்களாக எண்ணைய் கொதிக்கும் வாணலியிலோ கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள் உங்கள் அரும்பசிக்குச் சுவையான உணவாய் நான் மாறுவேன்... உங்கள் வரலாறு மூர்க்கம் ஆசைகள் காமம் மூட்டம் வலி அரசியல் துயரங்கள் நெருக்கடி உழைப்பு உங்கள் மாமிசமும் சேர்ந்த குழம்பில் நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மடிப்புமடிப்பாக தூள்தூளாகக் கரைந்துபோகக் காத்திருக்கும் தமிழ் புரோட்டாதான் நான்.

சிரிக்கத் தொடங்கும் யாளிகள்

  ஷங்கர்ராமசுப்ரமணியன்   முன்னம் பழைமையிலிருந்தும்   மீண்டும் நம்மை, நமது வாழ்வைப் பரிசீலிக்க ஆரம்பிக்கலாம். பழையதென்றும் மரபென்றும் தளையென்றும் மெய்யியலென்றும் மதமென்றும் சடங்கென்றும் நாம் ஒதுக்கியதில் இன்றை ,  இப்பொழுதை உயிர்ப்பிக்கும்  வஸ்துகள்  ஏதாவது மிஞ்சியுள்ளதா? இன்றைக்கான குணமூட்டியோ, எதிர்காலத்திற்கான தீர்வோ இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.       ‘காலடியில் ஆகாயம் ’   தொகுதியில் ஆனந்தின் சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘எல்லாமும் எப்போதும் ’   கவிதையில் கவிதைசொல்லி மண்ணுக்குள் போகிறான். மண்ணுக்குப் போனபின்பு உளிச்சத்தம் கேட்க மேலும் அடியில் செல்கிறான். அவனது பாட்டன் ஒரு சிலையை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். அது அவனது சிலையாக இருக்கிறது. மேலும் கீழே செல்கிறா ன் கவிதைசொல்லி , அங்கே சிற்பியாக கொள்ளுப்ப்பாட்டன் அமர்ந்திருக்கிறார். அங்கே பாதி செதுக்கப்பட்ட அவனது சிலை இருக்கிறது. மேலும் இறங்க இறங்க கடைசியில் கவிதை சொல்லியே சிலை செய்துகொண்டிருப்பதைப் பார்க்கிறா ன் . அந்த நான் ,  செய்து கொண்டிருந்தது கவிதை சொல்லியின் மகனுடைய சிலை.   ஆனந்த் உருவாக்கியிருக்கும் இளவரசி கவ

Humpty Dumpty had a great fall

 ஷங்கர்ராமசுப்ரமணியன்   நான் திருநெல்வேலியிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு பிழைக்க வந்தவன். அசாமிலிருந்து புலம்பெயர் தொழிலாளியாக வந்திருந்த ஹம்டி டம்டியை நேற்று மாலை நான் மைலாப்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்தபோது அவன் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து கீழே விழுந்து சற்றே புரண்டு மரணத்திலிருந்து தப்பி எழுந்துகொண்டிருந்தான். ஐயோ என்று ஓடினேன் அடுத்த ரயிலில் பொறுமையாக ஏறினால் என்ன கேடு என்று ஒரு பெரியவர் ஹம்டி டம்டியை அடித்தார் தகவல் போய் சேர்வதற்கே ஒரு வாரம் ஆகிவிடும் என்றார்  கழுத்தில் அடையாள அட்டை மாட்டிய  நடுத்தர வயது மென்பொறியாளர் ‘ஜஸ்ட் மிஸ்ட்’ என்று சொல்லிவிட்டு இரண்டு கல்லூரி மாணவிகள் வாட்ஸ்அப்புக்குள் நுழைந்துவிட்டனர் நான் ஹம்டி டம்டியின் தடித்த புட்டத்தைத் தட்டிக்கொடுத்து சிரித்தேன் ரயில்வே நிலையக் காவலர்கள் வந்தனர் ஹம்டி டம்டியை அழைத்துச் சென்றனர் ஹம்டி டம்டி என்னைத் திரும்பிப் பார்த்து சிரித்தபடி போனான் நானும் உன்னைப் போல ஹம்டி டம்டிதான் திரும்பத் திரும்ப விழுகிறேன் முழுமையாக உடைவதில்லை என்றேன் அவனுக்கு

இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீநேசன்

      ஷங்கர்ராமசுப்ரமணியன்   தமிழ் நவீன இலக்கியத்தில்  ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் சொல்லலாம். அவர் எழுதிய விஷ்ணுபுரத்திற்குப் பிறகுதான், தமிழ் நாவலாசிரியர்களுக்கான காகிதக் கொள்முதல் கூடியது. சுந்தர ராமசாமி, தனது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை, வீட்டின் எடைத்தராசில் வைத்து திரும்பத்திரும்ப நிறுத்துப் பார்த்து, விஷ்ணுபுரத்தை விடக் கூடுதலாக ஐம்பது கிராம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  தமிழ் நவீன இலக்கியத்திற்குள் வரும் எழுத்தாளச் சிறுவர்கள், ஆயிரம் பக்கத்தில் ஒரு ஐநூறு வருட வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்லத் தொடங்கினர். வாழ்நாள் முழுக்க எழுதியிருந்தாலும் முன்னூறு பக்கத்தைத் தாண்டி எழுதுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வருடம் தோறும் ஸ்பைனாக் சாப்பிட்டு பத்து பத்து என்று பஸ்கி எடுக்க வேண்டியிருந்தது. ‘முடியலை’ என்று எழுத்தாளர்கள் தனியறையில் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.