Skip to main content

Posts

Showing posts from July, 2022

எனது புதிய கவிதைத் தொகுதி 'நிழல், அம்மா.'வின் முன்னுரை

'நிழல், அம்மா' கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் செயல்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும் கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்த ஒன்றைச் சுட்டும் நம்பிக்கையும் தென்படும் கவிதைகள் என்றும் வகை பிரிக்கலாம். முதல் வகைக் கவிதைகள் ஓசை ஒழுங்கும் சந்தமும் கொண்டதாகவும், இரண்டாம் வகைக் கவிதைகளில் உரைநடையின் தீவிர நெடியையும் உணர்கிறேன். ஓசை ஒழுங்கும் சந்தமும் எனக்கு முன்னர் பரிச்சயமில்லாதவை, என் இயல்புக்குள் மிகச் சமீபத்தில் இணைந்தவை என்பதால் எனக்கு முதல் வகைக் கவிதைகளின் மேல் சார்பும் கனிவும் உள்ளது. பற்றுக்கோடாக மாறியிருக்கும் தொடர்ந்து கேட்கும் இசை காரணமாக இருக்கலாம். தெளிவு, அறிதல், விடுதலை ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும் உரைநடைக் கவிதைகளில் இருக்கும் கலங்காத தன்மை மிகவும் தற்செயலானது; அது அநித்யமானது; அரிதானது. அதனால் அதை ஒருபோதும் நம்பவேண்டாம் என்று வாசகர்களிடமும் என்னிடமும் சொல்லி தெளிவுபடுத்திக் கொள்வதே பொறுப்பும் பொறுப்புத

ஏ. கே. ராமானுஜனின் கவிதையில் ஆத்மாநாம்

கவிஞர் ஆத்மாநாம், தனது இறுதிநாட்களில் படித்த நூல் ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்த்த ‘ SPEAKING OF SHIVA ’. கவிஞர் பிரம்மராஜன் எழுதிய சிறு வாழ்க்கைக் குறிப்பில் தெரியவரும் தகவல் இது.  பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி போன்ற வசன கவிகளின் கவிதைகளை அந்த நூலின் வாயிலாக மொழிபெயர்த்து மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார் ராமானுஜன். ஆத்மாநாமின் கவிதைகள் பற்றி அவர் இறந்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து அறிந்துகொண்ட ராமானுஜன், 1991-ல் ‘எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கிறார். இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பிணைப்பு ஆத்மாநாமுடன் இருப்பதாக ராமானுஜன் உணர்ந்ததை கவிதையின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. கவிஞர் ந. ஜயபாஸ்கரன் இந்தக் கவிதையை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு தளர்வான மொழிபெயர்ப்பையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். நான் இதைத் திரும்ப மொழிபெயர்த்திருக்கிறேன். ந ஜயபாஸ்கரனின் கட்டுரை, மொழிபெயர்ப்பைப் படிக்க :  https://www.shankarwritings.com/2021/03/blog-post_11.html     எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்   பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிவனைப் பற்றிப் பா

எம். டி. முத்துக்குமாரசாமியின் மொழிப் பாவனைகளும் அவர் உருவாக்கும் அதீதங்களும்

  எம். டி. முத்துக்குமாரசாமியின் புதிய கவிதைத் தொகுதியான ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தேர்ந்த நடிகனின் மொழி பாவிப்புகள் இவரது படைப்புகள் என்ற பதிவு ஏற்பட்டது. உணர்ச்சி, மொழி, வெளியீடு எல்லாம் தீவிரமாக வெளிப்பட்டாலும் எல்லாமே பாவனை என்ற உணர்வை வாசிப்பவனிடம் ஏற்படுத்தியபடியே தான் வாசிப்பைத் தொடரச் சொல்பவை அவரது புனைவுகள். ஆனால் உணர்ச்சியோ, மொழியோ, வெளியீடோ, படிமங்களோ கேலிச் சித்திரமாகாமல் படைப்பு உத்தேசிக்கும் விளைவையும் எம் டி முத்துக்குமாரசாமி, நம் கலாசார நினைவுகளை மொழிவழியாக  அதீதமாகப் பெருக்கி உருவாக்கி விடுகிறார்.   ஒரு கதாபாத்திரம் தன் கதையிலிருந்து அவ்வப்போது நழுவி விழும்போது, ஒரு கதாபாத்திரம் தன் கதையையே சந்தேகப்படும் போது நாடகம் தொடங்குகிறது. இது உண்மை அல்ல பொய் ; இது உண்மை அல்ல நடிப்பு; இது உண்மை அல்ல பாவனை; இது உண்மை அல்ல ஒரு கூத்து; இது கதை அல்ல, கதை யின் மேல் நிகழ்த்தப்படும் உரை ; மொழிவழியாக தானே இங்கு எதுவும் நிகழ்வதில்லை ; நிகழ்த்தப்படுகிறது. இந்த உணர்வை எம். டி. முத்துக்குமாரசாமியின் சிறுகதைகளும், கவிதைகளும்,

பீட்டர் ப்ரூக்கின் மகாபாரதம் உருவான கதை

மகாபாரதத்தை உலகளாவிய காப்பியமாக உணர்ந்து ஒன்பது மணிநேர நாடகமாக்கி, ஐரோப்பாவில் அதை நிலைபெறச் செய்த பீட்டர் ப்ரூக்கின் மரணம் குறித்த செய்தியை அறிந்தபோது, பீட்டர் ப்ரூக்குடன் சேர்ந்து அந்த நாடகத்தை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜான் க்ளாட் கேரியர், யுனெஸ்கோ கொரியருக்கு 1989-ல் அளித்த நேர்காணல் ஒன்று நினைவுக்கு வந்தது. மதுரையில் நண்பர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவர் சேகரிப்பில் இருந்த தமிழ் யுனெஸ்கோ கொரியரில் தற்செயலாக 2006-ம் ஆண்டில் எனக்குப் படிக்கக் கிடைத்த நேர்காணல் அது. பீட்டர் ப்ரூக்கின் மகாபாரத நாடகத்தை எழுதி நிகழ்த்துவதற்காக 11 ஆண்டுகளை ஒரு யாத்திரை போல அவர் விளக்கிய நேர்காணல் அது. எனக்கு அந்தச் சமயத்தில் மிகுந்த பிரமிப்பையும் உந்துதலையும் ஏற்படுத்திய அந்த நேர்காணல் அடங்கிய பிரதியை சில ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்து பின்னர் தொலைத்துவிட்டேன். நேற்று முன்தினம் அந்த நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இணையத்தில் தேடியபோது மீண்டும் அதைக் கண்டுகொண்டது சமீபத்திய மகிழ்ச்சிகளில் ஒன்று. திரும்ப ஆங்கிலத்தில் படித்து முடித்தபோது, அப்போது ஏற்பட்ட வியப்பு குன்றவில்லை. விவிலியத்

ஷோபா சக்தி தீட்டியிருக்கும் ஒரு அகதியின் இன்னுமொரு கதை

  நினைவுதான் வாழ்வு என்று கூட ஒரேயடியாக தலையில் போட்டுவிட வேண்டியதில்லை. ஆனால் வாழ்க்கை தொடர்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது நினைவுதான். அந்த நினைவின் நிலத்தில், ஒரு சுயம், தன் கால்களை நீட்டி, ஆசுவாசமாய், தொடர்ச்சியின் பாதுகாப்பில் பயணிக்க இயலாமல் அவன் காலடியில் துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் போது, உருவாகும் நிச்சயமற்ற சுயத்தின் பெயர்தான் அகதி என்றும் அந்த அகதியின் கதைகள் வேறு வேறாகத் தெரிந்தாலும் ஒரே கதைதான் என்பதையும் ‘ஸலாம் அலைக்’ நாவல் வழியாக ஷோபா சக்தி வெளிப்படுத்துகிறார். அவனது, அவளது கதை எப்போதும் ஒன்றுதான். பெயர்கள்தான் மாறுபடுகின்றன. காஃப்காவின் யோசப் க.வும் ஸலாம் அலைக்கில் நாம் காணும் சர்வதேச அகதிகள் அனைவரின் கதையும் ஒன்றுதான்.  இல்லாமல் செய்யும் கூர்மையின் முன்னால், இல்லாமல் போவதற்கு முன்னர் ஏற்படும் வலியின் முன்னால் ஒரு சுயம் என்னென்னவாகவெல்லாம் மாறுகிறது என்பதன் விதவிதமான சித்திரங்கள்தான்  ‘ஸலாம் அலைக்’.       அகதி தனது உடன்பிறந்த சகோதரிகளின் பெயரைக் கூட மறந்துபோகும் மரத்த நிலை ஏற்படுகிறது. ஞாபகம் இருக்கும் பெயர்களை தாளில் எழுதிவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பலால