Skip to main content

ஆத்மாநாம்



பெருமழையில் நிச்சலனமாய் நனையும்
மரமென
குளியலறையில் வழிந்து கொண்டிருக்கிறேன்
மஞ்சள் ஒளியில் இலைகள் அதிர்கின்றன
வழியும் நீர்த்துளிகள் இசையென
அறையெங்கும் நிறைகிறது
தந்திகளிலிருந்து விடுபட்ட பறவைகள்
அறைக்குள் பறக்கின்றன
வெளியில் பறந்து திரிந்து
ஆத்மாநாம்
காகமாய் என் குளியலறைக்குள்
தாகம் தீர்க்க வருகிறான்
ஆத்மாநாம்
நீ அமிழ்ந்த கிணறு இப்போதெனக்குக்
குளியலறையாகியிருக்கிறது.

(மிதக்கும் இருக்கைகளின் நகரம், 2001) 

Comments