Skip to main content

ஷ்ரோடிங்கரின் பூனை நகுலனைத் திறக்கிறது!


ஷங்கர்ராமசுப்ரமணியன்


ஒரு பொருள் என்ன நிலையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியாத நிலையில், குவாண்டம் கோட்பாடு அதை 'இருநிலை இருப்பு' என்று அழைக்கிறது. அது என்னவாக இருக்கிறது என்று பார்க்காத வரை அதற்கு எல்லா நிலைகளும் சாத்தியம். ஆணாக, பெண்ணாக, இருபாலுயிரியாக, யாரும் பார்க்காத வரை எல்லா நிலைகளும் சாத்தியம்.
புகழ்பெற்ற விஞ்ஞானியான எர்வின் ஷ்ரோடிங்கர், ஒரு சோதனையைக் கற்பிதம் செய்தார். அதன்படி, ஒரு இரும்புப் பெட்டிக்குள் பூனையையும் ஹைட்ரோசயனிக் அமிலக் குப்பி ஒன்றையும் வைக்க வேண்டும். அத்துடன் கதிரியக்கத்தன்மை கொண்ட பொருளையும் வைக்க வேண்டும். பரிசோதனையின்போது, அந்தக் கதிரியக்கப் பொருளின் ஒரு அணு சீர்கெட்டாலும், அது அந்த இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சுத்தியலை அசைத்து, அமிலக் குப்பியை உடைக்கும். அமிலக் குப்பி கசிந்தால் பூனை இறந்துவிடும். ஆனால், அந்த இரும்புப் பெட்டி மூடியிருக்கும் நிலையில் பூனை உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவே தெரியாது.
குவாண்டம் விதியின்படி, பூனை உயிருடனும் இருக்கலாம்; இறந்தும் இருக்கலாம் என்ற 'இருநிலை இருப்பு நிலை'யில் உள்ளது. நாம் உள்ளே புகுந்து பார்க்கும்போதுதான் இந்த 'இருநிலை' இல்லாமல் போகும்.
பெரும்பான்மைத் தமிழர்களுக்கு 'ஷ்ரோடிங்கரின் பூனைச் சோதனை' தெரியாமல் இருக்கலாம். இரும்புப் பெட்டிக்குள் விடப்பட்ட பூனையின் 'இருநிலை' என்பது சமீப மாதங்களாக, தமிழர்கள் எல்லாம் அனுபவித்த ஒரு நிலைதான்.
நகுலனின் புகழ்மிக்க கவிதை ஒன்றை ஷ்ரோடிங்கரின் பூனை வழியாகத் திறக்கும் போது, கூடுதலாக ஒளியேறுவதை இப்போது அனுபவிக்கலாம். அவரது 'கோட்ஸ்டாண்ட் கவிதைகள்' தொகுப்பில் வரும் கடைசிக் கவிதை இது. நகுலனின் அர்த்தங்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும் காலம் இது.
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்”
ஆம். நீயும் நானும் இல்லாதவரை; நாம் இல்லாதவரை; நாம் திறந்து பார்க்காதவரை; நிகழ்ந்து கொண்டிருக்கிறது; ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பாகவும் அழிவாகவும் படைப்பாகவும்; எல்லாம்; எல்லாம்; ஆம்; ஆமென்;
அந்தப் பிரதேசம் எங்கே இருக்கிறது?
என்ன நடக்கிறது; எல்லாம்.

(தி இந்து, தமிழ் நாளிதழில் வெளியானது)

Comments