Skip to main content

இந்த அந்தி



முதிய கருவேப்பிலைச்செடியின் கீழே
ஒரு அந்தி கவிழ்கிறது
மூலைக் கழிப்பறைக்கும்
ஈரப்புழக்கடைக்கும் இடையே நின்று
இச்செடி
உள்ளங்களையளவு சோகத்தை
இருட்டோடு சேர்த்து
அனைவருக்கும் பகிர்கிறது
காபிப்பொடி நீரில் அவியும் மணம்
துண்டிக்க
தன் பிராய கால வீட்டின் நினைவைத் தொடரும்
பெண்ணின் கண்ணீர்த்துளி
உலர்ந்த அவள் முகத்தில் சில்லிடும்.
குழந்தைகள் விடைபெற்றுச் செல்லும்
ஒவ்வொரு பொழுதும்
நடுங்கும் முதுமையின் கரங்களில்
விசனத்துடன்
இந்த அந்தி கனக்கும்
ஒரு கருப்பு வண்ணத்துப்பூச்சி
அந்தியின் இடைவெளிகள் மேல்
பறக்கிறது.
கடைசித்துளி சிறுநீர் பிரியும் க்ஷணத்தில்
அந்தி
நம்மிடம் விடைபெறுவதும்
கருவேப்பிலைச் செடி
தன் இலைகளோடு
இருள்மசங்கில்
மறைத்துக் கரைவதும்
பறவைகளின் உருமறைந்த இரைச்சலும்
ஒரு சின்னஞ்சிறிய
வழி அனுப்புதலின் பொருட்டா.

(அழகு தெய்வானைக்கு)

Comments