Skip to main content

Posts

Showing posts from February, 2025

அந்தரப்பட்டிணம்

பள்ளியெனவும் நூலகமெனவும் தொனித்த ஒரு பாழடைந்த மாளிகைக்குள் நுழைந்தேன். படிகளேயில்லாமல் நிர்மாணத்தில் உள்ள ஓர் அந்தரப்பட்டிணத்துக்கு ஏறிவந்து விட்டேன். பூமியில் உள்ள கட்டிடங்களை வாகனங்களை அலையும் மனிதர்களை எல்லாம் பார்க்கும் வகையில் கண்ணாடித் தளத்தில் அந்தரப்பட்டிணம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்தரப்பட்டிணத்தின் சுவர்கள் உயர்ந்துகொண்டிருந்தன. கல் தச்சர்கள், நவீன சிற்பங்களை தூசிப்புகை சூழ செதுக்கிக் கொண்டிருந்தனர். சிறு உணவங்கங்கள் அந்தரப்பட்டிணத்தில் மூலைகளில் தெரிந்தன. அந்தரப்பட்டிணத்துக்கு ஏறி வந்துவிட்டேன். ஆனால் இறங்கும் வழி தெரியவில்லை. கீழே குதிக்கும் அளவுக்கான உயரத்திலும் இல்லை. மதிய வெயில் ஏறியபோது மேற்பார்வையாளர்கள் கட்டுமானத்திலிருக்கும் அந்தரப்பட்டிணத்தைப் பார்வையிட வந்தனர். ஒரு தண்டனை போல, ஒரு திறந்த சிறையைப் போல அந்தரப்பட்டிணம் ஆகிவருவதை உணர்ந்தேன். அந்தரப்பட்டிணத்தின் தொழிலாளிகள் எல்லாரும் நேசபாவமின்றி அன்னியமாக அச்சமூட்டக்கூடியவர்களாகத் தெரிந்தனர். இருப்பதிலேயே சாமானியமாகத் தெரிந்த ஒரு தொழிலாளியிடம் தரையில் இறங்குவதற்கு வழி உண்டா என்று கேட்டேன். பீடி குடித்துக் கொண்டிருந்த...

இனிய ஹென்றி மத்தீஸ்

இனிய ஹென்றி மத்தீஸ்! எப்போது உன் மனைவி அமேலி மத்தீஸின் முகம் முகமூடியாக உனக்கு உருமாறியது? இனிய ஹென்றி மத்தீஸ்! உன் மனைவி அமேலி மத்தீஸின் கண்கள் எப்போது முகமூடியின் இரண்டு குழிகளாக உனக்குத் தோன்றியது? இனிய ஹென்றி மத்தீஸ்! உன் மனைவி அமேலி மத்தீஸின் முகம் வெறும் கபாலமாக எப்போது உன் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது? எலும்புக்கும் உடலுக்கும் முகத்துக்கும் கபாலத்துக்கும் எத்தனை நூற்றாண்டுகள் தொலைவு? இனிய ஹென்றி மத்தீஸ்! (இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃபாவிய கலை இயக்கத்தின் முதன்மையான ஓவியர்களில் ஒருவராக கருதப்படும் பிரெஞ்சு ஓவியர் ஹென்றி மத்தீஸ். அவரது போர்ட்ரெய்ட் ஆஃப் மேடம் மத்தீஸ் புகழ்பெற்ற ஓவியம்.) நன்றி: அகழ் இணைய இதழ்

கழுதை நான்

காவிய காலத்தில் ஒரு கழுதை எப்படி இருந்ததோ அதிலிருந்து ஒரு செல் ஒரு உறுப்பில் கூட பரிணமிக்காத கழுதை நான். உங்கள் அலங்காரப் பாண்டங்களுக்கு எது சட்டகமோ அந்தப் புராதன எலும்புதான் நான். ஆபரணங்களோ தளவாடங்களோ கருவிகளோ அழகோ அன்போ உள்ளும் புறமும் ஏறாத உழைப்பு என நீங்கள் மொழிபெயர்க்கும் வெறும் கழுதைதான் நான். இம்மலைவாசஸ்தலத்தின் தடுப்பணை கவர்னர் மாளிகை மலர் தோட்டம் படகு இல்லம் பங்களா வீடுகள் தேவாலயங்கள் கோயில்கள் தேயிலைத் தொழிற்சாலைகள் தொழிலாளர் குடியிருப்புளைக் கட்ட என் முதுகில் மண்சுமந்து சிற்றாறுகளை சிறுகுன்றுகளை ஒற்றையடித் தடங்களை தடங்களே உருவாகாத சிறு வனங்களை கடந்தேன் நான் என்றாலும் ஒரு நினைவகமோ சிலையோ சதுக்கமோ ஏதுமற்ற கழுதைதான் நான். என்னை ஓட்டிச்செல்லும் எஜமானன் என் ஆறாத காயங்களை உலரக்கூட விடுவதில்லை மழையிலும் வெயிலிலும் நீர்வழிகளிலும் என்னை அடித்து வழிநடத்துபவன் அவன் மலை ஆற்றில் இறங்கும்போது அவன் கழற்றும் அழுக்கேறிய லுங்கியை அரைக்கால் சட்டையை அதில் உள்ள பீடியைக் கழித்துப் பார்த்தால் அபரிமிதமோ உபரியோ சதையில் கூட தங்காத சக மிருகங்கள்தாம் நாங்கள். எனக்கென்று தனிக்கதைகள் இல்லை எந்தப் புராணக்...

சல்மான் ருஷ்டி - மரணத்தை மறுத்த சொற்களின் கதை

  ஒரு இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக் கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான , கலாசார அடிப்படையிலான , அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறி ய பயங்கரத்தைத் தான் இந்நூல் விவரிக்கிறது. சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது. சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையில...