Skip to main content

Posts

Showing posts from May, 2025

உடைந்த பாலம்

கழிமுகம் கடல் நீர் மணல் கரை முயங்கிக் கலையும் சம வெளி எல்லாம் ஓயும் படகு பாய் கொடி தூண்டில் சூரியன் வலை கைவிடப்பட்ட பொம்மைகள் செருப்புகள் மதுக்குப்பிகள் எல்லாம் ஓயும் என்று ஆற்றுவித்து கால்களை உக்கிரமற்றுத் தழுவி அமைதியாகத் திரும்பிச் செல்லும் சின்னச்சிறிய சீரலைகள். களுக் களுக்கென தளும்பி நீர் சொல்லும் ஒன்று எனக்கு கேட்கத் தொடங்குகிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலத்தில் எதையும் யாரையும் இனி இணைப்பதில்லையென்று முடிவெடுத்து ஏகாந்தத்தின் கழிமுகம் மீது நின்றுகொண்டிருக்கும் உடைந்த பாலத்துக்கோ களுக் களுக்கென நீர் சொல்லும் அந்த ஒன்று அப்போதே கேட்டுவிட்டது. யுத்தத்துக்கும் சமாதானத்துக்குமிடையே துள்ளி எழப்போகிற மீன் கிடைக்கும் தருணத்துக்கு சற்று முன்னால். நிசப்தத்தை அலகில் நிறைத்தபடி நீர்வெள்ளி சுடரும் பரப்பில் மேயும் கொக்குகளுக்கு கருநாரைகளுக்கு ஏற்கெனவே சேதி சொல்லப்பட்டு விட்டது. அருகிலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் ஆழத்தை கேலிசெய்து திளைத்துக் குளிக்கும் காகங்களுக்கு குருவிகளுக்கு எனக்கு முன்னால் கேட்டுவிட்டது களுக் களுக்கென நீர் சொல்லும் அந்த ஒன்று. (அகழ் இணைய இதழ்)

கருப்பு

நேயக் கலவி மயக்கத்தில் குழந்தையிடம் பேசும் அதர்க்க மொழியில் கொஞ்சி தொட்டுத் தொட்டு நீ அகற்றிய என் உள்ளாடையின் நிறம் துயரக் கருப்பானது தற்செயல்தானா கோகிலமே! உன் இருள் கேசம் அந்தக் கேசத்தின் மையெடுத்துத் தீட்டிய உன் புருவம் திலகமிட்ட நெடிய நெற்றி கூர்ந்த பிச்சிப்பூ மூக்கு ஆராதித்து உன் இடைக்கு முன்னால் மண்டியிட்டேன் அரவப்படம் உன் அல்குல் என வர்ணித்து முத்தத்தால் உரித்த உன் உள்ளாடையும் அதே துயரக் கருப்பானது தற்செயல்தானா? மரகதமே! இப்போதும் அலமாரியில் கையில் தட்டுப்பட்டு அணியும்போதெல்லாம் யாரை எதை எப்பொழுதைப் பழிக்க அந்தக் கருப்பு உள்ளாடையின் உட்புறத்தை மாற்றி அணிகிறேன் ஞாபகமென்னும் ஆலகால நஞ்சே! (நன்றி : அகழ் இணைய இதழ்)