கழிமுகம் கடல்
நீர் மணல் கரை
முயங்கிக் கலையும்
சம வெளி
எல்லாம் ஓயும்
படகு பாய் கொடி
தூண்டில் சூரியன் வலை
கைவிடப்பட்ட பொம்மைகள்
செருப்புகள் மதுக்குப்பிகள்
எல்லாம் ஓயும்
என்று ஆற்றுவித்து
கால்களை
உக்கிரமற்றுத் தழுவி
அமைதியாகத் திரும்பிச் செல்லும்
சின்னச்சிறிய சீரலைகள்.
களுக் களுக்கென தளும்பி
நீர் சொல்லும் ஒன்று எனக்கு
கேட்கத் தொடங்குகிறது.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலத்தில்
எதையும் யாரையும்
இனி இணைப்பதில்லையென்று முடிவெடுத்து
ஏகாந்தத்தின் கழிமுகம் மீது
நின்றுகொண்டிருக்கும்
உடைந்த
பாலத்துக்கோ
களுக் களுக்கென நீர் சொல்லும்
அந்த ஒன்று
அப்போதே கேட்டுவிட்டது.
யுத்தத்துக்கும் சமாதானத்துக்குமிடையே
துள்ளி எழப்போகிற மீன்
கிடைக்கும்
தருணத்துக்கு சற்று முன்னால்.
நிசப்தத்தை
அலகில் நிறைத்தபடி
நீர்வெள்ளி சுடரும் பரப்பில்
மேயும்
கொக்குகளுக்கு கருநாரைகளுக்கு
ஏற்கெனவே சேதி சொல்லப்பட்டு விட்டது.
அருகிலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
கடலின் ஆழத்தை
கேலிசெய்து
திளைத்துக் குளிக்கும்
காகங்களுக்கு குருவிகளுக்கு
எனக்கு முன்னால் கேட்டுவிட்டது
களுக் களுக்கென நீர் சொல்லும்
அந்த ஒன்று.
(அகழ் இணைய இதழ்)
Comments