Skip to main content

அந்தியும் புலரியும் ஒன்றாகவே தெரிகின்றன




ஷங்கர்ராமசுப்ரமணியன்



அந்தி தொடங்கிவிட்டது
மரங்கள் கிளைகள் இலைகள்
பறவைகள்
இருள்கோடுகளாக மாறிவருவதை
நிறைவுடனும்
நிறைவின்மையுடனும்
சேர்த்தே பார்க்க முடிகிறது
இருட்டுக்குள் நுழைய விரும்பாமல்
தீக்கொன்றை பூக்கள் மட்டும்
செஞ்சிவப்பாக அலறுகின்றன
குழந்தைகளாய் அவை அடம்பிடிக்கின்றன
அந்தத் தீக்கொன்றைகளை
எனது காமமாக
நான் சூடிக்கொள்ளப் போகிறேன்.

0000

அந்தியும் புலரியும்
எப்போதும் ஒன்றாகவே தெரிகின்றன
இரண்டையும் சந்திக்க வைத்து
பொழுதுகளை மயக்கிக் குழப்புவதில்
ஒரு அசாதாரண போதையும் உண்டு
மரம் திடீரென்று
காகங்களாகச் சிதறி
மீண்டும் மரமாகும்
இரைச்சல்
இசையாக மாறத்தொடங்கும்
கணம்   
நான் சிந்தும்
கண்ணீரை எப்படி விளக்குவது?


Comments