Skip to main content

வள்ளுவர் கோட்டத்துக்கும் மகாத்மா காந்தி சாலைக்கும் இடையே



புதிய நிறங்கள்
புதிய புரட்சிகள்
கேஎப்சியில் கோழி வறுபடும் நறுமணம்
காற்றில்
எண்ணைக்கான யுத்தங்கள்
சொல்கிறார்கள்
வனங்கள் அருகிவிட்டன
தண்ணீர் விஷமாகிவிட்டது
புலிகள், குட்டிகள்
தலைகுனிந்து
கடவுளிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றன
என்று சொல்கிறார்கள்
போக்குவரத்து சிக்னல்களில்
அலை அலையாக யாசிக்கும் பசி
எமது காமத்தைவிட வன்மைகொண்ட
ஆனால்
மென்மையானதும்
நுட்பமானதுமான
ஆடைகள்
உள்ளாடைகள்
நட்பும் காதலும்
சிக்கலும், புதிருமாக மாறிய
அந்தத் திருப்பத்தில்
நாகலிங்க மரநிழலில்
அவன் அவளுக்காகக் காத்திருந்தான்
இன்னும் சில நொடிகளில்
முழுவதும் இருட்டப் போகிறது
அவனை நோக்கி தெற்கிலிருந்து வந்தாள்
அவளின் முகம் தெரியவில்லை
எல்லாம் கோடுகளாகி விட்டன
தூத்துக்குடி
சிங்காநல்லூர்
பிரம்மபுத்ராவின் கரையோரம்
சியரோ லியான்
எந்த முகமாகவும் இருக்கலாம்
புறங்கழுத்திலிருந்து உயரும் காலர்கொண்ட
ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்
அவள் அவனை நோக்கி வரும்போதே
தோள்களை உயர்த்திவிட்டாள்
அவனும் உற்சாகத்தில்
முன் நகர்ந்தான்
நான் பரவசம் கொண்டேன்
ழாக் ப்ரெவரைப் போல
ஒரு தருணத்துக்குத் தயாரானேன்
அன்றைய மாலையில்
எனக்கு இரண்டாவது நற்செய்தி
அவர்கள் அந்த நாகலிங்க மரத்தின் அடியில்
வள்ளுவர் கோட்டத்திற்கும்
மகாத்மா காந்தி சாலைக்கும் நடுவில்
குதிகாலை உயர்த்தி
ஆரத்தழுவிக் கொண்டார்கள்
இந்தக் கவிதையை நான் இப்படி
இங்கிருந்து எழுத
எனக்கு இத்தனை நூற்றாண்டுகள்
தேவைப்பட்டன


நன்றி: உயிர் எழுத்து இதழ்
புகைப்படம் : சிவா

Comments