ஷங்கர்ராமசுப்ரமணியன்
எங்கும் குளிர்
கொஞ்சம் மிச்சம் இருக்கும் வேளையாக
கொஞ்சம் மிச்சம் இருக்கும் வேளையாக
இந்த விடியல் இருக்கிறது
உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்
இடையில்
வீடுகள் சோம்பல் முறிக்கின்றன
நடுவயதுக்காரர்களின் காலைநடை ஓசைகள்
குழந்தைகளைக் குளியலறைக்கு விரைவுபடுத்தும்
அம்மாக்களின் வசைகளைத் தவிர
காற்றில் வேறு எந்த மாசும்
கலக்காத புனிதவேளை அது
மாடிப்படிகள்
இலைகள்
பாத்திரங்கள்
நமது செயல்கள்
மீது இன்னும் இருட்டும் மௌனமும்
சூழ்ந்திருக்கிறது
முதியவர்கள் மட்டும்
நுரையீரல் மீது வெயில் அடிப்பதற்காக
பால்கனிகளில் காத்திருக்கின்றனர்.
Comments