ஷங்கர்ராமசுப்ரமணியன்
எத்தனை லட்சம் வருஷங்கள்
ஆகிவிட்டன
இன்னும்
என் வீட்டின் இரும்பு கேட்டிற்குள்
நுழையும் போது
பூனை தயங்கி நின்று
காதை வாலை
உயர்த்தி மௌனமாய்
சுற்றுமுற்றும் நோட்டமிடுகிறது
கம்பிகளுக்குள்
மெல்ல அடியெடுத்து வைக்கிறது
இதயத்திலும் ரோமத்திலும்
புதிதாகப் பிறந்த விழிப்பு
என் வீடு
என் தெரு என் தோட்டம் என்று சொல்லப்படும்
உன் காட்டில்
உன் உடலை நீட்டு
நீ புலிதான் நீ புலிதான்
என்று இரைச்சலிடுகிறது எனது விழிப்பு.
Comments