தாய்ப்பாலுடன் சேர்ந்து
பருப்பு சோறு
சாப்பிடத் தொடங்கும் போது
குழந்தைகளுக்கு
பூனை மீசை வளர்கிறது
பூனைகளுக்கும்
எனக்கும் மட்டுமே தெரியும்
மீசை அது
அம்மாவின் ரத்தம் குடித்து
வளர்ந்த மீசையாக்கும்
என்று ரகசியமாய்
தெரிவித்து
வாயைச்
சப்புக்கொட்டுகிறது
குழந்தை.
000
புழக்கடையில்
என்ன சத்தம் என்கிறாள்
காக்காய் கரைகிறது
என்றேன்
வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னாள்
அப்படியாவென்று கேட்டு
அடுப்பங்கரைப் பால்கனிக்குப் போய்
நானும் சேர்ந்து கரைந்தேன்
ஆமாம்
அவள் சொன்னது சரிதான்
எங்கள் கரைதலுக்கு உள்ளே
மியாவ்
மி…..யா…..வ்
மி……….யா……….வ்
இருக்கிறது.
5
உனது கடைசிப் பூனைக் கவிதையை
எப்போது எழுதப் போகிறாய்?
இப்படி ஒரு குரல் கேட்டது
விழித்தேன்
முதலில் பயந்து
பின்னர் தளர்ந்து சிரித்தேன்
கடைசிப் பூனையைப் பார்த்த பிறகு
போதுமா என்று
பதிலைச் சொல்லி
புரண்டு கொண்டேன்.
000
முகத்தை உற்றுப் பார்
பூனையிலிருந்து
மிகத்தொலைவில்
அடர்ந்த இருளுக்குள்
உள்ளது
புலி
புலியின் முகவாட்டம்
குலைந்த ஜியோமிதி
அதில் தெரியும் மடத்தனம்
குழந்தைமை
நிர்வாண வேட்டை
பூனையில் இல்லவே இல்லை.
Comments