Skip to main content

அண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்


காந்தியையும் அம்பேத்கரையும் எதிர்நிலைகளாகப் பாவித்து இந்தியாவில் தொடங்கப்பட்ட தலித் இயக்கத்தின் போக்கை உலகமயமாக்கல் திட்டங்கள் தொடங்கியதன் பின்னணியில் டி.ஆர். நாகராஜ், தீப்பற்றிய பாதங்கள் புத்தகத்தில் பேசுகிறார். வளர்ச்சி அரசியல் என்ற தர்க்கத்தை இந்திய நடுத்தர வர்க்கத்தினரும் அரசுகளும் வேகமாக முன்னெடுத்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கும், தலித் மக்களை அங்ககமாகக் கொண்டிருக்கும் கிராமிய சமூகப் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் நெருக்கடிகளையும் அபாயங்களாக முன் உணர்கிறார். சாதியப் படிநிலையையே ஆதாரமாக கொண்ட இந்தியக் கிராமத்தை தீண்டாமையின் தொட்டில் என்று கூறி அம்பேத்கர் வெறுத்து ஒதுக்குகிறார். அம்பேத்கர் இத்தீர்மானத்துக்கு வருவதற்கான நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் டி.ஆர்.நாகராஜ், உலகமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் காரணமாக கிராமியப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சீர்குலைவு தலித் மக்களின் வாழ்வாதாரத்தைத்தான் முதலில் பாதிக்கும் என்கிறார். இந்தப் புள்ளியில்தான் காந்தியை நோக்கி அவரது சுயராஜ்ஜிய கருத்துகளில் அம்பேத்கரின் இடைவெளிகளை நிரப்பும் சாத்தியத்தை நோக்கி நகர்கிறார். நவீனத்துவம் மீதான ஒருவகை சலிப்பை அம்பேத்கர் பிற்காலத்தில் உணர்வதையும் பௌத்தத்தை நோக்கியும் உருவகக்கதைகளையும் நோக்கி நகர்ந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். இதை அறிவுசார் மறுபிறப்பு என்கிறார் டி.ஆர்.நாகராஜ். ஆனால் தனது மறுபிறப்புக்கான காரணங்களை அந்தப் புதிய புத்தபிட்சு விளக்குவதற்குள் காலம் அவரை நம்மிடமிருந்து பறித்துவிட்டதாக சங்கடப்படுகிறார்.

  எந்திரமயமாதல், கைவினைக்கலைஞர்களையும் குடிசைத்தொழிலாளர்களையும் வேகமாக இல்லாமலாக்கியதால் வாழ்வாதாரத்தையும் கலாச்சார நினைவுகளையும் இழந்த  சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்நிலை மீது நம் அக்கறையை நாகராஜ் குவிக்கிறார்.

ஆதிவாசிகள், தலித் மக்கள் தொடங்கி வெவ்வேறு சமூகத்தினரின் இயல்புகளையும், வெவ்வேறு நிலவெளிகளையும் கொண்டவனாக மக்களின் மனதில் சுமக்கப்பட்ட புராண ராமன் என்னும் கதாபாத்திரத்தை தேசியவாதம் என்னும் செயல்திட்டம், எப்படி அயோத்தி என்ற ஒற்றை நிலவெளிக்குள் ஒற்றைக் கதாபாத்திரமாக மாற்றியது என்பதையும் டி.ஆர்.நாகராஜ் விளக்குகிறார்.

இந்திய மரபைப் பொறுத்தவரை நினைவுகள் திட்டவட்டமாக 'வரலாறாக' தொகுக்கப்பட்டதில்லை என்பதையும் நினைவுகூர்கிறார் நாகராஜ். சரித்திரமும் புராணிகமும் முயங்கும் தருணம்தான் எப்போதும் அபாயகரமானது என்பதை தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு மத, சாதி அடிப்படைவாத, மொழி தேசிய கதையாடல்கள் வழியாகவே நாம் புரிந்துகொள்ள முடியும். 

இன்றைய இந்திய நவீன அரசைப் பொருத்தவரை, நாம் உருவாக்கியிருக்கும் சந்தைப் பொருளாதார கற்பித சொர்க்கத்தைப் பொறுத்தவரை காந்தி, அம்பேத்கர் இருவருமே எதிரிகள் தான்; கொல்லப்பட வேண்டியவர்களதான்  என்ற முடிவுக்கு காந்தி-அம்பேத்கர் கற்பனை சந்திப்பு அத்தியாயத்தில் வருகிறார் நாகராஜ். 

0000

தலித் அரசியல் தாண்டி, உலகமயமாதல் தொழில்நுட்பம் ஏற்படுத்தப் போகும் பல சிக்கல்களை அவர் அவதானித்த விதம் வியப்பை ஏற்படுத்துகிறது. கலாசார நினைவுகளின் பிரச்சினை தொடர்பான கட்டுரையில் கிராமத்து மூதாட்டி சொல்லும் கதை இன்று நாம் இருக்கும் 'கற்பித சொர்க்கத்தை' முன்னுணர்வதாக உள்ளது. சந்திரதாரா வேட்டையாடப் போகும் மாயா ஆரண்யா என்னும் காட்டில் தான் நாம் வசிக்கிறோம். மலர்கள் வாடவில்லை. பழங்கள் அழுகாது. பால் திரியாது. இயற்கை இயற்கையாக இல்லை. மனிதர்கள் மனிதர்களாக இல்லை. குழந்தை பெறுவதற்கு காதல் தேவையற்ற மாய வனம் அது. இதெல்லாவற்றுக்கும் மேலாக அங்கே நினைவுகளும் இல்லை.



நாம் வசிக்கும் இடம் இப்போது மாயாரண்யா வனம் தான். எல்லாமே நுகர்வுக்கும், உச்சகட்ட சந்தோஷத்திற்கான தொழில்நுட்பமாக மாறிவிட்டன. பழம் மரபுகளும், கலைகளும் ,குறியீடுகளும் கூடுமானவரை அழிக்கப்படுகின்றன. அல்லது அதன்  தனித்தன்மை அகற்றப்பட்டு அதன் மரபான பிரபஞ்சத்தில் இருக்கும் சடங்குப்புனிதத்தைத் துறந்து காட்சிப்பொருட்களாக்கப்படுகின்றன."சுறாக்களும், புலிகளும் இனி பழங்குடிகளின் மாயசக்திகளுக்குக் கட்டுப்படப் போவதில்லை."

கெண்டகி ப்ரைட் சிக்கன் கடை மீது கர்நாடக விவசாய அமைப்பினர் நடத்திய சாத்வீகப் போராட்டம் போன்ற சமகால போராட்ட வடிவங்களைப் பரிசீலிக்கும் நாகராஜ் அவற்றை குறியீட்டு முக்கியத்துவம் மட்டுமே கொண்டிருக்கிறது என்கிறார். சங்கிலிப் பின்னலாக இருக்கும் ஒரு வர்த்தகத் தொடரின் ஒரு கண்ணியைத் தாக்குவதன் மூலம் மூலத்தை சிறிதளவு கூட சேதப்படுத்த முடியாதென்கிறார். இந்த வகைப் போராட்டங்களை  எதிர் மாந்திரீக, செய்வினைச் செயல்பாடுகளுடன் ஒப்பிடுகிறார்.

000

படைப்பியக்கம் என்பது அதிகாரத்திற்கெதிரான எதிர்ப்பும், நீதிக்கான அவாவும், அதிலிருந்து எழும் சிக்கல்களும், அழகுக்கான தேடலும், சுயம் என்று வரையறுக்கப்பட்டதை அழிப்பதற்குமான காரியம் என்று நான் வரையறை செய்கிறேன்.  தனி மனிதரோ, ஒரு எழுத்தாளரோ, ஒரு கவிஞரோ இந்தப் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் ரசித்துக் கொண்டே, சக மனிதர்கள் மீதான ஒடுக்குமுறையைக் கைக்கொள்ள முடியும். நாகராஜின் கட்டுரையில்  எறும்புகளுக்கு சர்க்கரை இட்டு அன்பு செலுத்தும் பெண்ணின் மனநிறைவில்தான்  தமிழ் படைப்பிலக்கியமும், படைப்பாளிகளும் தத்தமது பிரபஞ்சத்தில் வேதாந்திகளாக இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் வெளிப்படுத்துபவர்களில் ஒருவனாக இருக்கிறேன்.

இந்த அக்கறையற்ற மற்றவர் உலகங்களைப் பொருட்படுத்தாத, சுயத்திற்கு எந்த ஊறும் நேர்விப்பதை விரும்பாத, வெறும் அழகியல் செயல்பாடாக தமிழில் மாற்றுக் கலாசார செயல்பாடுகள் மாறியுள்ளன. படைப்பும் வாசிப்பும் சுயத்துக்கு ஊறுவிளைவிப்பது என்ற பிரக்ஞையே இல்லாமல் தமிழில் இன்று  ஆயிரக்கணக்கான கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் மலட்டுத்தன்மையுடன் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 இதற்கு நேரெதிரான புள்ளியில் டி.ஆர்.நாகராஜ் திறக்கும் கதைகள் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றுக்கு இனவிருத்தி உறுப்புகள் இருக்கின்றன. தலித் அரசியல் கோட்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும், தலித் அல்லாத படைப்பாளிகளும் தங்கள் அக்கறை சார்ந்த பிரபஞ்சத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் உரையாடிக் கொள்ளவும் இந்தப் புத்தகம் நல்லதொரு வாய்ப்பு.

 தீப்பற்றிய பாதங்களை வாசிக்கும் போது, தலித் அல்லாத இங்குள்ள சாதிய அடுக்கில் மேல்சாதிப் பின்னணியைச் சேர்ந்த எழுத்தாளனாகஎனது உலகம் இன்னும் விரிவடைய வேண்டும் என்ற ஓர்மையை டி.ஆர்.நாகராஜ் உருவாக்குகிறார். ஒரு தலித் தன்னிலைக்கும் எனக்கும் இடையே சமூக, கலாசார, வாழ்நிலை, சுயமரியாதை, படைப்புநோக்கின் அடிப்படையில் ஒரு கடல் அளவு இடைவெளி உள்ளது. தலித் அரசியலின் அடிப்படையில் எனது கவிதையும், எனது வாழ்நிலையும் தலித்களின் படைப்புக்கும், அவர்களது அரசியலுக்கும் எதிர்நிலையில் தான் வைக்கப்பட்டுள்ளது. அல்லது 'எதிரிநிலை' என்ற கற்பிதத்தையும் சந்தேகங்களையும் பரஸ்பரம் நாங்கள் இருவரும் பரிமாறிக் கொள்கிறோம். தமிழ் சூழலைப் பொருத்தவரை ஒரு ' நெருக்கமான எதிரி' என்ற அந்தஸ்தைக் கூட இருவரும் கொடுத்துக் கொள்ளவில்லை. அதற்கான ஆளுமைகளும் இங்கே சாத்தியப்படவுமில்லை.

  தமிழில் தலித் அரசியல் சார்ந்து மிகுந்த சீற்றத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோட்பாட்டு விவாதங்களை மட்டும் இதற்கு பொறுப்பாக்க இயலாது. அதை எதிர்கொண்ட தலித் அல்லாத படைப்பாளிகள் மற்றும் படைப்புச்சூழலும் தான் காரணம் என்பதை காலதாமதமாகவாவது நாம் உணரவேண்டும். காந்தியும், அம்பேத்கரும் சந்திக்கவே முடியாத பகைப்புள்ளிகளாக இன்றும் இங்கே இருப்பது இந்தப் பின்னணியில்தான். அந்த இடத்தில் தான்  கர்நாடக தலித்  கலாசார அரசியல் பின்னணியில் காந்தியையும், அம்பேத்கரையும் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் டி.ஆர்.நாகராஜ் சந்தித்து உரையாட வைக்கிறார். அதனால்தான் கன்னட நவீனத்துவத்தின் அடையாளமான படைப்பாளி யு.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் அவரது படைப்புகளுடன் தொடர்ந்து உரையாடல் அவருக்கு சாத்தியமாக இருந்துள்ளது. யு.ஆர்.அனந்தமூர்த்தியை அவர் துரோணாச்சாரியராகவும் தன்னை சிஷ்யனாகவும் அவர் பாவித்துள்ளார். அவர் அர்ஜூனனாவும், ஏகலைவனாகவும் இரண்டு சுயங்களைக் கொண்டவராக தன்னை உணர்ந்தும் உள்ளார். அதனால்தான் "கவிதை ஒரு வாளாகட்டும்" என்று கன்னட தலித் இயக்கத்துக்கு அவர் கொடுத்த முழக்கம் எனது கவிதையையும் அதிரவைக்கும் மந்திரச் சொல் ஆகிறது.

 தமிழ்ச் சூழலில் பரஸ்பரமான முரண்பாடுகளுடனயே தலித் கோட்பாட்டு அரசியலாளர்களுக்கும், தலித் அல்லாத நவீன எழுத்தாளர்களுக்கும் இணக்கமான உரையாடல் ஒன்று நடைபெறவேயில்லை. இதனால் இருதரப்பினருமே விரல்களை மட்டுமே காலனிய அறிவுக்குப் பறிகொடுத்த ஏகலைவர்கள் ஆனோம். வேறு வேறு விரல்கள், வேறு வேறு திறன்களைக் கொண்டவை என்பதையும் இங்கே வலியுறுத்துகிறேன்.

  வாழ்க்கையின் வேறு வேறு யதார்த்தங்கள், அவை காண்பிக்கும் சிக்கலான தோற்றங்களுக்குள் பயணம்புரிவதற்குத் தயாரற்ற இடங்களாக படிப்படியாக கலாச்சார, அரசியல் வெளிகளை உருவாக்கி விட்டோம். நமது மரபு மற்றும் புனைவுகளின் மேல் முழுக்க நம்பிக்கையற்ற அரசியலாளர்களும் எழுத்தாளர்களும் கோஷதாரிகளும் தொண்டு நிறுவன மனோபாவிகளும் உருவாக்கிய கண்கூசும் வெளிச்சக் கூச்சலில் இந்த உரையாடலுக்கான சாத்தியத்தையே தொலைத்து நிற்கிறோம். 

தலித் விடுதலை சார்ந்து படைப்பு மூர்க்கமும், நடந்த தீவிர கோட்பாட்டு விவாதங்களும் தமிழ் சூழலில் தொடங்கி இருபது ஆண்டுகளைக் கடந்து, மையநீரோட்ட அரசியலின் ஒரு பகுதியாகவும் இன்று உறுதிப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒடுக்கப்பட்டோர் எழுத்து மட்டுமின்றி ஒட்டுமொத்த படைப்பியக்கச் சூழலும் தேக்கமடைந்திருப்பதான ஒரு தோற்றம் இருக்கிறது.



இந்தச் சூழலில் டி.ஆர்.நாகராஜின் சிந்தனைகள் தமிழுக்கு வந்திருப்பது தலித் இலக்கியம் மட்டும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை சார்ந்த கலாச்சார அரசியலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த படைப்புச்சூழலையும் சூழ்ந்திருக்கும் ஒரு மலட்டுத்திரையைக் கிழிக்கும் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது. சற்றுத் தாமதமாகவாவது நாம் காந்தி மற்றும் அம்பேத்கருக்கு இடையே இன்னும் சாத்தியமுள்ள உரையாடலை, காலனிய அறிவிலிருந்து சற்று பின்னகர்ந்து ஆற்றலும் ஊக்கமும் கொண்ட இந்தியப் பௌராணிகராக டி.ஆர்.நாகராஜ் கதை நிகழ்த்துவதைக் கேட்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்துள்ளது.


 டி.ஆர். நாகராஜ்  மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நெசவாளியின்  மகன். டி.ஆர். நாகராஜ் என்ற  அந்த அண்டை வீட்டு நெசவாளரின் தறி பேசும் பேச்சுக்கு தமிழ் சமூகம் சற்று செவிகொடுக்கட்டும்.  இதற்கு வாய்ப்பளித்த மொழிபெயர்ப்பாளர் ராமானுஜத்துக்கு நன்றி சொல்ல தமிழ்வாசக சமூகம் கடமைப்பட்டுள்ளது.
(சிலேட் இதழில் வெளியானது)

Comments