Skip to main content

வெறுமையுடன் ஒரு நடனம்






மார்டின் பட்லர்

((போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu  என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும் அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன்.)

வடிவமாக இல்லாததற்கு வடிவம் கொடுக்க முயல்வது தவிர்க்கவே முடியாத செயலாக இருப்பதால், ‘வெறுமை’ குறித்து எழுதுவதில் உள்ளார்ந்த நிந்தித்தல் உள்ளது. இன்னும் தெளிவாகப் பார்ப்பதற்கு உதவக்கூடிய, பயன்பாட்டுக்குப் பிறகு அகற்றப்பட வேண்டிய தற்காலிகச் சாரக்கட்டுமானங்களாகவே இந்தத் தன்மையிலான கட்டுரைகளை அணுக வேண்டும்.
ஒரு காலியான இடம் தொடர்ந்து காலியாக இருப்பதில்லை, ஒரு அமைதியான மனம் தொடர்ந்து அமைதியாக இருப்பதில்லை என்பதால் இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்று கூறப்படுவதுண்டு. உண்மையில் காலியான வெளியென்று எதுவுமே இல்லை. மிகக் குட்டியூண்டு இடத்தில் கூட, துணை அணுத்துகள்கள் சிறு இடைவெளிகளில் நுரைத்துத் தோன்றி மறைகின்றன. இருக்கும் எல்லாப் பொருட்களையும் எல்லாம்’ என்று கூறி இருப்பை வெற்றிடத்திலிருந்து வேறுபடுத்துகிறார் லாவோட்சு.

அவர் வெற்றிடத்தை இருள், அமைதி மற்றும் மர்மம் நிறைந்ததாகக் காண்கிறார்.  எல்லாப் பொருட்களையும் அவர் தற்காலிகத் தோற்றங்களாக, உபயோகப்படுத்தப்பட்ட பின் நெருப்பில் எறிய வேண்டிய அலங்காரப் பொருட்களின் குப்பைகளாகவே அவர் பார்க்கிறார். “வானக, வையகத்திற்குத்/ தங்கள் கருணை சொந்தமில்லை;/ அவற்றுக்கு அனைத்தும் வைக்கோல் நாய்தான். / ஞானிக்கும் தன் கருணை சொந்தமில்லை/ அவனுக்கு மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.” என்கிறார் லாவோட்சு. சீனாவில் சடங்குகளின்போது வைக்கோலில் செய்யப்பட்ட நாய் பொம்மைகளை வைப்பார்கள். அந்த வைக்கோல் நாய்கள் சடங்கு முடிந்தவுடன் கழிக்கப்படும் அல்லது தீயில் தூக்கியெறியப்படும். அந்த வெறுமையைத் தான்- நீ மற்றும் நான் உட்பட- அனைத்துத் தற்காலிகத் தோற்ற உருவங்களும் பிறக்கும் கருப்பையாக மதிப்பிடுகிறார்.

இயற்கையைப் போன்றே, மனிதர்களும் வெறுமையை நிரப்பும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வெறுமையின் தாங்க முடியாத மௌனத்தை நொறுக்குவதற்காக, பெரிய பெரிய கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் சிந்தனையில் உருவாக்குகிறோம். அர்த்தம், காரணம், மதிப்பீடுகள், ஒழுங்கு, நல்லது, கெட்டது இன்னபிறவற்றின் அடிப்படையில் நாம் சிந்திக்கிறோம். ‘காரணம்’ மற்றும் ‘அர்த்தம்’ ஆகிய கருத்துருக்கள் அனைத்தும் முற்றிலும் பெரும்பாலானவர்களால் கண்டுகொள்ளவே படாத மனுஷ விவகாரங்களே- காரணம், அர்த்தம் குறித்து பிரபஞ்சத்துக்கு எதுவுமே தெரியாது. எதார்த்தத்தில், இந்த கருத்துருவங்கள் அனைத்தும், அந்த எல்லாப் பொருட்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நித்தியமான மௌனத்தைத் தவிர்ப்பதற்காக, நம்மை மதிப்பிட்டுக் கொள்வதற்கான முயற்சிகள் தான். ஸ்பினோசா, கடவுளை, “இருப்புக்கான ஆற்றல்” என்று குறிப்பிடுகிறார். எல்லாமும் தோன்றி மறையும் வெளியாக இருக்கும் இருப்பென்பது கூர்ந்து கவனிக்கப்பதற்கு லாயக்கற்றதே. ஆனால் வெற்றிடமோ, தோன்றாமலும் நித்தியமாகவும் இருப்பதால் தூய்மையான ஆற்றலாக உள்ளது. அத்துடன் அர்த்தம், காரணம், நல்லது, கெட்டது என்று கண்டு கற்பிக்கும் முயற்சிகள் எல்லாம் வெறுமையைக் காலியாக்குவதைத் தவிர வேறில்லை.

வெறுமையுடன் நடனமாடுவதென்பது, இச்சைக்குரிய துணையுடன் நடனமாடுவதைப் போன்றது. கொஞ்சம் கூடுதலாக நெருங்கும் ஆசை தவிர்க்கவே முடியாதது. நம்மில் ஒவ்வொன்றும் அந்த வெறுமையை - விளக்க, மேலும் பொருள் சேர்க்க, வாழ்க்கைக்கு அர்த்தம் தர, ஒரு லட்சியத்தை வைத்திருப்பதன் வாயிலாக- நிரப்புவதற்கு விரும்புகிறது. ஆனால் அதைச் செயல்படுத்தும் போது, நாம் மெய்யான வாழ்க்கையைக் கொன்று விடுகிறோம். அதற்குப் பதிலியாக ஒரு சமயத்தையோ, ஆன்மிகப் பயிற்சியையோ, கருத்தியலையோ, ஒழுக்கம் தொடர்பான கருத்தமைவுகளையோ நாம் உருவாக்கிய பூதங்களாக உலவ விட்டு விடுகிறோம்.
வெறுமையை அழிப்பதற்கு வாழ்வு தரும் அழைப்பை நிராகரித்தபடியே வெறுமையுடன் நடனமாடுவதுதான் உச்சபட்ச நடனம். தோன்றாததற்கும், தன்னை நிரப்பிக் கொள்வதற்கு ஆசைப்படும் தோன்றியதற்கும் நிலவும் தீராத பதற்றம்; தற்போது இந்தச் சிறுகட்டுரை முடிந்துவிட்டது. வெறுமையை நிரப்ப மேற்கொள்ளப்படும் இன்னொரு முயற்சி என்று அதை நீங்கள் தூரப்போட்டு விடலாம்.

(இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைக் காண corporealfantasy.com)



Comments