Skip to main content

ரத்தம் குடிப்பார்கள்



போக்குவரத்து நெருக்கடியும் பரபரப்பும் மிக்க 
மாநகரமாக சென்னை ஒரு தோற்றத்தில் தெரிகிறது. ஆனால், பரபரப்புக்கு அருகிலும் அமைதியும் ஆசுவாசமும் கொண்ட நிழலிடங்களும் இங்கே உண்டு. வேளச்சேரியிலிருந்து கடற்கரை நிலையம் வரை செல்லும் ரயில் நிலையப் பாதையும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களும் இதற்கு உதாரணம். ஐம்பது வருடங்களுக்குப் பின்னரும் வரவிருக்கும் பயணிகளின் எண்ணிக்கையை உத்தேசித்து கட்டப்பட்ட பிரமாண்ட ரயில் நிலையங்களும் அதைச் சுற்றி ஏகாந்தமாக இருக்கும் காலியிடங்களும் குறுக்குவெட்டாகச் சென்னையைப் பறவைக் கோணத்திலிருந்து பார்க்கும் சவுகரியமும் கொண்ட தடம் அது. அப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருங்குடி ரயில் நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இருந்தன



பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் சாலை ஒரு நிலை வரை போடப்பட்டு நடுவில் உள்ள ஏரியால் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. காலை நடைப் பயிற்சியாளர்கள், மாலை நடை செல்லும் வயோதிகர்கள், உடன் வரும் ராஜபாளையம் நாய்கள், அரிதாக வரும் காதலர்கள், கோடைக் காலத்தில் வீல் ஸ்கேட்டிங் செய்யும் குழந்தைகள், சதுப்பு நிலத்துக்கு வரும் பறவைகளோடு ரயில் சத்தம் மட்டுமே அவ்வப்போது ஊடுருவும் அமைதிப் பள்ளத்தாக்குபோல இருந்தது பெருங்குடி ரயில் நிலையப் பகுதி.  

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 500 அடி தூரத்துக்குள் மதுக்கடைகளும் பார்களும் இருக்கக் கூடாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வேளச்சேரியின் பிரதான பகுதியில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பின் ஓரிரு மாதங்களில் பெருங்குடி ரயில் நிலையத்தின் குடியிருப்பு வீடுகள் துவங்கும் பாலகிருஷ்ண நகர் பிரதான சாலையின் முனையில் நீலத் தகடுகளுடன் ஒரு பெரிய ஷெட் ஒன்று ஒருநாள் முளைத்தது. அடுத்த சில நாட்களில் அது ‘டாஸ்மாக்’ மதுக்கடை ஆனது. 

நான்கு நாட்கள் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி நடுத்தர வர்க்க குடியிருப்புவாசிகள்; சில தினங்களுக்கு அந்த ஒயின்ஷாப்பைபோலீசார்ஜீப்களோடுவந்துபெண்போலீசாரும்சேர்ந்துபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.அவசரத்துக்கு ஐநூறு அறுநூறு மீட்டர் நடந்தால்தான் ஒரு பெட்டிக்கடைக்குப்போய் குடிநீர் வாங்கிக் கூடக் குடிக்க முடியக்கூடிய சூழ்நிலையில் பெண்போலீசார், மொட்டை வெயிலில் அந்த ஒயின்ஷாப்புக்கு முன்னர் காவலுக்குநின்றிருந்தனர். கூடுதலாக போலீஸ் பந்தோபஸ்தையும் அந்த மதுக்கடை பெற்றதுதான் அவர்களுக்குக் கிடைத்த பலன். பறக்கும் ரயில் தரமணி ரயில் நிலையத்தைத் தாண்டும்போது உருவாகி வரும் புதிய கட்டுமானங்களுக்கருகே பார்க்க இயலக்கூடிய புலம்பெயர் தொழிலாளிகள் உறங்கும் கொட்டகையைப் போல நெளிந்து சரிந்த நிலையில் புதிய டாஸ்மாக் கடை, இப்போது அந்த இடத்தின் ரணமாக மாறியுள்ளது.

நீலத் தகரச் சுவர்களுக்குள் மதுப்புட்டிகளை விற்பனை செய்வதற்கு உள்ள இடத்தைத் தவிர மிச்சமிருக்கும் நான்கு சென்ட் ஒரு கழிப்பறைபோல மாற்றப்பட்டுள்ளது. தண்ணீர் பாக்கெட்கள், தூக்கி வீசப்பட்ட மதுக்குப்பிகள், உடைந்த கண்ணாடிச் சில்லுகள் என அந்தக் கழிப்பறை மதுக்கடையைச் சுற்றி வீடுகளால் விழுங்கப்படாமல் இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகள், சாலையெங்கும் கிடக்கின்றன. எதிரே ரயில் பாலத்தினடி, இடது புறம் ஏழு நகர் குடிசைப் பகுதி, வலப்பக்கம் புதிதாகப் போடப்பட்ட சாலைகளின் பிளாட்பாரங்கள் வரை அந்தக் கழிவுகள் நீண்டுள்ளன.

புதிதாக இன்னொரு கலாசாரமும் அங்கே உருவாகியுள்ளது. காலை ஐந்தரை, ஆறு மணிக்கே அங்கு விற்கப்படும் மதுவைத் தேடி வேலைக்காகச் சென்னைக்கு இறங்கும் கூலித்தொழிலாளர்கள், அக்கம்பக்கத்து குடிசைப் பகுதி மக்கள் வரத் தொடங்கினர். சனி, ஞாயிறுகளில் பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து வார விடுமுறைக்குச் சென்னைக்கு வந்து செல்லும் இளைஞர்கள் இந்த டாஸ்மாக்கின் மதுவைக் குடலில் சரித்த வெதுவெதுப்போடுதான், புதிய நகருக்குள் தங்கள் பரிச்சயத்தைத் தொடங்குகின்றனர். 

கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்துகொண்டிருக்கும் சதுப்பு நிலப் பகுதிகளில் வளரும் நாணல்புற்கள் அங்கு வீசப்படும் பாட்டில்களின் மிச்ச மதுவையும் உறிஞ்சியே வளருகின்றன. நீலத்தாழைக் கோழிகள் சாப்பிடும் புழுக்களோடு கொஞ்சம் மதுவும் இருக்கும். புராணிக அன்னத்தின் பிரமாண்டத்தையும் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்தும் கூழைக்கடாக்கள் மீனை விழுங்கி, சூரியனை நோக்கி கெக்கலித்து தண்ணீரைச் சலித்து விடும்போது அவை போதையில் இருக்கிறதாவென்று தெரியவில்லை. டாஸ்மாக் கடைகள் மேல் கரையும் காகங்கள், டாஸ்மாக்கைச் சுற்றி உலவும் எலிகள் மதுவுக்குப் பழகி இருபது ஆண்டுகளாகிவிட்டதென்பது மட்டும் நிச்சயம்.

இந்த டாஸ்மாக்கின் அருகில், கழுத்தில் வாடாமல்லி நிற பழைய சால்வை, லுங்கி, நரைத்த தாடியுடன் கருத்த முதியவர் ஒருவரை காலையிலிருந்து இரவு வரை நீங்களும் பார்க்க முடியும். ஒருவருடத்துக்கும் மேலாகத் தென்படுகிறார். அவர் சென்னையைச் சேர்ந்தவர் அல்ல; வடமாநிலத்தவரும் அல்ல; சகல வழிகளும் திறந்திருக்கும் இந்தப் பெருநகரத்துக்கு காலையிலோ ஒரு மதியவேளையிலோ இரவிலோ வந்தவராக இருக்க வேண்டும். சூரியனுக்கு முன்னாலேயே அவர் அந்த டாஸ்மாக்குக்கு முன்னர் உதயமாகிவிடுகிறார். புதிதாக அப்பகுதிக்குக் கூடையுடனோ சிறு பையுடனோ வரும் உதிரித் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாங்கும் முதல் குப்பி மதுவுக்கும் இடையே அந்தப் பொன்னான காலையின் நல்லெண்ணத் தூதர் அவர்தான். உறங்கியிருப்பது போல, பூட்டியிருப்பது போலத் தெரியும் அந்தக் கடையின் ரகசிய வழிகளைத் தெரிந்தவர்களில் அவரும் ஒருவர். மதுவையும் துணை உணவுகளையும் வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி அவர்கள் விரும்பினால் அவர்களோடு அவர் உட்கார்ந்து பேசுகிறார்; காலையிலும் மாலைவேளையிலும் அவர் போதையின் உச்சத்துக்குச் சென்று ஒரு கலைஞனின், ஒரு ரட்சகனின், ஒரு நேசனின் நிலையை அடைகிறார். அப்போது அவர் கைகளை விரித்துப் பாடுகிறார். பிதுங்கும் தண்ணீர் பாக்கெட்களை மிதித்தபடி அவர் அங்கே வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் கொண்டுவரும் சுமைகளைப் பாடியபடி சுமக்கிறார். 

எப்போதும் பெருங்குடி ரயில் நிலையத்தைச் சுற்றும் புதிய நாய்க்குட்டிகள் அவர் பின்னாலேயே வருகின்றன. சில நேரங்களில் நெகிழ்ச்சி அதிகரிக்கும்போது ஒரு குட்டியையும் அவர் சால்வைக்குள் எடுத்து இடுக்கிக் கொள்கிறார். 

ஒரு உறங்காத நகரத்தின் கனவுகளை அவிழ்க்கும் திரவங்களைக் குப்பிகளில் வைத்திருக்கும் டாஸ்மாக், நள்ளிரவில் களைத்து உறங்குகிறது. சற்று தூரத்தில் போலீஸ் ரோந்து வாகனம் நீல, சிகப்பு விளக்குகளோடு நிற்கிறது. சுற்றி 400 மீட்டர் சுற்றளவுக்கு அதன் குப்பைகளும் கழிவுகளும் நீள்கின்றன. இவ்வளவும் குடியிருப்புப் பகுதியில்தான் ஒரு ரயில் நிலையத்துக்கு எதிரேதான் பட்டவர்த்தனமாக நடக்கின்றன. இந்தக் கதையைப் படிக்கையில் உங்களுக்கு உங்களூர் கதை நினைவுக்கு வரலாம்.

சுத்தமான கழிப்பறை, வயிற்றை மேலும் துன்புறுத்தாத உணவுக்குக் கூட உத்திரவாதமில்லாத டாஸ்மாக்கில் வாங்கப்படும் ஒரு பாட்டிலின் விலை, அதன் அடக்க விலையை விட பத்து மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. 

கடந்த இருபது ஆண்டுகளில் டாஸ்மாக் குடியால் உடல் நலிந்து பாதிக்கப்பட்டு மரணங்களுக்குள்ளாகுபவர்கள் அதிகமாக ஏழைகள் தான். குடிசைப்பகுதிகளில் நினைவு அஞ்சலி போஸ்டர்கள் அதிகரித்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் விற்கப்படும் மதுவின் குறைந்தபட்ச தரமதிப்பீடுகள் தமிழகத்தில் விற்கப்படும் மதுவகைகளில் பேணப்படுகிறதா என்பதும் சந்தேகத்துக்கிடமானது. வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்கிடையே எழுந்து வரும் தலித் சமூகத்தின் உழைப்பு ஆற்றலும் தலித் மூலதனமும் குடியால் எப்படி வீழ்த்தப்படுகிறது என்பதை சமூகவியலாளர்கள் ஆராய வேண்டிய தருணம் இது. 

கார்ல் மார்க்ஸ் காலத்திய ஐரோப்பியச் சூழல் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஏழைக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்ல பொருட்களோ உத்திரவாதங்களோ கனவுகளோ வெகு தொலைவில் கூட இல்லாத வெற்றிடச் சூழலில் மது மட்டுமே தற்காலிக ஆறுதலையும் விடுதலையையும் அளிக்கிறது. மது தவிர தமிழக ஆண்களைச் சேர்த்திணைக்கும் ஆரோக்கியமான இடங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் புதிதாக உருவாகவில்லை.

அரசு நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, கலாசாரம், பொழுதுபோக்கு, வெகுமக்கள் பண்பாடு, பொது ஆரோக்கியம் என தமிழகத்தின் ஆறுவழிச் சாலைகள் முயங்கிப் பிரியும் முனையாக இன்று ‘டாஸ்மாக்’ உருவெடுத்து நிற்கிறது. சமூகத்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடைவெளி அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் மது ஒரு மலிவான தீர்வாக மாறுவது சகஜம்; இந்த நிலைமையை ஆளும் வர்க்கமும் சேர்ந்தே தக்க வைக்க விரும்பும்.

தமிழகமெங்கும் முக்கியமான மதுச்சாலைகள் குடிசைப்பகுதிகளுக்கு அருகிலேயே இருக்கின்றன. மாலை வேளைகளில் வவ்வால்கள் போல கொத்துக்கொத்தாக, மதுச்சாலையின் கம்பிச்சதுரங்களுக்கு முன்னர் கையை நீட்டித் தொங்கிக் கொண்டிருப்பது தமிழகத்தின் அன்றாடக் காட்சிகளில் ஒன்று.  

19-ம் நூற்றாண்டின் பின்பகுதியில் ரஷ்யாவில் வாழ்ந்த இலக்கிய மேதை ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தனது கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இதைத்தான் சொல்கிறார்: “ஏழைகளின் நிலையும் அதுதான். தமது தேவைகள், ஆசைகள் நிறைவேறாத தவிப்பாலும், பொறாமையாலும் குடியில் வீழ்ந்து மூழ்கிப் போவார்கள். இந்த மாதிரி தூண்டிவிடப்படுவதால் இன்று பெருகுவது சாராயம்; நாளை ரத்தம்! அதாவது இன்று மது குடிப்பவர்கள் நாளை ரத்தம் குடிப்பார்கள்!”

மகளையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புக்கொண்டிருந்த போது, மனைவியும் மகளும் கண்மூடித்தனமான போதையில் வந்த குடியர்களின் வாகனத்தால் அடித்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துபோன ஆனைகட்டி சம்பவம் ஞாபகத்து வருகிறது. மனைவியின் சடலத்துடன் அதே சாலையில் அமர்ந்து ‘டாஸ்மாக்’ மதுக்கடைக்கு எதிராக இரவு வரை போராட்டத்தில் அமர்ந்திருந்த மருத்துவரும் சமூகச் செயல்பாட்டாளருமான ரமேஷின் புகைப்படம் ஒரு வாரக் காலமாகப் பார்ப்பவர்களின் மனத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. 

தஸ்தயேவ்ஸ்கியின் கடைசி வரி மீண்டும் நினைவுக்கு வருகையில் அந்தக் குடியர்கள் மட்டும் இல்லை; நம்மை ஆளும் ஆட்சியாளர்களும் கண் முன் வந்து போகிறார்கள். “இன்று பெருகுவது சாராயம்; நாளை ரத்தம்! அதாவது இன்று மது குடிப்பவர்கள் நாளை ரத்தம் குடிப்பார்கள்!”























































Comments