Skip to main content

கஜேந்திர மோட்சம்




நாங்கள் குடியிருந்த வளவில்
எல்லாருக்கும்
முதியவளாகவே
அறிமுகமான அருணாசலத்தாச்சியின்
வீட்டு நடு அறைச் சுவரில்
கஜேந்திர மோட்சம்
காலண்டர் ஓவியத்தைப் பார்த்தேன்
அந்தப் பழுப்புச் சித்திரத்தின் மேல்
வைத்த கண்ணை
இன்னமும் எடுக்கவே இல்லை
அந்தப் படத்தைப் பார்த்தபோது
நான் முதலையாக இல்லை
கஜேந்திரனை சக்கராயுதம் கொண்டு
மேலேயிருந்து காப்பாற்றிய
ஆதிநாராயணனை
நான் சரியாகப் பார்க்கவில்லை
யானையின் தீனக்குரல் கேட்கிறது இன்னமும்
அது மீளும் நிம்மதியும் அந்தச் சித்திரத்தில்
இருக்கிறது
சிறுவனின் கதை
முதலையில் தொடங்கி
யானை வழியாக
ஆதிமூலத்தில்
முடிகிறது
பச்சையாய் நீரோடை
முதலை பற்றியிருக்கும்
யானையின் காலும்
தெரியும் ஸ்படிகத் தன்மை
காலில் ரத்தம் கண்ணில் கண்ணீர் கசிய
தும்பிக்கையை உயர்த்தியபடி அபயக்குரலிடும்
யானை
சாட்சியாகச் சுற்றிலும் காடு
மலைகள்
தாமரைகள்.

Comments