Skip to main content

இந்த உலகத்தின் விள்ளல் உனக்கு

  


காலையிலேயே துவங்கும்

உலகின் கலவர ஓசைகளுக்கு மேலே

மறுபடியும்

குயிலின் குரல்

எனக்கு உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது

 

இருபதாம் நூற்றாண்டின்

மகத்தான மனங்கள் என்று சொல்லப்பட்ட மனிதர்களின்

விதைப்பைகள் அனைத்தும் சலிக்கப்பட்டுவிட்டன

மகத்துவங்கள் ஓட்டைத்துணிகளாகத்

தொங்கவிடப்பட்டுக் கொண்டிருக்கும்

நூற்றாண்டு இதில்

மீண்டும்

குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது

 

வறுமைக்கும் வெப்பத் தாக்குதல் மரணங்களுக்கும்

ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் பால்யவயது திருமணங்களுக்கும்

ஒரு இட்லியை விட மலிவாக இணையத்தரவு கிடைப்பதற்கும்

அதிகரிக்கும் மதக்கலவரங்களுக்கும்

உள்ள தொடர்பை

புரிந்து மொழிபெயர்த்து விளக்குவதற்கு

என் கவிதை சிரமப்படும்போது

குயிலின் குரல் உரக்கக் கேட்கத் துவங்கியுள்ளது

 

பழைய செங்கோல் ஒன்றுடன் மடாதிபதிகள்

எமது நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது

குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது

வரலாற்றுப் பழிகளின் பேரால்

தாய்மார்களின் வயிறு கிழிக்கப்படுவதற்கு

தன் பெயரும் உடந்தையானதை

பார்த்தும் பாராமல்

ராமன் தனது டெஸ்லாவில் ஏறியபோது

மறுபடியும்

குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது

 

எதுவுமே மாறவில்லை

எதுவுமே மாறாது

என்ற மூர்க்கத்துடன்

வைதீகக் குரல்களின் பொய் வன்மங்கள்

என் செவிகளில் மோதி ஆக்கிரமிக்கும்போது

உன் உலகத்தைத் துளைத்தே தீர்வேன்

என்ற வாத்சல்ய மூர்க்கத்துடன்

அந்தக் குயிலின் குரல்

எனக்கு உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது

 

அம்மா இறந்தபிறகு

கேட்கவே கேட்காத

குயிலின் குரல்

மீண்டும் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது

 

தர்மனின்

வாகனம்

மீண்டும் நாற்சந்தியில் நிற்கிறது

அம்மா

இந்தக் கலவரக் குழப்பங்களில்

குழந்தைகளும் நாய்க்குட்டிகளும்

நாதியற்றவர்களாக

பிறந்து துள்ளித் திரியும்

விபரீத நாட்களின் தெருக்களில்

குயிலின் குரல் மூர்க்கமாகத் துளைக்கத் தொடங்கியுள்ளது

அம்மா.

Comments

G.S.Dhayalan said…
காலையில் தொடங்கிய குயிலின் குரல் அந்திக்கு அப்பாலும் உரத்து கேட்கிறது. அழகிய மொழியில் ஆழம் போல் ஒரு கவிதை.
G.S.Dhayalan said…
காலையில் தொடங்கிய குயிலின் குரல் அந்திக்கு அப்பாலும் உரத்து கேட்கிறது. அழகிய மொழியில் ஆழம் போல் ஒரு கவிதை.