ஒற்றை இதயத்தின் வாசனையை நாடாதே அதன் ஆறுதலில் வாழாதே அங்கே தனிமை பின்னிய அச்சம் குடி கொண்டுள்ளது நான் அழுதேன் ஏனெனில் நான் கண்டது ஒற்றை அன்பின் தனிமையை நிழல்களின் நடிப்பில் வதங்கிக் கிடந்தது மலர் . இந்தக் கவிதையை எழுதியவனை முழுமையாகக் கவிஞன் என்று சொல்ல முடியாது . அவனது அடையாளம் நம் காலத்தில் வாழ்ந்த மெய்யியலாளன் . அவன் ஜே . கிருஷ்ணமூர்த்தி . உலகத்தின் அத்தனை மருத்துவ வசதிகளையும் பெறும் நிலையிலிருந்தும் தன் சகோதரனைத் தவறவிட்ட தன் அனுபவத்திலிருந்து இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார் . பிரான்சிஸ் கிருபாவோ மெய்யியலாளன் அல்ல . தொலைத்தவளிடமே தொலைக்கப்பட்டவனாக மண்டியிட்டு மன்றாடுபவன் . ‘ உன்னை உன்னிடம் கேட்பேன் ஏழு முறையல்ல எழுபது முறையல்ல எல்லா முறையிலும் உன்னை உன்னிடம் கேட்டு மன்றாடுவேன் ’ என்பது தான் அவனது எல்லாக் கவிதைகளிலும் வைக்கும் பொதுவான முறையீடு . அது பைத்தியமாக துயரமாக நோய்மையாகத் தெரிகிறது . அறிந்ததின் நிலையத்தில் நின்று சொல்லும் உண்மையாக கிருஷ்ணமூர்த்தியுடையது அமர்ந்திருக...