Skip to main content

Posts

முதல் வெளிச்சம்

  தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து விரட்டிய பைத்தியமும் பாட்டியால் ரகசியம் காக்கப்பட்ட தாய் தந்தையரின் சாவும் அமானுஷ்யம் பூண்டிருந்த மாளிகையின் அறையில் அடைக்கப்பட்ட மூத்த சகோதரனின் நள்ளிரவு ஓலங்களும் சாமங்களில் விடாது ஒலித்த ஆந்தையின் அலறலும் இடைவெளியின்றி அவன் தலையில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. குழப்படிகள் மற்றும் நிச்சயமின்மைகளின் கனத்த இருட்டிலிருந்து தர்க்கத்தின் வெளிச்சத்தை, அதன் நிச்சயத் தன்மையைக் கனவுகண்டு சிறுவன் பெட்ரண்ட் ரஸ்ஸல், டிரினிட்டி கல்லூரிக்கு நகர்ந்தான். முதல் காதலி ஆலிஸை 17 வயதில் ரஸ்ஸல் அங்கேதான் சந்தித்தான். வேட்கையின் களங்கமும் காதலின் தூய்மையும் ரஸ்ஸலை புதிதாகப் பிளந்தன. நாகரிகத்தின் பாவனையும், விவேகத்தின் தர்க்கமும் வாலிபன் ரஸ்ஸல் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்தன. டிரினிட்டி கல்லூரியின் பரந்த பூங்காவில், ஆளரவமற்ற பிற்பகல் பொழுதொன்றில், ஒரு எலுமிச்சை மரத்துக்குக் கீழே, தனது மார்பகங்களைத் திறந்து முத்தமிட ரஸலுக்கு ஈந்தாள் ஆலிஸ். அதுவரை அனுபவித்த இருட்டெல்லாம் படீர் படீர் என வெடித்தது; ஒருகணம் பெட்ரண்ட் ரஸ்ஸலின் தலைக்கோலம் பளீர் வெளிச்சம் கண்டது. (நன்றி: அகழ் இண...

திங்கள்கிழமை

புகைப்படம் - ஏ.வி.மணிகண்டன் இன்று திங்கள்கிழமை  போகத் தேவையில்லாத அலுவலகம் விடுவிக்கத் தேவையில்லாத படகு.

பிருத்விராஜனும் நான்ஸியும்

குதிரையில் வரமாட்டான் பிருத்விராஜன் பைக்கில்  வந்துகொண்டிருப்பவனுக்காக ஒயிலாய் திரும்பி வளையும் குட்டி நிழல்சாலையின்  முனையில் பூவரச மரத்துக்குக் கீழே பேரமைதியின் எழில் சுமந்து தோள்பையுடன் வாலின் மேல் அமர்ந்து  காத்திருக்கிறாள் நான்ஸி. 

நீல குண்டு பல்பு

பல்துலக்கிகள் தொப்பிகள் குப்பிகளை எல்லாம் பாதுகாத்த மூடிகள் பந்துகள் இறந்தவர் இருப்பவர் பிரிந்தவர் சேர்ந்து வாழ்பவர் தகவல் ஏதும் சொல்லாத  புகைப்படச் சட்டகங்கள் பயன் எல்லாம் முடிந்து ஓய்ந்த  ஆசுவாசம்  அமைதி விச்ராந்தி. இவற்றோடு சேர்ந்து இன்னும் பளபளப்பான கண்ணுடன் உடைந்த பாலத்தின் கழிமுகத்துக்கு வந்து சேர்ந்து மணலில் ஒரு நீல குண்டு பல்ப் அரசனைப் போல வீற்றிருக்கிறது . தொங்கட்டான்களின்  ஒளிச்சிணுங்கல்கள் முனகல்களாய் கீறும் சண்டைகள் கண்ணீர் சுடரும் வெதும்பல்கள் ஆறுதல்கள் மரணத்தை பார்த்திருப்பாய் நீல குண்டு பல்பே. நள்ளிரவில் விழித்து விடாமல் அழுதுகொண்டிருக்கும்  குழந்தையை அரைத்தூக்கத்திலேயே நின்றபடி தொட்டிலில் ஆட்டிய இளம்தாயை நீ மட்டும்தான் விழித்தபடி பார்த்தபடியிருந்தாய் நீல குண்டு பல்பே. 

உள்தெப்பக்குளம் – மேலும் சில காட்சிகள்

யாரோ எறிந்த போதை ஊசி ரத்தக்கறையுடன். ஏதோ ஒரு அவசத்தில் வீசப்பட்ட மல்லிகைச்சரம் தூணோரம். ஆதிப்பச்சையில் வெறித்து நோக்கும் தண்ணீர் நடமாட்டம் இல்லாமல் போய் வெளுத்துக் கிடக்கும் உள்தெப்பக்குளத்தின் கல்படிகள் எந்த ஆடி உற்சவத்திலோ பயன்படுத்திய தேர்வடக் கயிறு பாம்பணையாய் சுருண்டு நைந்துவரும் குளத்தடி இருள்மூலை. உச்சிகால வேளையில் நெல்லையப்பருக்கு அன்னம் உபசரிப்பதற்காக காந்திமதி மேளதாளத்துடன் செல்லும் சந்தடி நெருங்கித் தேய்கிறது. 000 ஊஞ்சல் மண்டபமிருக்கும் நந்தவனத்தில் வான்கோவின் வாதுமை அரும்புகளைப் போல யாரும் பார்க்காமலேயே மஞ்சள் அரளிகள் அரும்பி மொட்டுவிட்டு பூத்து மழையில் நனைந்து உதிர்ந்து மடிகின்றன. 000 உள்தெப்பக்குளத்தின் பச்சைப் பரப்பைப் பார்த்து தளிர்த்ததோ வாழை மரங்களின் இலைகள். வாழை இலைகளின் பசும்பச்சை பார்த்து அரும்பியதோ நந்தவனத்துக் கிளிகளின் இறகுகள். 000 அம்மா மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் ஊஞ்சல் மண்டபம் சங்கிலி மண்டபம் மகா மண்டபம் நீராழி மண்டபம் வசந்த மண்டபம் 000 வெளிநடை சாத்தும் சத்தம் மண்டபத்தை வந்து அறைகிறது. யுகச்சடவிலிருந்து ஒருகணம் விழித்தெழும் சர்ப்ப யாழி. காலம் சுருண்ட இருட்டுக்...

சங்க கால மரங்கள்

வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூ பூத்தது மரா. இறால்களின் தோற்றத்தில் காய்களை விட்டது உகா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

தக்காளிகள்

தக்காளிகள் தப்பி தரையில் உருள்கின்றன. தக்காளிகள் நழுவி விழுந்துவிடுவது இயல்பாக நடக்கிறது. தக்காளிகள் கைநழுவிப் போய்விடுகின்றன. தக்காளிகள் உருண்டு உருண்டு கண்மறைவாகப் போய்க் கொண்டிருக்கின்றன. நழுவித் தொலைந்துவிடாமல் தக்காளியைப் பிடிக்க தக்காளிக்கு முன்னால் நான் விழுந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தக்காளிக்கு தான் விழக்கூடாதென்ற பொறுப்பும் கிடையாது. தக்காளி நீ உடைந்துவிடக் கூடாது. தக்காளி நீ நொறுங்கிவிடக் கூடாது. (நன்றி: அகழ் இணைய இதழ்)