Skip to main content

Posts

எனது புதிய நூல்கள் குறித்து ஏ.வி.மணிகண்டன் உரையாடல்

  ‘நீல குண்டு பல்பு’ கவிதையை நீங்கள் எழுதும் போது நானும் உடனிருந்தேன். அன்று காலை இருவரும்தான் அதைக் கண்டோம். எனக்கு அது நீலக்கடலின் கண்ணாக, பிக்காஸோவின் குவெர்னிக்காவில் வரும் நம்பிக்கை தரும் கண்ணின் மணியாக (கரு விழியை அவர் குண்டு பல்பாகதான் உருவகித்திருக்கிறார், அறிவியலின்/நவீனத்துவத்தின் மீதான நம்பிக்கையாக) தோன்றியது. நீங்கள் அந்த அருவச் சித்திரத்திலிருந்து முன்னகர்ந்து ஒரு முழு வாழ்க்கையைக் கண்டிருக்கிறீர்கள். அது உங்கள் கவிதைகளின் உச்சங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது. அக்கணத்தில் குண்டு பல்பின் காட்சியிலிருந்து எப்படி இரவில் விழித்திருந்து தாலாட்டும் அன்னையை சென்றடைந்தீர்கள்? நான்  உருவத்திலிருந்து அருவத்திற்கு சென்றேன். நீங்கள் அருவத்திலிருந்து வாழ்க்கையின் ஒரு கணச் சித்திரத்திற்கு சென்று அங்கிருந்து வாழ்க்கை முழுவதையும் கண்டிருக்கிறீர்கள்? பெசண்ட் நகர் உடைந்த பாலம் கழிமுகப் பகுதியில் கடலுக்குள் செல்லாமல் கரையில் மிஞ்சும் கைவிடப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் நாம் அன்று கண்ட நீல குண்டு பல்பு. கடல் மணலில் பாதி புதைந்து முட்டை போல ஒளிர்ந்தபடி இருந்த படம் எனக்கு என்றைக்கும் மறக்க...

எஸ். ராமகிருஷ்ணனின் ‘குற்றமுகங்கள்’

எனக்கு 21 வயதில் திருநெல்வேலியில் பாதி இடிபாடுகளோடு இருந்த சிந்துபூந்துறை பழைய கம்யூனிஸ்ட் கட்சிக் கட்டடத்தில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் கோணங்கியுடன் சேர்ந்து எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகமானார். தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பை காலை வெளியிட்டு மிகவும் தீவிரமான உரையாடல் நாள்முழுவதும் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடில் லக்ஷ்மி மணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் ராமகிருஷ்ணனை எடுத்திருந்த பேட்டியும் உதிரியாகப் படித்திருந்த சிறுகதைகளும் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அப்படித்தான் அவருடன் பழக்கமும் உரையாடல்களும் ஆரம்பித்தது. திருநெல்வேலி, நாகர்கோவில் சுங்கான்கடை, கோயில்பட்டி, சென்னை என சில ஆண்டுகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் பேசும் வாய்ப்புகளைத் தேடி உருவாக்கிக் கொண்டிருந்தோம். சென்னை முகப்பேரில் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த மணலில் பல இரவுகளை தளவாயும் நானும் நண்பர்களும் எஸ்.ராவோடு பேசி நள்ளிரவுகளைக் கடந்திருக்கிறோம். இன்றும் என் கவிதை உலகின் சாரமாக ராமகிருஷ்ணன் உரையாடல்கள...

சாகித்ய அகாடமி விருதையும் ஆக்கிரமித்த மோடி அரசுக்கு கண்டனம்

  சாகித்ய அகாடமி விருதுகளின் வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில், சென்ற வாரம் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான நிகழ்வாகும். தமிழில் மட்டுமின்றி இந்தியாவின் 24 மொழிகளிலும் சாகித்ய அகாடமிக்கான விருதுக்குரியவர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டு, செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு டிசம்பர் 18 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவிக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு செய்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என சுயேச்சையாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளிலும் தலையீடு செய்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அடக்கிவருகிறது.  சாகித்ய அகாடமி என்ற சுதந்திரமான கலாசார அமைப்பின்மீதும் ஒன்றிய பா.ஜ.க  அரசு தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடு இது.  லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி மற்றும் தேசிய நாடகப் பள்ளி தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வாயிலாக, சாகித்ய அகாட...

பொற்கிழி என்பது அங்கீகாரம் அல்ல; நாம் புறம்தள்ள வேண்டிய பழைய மதிப்பீடு

ஜனநாயக விழுமியங்கள் ஏற்படுவதற்கு முன்னர் முடியாட்சி நடைமுறையில் இருந்த நிலையில் புலவர்கள் பொற்கிழி என்று மன்னரிடம் பெறும் நடைமுறை இருந்தது. நவீன ஜனநாயகம், சமூகநீதி என்றெல்லாம் உருவாகிவிட்ட சமூகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர்  பொற்கிழி விருதை கவிஞர். சுகுமாரன், ஆதவன் தீட்சண்யா, வ. கீதா போன்ற முற்போக்கான ஆளுமைகள் ஏற்றுக்கொள்வது சரிதானா? இந்த நடைமுறையை நாம் மாற்றுவதற்கு ஏதாவது எதிர்க்குரல் தரவேண்டாமா? எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கீகாரமே அரிது என்று அதுவே போதுமென்று இருந்துவிடலாகுமா என்ற கேள்வி எனக்கு எழுகிறது. பத்திரிகையாளரும் எனது முன்னாள் நண்பருமான சமஸ், கலைஞர் கருணாநிதி மரணமடைந்த பிறகு நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் நினைவு கருத்தரங்கில் கலைஞர் கருணாநிதியை கருணாநிதி என்று அழைத்தது அந்தக் கூட்ட அரங்கில் சர்ச்சையானது. ஆனால், அதே சமஸ், கலைஞர் கருணாநிதியின், பொற்கிழி விருதை எந்த அசூயையும் இல்லாமல் பெற்றது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நாம் சிந்தனைகள் வழியாகவும் கலைகள் வழியாகவும் பழைய நில பிரபுத்துவ மதிப்பீடுகளையும், கலைஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நடுவிலான உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யவேண்ட...

அருந்ததி ராயின் அம்மா

குழந்தைகள் தாங்கள் வந்து விழுந்துவிடும் மண்ணில் நின்று தரிக்கவும், பெரியவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தகங்கள்தான் இந்த உலகத்தின் பெரும்பாலான கதைகள். அருந்ததி ராய் தன் அம்மா குறித்து எழுதிய நினைவு நூலைப் படிக்கும்போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது. பிரிவினைக்கால கலவரங்களில் தொடங்கி இன்றைய பாலஸ்தீனம் வரை, போருக்கே தகவமைத்துக்கொள்ளாத நிராயுதபாணிகளான குழந்தைகள் மீதுதான் பெரும் யுத்தங்கள் தொடர்ந்து ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்கொண்டு அந்தக் காயங்களுடனும் ஆறாத ரணங்களுடனும் அவர்கள் மிஞ்சி எழுந்து பெரியவர்களாகும் கதையைத்தான் சமீபத்தில் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ என்ற திரைப்படமாகவும் இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சன் எடுத்திருக்கிறார். ஆமாம்; அருந்ததி ராயின் ‘மதர் மேரி கம்ஸ் டூ மீ’ நினைவு நூலை, இரண்டு குழந்தைகள் நடத்திய யுத்தத்தின் கதைகள் என்றும் கொள்ளலாம். முதல் கதை வளர்ந்தும் முரட்டுக் குழந்தையாகவும் முழுமையான அராஜகியாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்து 89 வயதில் இறந்துபோன மேரி ராயின் கதை. அம்மாவின் கதையூடாகத் தன் கதையைச் சொல்லும் போராளியும் எழுத்துக் கலைஞருமான அருந...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

விழுவதற்காக நியூட்டன் மரத்தின் கிளையை அர்ஜூனனாய் பார்த்துக்கொண்டே இருந்தார். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஆப்பிள் நியூட்டனைப் பார்த்து ஏகடியம் பேசியது. ஒங்கொம்மால என்று பின்பக்கம் படிந்திருந்த புழுதியை உதறிவிட்டுக்கொண்டே எழுந்த நியூட்டன் கீழே கிடந்த கல்லை எடுத்து படாரென்று ஆப்பிளின் காம்பை குறிவைத்துத் தாக்கினார்.

மான்கள்

மரங்கள் கல்லறைத் தூபிகள் இடையிடையே தலையைத் திருப்பி சிலைத்து நிற்கும் மான்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)