குழந்தைகள் தாங்கள் வந்து விழுந்துவிடும் மண்ணில் நின்று தரிக்கவும், பெரியவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தகங்கள்தான் இந்த உலகத்தின் பெரும்பாலான கதைகள். அருந்ததி ராய் தன் அம்மா குறித்து எழுதிய நினைவு நூலைப் படிக்கும்போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது. பிரிவினைக்கால கலவரங்களில் தொடங்கி இன்றைய பாலஸ்தீனம் வரை, போருக்கே தகவமைத்துக்கொள்ளாத நிராயுதபாணிகளான குழந்தைகள் மீதுதான் பெரும் யுத்தங்கள் தொடர்ந்து ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்கொண்டு அந்தக் காயங்களுடனும் ஆறாத ரணங்களுடனும் அவர்கள் மிஞ்சி எழுந்து பெரியவர்களாகும் கதையைத்தான் சமீபத்தில் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ என்ற திரைப்படமாகவும் இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சன் எடுத்திருக்கிறார். ஆமாம்; அருந்ததி ராயின் ‘மதர் மேரி கம்ஸ் டூ மீ’ நினைவு நூலை, இரண்டு குழந்தைகள் நடத்திய யுத்தத்தின் கதைகள் என்றும் கொள்ளலாம். முதல் கதை வளர்ந்தும் முரட்டுக் குழந்தையாகவும் முழுமையான அராஜகியாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்து 89 வயதில் இறந்துபோன மேரி ராயின் கதை. அம்மாவின் கதையூடாகத் தன் கதையைச் சொல்லும் போராளியும் எழுத்துக் கலைஞருமான அருந...