Skip to main content

பின்....மலர்



என்னைச் சிதையிலிட்டு எரித்தனர்
என் மூளை
களிம்பென
வெண்பழுப்பாய்
சாம்பல் மேட்டின் மீது
திரண்டது
நோயில்
நான் உறங்கிய போர்வையில்
மிச்ச எலும்புகளைப் பொறுக்கி
ஆற்றில் விட்டனர்
அப்போது ஆறும்
ஆற்றின் கரையிலிருந்த மரங்களும்
எப்போதுமான
ஒரு அந்தியில் உறைந்தன
நான் எரிந்த குழியில்
நீரூற்றி
தானியம் உதிர்த்தனர்

நான் முளைப்பேன்
காற்றிலாடும் கதிராவேன்
நான் சூரியன் ஆவேன்
சுதந்திரமும் அழகும்
மேனியில் பூரிக்கும்
சின்னஞ்சிறு குருவியாவேன்
நான் குதிரை ஆவேன்

Comments