Skip to main content

தன்னை மறக்கும் கவிதை


 


(பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளைஅது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம்.அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் செய்வேன்குறுந்தொகையிலிருந்து இத்தொடரைத் தொடங்குகிறேன்.அம்ருதா மாத இதழில் மாதம்தோறும் வெளியாகும்)


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
கூடலூர் கிழார்குறுந்தொகை


முற்றிய தயிரைப் பிசைந்தகாந்தள் மலரைப் போன்றமெல்லிய விரலைத் துடைத்துக் கொண்ட ஆடையைதுவைக்காமல் உடுத்துக் கொண்டுகுவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில்தாளிதப் புகை மணப்பதானே துழாவிச் சமைத்தஇனிய புளிச்சுவையை உடைய குழம்பைதலைவன் இனிது என்று உண்பதால்தலைவியின் விளக்கத்தை உடைய நெற்றியை உடைய முகமானதுமிக நுண்மையாக மகிழ்ந்தது.(வேசாஉரையிலிருந்து)


பதினான்கு அல்லது பதினைந்து வயதாக இருக்கலாம்திருநெல்வேலி சாப்டர் பள்ளியில்தமிழாசரியர் ஆறுமுகம் விளக்கம் சொன்ன இக்கவிதையில் வரும் இரண்டு காட்சிகள் மட்டும் அன்றும் இன்றும் என் நினைவில் இருப்பதுஅந்த நினைவைச் சொன்னபோதுகவிஞர் ஜயபாஸ்கரன் தான் அதை குறுந்தொகை கவிதை என்று கூறி அடையாளம் காட்டினார்.

இந்தக் கவிதையில் வரும் தலைவியின் மைபூசிய கண்கள் சிவந்து கனிந்திருக்கும் காட்சிதுவைக்காமல் அவள் உடுத்தியிருக்கும் கையைத் துடைத்துக் கொள்ளக்கூடிய மென்மையான ஆடைஇரண்டும் காட்சிகளாகவேஅந்தக் கவிதை குறித்து வகுப்பெடுத்து நெடுநாள் ஆகியும் உள்ளே தழும்பிக் கொண்டிருந்ததுபெண்ணை உடலின் அங்கம் அங்கமாகத் தனியாக இல்லாமல் முழுமையாகவும் முகத்தைக் கூர்ந்தும் பார்க்கத் தொடங்கிய வயது அதுஒரு வீட்டில் தனது செவிலித் தாயின் முன்னர் தான் நடத்தும் சந்தோஷமான தாம்பத்தியத்தை ஒரு காட்சி வழியாக நிகழ்த்திக் காட்டிவிடுகிற பெண்ணின் ஓவியம் உள்ளதுஇந்தக் கவிதையில் தாயை விட்டு வந்த குற்றவுணர்வு ஏதும் இல்லை. ‘உன்னை விட்டுப் போனபின் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறாள்’ என்ற செவிலித்தாய் நற்றாயைப் பார்த்துச் சொல்லும் குத்தலும் இல்லைஒரு காட்சி இருக்கிறது.

தாயுடன் வாழும்போது சாப்பிட்ட பாத்திரத்தைக் கூட எடுத்து புழக்கடையில் அங்கணத்தில் போடாத செல்லமாய் அவள் இருந்திருக்கலாம்ஆனால் காதலனுடன் மணம்புரிந்து அவள் வீடான பிறகு அவள் மாறிவிட்டது இயற்கையாக உள்ளதுஅது ஒரு நியதி என்பது போலச் சொல்லப்படுகிறதுநியதி என்னும்போது அதன் மேல் துயரத்தின் அழுத்தமும் இந்தக் கவிதையில் இல்லைஇயற்கை போல, மகளாக இருந்தவள் மனைவியாக தலைவியாக மாறிவிட்டாள்.

முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய தலைவியின் விரலை வர்ணிக்கும்போதும்குவளைமலர் போன்ற மையுண்ட கண்களில் புகைபடிந்து இனிய புளிச்சுவை கொண்ட குழம்பு சிகப்பாவதும் அவள் சமையலறையில் பொருட்களுடன் கூடும் உறவை மட்டும் பேசவில்லை என்று தோன்றுகிறதுவெளியே உள்ள பொருட்களுடன் கொள்ளும் உறவில் கூடுதலில் முயங்கலில் உருவாகும் சமையல் ருசி அவள் புகுந்த புது வீட்டில் நடக்கும் இன்னொரு சமையலைபுதிய குடித்தனத்தின் உள்ளறைக் காட்சிகளை நமக்குத் தெரிவிக்கிறது.

அவள் அங்கே அப்போது இருந்தாள்இப்போது அவள் இங்கே இருக்கிறாள்இங்கே இயற்கையும் இயல்பும் நியதியும் மாறிவிட்டதுஅதைச் செவிலித் தாய் சேர்த்து நமக்கும் நற்றாய்க்கும் காண்பிக்கிறாள்அவ்வளவுதான்.
வீட்டிலிருந்து ஓடிப்போய் புதிய கணவனுடன் குடித்தனம் நடத்தும் லட்சணத்தைசந்தோஷத்தைமாறுதல் தான் நியதி என்னும் உண்மையை நற்றாய்க்குச் சொல்லும் செவிலித்தாய் தானோ கவிதை.
000

கூடலூர் கிழாரின் கவிதையில் ஒரு கணம் மட்டுமே சொல்லப்படுகிறதுஅதற்கு இறந்த காலமோ நிகழ்காலமோ இல்லைநூல் கண்டுவிடுபட்டு ஓடிக்கொண்டிருக்கும் போது பார்க்கப்படும் ஒரு துண்டுக்காட்சியைச் சொல்கிறதுதுவக்கமோ முடிவோ இல்லைஅந்தக் கவிதை கொடுக்கும் காட்சியிலிருக்கும் சந்தோஷம் செவிலித் தாயின் தலை மறைந்தவுடன் மாறிவிடலாம்அல்லது அந்தச் சந்தோஷம் பின்மதியத்தில் கூடுதலாக முடுக்கம் கொள்ளலாம்அதுவேறு நியதிஅது வேறு கதி.

000

இந்தக் கவிதையில் பார்ப்பவள் பெண்பார்க்கப்படுபவளும் பெண்சமையலில் ஈடுபடும் பெண்இன்னொன்றில் ஈடுபடுகிறாள்இன்னொரு உயிர் அல்லது பொருளுடன் அவள் ஈடுபடும்போது தன்னை மறக்கிறாள்அப்போதுதான் உணவு பிறக்கிறதுஅப்போது அவள் செல்லமாக வளர்க்கப்பட்ட இன்னொரு ஊரில் வாழும் பெற்றோரின் மகள் அல்லஅவள் ஈடுபடும் போதுதான் சமையலும் தாம்பத்தியமும் அதன் விளைவான குழந்தையும் பிரசவமாகிறது.

சமீபத்தில் என் மகளுடன் திருநெல்வேலிக்குப் போயிருந்த போதுஎப்போதும் செல்லும் திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு அருகில்தாழ ஓடும் தாமிரபரணி ஆற்றைப் பார்க்கப் போயிருந்தேன்பேருந்துக்காகக் காத்திருந்த போதுஇசக்கியம்மன் கோயிலுக்குக் கொடை நடத்துவதைப் பற்றி அங்கிருந்த பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

புதியதாக நாடகம் இசைக் கச்சேரி எல்லாம் நடத்தவேண்டும் என்று இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்அப்போது இருட்டு ஆகியிருந்தது.
அந்த இருட்டில் முகம் நிழல்கோடுகளாகிப் போன பாட்டையாவின் முகம் பேசியது. “அந்தக் காலத்தில் பெண்களை மேடை ஏத்தாததுக்குக் காரணம் இருக்குஅவள் மேடை ஏறி ஆடும்போது தன்னை மறந்துவிடுவாள்என்றார்.

விடுபட்டுப் போன நூல்கண்டு ஓடிக்கொண்டிருக்கிறதுநூலை ஞாபகம் வைத்துக் கொண்டே இருப்பதுதான் ‘தான்’ போலஅந்தத் தானை மறக்கும் போது அவள் பெண் ஆகிறாள்அப்போதுதான் அவள் ஈடுபடுகிறாள்படைக்கிறாள்.

இந்தக் குறுந்தொகைக் கவிதையும் ஒரு நியதியில் ஈடுபடுகிறதுஅதனால் அதற்கு ஜனன உறுப்பு உள்ளதுஅதனால் அவளும் அதுவும் படைக்கிறது.

அதனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு காலத்தில் ஒரு பின்னணியில் எழுதப்பட்ட கவிதை அகாலத்தின் ஆசீர்வாதத்தில் பழைமை ஏறாமல் பருவத்தின் படியேறும் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறுவனையும் ஈர்த்தபடி உள்ளது.


Comments