Skip to main content

ஆரோகணம்



இறைஞ்சுதல் ஓங்காரம் பிரார்த்தனையின் ஆரோகணிப்பில்
எவரோ ஒருவரின்
முகம் உதடுகள்
வானத்தை நோக்கிக்
கைகூப்பலைப் போலக் குவிந்தது
அப்போது அவை கோபுரங்களாக மினாரெட்களாகக் கூர்ந்து நீண்டன
அடையும் விழைவில் படிகள் முளைத்தன

எவரையோ எழுப்ப எவரையோ அசைக்க
எழுப்பப்பட்ட அந்த உச்ச ஒலியை
நிலத்தில் உறங்கியவர்களும் பகிர்ந்துகொண்டு விழித்தனர்
ஓட்டகங்கள் தமது மினாரெட் கழுத்தைத் தூக்கிப் பார்த்த போது
ஒரு கணம் அதன் உலோபிச் சிரிப்பு மறைந்துபோனது

கோபுரங்களிலும் மினாரெட்களிலும்
முகட்டுக்கும் கூம்புக்கும்
ஓங்கி ஒலிப்பவன்
செல்வதற்கு படிகள் இருந்ததைப் போல்
ஆரோக்கியமான நுரையீரலுக்கு
நாசிகளென்று
இலைகள் மலர்கள்
ஜியோமிதி வடிவங்களில் ஜன்னல்களும் திறப்புகளும்
வடிவமைக்கப்பட்டன
உடலுறவின் முனகலையொத்த
புறாக்களின் முனகலும்
சிறகுகளின் படபடப்பும் அங்கே தொடங்கின

பெருநகரங்களில் அதிகாலை இருளில்
பச்சையாய் ஜொலிக்கும்
செங்குத்து மினாரெட்கள் இன்றும் உண்டு
மெய்நிகர் தோற்றமோ என்று
இன்னும் நாம் ஏமாறாமல் இருக்க
புறாக்களின் சிறகுப் படபடப்பும்
முனகலும் கோபுரங்களில் உண்டு
பொந்துகளெங்கும் இறகுகளும் எச்சங்களும் உண்டு

அர்த்தப்படுத்த முடியாத இருட்டில் விழித்து முளைத்து
குரலால் சுருதியால்
எண்ணெயும் திரியும் இட்டு
அகல் ஒலியைக் கையிலேந்தி
வானை நோக்கி அறைகூவ
அதிகாலையில்
புறப்பட்டவன் ஏறிய படிகள்
எப்போது
எந்த நூற்றாண்டில்
எந்தத் தருணத்தில் களவுபோயின...

படிகள் இல்லாத அந்தக் கோபுரத்தின் உச்சியில்
வௌவால்கள் சுவைக்கும் சடலம்
யாருடையது.

Comments