வீட்டின் புழக்கடைக்கு வரும்
மைனாக்கள் புறாக்களுக்கு
பரிவுடன்தான் சோறு வைத்துப் பழகினார் அப்பா
சோற்றைக் கொறிக்க வரும் பறவைகளைக்
காத்திருந்து பதுங்கி வேட்டையாடியது
பூனை
சோற்றுக்கு வரும்
பறவைகளை
பூனை பிடித்துச் செல்வதால்
நமக்குத் தான் பாவம்
நிறுத்துங்கள் என்கிறாள் அம்மா
சோறு கொடுப்பதோடு என் வேலை முடிந்தது
பூனையிடம் இறப்பது பறவையின் தலைவிதி
என்கிறார் அப்பா
இங்கே தான் நானும்
ஒரு மர்மக் கொலையாளியும் நுழைகிறோம்
பறவைகளின் இடத்தில் அம்மா இருக்கிறாள்
பூனையின் இடத்தில் அப்பா இருக்கிறார்
சோற்றை வைக்கும் கரங்கள் யாருடையது?
சோற்றுக்குப் பழகிய மனம் யாருடையது?
Comments