Skip to main content

அப்பா அம்மா பூனை பறவை



வீட்டின் புழக்கடைக்கு வரும்

மைனாக்கள் புறாக்களுக்கு

பரிவுடன்தான் சோறு வைத்துப் பழகினார் அப்பா

சோற்றைக் கொறிக்க வரும் பறவைகளைக்

காத்திருந்து பதுங்கி வேட்டையாடியது

பூனை

சோற்றுக்கு வரும்

பறவைகளை

பூனை பிடித்துச் செல்வதால்

நமக்குத் தான் பாவம்

நிறுத்துங்கள் என்கிறாள் அம்மா

சோறு கொடுப்பதோடு என் வேலை முடிந்தது

பூனையிடம் இறப்பது பறவையின் தலைவிதி

என்கிறார் அப்பா


இங்கே தான் நானும்

ஒரு மர்மக் கொலையாளியும் நுழைகிறோம்


பறவைகளின் இடத்தில் அம்மா இருக்கிறாள்

பூனையின் இடத்தில் அப்பா இருக்கிறார்

சோற்றை வைக்கும் கரங்கள் யாருடையது?

சோற்றுக்குப் பழகிய மனம் யாருடையது?

Comments