Skip to main content

ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’






பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ள ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’, சிறுகதை என்னும் வடிவம் இன்னும் கொண்டிருக்கும் புதுமையையும் வசீகரத்தையும் நினைவூட்டுவதாக இருந்தது.

ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு அனுபவத்தை அசுவாரசியமானதாக, இனிமையற்றதாக, சங்கடத்துக்குரியதாக நாம் உணர்கிறோம். அல்லது அப்படி ஒன்றாக நம் மனம் ஒரு நிகழ்ச்சியை மொழிபெயர்க்கிறது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியே ஒரு திருப்பத்துக்கு வழிவகுத்துவிடுகிறது. அது இனிமையானதாகவோ மோசமானதாகவோ இருக்கலாம். ஆனால் இன்றியமையாத திருப்பமாக அது உள்ளது.

ஜி. குப்புசாமி மொழிபெயர்த்திருக்கும் இந்தக் கதை அமெரிக்காவில் நிகழ்கிறது. சமீபத்தில் குழந்தை பிறந்த அலுவலக நண்பன் பட்டின் வீட்டுக்கு மனைவியோடு இரவு விருந்துக்குச் செல்லும் ஜேக்கின் பார்வையில் சொல்லப்படும் கதை இது.

பட்டின் வீட்டில் வளர்க்கப்படும் ஜோயி என்ற மயிலும், பட்- ஓலா தம்பதியினரின் அழகேயற்ற குண்டுக் குழந்தையும் தான் இந்தக் கதையின் மையம்.

இந்தக் கதையில் மயில் அறிமுகமானவுடன் இந்தக் கதை ஒரு இந்தியக் கதை ஆகிவிடுகிறது

ஜோயி என்ற பெயரில் அழைக்கப்படும் மயில், அந்த வீட்டில் பழகி எல்லா வளர்ப்புகளையும் போலக் கிட்டத்தட்ட இன்றியமையாத ஒன்றாகவும் அதேவேளையில் தொல்லைகொடுக்கும் வஸ்துவாகவும் மாறிவிட்டிருக்கிறது. ஒரு வளர்ப்பு நாயைப் போலவே அந்த மயிலும் வீட்டில் படுக்கையறை உட்பட எல்லாவற்றிலும் நுழைகிறது. நடுவீட்டில் சிறகுகளை படபடவென்று நாகரிகமின்றி அடிக்கிறது. படுக்கையில் படுத்துக் கொள்கிறது; எச்சமிடுகிறது. கர்ணகடூரச் சத்தமிட்டு எஜமானர்களைத் தொந்தரவுபடுத்துகிறது. அதன் மேல் உண்டான எரிச்சலில், “இந்த முட்டாள் பறவைக்குத் தான் ஒரு பறவை என்பதே தெரியவில்லை. அதனிடம் இருக்கும் பெரிய தொல்லை அதுதான்.” என்று பட்டைச் சொல்ல வைக்கிறது.

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்ட படியே தாம்பத்திய சந்தோஷத்தை நீட்டித்துக் கொண்டிருக்கும் ஜேக் - ஃபிரான் தம்பதியினரின் தீர்மானத்தை அந்தக் கர்ணகடூர மயிலும் அடிக்கடி அழுது தொல்லைப்படுத்தும் அந்த விகாரக் குழந்தையும் தான் மாற்றுவது போன்ற சித்தரிப்பு அந்தக் கதையில் உள்ளது. காரில் வீடு திரும்பும்போது ஜேக்கின் தொடை மீது கையை வைத்துக் கொண்டே வரும்- அவன் நேசிக்கும் அழகிய நீண்ட தலைமுடியைக் கொண்ட- ஃபிரான், வீட்டுக்கு வந்து படுக்கையில் சாய்ந்ததும், " அன்பே, உங்கள் வித்தால் என்னை நிரப்புங்கள்.” என்கிறாள்.

நமது அனுபவங்களை மொழிபெயர்க்கும் செயல்பாட்டை ரேமண்ட் கார்வெர் இந்தக் கதையில் அழகாக மொழிபெயர்த்துவிடுகிறார். வேண்டுதல் வேண்டாமை இரண்டின் வியர்த்தத்தை உணர்கிறோம். வேண்டுதல் வேண்டாமை இரண்டும் முயங்கும் புள்ளியை இந்தக் கதை தொடுகிறது. ஆசைப்படுவதே நடக்கும்போது அது துரதிர்ஷ்டமாகவும் மாறிவிடுகிறது. உணர்வதும் மொழிபெயர்ப்பதும் நடப்பதும் ஒரு தகடு போல உடையும் தருணத்தில் முரண்கொண்டுவிடுகின்றன.

அப்படியானால் வெளிப்பாட்டை எது கொள்கிறது?
மொழியின் ஆசையும் உயிரின் ஆசையும் ஒன்றா?

நிறைவு எங்கே முடிந்து நிறைவின்மை எங்கே தொடங்குகிறது?


சொர்க்கத்தின் பறவை என்று சொல்லப்பட்டாலும் வளர்ப்புப் பிராணி ஆகும்போது மயில், நாயாகிவிடுகிறது.

Comments

அருமை ஷங்கர்