நீயும் நானும் கோர்த்துக்கொண்ட போது
கடல் என் முன்னர்
முதல் முறையாகப் பூத்தது
என்பதால்
உன்னைப் பார்த்தபிறகு
கடலைப் பார்க்கும்போது
எனக்கு கடல் மட்டும் போதுவதில்லை
கண்ணே
கடலுக்கு அருகிலேயே
தாவரங்கள் சிலிர்த்து ஆடும்
மலை வேண்டும்
மலையும் கடலும் சேர்ந்து
எனக்குச் சித்தித்துவிட்டால்
அதுமட்டும் போதாது கண்ணே
கடல்மட்டத்துக்கு மேலே எங்கோ சுனையில்
சுரந்த நன்னீர்
வழிந்திறங்கி
விரிந்திருக்கும் நீர் நீலத்தில்
கரையும்போது
நனைத்துச் செல்ல
உன் பாதங்கள்
என் உடன்
வேண்டும்
டினோசாரைத்
துடைத்தழித்த எரிமலைக் குழம்பில்
உருவான மலையாம்
நிலம் அதுவாம்
பவளப் பாறைகளாம்
அப்போது உஷ்ணத்தில் இருந்தவை
இப்போது உன்னுடன் தொட்டுப் பார்க்கும்போது
அவை நீர் போல நீர் போல மௌனமாய்ச் சில்லிடுமாம்
நீலம் ஏதோ ஒரு கதியில் பச்சையோடு முயங்கி
பொன்னென ஒளிர்ந்து மின்னும்
கடல் போதாது கண்ணே
உன் வயிறு போல அதில் குழைந்தேறும்
அலைவாய் புசிக்கும் மலை போதாது கண்ணே
பந்தத்தின் ரத்தவீச்சமே அற்ற
எலும்புகளெனத் தோன்றும்
பவளப்பாறைகளின் வசீகர எச்சங்கள்
மட்டும் நாம் பொறுக்க அங்கே போதாது பெண்ணே
நீயும் நானும் அனைத்தையும் கோர்க்கும்போது
மலையிலிருந்து நழுவி
இறங்கி
பெருங்கடலைப் பார்த்து
மலைக்கும்போதில்
தோன்றிய துணையாக
தலைதூக்கி நம்மைப் பார்த்து
சிறுபடம் எடுக்க
ஒரு குட்டிப் பாம்பும்
உடன் வேண்டும்.
Comments