Skip to main content

ஞானக்கூத்தனின் விடுபட்ட நரி

  


 கடவுள், தத்துவம், அரசு எல்லாவற்றின் பார்வையிலுமே யாரோ எதுவோ எவர்களோ விடுபட்டுவிடுகின்றனர். அந்த விடுபட்டதின் குரலையே இலக்கியம் எடுத்துக் கொள்கிறது என்பதை ஞானக்கூத்தனின் ‘விட்டுப் போன நரி’ கவிதை கூடுதலாகப் புரியவைத்துவிடுகிறது. வரலாறு, தத்துவம் சாராம்சப்படுத்தும் உண்மைக்கு மாறானதொரு மெய்மையாக அதனாலேயே இலக்கியம் திகழ்கிறது.

திருவிளையாடற் புராணத்தின் புகழ்பெற்ற படலமான ‘பரி நரியாக்கிய படலம்’- ல் இந்த விடுபட்ட நரியை பரஞ்சோதி முனிவர் பார்க்கவேயில்லை. ஓடுகின்ற நரியில் ஒரு நரியாக முகவரி இன்றி இருந்த அந்த நரிக்கு ஒரு குடியானவனின் உருவத்தையும் குரலையும் ஞானக்கூத்தன் நவீனகவிதையில் தருகிறார்.

அவன் எப்போதும் எளியவனாக வரலாற்றில் தொடர்பவன்.  

சிறுவன் இல்யூஷாவின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டி மீது இடப்பட்டிருந்த  பூ உதிர்ந்து விழுகிறது. அந்த நிகழ்ச்சி கடவுளுக்குத் தெரியுமா என்று இறுதி ஊர்வலத்தில் பங்குபெறும் நாயகன் அல்யோஷா கேட்கிறான்.

சரித்திரம், தத்துவம், அரசு, கடவுள் என கண்டும் காணாமல் விடப்பட்ட, உதிர்க்கப்பட்ட மலர்களை தெரியுமா தெரியுமா என்று கேட்டுக்கொண்டு பின்னால் சென்று கொண்டிப்பது இலக்கியம்.  

புராணம் முடிவுற்று விட்டபின்னர் கடவுளும் விடுபட்ட பேர்களைக் கவனிக்க மாட்டார். போய்வா என்றுதான் சொல்வார் போல, அரசைப் போல. “வாதவூரடிகட்காக நரிகளைத் தேர்ந்த போது நீதியோ என்னை மட்டும் விலக்கிய செய்கை சாமீ!” என்ற அந்தக் குடியானவனின் குரல், கடவுள் முதுகில் சாத்தும் நவீன கவிஞனின் பிரம்புதான். 

விடுபட்ட நரியே! ஞானக்கூத்தன் கவனித்து மகத்துவப்படுத்தியிருக்கிறார்.

உள்ளே வா!

விட்டுப் போன நரி

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

 

மேற்படிக்

குரலைக் கேட்டார்

மாதொரு

பாகர். குற்றம்

ஏற்பட

வியந்தார். தேவி

ஏளனம்

செய்தாள் சற்று

 

வாதவூரடிகட்காக

நரிகளைத் தேர்ந்த போது

நீதியோ என்னை மட்டும்

விலக்கிய செய்கை சாமீ!”

 

திருவருட்

திட்டம் பொய்த்த

தற்கொரு

ஊளைச் சான்றாம்

நரி எதிர்

உதித்துக் கீற்று

நிலாத் திகழ்

ஈசர் சொன்னார்:

 

நரிகளைப் பரிகளாக்கும்

திருவிளையாடல் முற்றும்

விடுபட்ட பேரை நாங்கள்

கவனிக்க மாட்டோம் போய்வா.

Comments