மதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின் தொடர்ச்சியை தனது கவிதைகளில் கொண்ட ஜயபாஸ்கரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள் இவை … அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கன்சனின் அறிமுகம் , கவிதையுடனான அறிமுகம் இரண்டும் உங்களுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறதல்லவா? பேராசிரியரும் அறிஞருமான எஸ். ஆர். கே என்று சொல்லப்படும் எஸ். ராமகிருஷ்ணன், அமெரிக்க கவிஞர் எமிலி டிக்கன்சனை, எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாளின் இரவு இன்னும் நினைவில் உறைந்திருக்கிறது. 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி அது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகட்டலும் சலிப்பும் தொடாததாக அந்தக் கவிஞருடைய படைப்புகளுடனான உறவு தொடர்கிறது. எனக்கு எப்படி அர்த்தமாகிறாள் எமிலி? ஒன்றைத் தேர்ந்த பின் கதவை அடைத்து விடுகிற மன உறுதி, பிறர் பாராட்டு என்பது உயிர்வாழத் த...