Skip to main content

மதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு





மதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின் தொடர்ச்சியை தனது கவிதைகளில் கொண்ட ஜயபாஸ்கரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள் இவை

 அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கன்சனின் அறிமுகம் , கவிதையுடனான அறிமுகம் இரண்டும் உங்களுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறதல்லவா?

 

பேராசிரியரும் அறிஞருமான எஸ். ஆர். கே என்று சொல்லப்படும் எஸ். ராமகிருஷ்ணன், அமெரிக்க கவிஞர் எமிலி டிக்கன்சனை, எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாளின் இரவு இன்னும் நினைவில் உறைந்திருக்கிறது. 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி அது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகட்டலும் சலிப்பும் தொடாததாக அந்தக் கவிஞருடைய படைப்புகளுடனான உறவு தொடர்கிறது. எனக்கு எப்படி அர்த்தமாகிறாள் எமிலி? ஒன்றைத் தேர்ந்த பின் கதவை அடைத்து விடுகிற மன உறுதி, பிறர் பாராட்டு என்பது உயிர்வாழத் தேவையற்ற நறுமணப் புகைதான் என்ற தீர்மானம், ‘அவர் இவராக இருப்பதென்பது எவ்வளவு அயர்வூட்டும் விஷயம்என்ற தெளிவு, தன்னுடைய பாதையில் கடைசிப்புள்ளி வரை பயணம் செய்கிற பிடிவாதம் இப்படி பல விஷயங்களின் கலவையாக எமிலியின் உருவம் என் மனத்தில் பதிந்திருக்கிறது. பிடிவாதமாக நான் அடைகாத்த தனிமை என்னை எமிலிக்கு அருகில் இழுத்துக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. சுயத்தின் தொடர் பயணத்தில் எமிலியின் பங்கு மறுக்க முடியாதது. சொல் சிக்கனம், துண்டிக்கப்பட்டு துடிக்கும் தொடர் அமைப்பு எல்லாம் அவள் தந்ததாக இருக்கலாம். அவளுடைய கவிதைகளில் தவறாமல் இடம்பெறுகிற டேஷஸ்(கிடைக்கோடுகள்) போல என்னுடைய கவிதையில் விழுகிற சொல் இடைவெளிகள் மனத்தயக்கத்தின் சமிக்ஞைகள் என்று நகுலன் உணர்த்தினார். இன்று அகத்திலிருந்து சில எட்டுகள் எடுத்துவைத்து கடைவீதியில் நடக்கும்போது, எதிரே கல்சந்தில் கழிக்கப்பட்ட வெள்ளைப் பூண்டு சருகுகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. ‘சூழ்ந்த அதனில் பெரிய அவா அறச் சூழ்ந்தாயேஎன்ற திருவாய்மொழியின் இறுதித் தொடரை எமிலியிடம் பகிர்ந்து கொள்கிறேன் ரகசியமாக.

 

மதுரை என்ற இடம்தான் உங்கள் கவிதையின் தீராத உள்ளடக்கம். அதுபற்றிச் சொல்லுங்கள்?

 

தேய்வழக்காகி விட்ட யாதும் ஊரே என்ற தொடரை தலைகீழாக ஊரே யாதும் என்று வாசித்துக் கொள்கிறேன் நான். பிறந்து வளர்ந்து படித்து வியாபாரம் செய்து வருகிற மதுரையே உலகமாகிவிட்டது என்னைப் பொறுத்த வரை. தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரும் கொடையாளிகளான சமணர்களின் எண்பெரும் குன்றங்களால் தழுவப்பட்ட மதுரை பலமுகங்களைக் கொண்டது. சில முகங்கள் குரூரமானவை. வையையின் கொதிமணலில் தொன்மச் சில்லுகள் பாதத்தைக் கீறிக்கொண்டேதான் இருக்கின்றன. அதேசமயம் ஓடுகாலில் முகம் தெரியாத இளைஞனின் பிரேதமும் அவ்வப்பொழுது காலில் இடறுகிறது. சிதிலமான வையைப் படித்துறைகளும் படர்தாமரையின் ஆக்கிரமிப்பும் கலக்கும் அனைத்துவகைக் கசடுகளும் மச்ச அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணிக்கப்படும் கிருதமாலை ஆற்றின் நசிவும் ஒடுக்கமும்- என்று இவை எல்லாமே மதுரையின் இன்றைய இருப்பின் குறியீடுகள் தான். ஆனால், இதே வையை, கள்ளழகர் அதற்குள் இறங்கும்போது வேறு தோற்றம் கொள்கிறது. பௌர்ணமி நிலவில் வையை மணல், நீரைப் புணர்ந்து புதிய சோபை கொள்கிறது. வையைக் கரையில் பத்தி உலாவும் மோகினி வைகறைப் பொழுதில் அமுதத்தை அசுரருக்கும் சேர்த்தே பரிமாறிச் செல்கிறாள். ஆற்றையும் அழகரையும் ஒருசேரக் காணும் கணம் அது. தமிழ் மதுரைக்கு அரசியாக குமர குருபரர் கொண்டாடும் அங்கயற்கண்ணியின் மூன்றாம் முலை திக்குவிஜயத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் மறைந்து பின் முகிழ்க்கிறது. திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் இந்த ஐதிகங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறொன்றாய் தோற்றம் கொள்கின்றன. வெயிலின் சலிப்பை வேறுவிதமாகக் கடந்துவிடுகிறது மதுரை. இதையெல்லாம் பாடித் தீரவில்லை எனக்கு.

 

சமய இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் நினைவுகள் அழுத்தமாகக் கொண்டவை உங்கள் கவிதைகள். பழைய மதிப்பீடுகள், வரையறைகளைக் கொண்ட மரபிலக்கியத்தை உங்கள் புதுக்கவிதைகளில் எங்கே விடுவிக்கிறீர்கள்?

 

ஒரு பெருந்தெய்வமான மீனாட்சியின் கோயிலுக்கும் ஒரு சிறுதெய்வமான மதுரை வீரனின் கோயிலுக்கும் இடையேயிருந்த கடைவெளியில் பல பதிற்றாண்டுகளைத் தின்றவன் என்ற வகையில் அதன் ருசி என்னிடம் எஞ்சியிருப்பதென்பது இயல்பானதுதான். நாதஸ்வரமும் பறையும் சம அளவில் ஒலித்திருக்கின்றன என்னுடைய உட்செவிகளில். அதேசமயம் பாவமும் மன்னிப்பும் வருண அளவுகோலால் வெவ்வேறு வகைகளில் அளக்கப்படுவதை புராணங்கள் பின்னாளில் உணர்த்தின. எங்கள் தாயார் வாசித்த சென்னை ரத்ன நாயக்கர் சன்ஸ் பதிப்பித்த ‘திருவிளையாடல் புராண வசனம்ஒரு புதிய உலகத்தை எனக்குக் காட்டியது. கரிக்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, கால்மாறி ஆடியது, ரசவாதம் செய்தது போன்ற புனைவுகளின் மாயத்தன்மை என்னை வசீகரித்தது. கடைவீதி அஞ்சலகத்தில் வியாபாரத் தகவல் கார்டுகளை நாள்தோறும் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பழக்கம் இருந்த அந்தக் காலத்தில் குறுக்குவழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகுந்து பஜார் அலுவலகம் சென்று மீள்வது என் அன்றாட நடைமுறை. போகும்பொழுது அமுதம் பரிமாறும் மோகினியையும் வரும்போதும் பிச்சாடனரையும் வல்லப சித்தரையும் கண்களால் முத்தமிட்டு கடைக்குத் திரும்பிவிடலாம். இவையெல்லாம் பதினைந்து நிமிஷங்களில் என்பது அன்று சாத்தியமாக இருந்தது. ஆண்டு முழுவதும் திருவிழாவும் மூர்த்திகளின் திரு உலாவும் பக்தியின் குழப்பமான வெளிப்பாடுகளும் படித்த சமய இலக்கியத்தின் பிடித்த பகுதிகளும் சேர்ந்து ஒரு பித்து மனநிலையை உருவாக்கியிருந்தன. ‘பெரிய தென்னன் மதுரையை பிச்சது ஏற்றிஎன்ற மாணிக்கவாசகரின் கவிதையை எனக்கு ஏற்பப் புரிந்துகொண்ட புள்ளியில் என்னுடைய கவிதை பிறந்தது என்று சொல்லலாம்.

 

சிவன் மீதான பித்து ஒருபுறமிருக்க சிவனால் அங்கம் வெட்டப்பட்ட பாணனின் பக்கமும் சித்தரால் முத்தம் மறுக்கப்பட்ட பொன்னனையாளின் பக்கமும் தான் என்னால் நிற்க முடிகிறது என்று தோன்றுகிறது.

 

அன்பின் நிராகரிப்பு, நிராசையின் வலி உணர்வு உங்கள் கவிதைகளின் பாடுபொருளாக உள்ளது. அந்தப் பொருளுடன் தொடர்புடைய நடிகை வஹிதா ரஹ்மான், இயக்குனர் குரு தத் போன்றோரு உங்கள் கவிதைகளில் வருகிறார்கள்..

 

முதலில் வஹிதா ரஹ்மான் பற்றி; பேரழகியான நடிகை மதுபாலா, உணர்ச்சிகரமான நடிப்பை அள்ளித்தந்த் மீனாகுமாரி போன்ற நடிகைகளுக்கு மத்தியில் வஹிதா ரஹ்மானின் மிகை தவிர்த்த நடிப்பும் நடனத்தேர்ச்சியும் மென்மையான நளினமும் என்னைக் கவர்ந்தன. அவருடைய குரல் தணிவும் என்னைக் கவர்ந்தது. இதைச் சொல்லும்போது காஷ்மீர் கவிஞர் ஆகா சஹித் அலி பற்றிய விமர்சகர்களின் குறிப்பு நினைவுக்கு வருகிறது. அவருடைய கவிதைகள் தனக்குத்தானே அவர் கிசுகிசுத்துக் கொண்ட சொற்கள்தாம். அவற்றை வாசிப்பது என்பதே அவரை ஒட்டுக்கேட்பது போன்றதுதான். முன்பு வஹிதா ரஹ்மானும் பின்பு ஆகா சஹித் அலியும் ஏதோ ஒருவகையில் என்னைப் பாதித்திருக்கிறார்கள். வஹிதா ரஹ்மானை வடிவமைத்ததில் குருத தத்தின் பங்கு முக்கியமானது. தன்னுடைய சிருஷ்டியின் மீதே காதல் கொள்வதுதான் அங்கே நிகழ்கிறது. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்கிறவர்களை விதி ஏன் ஒன்றாக வாழவிடுவதில்லை? என்பது போல ‘காகஸ் கே பூல்என்றொரு வசனம் வரும். அந்தக் காட்சியின் துயரம் வஹிதாவின் அடக்கிய நடிப்பால் கூர்மையாகப் பார்வையாளரைத் தாக்கும். உறவின் வலியை உணர்ந்த கணம் அது.

 தமிழ் இலக்கிய மரபை இந்தத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?

டி. எஸ். எலியட்டின் ‘பாரம்பரியமும் தனித்திறமையும்என்ற புகழ்பெற்ற கட்டுரையையே பதிலாகச் சொல்லிவிடலாம். இதுவரை எழுதப்பட்டுள்ள கவிதைகளின் ஒட்டுமொத்த சாரத்தையும் உயிர்ப்புடன் தனக்குள் உணர்ந்துகொள்ளும் வரலாற்றுப் பிரக்ஞையை படைப்பாளியிடம் வேண்டுகிறார் எலியட். ஆனால், தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் மரபே சுமையாகி படைப்பின் மூச்சை இறுக்கிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம் எலியட் சொல்கிற முறையில் மரபைப் புரிந்துகொள்ளும்போது அது படைப்புக்குச் செழுமை கூட்டுவதாகவே அமைந்துவிடுகிறது. பழந்தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் குறுந்தொகையின் சில கவிதைகள் நம்மை உறையவைக்கின்றன என்றால் கலித்தொகையின் சில பாடல்கள் நம்மைச் சீண்டி விடுகின்றன. சிலப்பதிகாரத்தின் உணர்வுச் சமநிலையும் மணிமேகலையின் சுருள்கதை வடிவமும் வழக்கமான காவிய மரபுகளை மீறுகின்றன. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் அமானுஷ்ய உலகமும் நாச்சியார் திருமொழியின் வேட்கைப் பிரவாகமும் பக்தி இலக்கிய மரபுக்கு அப்பால்தான் இருக்கின்றன. மரபும் மரபு மீறலும் இங்கே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மரபைச் சுமையாகத் தூக்கிக் கொண்டு திரியாமல் அதன் சாரத்தை மட்டும் செரித்துக் கொண்டு பயணப்பட்டால் நீண்ட கவிதைப் பயணம் சாத்தியமாகக் கூடும். மொழியின் வளத்தை அறிந்து அதைச் சாகசமாக உதறித்தள்ளவும் ஏற்றுப் பயன்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று புதுமைப்பித்தனும் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.

சமஸ்கிருத மொழி உங்கள் கவிதைப் பார்வையை எப்படிச் செழுமைப்படுத்தியுள்ளது?

தமிழை முழுமையாகப் புரிந்துகொள்ள சமஸ்கிருத மொழி அறிவு அவசியம் என்று வலியுறுத்தி வந்தவர் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. அவருடைய ‘விடுதலை வேண்டும்என்ற எளிய கட்டுரையை தமிழர்கள் அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். மொழி பற்றிய புராணம் குறித்த இறுக்கங்களை வெகுவாகத் தளர்த்திவிடும் அது. தமிழ்-சமஸ்கிருதம் இடையே நேசம்-வெறுப்பு என்ற உறவுநிலை காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சங்க அகக்கவிதை தமிழ் மரபிலிருந்து கிளைத்து வந்தது என்பதால் அதனளவிலேயே அது புரிந்துகொள்ளப்படக் கூடியது. அதேசமயம் ரஸத்வனிக் கோட்பாடு, தமிழ் அகக்கவிதையில் உள்ளுறையாக இருக்கும் குறிப்புப்பொருளை மேலும் நுட்பமாக விளங்கிக் கொள்ள உதவும். மேலும் காவியங்களின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதப் பரிச்சயம் அவசியமென்றுதான் தோன்றுகிறது. குந்தகரின் வக்கிர உத்தி ஜீவிதம் நவீனக் கவிதையை அணுகுவதற்கு உதவக் கூடியது. இதுபற்றிய ஞானக்கூத்தனின் வக்கிர நவிற்சி கட்டுரை குறிப்பிடத்தக்கது. நாடகம், அணி இயல் போன்ற துறைகளில் சமஸ்கிருதம் எட்டியிருக்கும் உச்சம் பெருவியப்பைத் தரக்கூடியது. காளிதாசனும் பவபூதியும் ஆனந்தவர்த்தனரும் அபினவ குப்தரும் கவிதையின் நுட்பமான அசைவுகளையும் அவை குறித்த விளக்கங்களையும் நம்முன் பரப்பி வைத்திருக்கிறார்கள். கொள்ளுவதும் தள்ளுவதும் அவரவர் விருப்பம்.


தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்..

 

எமிலி டிக்கன்சனின் ஒரு நூறு கவிதைகளையாவது தமிழில் மொழிபெயர்ப்பது என்ற திட்டத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கலத்தின் உலோக மஞ்சளும் புணர்கிற ரசவாதத்தை வார்த்தைக்குள் கொண்டுவர முடியுமானால் இன்னுமொரு கவிதைத் தொகுப்பு. காரைக்காலம்மையார், ஆண்டாள் கவிதைகளுக்கு குறைவான குறிப்புகளுடன் கூடிய ஒரு உரைப்பதிப்பு, டி. கே. சியின் முத்தொள்ளாயிரப் பதிப்பு போல.

நம்பிக்கை தருகிற இன்றைய தமிழ் கவிஞர்கள் குறித்து எனக்குள் சொல்லிக் கொள்வதாய் ஒரு சிறிய கட்டுரைத் தொகுதி..இவ்வளவுதான்.

Comments